முகம் பார்க்கும் கண்ணாடிகளோ, பளபளப்பான பரப்புகளோ கண்டு பிடிக்கும் முன்பு அநேக ஆண்டுகளாக மக்கள் அவர்களது பிம்பத்தை அதிகமாக பார்த்ததே கிடையாது. தேங்கி நிற்கும் தண்ணீர்க் குட்டைகள் ஓடைகள், ஆறுகள் இவைகளின் மூலம்தான் அவர்கள் அவர்களது முகத்தின் சாயலைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி அந்த நிலைமையை முற்றிலும் மாற்றிவிட்டது, கேமரா கண்டு பிடிப்பு நமது தோற்றத்தைப் பற்றிய எண்ணங்களை புதிய உயர்வான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கேமராவின் உதவியினால் நமது வாழ்க்கை முழுவதும், எந்தப் பருவத்திலும் நமது நிலையான பிம்பத்தை பெற்றுக் கொள்ள இயலுகிறது. இந்தப் போட்டோக்கள், நினைவுப்புத்தகங்கள், குடும்பவரலாறுகள், இவைகளை செயல்படுத்துவதற்கு சிறந்தவைகள்தான். ஆனால் இவை நமது ஆன்மீக வாழ்க்கையின் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன. கேமரா மூலம் எடுக்கப்படும் நமது படங்களை நாம் பார்க்கும் பொழுது, அவை நமது வெளிப்புறத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நம்மைத் தூண்டி, நமது உட்புற வாழ்க்கையை ஆராய வேண்டிய ஆவலைக் குறைத்து விடுகிறது.

ஆரோக்கியமான ஆவிக்கேற்ற வாழ்க்கைக்கு சுய பரிசோதனை மிகவும் முக்கியம். பாவமான காரியங்களைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நம்மை நாமே சோதித்தறிய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இது மிக முக்கியமான காரியம். அதனால் நம்மை நாமே சோதித்தறியாமல் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்கக்கூடாது என்று வேதாகமம் கூறுகிறது (1கொரி 11: 28) இந்த சுய பரிசோதனையின் முக்கியத்துவம் என்னவென்றால் தேவனாடு மட்டும் நாம் ஒப்புரவாகாமல், நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாக வேண்டும் என்பதே ஆகும். கர்த்தருடைய பந்தி கிறிஸ்துவின் சரீரத்தை நினைவு கூருவதாகும். நமது சகவிசுவாசிகளோடு நாம் ஒப்புரவாகாவிட்டால், கர்த்தருடைய பந்தியை சரியான முறையில் ஆசரிக்க இயலாது.

நமது பாவங்களை நாம் உணர்ந்து அவற்றை அறிக்கை இடுவதின் மூலம் ஒருவரோடு ஒருவருக்குள்ள ஐக்கியத்தை ஊக்கப்படுத்துவதோடு, தேவனோடு கூட ஆரோக்கியமான உறவுகொள்ளவும் வைக்கிறது.