1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்தேதி என்டுயுரன்ஸ் என்ற கப்பல், அன்டார்ட்டிக்காவில் பனிப்பாறைகளில் சிக்கி உடைந்து போனது. அக்கப்பலிருந்த துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏர்னெஸ்ட் ஷேக்கில்டன் தலைமையில் கப்பல் சேதத்திலிருந்து தப்பி மூன்று உயிர்காக்கும் படகுகளின்மூலம் எலிபென்ட் தீவை அடைந்தார்கள். ஆட்கள் வசிக்காத அந்த தீவு கப்பல் போக்குவரத்து நடக்கும் கடல் பரப்பிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷேக்கில்டனுடன் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய உயிர்காக்கும் படகில் உதவி பெறுவதற்காக 800 மைல்களுக்கு அப்பால் இருந்த தெற்கு ஜியார்ஜியா தீவை நோக்கி செல்வதை மற்ற 22 ஆராய்ச்சியாளர்கள் கவனித்தார்கள். அத் தீவை அடைவதில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் நிச்சயமாக அவர்கள் அனைவரும் மரித்து விடுவார்கள். நான்கு மாதங்களுக்குப் பின்பு தொடுவானத்தில் ஒரு படகு தென்பட்டது. அப்படகிலிருந்த ஷேக்கில்டன் அனைவரும் நலமாக உள்ளீர்களா? என்று சத்தமிட்டுக் கேட்ட பொழுது, அந்த தீவில் விடப்பட்டிருந்த 22 ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாததாக இருந்தது. “எல்லோரும் பத்திரமாக உள்ளோம், எல்லோரும் நலமாக உள்ளோம் என்று பதில் அளித்தனர்.
அந்த மனிதர்கள் அத்தனை மாதங்களாக உயிரோடு இருப்பதற்கு உதவியாக இருந்தது எது? ஒரு மனிதன்மேல் வைக்கப்பட்ட விசுவாசமும் நம்பிக்கையுமே.. அவர்களை காப்பாற்றத்தக்கதான ஒரு வழியை ஷேக்கில்டன் நிச்சயம் கண்டுபிடிப்பார் என்று நம்பினார்கள்.
இந்த மனிதர்களின் விசுவாசமும் நம்பிக்கையும் எபிரேயர் 11ல் பட்டியல் இடப்பட்டுள்ள விசுவாச வீரர்களின் விசுவாசத்தை எதிரொலிக்கிறது. “நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயம்” (எபிரேயர் 11:1) என்ற வசனத்தின்படி அவர்களுக்கு இருந்த விசுவாசம் மிகவும் கஷ்டமான சோதனைகளை கடந்து வரச் செய்தது.
நமது பிரச்சனைகளின் எல்லையை நாம் பார்க்கும் பொழுது நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை. நமது தேவனும் இரட்சகருமாகிய இயேசு என்ற ஓரே மனிதன்மேல் உள்ள நமது விசுவாசத்தின் மூலம் நமக்கு நம்பிக்கை உண்டு.