
வாய்களிலிருந்து..
உங்கள் நாய் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு புதிய தொழில்நுட்பம், நாய்கள் குரைக்கும் போது அவற்றின் உணர்வுகளை அனுமானிக்க உதவும்படி அவற்றின் "குரைத்தலை" அடையாளம் காண்கிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குரைப்புகளின் தரவைப் பயன்படுத்தி, நாய்களின் குரைப்புகளில் அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அடையாளம் காணும். இந்த பட்டைகள் வார்த்தைகளை மொழிபெயர்க்காவிடினும், அவை உரிமையாளருக்கும் செல்லப்பிராணிக்கும் இடையே அதிக புரிதலை உண்டாக்குகிறது.
பிலேயாமின் கவனத்தைத் திருப்ப, தேவனும் ஒரு விலங்கைப் பயன்படுத்தினார். பிலேயாம் தனது கழுதையில் சேணம் வைத்து, தேவன் தனக்கு "நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்" (எண் 22:20) என்று அறிவுறுத்தியதற்கு பிரதியுத்தரமாக மோவாபுக்குப் போய்க்கொண்டிருந்தான். தேவதூதன் "உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதை" (வ.23) கண்டதும் கழுதை நின்றது, இதை பிலேயாம் பார்க்கவில்லை. பிலேயாம் தொடர்ந்து முன்செல்ல முயன்றான், அதனால் தேவன் மனுஷர் பாஷையில் பேசுவதற்குக் கழுதைக்கு உதவினார். ஆபத்தைப் பார்க்கும்படி பிலேயாமின் கண்கள் இறுதியாகத் திறக்கப்பட்டபோது, " தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்" (வ.31). தேவனின் அறிவுரைகளுக்கு மாறாக வெகுமதி பெறவும், தேவஜனங்களை சபிக்கவும் தனக்கிருந்த உள்நோக்கத்தை ஒப்புக்கொண்டான் (வ.37-38). "நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்" (வ.34) என்றான்.
வேதாகமத்தின் பக்கங்களிலும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும், பிறரின் ஞானமான ஆலோசனைகளிலும் தேவன் நமக்குக் கொடுக்கும் அறிவுரைகளுக்கு வெளிப்புறமாக மட்டுமல்ல, முழுமனதோடு நாம் செவிசாய்ப்போமாக.

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன
ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப் பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள் நடத்தியது.
இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9) வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).
யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், “அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.

ஜீவனைக் காட்டிலும் மேல்
மற்றொரு எதிர்பாராத உடல்நலக்குறைவுக்குப் பிறகு, மலைகளில் இளைப்பாறிட என் கணவரோடும் மற்ற குழுவினரோடும் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த மலையின் உச்சியில் உள்ள சிறிய தேவாலயத்திற்குச் செல்லும் மர படிக்கட்டுகளில் நான் ஏறினேன். இருட்டில் தனியாக, பிளந்திருந்த ஒரு படியில் ஓய்வெடுக்க நின்றேன். இசை தொடங்கியதும், "எனக்கு உதவும், ஆண்டவரே" என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன். நான் சிறிய அறைக்குள் நுழையும் வரை மெதுவாக நடந்தேன். நீடித்த வலியினுடே சுவாசித்தேன், வனாந்தரத்திலும் தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதற்கு நன்றியோடிருந்தேன்.
தேவனை ஆராதிக்கும் மிக நெருக்கமான தருணங்கள் வனாந்தரத்தில் நிகழ்ந்ததை வேதாகமம் பதிவு செய்கிறது. யூதாவின் வனாந்தரத்தில் மறைந்திருந்தபோதும், அநேகமாக தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது, தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்கீதம் 63:1). தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை "ஜீவனைப்பார்க்கிலும்" நல்லது என்று கருதினார் (வ.3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6). அவர், “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (வ.7-8) என்றார்.
தாவீதைப் போலவே, நம்முடைய சூழ்நிலைகள் அல்லது நமக்கு எதிராக நிற்பவர்களின் உறுதியைப் பொருட்படுத்தாமல், தேவனைத் துதிப்பதின் மூலம் தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வெளிக்காட்டலாம் (வ.11). நாம் கஷ்டப்பட்டாலும், சில நேரங்களில் நம்மிடம் தவறு இல்லையென்றாலும், தேவனின் அன்பு எப்போதும் ஜீவனைக்காட்டிலும் நல்லது என்பதை நம்பலாம்.
செவிட்டு இதயம்
தனது சைகை மொழி திறனை மேம்படுத்த, லீசா காது கேளாதோரோடு நெருங்கிப் பழகினாள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் புரிந்துகொண்டாள். காது கேளாதவர்கள் செவித்திறனுள்ள நபர்களால் மோசமாக ஒதுக்கப்படுகின்றனர், உதடு அசைவுகளை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள், மேலும் பணியிடத்தில் பதவி உயர்வுக்காக வழக்கமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளும் இவர்களுக்கு விளக்கப்படாமலேயே நடக்கின்றன.
செவித்திறனற்றவர்களுடன் இயல்பாக ஒன்றும் அளவிற்கு லீசாவின் செய்கை மொழி சீராக மேம்பட்டது. ஒரு விருந்தின்போது, காது கேளாத நபர் ஒருவர் லீசாவால் கேட்க முடியும் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். லீசா பதிலளிக்கும் முன், மற்றொரு நண்பர், "அவள் மனதளவில் செவிடு" என்று செய்கை காட்டினார். அவர்களின் உலகில் வாழ லீசாவின் விருப்பமே இங்குக் காரியம்.
காது கேளாதவர்களுடன் பழக லீசா தன்னை "தாழ்த்திக்கொள்ளவில்லை". அவளுடைய செவிப்புலன் தவிர, அவளும் அவர்களைப் போல ஒருத்தியே. ஆனால், நம் உலகில் வாழும்படிக்கும், நம் அனைவரையும் சந்திக்கும்படிக்கும், இயேசு "கீழே இறங்கி" வந்தார் . அவர் "தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்(தார்)த" (எபிரெயர் 2:9). கிறிஸ்து "மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்" (வ.14) மாம்சமானார். அவ்வாறு செய்வதன் மூலம், "ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்" (வ.15). மேலும், அவர் "தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு" (வ.17) முழுமனிதரானார்.
நாம் எதனை எதிர்கொண்டாலும், இயேசு அதை அறிகிறார், புரிகிறார். அவர் நம் இதயகுரலை கேட்கிறார். எல்லா வகையிலும் நம்முடன் இருக்கிறார்.

