
சொல்லும் அறை
ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.
அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).
இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்
கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.
மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).
தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு, புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.

தேவனின் சத்தத்தை அறிதல்
பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.
தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.
எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.

இதை ஏன் செய்ய வேண்டும்?
எனது ஆறாம் வகுப்பு பேரன் மோகனுக்கு சில கடினமான கணக்கு வீட்டுப்பாடங்களில் நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, பொறியியலாளராக வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் கூறினான். அவனது பாடத்தில் உள்ள அச்சு ரேகைகளை உபயோகிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அவன், "நான் எப்போது இந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறேன்?" என்றான்.
என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, "சரி, மோகன் நீ ஒரு பொறியியலாளராக மாறினால், நீ பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவைதான்" என்றேன். கணிதத்திற்கும் அவன் எதிர்பார்க்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை அவன் உணரவில்லை.
சில சமயங்களில் நாம் வேதத்தை அப்படித்தான் பார்க்கிறோம். நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், வேதத்தின் சில பகுதிகளைப் படிக்கும்போதும், “இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று நாம் நினைக்கலாம். சங்கீதக்காரன் தாவீதிடம் சில பதில்கள் உண்டு. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் சத்தியங்கள் "ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதும்", "பேதையை ஞானியாக்குகிறதும்" மற்றும் "இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதும்" (சங்கீதம் 19:7-8) போன்ற ஆற்றலுள்ளவை என்றார். சங்கீதம் 19ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் (மேலும் வேதாகமத்தின் அனைத்து பகுதிகளிலும்) காணப்படும் வேதத்தின் ஞானம், நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலை அனுதினமும் நம்பியிருக்க நமக்கு உதவுகிறது (நீதிமொழிகள் 2:6).
மேலும் வேதவசனங்கள் இல்லாவிடில் அவரை அனுபவிக்கவும், அவருடைய அன்பையும் வழிகளையும் நன்றாக அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு அளித்திருக்கும் இன்றியமையாத வழியை நாம் இழந்துவிடுவோம். வேதத்தை ஏன் படிக்க வேண்டும்? ஏனென்றால், "கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது." (சங்கீதம் 19:8).
ஓய்வெடுக்க அனுமதி
சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.
நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.
வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார், இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.