வகை  |  odb

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

பரிசுத்தமாகுதல்

உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.

உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.

இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.

தேவன் நமது திட அஸ்திபாரம்

உடைந்துவிழக்கூடிய சமையல்கட்டு மற்றும் சோபித்துப்போன சுவர்களுடன் இருந்த எங்கள் வீட்டைப் புதுப்பிப்பது அவசியம் ஆனது. அதின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டபின், கட்டுமான பணியாளர்கள் புதிய அஸ்திபாரத்திற்குத் தோண்டத் தொடங்கினர். சுவாரசியம் ஆரம்பித்தது.

அவர்கள் தோண்டுகையில்; உடைந்த தட்டுகள், 1850 களின் சோடா பாட்டில்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் போன்றவை அகப்பட்டன.

நாங்கள் ஒரு குப்பை மேட்டின்மேல் எங்கள் வீட்டைக் கட்டியிருந்தோமா? யாரறிவார். ஆனால் முடிவில் எங்கள் பொறியியலாளர் எங்கள் வீட்டு அஸ்திபாரங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும் இல்லையேல் சுவரில் வெடிப்புகள் தோன்றும் என்றார்.

உறுதியான வீடுகளுக்குத் தரமான அஸ்திபாரங்கள் வேண்டும். இது நமது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இஸ்ரவேலர்கள் தங்களின் சத்துருக்களால் அசைக்கப்படுகையில், ஏசாயா அவர்களுக்காக ஜெபித்தார் (ஏசாயா 33:2-4). ஆனால் அவர்களின் பெலன் வீரத்தாலோ ஆயுதங்களாலோ உண்டாகாமல், தங்கள் வாழ்வைத் தேவன் மீது கட்டுவதால் மட்டுமே உண்டாகும். தீர்க்கதரிசி, “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (வ.6) என்றார். இயேசுவும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவருடைய ஞானத்தின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டுபவர்கள் வாழ்க்கையின் புயல்களினூடே நிலைத்திருக்கலாம் என்று உபதேசித்திருந்தார் (மத்தேயு 7:24-25).

நமது வாழ்வில் மூர்க்கம், அடிமைத்தனம் அல்லது திருமண பிரச்சனைகள் போன்ற விரிசல்கள் தோன்றுவது; நமது அஸ்திபாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதின் அடையாளங்கள். நாம் தவறான இடத்தில் பாதுகாப்பை நாடினால் அல்லது இவ்வுலகத்தின் ஞானத்தை மட்டுமே பின்பற்றினால், நாம் உறுதியற்ற அஸ்திபாரத்தின்மேல் இருப்போம். ஆனால் தங்கள் வாழ்க்கையைத் தேவன்மீது கட்டுபவர்களோ அவருடைய பெலனையும், அனைத்து பொக்கிஷங்களையும் அடையலாம் (ஏசாயா 33:6).

ஆசிர்வாதமாயிருக்க ஆசிர்வதிக்கப்படுதல்

நான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில், பிறருடைய கதைகளைப் பகிர்வது எனக்கு பெரும் விருப்பம். ஆனால், நான் எனது சொந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளாமலிருக்கப் பயிற்றுவிக்கப்பட்டேன். தேவன் என்னைப் பத்திரிகைத் துறையிலிருந்து வெளியே வரவும், தன்னை குறித்துப் பேசவும், எழுதவும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும்படியாக அழைப்பதை நான் சில வருடங்களாகவே அதிகம் உணர்ந்தேன். நான் எனது சொந்த கருத்துக்களை, குறிப்பாக எனது விசுவாசத்தை பகிர்ந்துகொள்வதற்குச் சற்று தயங்கினேன். நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பிக்கும்போது, நான் சொல்ல வேண்டிய காரியங்களெல்லாம் சொல்லித் தீர்ந்துவிடுமோ என்று அஞ்சினேன். ஆனால் ஒவ்வொரு வாரமும், எனக்கு திடமூட்டும் வார்த்தைகளும், பகிர்ந்துகொள்வதற்கான ஆழமான கருத்துக்களும் கிடைத்தன. நான் எவ்வளவு அதிகம் எழுதினேனோ, அவ்வளவு அதிகமான புதிய யோசனைகள் தோன்றின. இப்போதும் இது உண்மையாகவே தொடர்கிறது.

எனது வரங்களையும், தாலந்துகளையும் பிறர் சேவைக்காக அளிக்கையில், தேவன் என்னை அதிக மகிழ்ச்சியாலும் உத்வேகத்தாலும் நிரப்புவதை என் சொந்த வாழ்வில் அனுபவித்துள்ளேன்.

2 இராஜாக்களில், எலிசா தீர்க்கதரிசியின் உதவி நாடிச்சென்ற ஏழை விதவையைக் குறித்து வாசிக்கிறோம். மரித்த அவளது கணவனுக்குக் கடன் கொடுத்தவர்கள், அவளது இரண்டு குமாரர்களை அடைமானம் கேட்கின்றனர். அவள் வீட்டிலிருந்ததெல்லாம் ஒரு குடம் ஒலிவ எண்ணெய் மட்டுமே. அவளது அயலகத்தாரிடம் பாத்திரங்களைக் கடன்வாங்கி, அவற்றில் எண்ணெய்யை ஊற்றும்படி தீர்க்கதரிசி அறிவுறுத்தினார். “இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்” (2 இராஜாக்கள் 4:5). எல்லா பாத்திரங்களும் அற்புதமாக நிறையும்வரைக்கும் அவள் வார்த்துக்கொண்டே இருந்தாள். மீந்திருந்த எண்ணெய்யைக் கொண்டு அவளது குடும்ப கடனையும் அவளால் செலுத்த முடிந்தது.

தேவன் உண்மையுள்ளவர், எப்போதும் தேவைகளைச் சந்திப்பவர். நாம் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கவே தேவன் நம்மை வரங்களாலும், தாலந்துகளாலும், வளங்களாலும் ஆசீர்வதித்துள்ளார். நாம் நமது தாலந்துகளை புறக்கணிக்கவோ ஒளித்துவைக்கவோ செய்யாமல் அவரது மகிமைக்காகப் பயன்படுத்துவோமாக.

 

பெருமதிப்புமிக்க பயம்

“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்" என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து,  தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).

நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.