
துதியின் கண்ணீர்
சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன்.
ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).
தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

காயப்பட்டோரை சுமக்குதல்
ஜோஸ் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞன். அவனுடைய சகோதனுடைய திருச்சபைக்கு ஒரு நாள் போயிருந்தான். அவன் திருச்சபைக்குள் நுழைவதைப் பார்த்த அவனுடைய சகோதரனின் முகம் வாடிப்போயிற்று. ஜோஸ் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், அவனுடைய இரு கைகளிலும் வரையப்பட்டிருந்த டாட்டூக்கள் தெளிவாக பளிச்சிட்டன. அவனுடைய டாட்டூக்கள் அவனுடைய பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியதாய் இருந்ததினால், அவனை வீட்டிற்கு சென்று ஒரு முழுக்கை சட்டை அணிந்துவரும்படிக்கு அவனுடைய சகோதரன் வலியுறுத்தினான். அதைக் கேட்ட ஜோஸ் சோர்ந்துபோய்விட்டான். அவர்களுடைய பேச்சைக் கேட்ட வேறொருவர் அவர்கள் இருவரையும் திருச்சபை போதகரின் முன்னிலையில் கொண்டு நிறுத்தி, நடந்ததை சொன்னார். போதகர் அதைக் கேட்டு புன்னகையோடு தன்னுடைய சட்டையின் பட்டனை அவிழ்த்தார். அவருடைய மார்பு பகுதியில் அவருடைய பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய டாட்டூ இருந்ததை அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு ஜோஸைப் பார்த்து, தேவன் நம்மை உள்ளும் புறம்பும் சுத்திகரித்துவிட்டபடியால், உன் கைகளில் இருக்கும் டாட்டூக்களை நீ மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார்.
தாவீது, தேவனால் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். தன்னுடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்ட தாவீது ராஜா, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1) என்று எழுதுகிறான். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்களோடு சேர்ந்து ஆனந்த முழக்கமிடுகிறார் (வச. 11). பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தி, அவருக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் நிறுத்தும் அறிக்கையை வெளிப்படுத்தும் ரோமர் 4:7-8 வேதப்பகுதியில், சங்கீதம் 32:1-2ஐ மேற்கோள் காண்பிக்கிறார்.
இயேசுவில் நம்முடைய பரிசுத்தம் என்பது தோலோடு அல்ல, அவர் நம்மை அறிந்து நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கிறார் (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 1:9). அவருடைய சுத்திகரிக்கும் கிரியையில் இன்று நாம் மகிழ்ச்சியடைவோம்.

உறுதியான இளைப்பாறுதல் தேவனில்
சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).
ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.

செய்ய அல்லது செய்யக்கூடாதவை
நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.
நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).
இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.
