வகை  |  odb

தேவனே அவற்றை படைத்தார்

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி கடற்கரை மீன் கண்காட்சியில் நாங்கள் நுழைந்தபோது எனது மூன்று வயது மகன் சேவியர் என் கையை அழுத்தினான். உயரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட கூம்பு திமிங்கலத்தின் முழு அளவிலான எலும்புக்கூட்டை காண்பித்து, “எவ்வளவு பெரியது!” என்றான். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்போது அவனது ஆச்சரியமான மகிழ்ச்சி பெருகியது. உணவளிக்கும் நேரத்தில் நீர்நாய்களால் தண்ணீர் தெறித்துச் சிதறியதை பார்த்து சிரித்தோம். நீல நீரில் நடனமாடும் தங்க பழுப்பு நிற ஜெல்லிமீன்களால் மயங்கி, ஒரு பெரிய கண்ணாடி மீன்வளச் சாளரத்தின் முன் அமைதியாக நின்றோம். “தேவன் சமுத்திரத்தின் ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார், உன்னையும் என்னையும் படைத்தது போலவே” என்றேன். “ஆஹா” என சேவியர் கிசுகிசுத்தான்.

சங்கீதம் 104 இல், சங்கீதக்காரன் தேவனின் அபரிமிதமான படைப்பை வியந்து, “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்” (வ. 24) பாடினான். “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வ. 25) என்று அறிவித்தான். அவர் படைத்த அனைத்திற்கும் தேவனின் தாராளமான மற்றும் திருப்திகரமான போஷிப்புகளை அவன் பறைசாற்றினான் (வ. 27-28). ஒவ்வொன்றின் ஆயுசுநாட்களையும் தேவன் தீர்மானித்துள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார் (வ. 29-30).

“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்” (வ. 33) என்று நாமும் சங்கீதக்காரனோடு இனைந்து அா்ப்பனிப்போடு அறிக்கையிடுவோம். பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு உயிரினமும் நாம் தேவனை புகழ்வதற்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவை அனைத்தையும் அவரே
படைத்தார்.

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்

எங்கள் அயலகத்தரான மணியை நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து நன்கு தேய்ந்த வேதாகமத்தை வெளியே எடுத்தார். கண்கள் பிரகாசிக்க, அவர் வேதத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நாங்களும் தலையசைக்க, அவர் குறிப்பெடுத்த சில பத்திகளை புரட்டினார். அவர் தனது குறிப்புகள் நிறைந்த ஒரு பதிவேட்டை எங்களிடம் காட்டினார், மேலும் கணினியை பயன்படுத்தி விளக்க இது தொடர்பான பிற தகவல்களை தான் தயாரித்திருப்பதாக கூறினார்.

அவர் ஒரு கடினமான குடும்ப சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வந்தார் என்பதை எங்களிடம் கூறினார். மேலும், தனியாக மோசமான நிலையில், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தனது நம்பிக்கையின் அடித்தளமாக ஏற்றுக்கொண்டார் (அப்போஸ்தலர் 4:12). வேதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆவியானவர் உதவியதால் அவருடைய வாழ்க்கை மாறிவிட்டது. மணி தனது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே தேவனிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவரது உற்சாகம் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருந்தது.

இவரது வைராக்கியம்; இயேசுவுடன் பல வருடங்கள் நடந்துகொண்டிருந்த ஒருவராக எனது ஆவிக்குரிய ஈடுபாட்டை கருத்தில் கொள்ள என்னை தூண்டியது. “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” (ரோமர் 12:11) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசு எனக்காகச் செய்த அனைத்திற்கும் தொடர்ந்து நன்றி செலுத்துவதைப் பிரதிபலிக்கும் மனப்பான்மையை என்னில் வளர்க்க வேதத்தை நான் அனுமதிக்காத வரை, அது ஒரு கடினமான கட்டளையாக தோன்றுகிறது.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உணர்வுபூர்வமான ஏற்றத் தாழ்வுகளைப் போலல்லாமல், கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவருடன் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கும் உறவிலிருந்தே வருகிறது. அவரைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு விலைமதிப்பற்றவராக அவர் மாறுகிறார், மேலும் அவருடைய நற்குணம் நம் ஆத்துமாவை நிரப்பி இவ்வுலகில் வழிந்தோடுகிறது.

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, மோசே “அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்” (4:1) என்று தடுமாறினார். தேவன், “உன் கையில் இருக்கிறது என்ன” (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், “அது சர்ப்பமாயிற்று” (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

தேவன் நமது அடைக்கலம்

2019 ஆம் ஆண்டின் வியத்தகு திரைப்படமான ‘லிட்டில் வுமன்’, என்னிடமிருந்த அதின் மூல நாவலின் பழையதாகிப்போன பிரதியை படிக்க உந்தியது. குறிப்பாக, விவேகமும் மென்மையும் படைத்த தாயார் மர்மியின் ஆறுதல் வார்த்தைகளை. அந்த நாவல் சித்தரித்த அவளுடைய உறுதியான நம்பிக்கையால் நான் ஈர்க்கப்பட்டேன், இது அவளுடைய மகள்களுக்கு ஊக்கமளிக்கும் பல வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எனக்குப் பிரத்யேகமாகத் தெரிந்தது இதுதான்: “சிக்கல்கள் மற்றும் சோதனைகள் . . . பல இருக்கலாம், ஆனால் உங்கள் பரலோகத் தகப்பனின் பலத்தையும் மென்மையையும் நீங்கள் உணரக் கற்றுக்கொண்டால், அவற்றையெல்லாம் வென்று வாழலாம்.”

மர்மியின் வார்த்தைகள் நீதிமொழிகளில் காணப்படும் சத்தியத்தை எதிரொலிக்கின்றன, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (18:10). எதிரிகளின் தாக்குதல் போன்ற காரணமாக, ஆபத்தின் போது பாதுகாப்பு இடங்களாக பழங்கால நகரங்களில் துருகங்கள் கட்டப்பட்டன. அதுபோலவே, தேவனிடம் ஓடுவதன் மூலமே, இயேசுவை நம்புபவர்கள், “நமக்கு அடைக்கலமும் பெலனுமாக” (சங்கீதம் 46:1)உள்ளவரின் பராமரிப்பில் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.

நீதிமொழிகள் 18:10, பாதுகாப்பு என்பது தேவனின் “நாமத்தில்” இருந்து வருகிறது என்று சொல்கிறது. அவர் நாமமானது அவர் யார் என்ற அனைத்தையும் குறிக்கிறது. வேதவசனம் தேவனை, “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத்திராகமம் 34:6) என்கிறது. தேவனின் பாதுகாப்பு அவரது வல்லமையான பலத்திலிருந்து வருகிறது, அதே போல் அவரது மென்மையும் அன்பும் காயப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவரை ஏக்கமுற செய்கிறது. போராடும் அனைவருக்கும், நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பலத்திலும் மென்மையிலும் அடைக்கலம் அருள்கிறார்.