
நான் செய்வேன்
அந்த நாளின், அதிக வேலைகளை முடித்த பின்னர் ஷர்லி சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது, அங்கு ஒரு வயதான தம்பதியர், அங்கிருந்த மைதானத்தில் “இலவசம்” என எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய வேலியின் ஒரு பகுதியை எடுத்துச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஷர்லி தன் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே அவர்களுக்கு உதவும் படிச் சென்றாள். அவர்கள் நால்வரும் போராடி அந்த வேலியின் ஒரு பகுதியை கை வண்டியிலேற்றி, தெரு வழியே, காண்போர் சிரிக்கும் வகையில் உருட்டிச் சென்று தெரு முனையிலுள்ள அந்த தம்பதியினரின் வீட்டிலிறக்கி விட்டு மீண்டும் மற்றப் பகுதியையெடுக்க திரும்பினர். அப்பொழுது அந்த பெண்மணி ஷர்லியிடம் “நீ என்னுடைய சிநேகிதியாக இருப்பாயா?” எனக் கேட்டாள். “ஆம், இருப்பேன்” என பதிலளித்தாள். அந்தப் பெண் வியட்நாமைச் சேர்ந்தவளெனவும், அவளுக்கு சிறிதே ஆங்கிலம் தெரியுமெனவும், அவர்களுடைய பிள்ளைகளனைவரும் தூர இடங்களிலிருப்பதால் இவர்கள் தனிமையாக இருக்கின்றனர் என்றும் பின்னர் தெரிந்து கொண்டாள்.
அந்நியராயிருப்பது எவ்வாறிருக்கும் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள், என லேவியராகமத்தில் தேவன் குறிப்பிடுகின்றார் (19:34). அந்நியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றார்
(வச. 9-19). தேவன் அவர்களை தன்னுடைய சொந்த ஜனங்களாகப் பாவித்திருக்கின்றபடியால், அவர்கள் தங்கள் சுற்றத்தாரை ஆசீர்வதிக்க வேண்டுமெனவும், தங்களிடம் அன்பு கூறுவது போல அவர்களிடமும் அன்பு கூர வேண்டுமெனவும் விரும்புகின்றார். எல்லா ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக தேவன் இயேசுவைத் தந்தார். அவர் தந்தையின் வார்த்தைகளை நம் எல்லாருக்கும் மீண்டும் எடுத்துரைத்தார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்... அன்பு கூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத். 22:37-39) என்றார்.
நம்மிலே வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவியினால் நாம் தேவனையும், பிறரையும் நேசிக்க முடியும். ஏனெனில் அவரே முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். (கலாத்தியர் 5:22-23, 1யோவான் 4:19) நாமும் ஷர்லியோடு சேர்ந்து “நான் செய்வேன்” என்று கூறுவோமா?

கடைசி வார்த்தை
அவளுடைய பெயர் சரெலின். என்னுடைய பள்ளிப் படிப்பு நாட்களில் அவள் மேல் எனக்கு விருப்பம் இருந்தது. அவளுடைய சிரிப்பு மிகவும் அற்புதமாயிருக்கும். எனக்கிருந்த விருப்பத்தை அவளும் அறிந்திருந்தாளா என்பது எனக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியுமென்றுதான் நான் நினைத்தேன். எங்களுடைய படிப்பை முடித்ததும் அவளுடைய தொடர்பும் விட்டுப் போனது. எங்களுடைய வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் செல்ல நேர்ந்தது.
ஆனாலும் எங்களோடு பட்டம் பெற்றவர்களோடு இணைய தளத்தில் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் சரெலின் மரித்துவிட்டாளென கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தப்பட்டேன். அவளுடைய வாழ்க்கை, கடந்த வருடங்களில் எப்படி போய்க் கொண்டிருந்தது என்பதைக் குறித்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். நாமும் முதிர்வயதை எட்டும்போது நம்முடைய உறவினரையும் நண்பர்களையும் இழப்பது என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றது. நம்மில் அநேகர் அதனைக் குறித்துப் பேசுவதை விரும்புவதில்லை.
இப்படி நாம் வருத்தத்தில் இருக்கும்போது, இறப்பு என்பது ஒரு முடிவல்ல என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது (1 கொரி. 15:54-55). இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவர் எழுதுகின்றார். பவுலும் இந்த நம்பிக்கையை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பே பெற்றுக் கொண்டார் (வச. 12). எனவே, “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (வச. 14) என்கிறார். விசுவாசிகளாகிய நாம் இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். (வச. 19)
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை, (வச. 18) – நம்முடைய பாட்டி, தாத்தா, பெற்றோர், நண்பர்கள், உற்றார், அருகிலுள்ளோர் மற்றும் பள்ளி நாட்களில் நாம் விரும்பியவர்களையும் கூட மீண்டும் ஒரு நாள் காண்போம். மரணம் என்பது கடைசி வார்த்தையல்ல, உயிர்த்தெழுதலே கடைசி வார்த்தை.

வழிகாட்டும் வெளிச்சம்!
அந்த உணவகம் அருமையாயிருந்தது. ஆனால் இருளாயிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தங்களுடைய அலை பேசியின் வெளிச்சத்தைப் பயன் படுத்தியே உணவருந்த வந்தவர்கள் உணவு அட்டவணையை வாசிக்கவும், தங்கள் மேசையில் அமர்ந்திருப்பவர்களைக் காணவும், தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்க்கவும் முடிந்தது.
கடைசியாக, அனைவரின் சார்பாகவும் ஒருவர் தன்னுடைய இருக்கையை நகர்த்தி, எழுந்து, அங்கிருந்த பொறுப்பாளரை அணுகி, “விளக்குகள் எரியும்படி சுவிட்சை உன்னால் இயக்க முடியுமா?” எனக் கேட்டார். சற்று நேரத்தில் மேற்கூரை விளக்கு எரிய ஆரம்பித்தது. அந்த அறையிலிருந்த அனைவரும் கரகோஷமிட்டனர், சிரித்தனர், மகிழ்ச்சியான குரலெழுப்பினர், நன்றி தெரிவித்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவன் தன்னுடைய அலைபேசி விளக்கை அணைத்தார். சாப்பிடுவதற்கான கருவிகளைக் கையிலெடுத்தார். அனைவர் சார்பாகவும் பேசினார். “வெளிச்சம் உண்டாகக் கடவது; இப்பொழுது அனைவரும் சாப்பிடலாம்” என்றார்.
ஒரு சுவிட்ச் இயக்கப்பட்ட போது, ஒரு இருண்ட மாலைப் பொழுது மகிழ்ச்சிகரமாக மாறியது. ஆனால் மெய்யான ஒளியின் காரணரைத் தெரிந்து கொள்வது இதைவிட எத்தனை முக்கியமானது! தேவன் தாமே இத்தகைய ஆச்சரியமான வார்த்தைகளைப் பேசினார். அவர் இந்த உலகத்தைப் படைத்த போது முதல் நாளில் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். “வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3) “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4)
தேவன் நம்மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினை ஒளி காட்டுகின்றது. இந்த ஒளி நம்மை இயேசுவுக்கு நேராக வழி நடத்துகின்றது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவா. 8:12) என்று இயேசு கூறினார். அவர் நம்மை பாவமாகிய இருளிலிருந்து ஒளிக்குள் வழி நடத்துகின்றார். அவருடைய ஒளியில் நாம் நடக்கும் போது, குமாரன் மகிமைப்படும்படியான ஒரு வாழ்விற்குள் நாம் வழி நடத்தப் படுவோம். அவரே இவ்வுலகிற்குக் கொடுக்கப்பட்ட பிரகாசமான ஈவு. அவர் ஒளியாயிருந்து காட்டும் பாதையில் நாம் நடப்போமாக.

இது வழுக்கலான இடம்!
அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் பனிச்சறுக்கலைக் கற்றுக் கொண்டிருந்த போது, எளிதான இறக்கங்களில் செல்லும் போது நான் என்னுடைய மகன் ஜோஷைப் பின் தொடர்ந்து செல்வேன். என்னுடைய கண்கள் அவன் மீதேயிருக்க, அவன் அந்த மலைத் தொடரில் ஒரு செங்குத்தான குன்றில் திரும்பியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்பொழுது நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பக்கம் சரிந்தவனாக குழியில் இறங்கிவிட்டேன்.
நாம் எத்தனை எளிதில் பாவமாகிய சரிவில் வழுக்கிச் சென்று விடுகிறோம் என்பதை சங்கீதம் 141 காட்டுகின்றது. அத்தகைய சரிவில் விழாதபடி நம்மை எச்சரிக்கவே ஜெபம் உதவுகின்றது. “என் இருதயத்தைத்துன்மார்க்கத்திற்கு இணங்க வொட்டாதேயும்” (வச. 4) என்ற விண்ணப்பம் கர்த்தருடைய ஜெபத்தைப் போன்றே அமைந்துள்ளது. “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்” (மத். 6:13). இந்த ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் நல்லவராயிருக்கின்றார்.
இந்த சங்கீதத்தில் மற்றுமொரு கிருபையளிக்கும் நபரைக் காண்கிறோம். அது ஓர் உண்மையான நண்பன். “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை” (சங். 141:5).
சோதனைகள் நாம் அறியாமலே நம்மை விழத்தள்ளுகின்றன. நாம் தவறாகச் செல்கின்றோம் என்றறியாமலேயே நீண்ட தூரம் சென்று விடுகிறோம். உண்மையான நண்பன் தன் நோக்கத்தில் உறுதியாயிருப்பவன். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:6). கடிந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதற்குக் கடினமாயிருக்கும். ஆனால் அந்தக் கடிந்து கொள்ளலை ஓர் அன்பின் செயலாகப் பார்க்கக் கூடுமானால் அது நம்மை மீண்டும் கீழ்ப்படிதலின் பாதைக்கு வழி நடத்தும் அபிஷேகம் போலிருக்கும்.
ஓர் உண்மையான நண்பன் மூலம் நாம் உண்மைக்கு நேராக வழி நடத்தப் படுவோமாக. ஜெபத்தின் மூலம் தேவனைச் சார்ந்து கொள்.
