சீர்படுத்தும் தேவன்
நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர்.
பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார்.
வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.

தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை
“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள்.
உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார்.
சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.

ஆவியாலே ஆகும்
ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம்.
நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4).
திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.

சிறியது ஆனால் சிறந்தது
“நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா?” கல்லூரியின் ஒரு நீச்சல் வீராங்கனை அவளின் வேகம் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலைப்பட்டாள். ஆனால் கணிதப் பேராசிரியர் கென் ஓனோ அவளது நீச்சல் நுட்பங்களை ஆராய்ந்தபோது, அவளுடைய நேரத்தை ஆறு வினாடிகளுக்குள் எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தார். அதுவே போட்டியில் அவளுடைய வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும். நீச்சல் வீராங்கனையின் முதுகில் சென்சார்களை இணைத்து, அவரது நேரத்தை மேம்படுத்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, ஓனோ, சிறுசிறு காரியங்களை சரிசெய்ய முயற்சித்தார். நீரினுள் அவற்றை சரியாய் கடைபிடித்தால் வெற்றிக்கு ஏதுவான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தீர்மானித்தார்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறிய காரியங்களை சரிசெய்யும்போது, அது பெரிய மாற்றத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும். சிறையிருப்பிற்கு பின்னர், செரூபாபேலோடு சேர்ந்து ஆலயக் கட்டுமான்ப பணியில் ஈடுபட்ட மீதியான இஸ்ரவேல் ஜனத்திற்கு சகரியா தீர்க்கதரிசியும் அதேபோன்ற ஒரு ஆலோசனையையே கொடுக்கிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சேனைகளின் கர்த்தர் செரூபாபேலுக்குச் சொல்லுகிறார் (சகரியா 4:6).
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (வச. 10) என்று சகரியா கேட்கிறார். தாங்கள் கட்டப்போகிற ஆலயம் சாலெமோனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு நிகராகாது என்று இஸ்ரவேலர்கள் சோர்ந்துபோயிருக்கின்றனர். ஆனால் தன்னிலிருக்கும் சிறு சிறு காரியங்களை மாற்றிக்கொண்டு ஓனோவின் நீச்சல் வீராங்கனை எவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றாளோ, அதுபோல தேவனோடு கூடிய சின்னஞ்சிறு முயற்சிகள் கூட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடும் என்பதை செரூபாபேலின் கூட்டம் விசுவாசித்தது. தேவனில் சிறியதும் சிறந்ததாய் மாறக்கூடும்.

இயேசுவே பதில்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் போதனையை நன்கு செவிகொடுத்து கேட்ட அவரது ஓட்டுநர், அவர் பேசிய அனைத்தையும் நன்கு கேட்டுவிட்டு, அவரே சொற்பொழிவாற்றுவதற்கு போதுமான தகவல் இருப்பதாக அறிவித்தார். அப்போது ஐன்ஸ்டீன், அடுத்த கல்லூரியில் சொற்பொழிவாற்றும்போது, அவர்கள் என்னை நேரில் கண்டதில்லை என்பதினால் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து உரையாற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் கேள்வி-பதில் நேரம் வந்தது. அதில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு கேள்விக்கு, ஓட்டுநர் அந்த நபரைப் பார்த்து, “நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக்கூடிய ஒரு எளிய கேள்வியை நீங்கள் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொல்ல, ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அந்த கேள்விக்கு பதிலளித்தாராம். வேடிக்கையான ஆனால் கற்பனையான கதை இங்கே முடிகிறது.
தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மிகவும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தான் உருவாக்கின பொற்சிலையை அவர்கள் வணங்காவிட்டால், அவர்களை அக்கினி சூளையில் போடுவதாக நேபுகாத்நேச்சார் பயமுறுத்தினான். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” (தானியேல் 3:15) என்று கேட்கிறான். தானியேலின் நண்பர்கள் பணிந்துகொள்ள மறுத்ததினால், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப்போட்டான்.
அவர்கள் தனியே செல்லவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்கள் சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்கமுடியாத வகையில் பதிலளித்தார் (வச. 24-25). அப்போது நேபுகாத்நேச்சார், “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே” என்று தேவனை துதித்து, “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்” (வச. 28-29).
சில சமயங்களில், சூழ்நிலை நம் கைமீறிப் போவதாக நாம் உணரலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் துணை நிற்கிறார். அவர் நம்மை சுமந்துசெல்வார்.