
தனக்குச் சொந்தமான இடம்
தங்களுடைய வாழ்க்கைத் துணையை இழந்த, சோகமான நிகழ்வுக்குச் சில ஆண்டுகளுக்குப் பின், ராபியும், சபரினாவும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொண்டதன் மூலம் இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்தனர். அவர்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டி, அதற்கு ஹாவிலா என்று பெயரிட்டனர் (எபிரேய மொழியிலே வேதனையில் உழன்று இதனைப் பெற்றேன் என்று அர்த்தம்). அழகிய ஒன்றினை வேதனையின் வழியாக உருவாக்குவதை இது காட்டுகிறது. எங்களுடைய பழைய வாழ்வை மறப்பதற்காக இவ்வீட்டைக் கட்டவில்லை, மாறாக, “சாம்பலில் இருந்து வாழ்வைப் பெற்றோம் என்ற நம்பிக்கையை கொண்டாடவே” இதைக் கட்டினோம் என்றனர் அந்த தம்பதியினர். “இது சொந்தம் கொண்டாடும் ஒரு இடம், வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு இடம், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை பற்றிக் கொள்ளும் ஒரு இடம்” என்று அவர்கள் கூறினர்.
இது இயேசு கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அழகாகச் சித்தரிக்கின்றது. அவர் நம்மை சாம்பலிலிருந்து தூக்கி எடுத்து, அவருக்குச் சொந்தமான இடமாக்குகின்றார். நாம் அவரை ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம்முடைய இருதயங்களில் தங்குவார் (எபே. 3:17). இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கின்றார் (1:5-6), எனவே நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். நாம் அனைவருமே வேதனைகளின் வழியாகக் கடந்து வந்துள்ளோம், தேவன் அவற்றை, நம் வாழ்வில் நன்மையாக மாற்றித் தருவார்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய அன்பினை உணர்ந்து, அவர் நமக்குத் தந்துள்ளவற்றைக் கொண்டாடும் போது, தேவனை அறிந்துகொள்வதில் வளருவதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுகிறோம். அவர் நம்மோடு இருக்கும் போது தான் நான் வாழ்வின் முழுமையைப் பெற்றுக் கொள்கின்றோம், அவரின்றி நம் வாழ்வு பரிபூரணமடைய முடியாது (வச. 19). அவரோடு நாம் பெற்றுக் கொள்கின்ற இந்த உறவு என்றும் நிலைத்திருக்கும் உறவு என்று அவர் வாக்களிக்கின்றார். இயேசுவே நமக்குச் சொந்தமான இடம், நம் வாழ்வைக் கொண்டாட காரணமானவர் இயேசுவே, இப்பொழுதும், எப்பொழுதும் நம் நம்பிக்கையாக இருப்பவரும் இயேசுவே.

மிகக் கடினமான இடங்கள்
ஜெஃப் என்பவர் வாலிபர்களுக்கான போதகர். அவர் எந்தப் பட்டணத்தில் போதைக்கு அடிமையாயிருந்தாரோ, அதே பட்டணத்திலேயே, இப்பொழுது போதகராயிருக்கிறார். தேவன் அவருடைய இருதயத்தையும், சூழல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்றினார். “சிறுவர்கள், நான் செய்த அதே தவற்றைச் செய்யாதபடியும், நான் பட்ட வேதனைகளின் வழியாக அவர்களும் செல்லாதபடியும் அவர்களைத் தடுக்க விரும்புகிறேன்” என்றார் ஜெஃப். “தேவன், அவர்களுக்கு உதவி செய்வார்” என்றார். சில நாட்களுக்கு முன்பு தேவன் அவரைப் போதையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார், அவருடைய கடந்த காலம் மோசமானதாயிருந்தாலும், தேவன் அவருக்கு ஒரு முக்கியமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.
நாம் நம்பிக்கை யிழந்த சூழல்களிலிருந்தும், எதிர்பாராத நன்மையைக்கொண்டு வர தேவனுக்குத் தெரியும். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான், அங்கு தவறாக குற்றம் சாட்டப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான், அநேக ஆண்டுகளாக அவனை யாரும் தேடவும் இல்லை. ஆனால் தேவன் அவனை மீட்டார், அவனைப் பார்வோனுக்கு அடுத்தபடியான உயர் அதிகாரியாக வைத்தார். அதன் மூலம், அநேகருடைய ஜீவனைக் காத்தான், தன்னை கைவிட்ட சகோதரர்களின் ஜீவனையும் காத்தான். யோசேப்பு எகிப்திலேயே திருமணம் செய்தான், குழந்தைகளைப் பெற்றான். அவனுடைய இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். (எபிரேய பாஷையிலே இரட்டிப்பான பலன் என அர்த்தம்) ஏனெனில், “நான் சிறுமைப் பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” (ஆதி. 41:52) என்றான்.
ஜெஃப் மற்றும் யோசேப்பின் கதைகள் நடைபெற்ற காலங்களுக்கிடையே ஏறத்தாள மூவாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் இடைவெளியிருந்த போதும், தேவனுடைய உண்மை மாறவில்லை. நம் வாழ்வின் கடினமான இடங்களையும் விளை நிலங்களாக மாற்றி, அநேகருக்குப் பயன்படும்படி செய்ய, தேவனாலே கூடும். நமது இரட்சகரின் அன்பும், வல்லமையும் ஒரு நாளும் மாறாது. அவர் மீது நம்பிக்கையாயிருக்கிறவர்களுக்கு அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.

தேவனுடைய உண்மைத் தன்மை
சி.எஸ். லுவிஸ் எழுதிய நார்னியாவின் நடபடிகள் என்ற புத்தகத்திலுள்ள கதையில், அநேக ஆண்டுகளுக்குப் பின், ஆஸ்லான் என்ற வல்லமையுள்ள சிங்கம் திரும்பி வந்த போது, நார்னியாவிலுள்ள சிங்கமும், அனைத்து விலங்குகளும், சூனியக்காரியும் அவளுடைய அலமாரியும் நடுங்கின. அவர்களின் மகிழ்ச்சி துயரமாக மாறியது. வெள்ளை சூனியக்காரி, கடைசியாகக் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை ஆஸ்லான் கொடுத்தபோதும், அவள் தோற்கடிக்கப்பட்டாள். ஆஸ்லான் உறுமியபோது அனைவரின் செவிகளும் பிளக்கும் அளவுக்கு வல்லமையுடையதாக இருந்ததால், நார்னியாவிலுள்ள அனைவரும் ஆஸ்லானின் பெலத்தையுணர்ந்தனர், அத்தோடு அந்த சூனியக்காரியும் பயத்தில் ஓடிவிட்டாள். எல்லாவற்றையும் இழந்து விட்டதைப் போன்று காணப்பட்டாலும், அசுரத்தனமான அந்த சூனியக் காரியைக் காட்டிலும், ஆஸ்லான் சர்வ வல்லமை பொருந்தியவன் என்பதை நிரூபித்தான்.
லூவிஸ்ஸின் கதையில் வரும் ஆஸ்லானின் சீடர்களைப் போன்று, ஒரு நாள் காலை எலிசாவின் வேலைக்காரன் எழுந்தபோது, அவனும் எலிசாவும் தங்கியிருக்கிற மலையைச் சுற்றிலும் எதிரியின் படைகள் சூழ்ந்திருக்கிறதைக் காண்கின்றான். அப்பொழுது வேலைக்காரன், “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான் (2 இரா. 6:15). அப்பொழுது தீர்க்கதரிசி மிகவும் அமைதியாக பதிலளிக்கிறார். “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (வச. 16) என்றார். பின்னர் எலிசா தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்றார் (வச. 17). “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வச. 17). முதலில் வெறுமையைக்கண்ட வேலைக்கரனின் கண்களை, சர்வ வல்ல தேவன் எதிரியின் படைகளைக் காட்டிலும் அதிகமான வீரர்களைக் காணும்படிச் செய்தார்.
நம்முடைய கடினமான வேளைகள், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என நம்பும்படிச் செய்யலாம். ஆனால் நம்முடைய கண்களைத் திறந்து, அவர் சர்வ வல்லவர் என்பதைக் காணும்படி தேவன் விரும்புகின்றார்.

நாம் நினைத்துப்பார்க்க முடியாதது
2001 ஆம் ஆண்டு, பார்ட் மில்லர்ட் என்பவர் அனைவரையும் கவர் ந்த ஒரு பாடலை எழுதினார். “என்னால் கற்பனை மட்டுமே பண்ணிப்பார்க்க முடிகிறது” (I Can Only Imagine) என்ற அந்த பாடல், தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அடுத்த ஆண்டு, எங்களுடைய மகள் மெலிசா, அவளுடைய பதினேழாம் வயதில் ஒரு கார் விபத்தில் மரித்த போது, மில்லர்டுடைய பாடலின் வரிகள் எங்கள் குடும்பத்தினரை வெகுவாகத் தேற்றியது. அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பது எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிந்தது.
ஆனால் மெலிசா இறந்த சில நாட்களில் எங்கள் மீது கரிசனை கொண்ட, மெலிசாவின் சிநேகிதிகளின் தந்தையர்கள் என்னிடம் வந்து, வேதனையோடு, இதனை வேறுவகையாகக் கூறினர். “நீங்கள் எதன் வழியாகக் கடந்து செல்கிறீகள் என்பதை எங்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை” என்று கூறினர்.
அவர்களின் அனுதாபங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களும் எங்களுடைய இழப்பில் பங்கு பெற்று, எங்களின் துயரத்தில், எங்களோடு நடந்து வந்தது, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
தாவீது இழப்பின் ஆழங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்” (சங். 23:4) என்று குறிப்பிடுகின்றார். தான் நேசித்தவர்களின் மரணத்தை தான் அவரும் குறிப்பிடுகின்றார். இருளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. நம்மால் இவற்றைக்கடந்து அக்கரைக்கு வர முடியுமா என்பதும் நமக்குத் தெரியாது.
ஆனால், இருளின் பள்ளத்தாக்கினை நாம் கடக்கும் போது, தேவன் நம்மோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையையும் தருகின்றார். இருளின் பள்ளத்தாக்கைக் கடந்ததும் அவருடைய பிரசன்னத்தில் இருப்போம் என வாக்குக் கொடுத்துள்ளார். விசுவாசிகளாகிய நாம், “ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிவது” என்பது தேவனோடு இருப்பது என்பதைத் தெரிந்துகொள்வோம் (2 கொரி. 5:8). அப்படியானால் நாம் கற்பனைபண்ண முடியாத இடத்திற்குச் செல்வோம், நம்முடைய எதிர்காலத்தில் நாம் தேவனோடு இணைந்து கொள்வோம்.
