வகை  |  odb

பரிசுத்த கூடுகை

ஒரு வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, என்னுடைய பள்ளிப் பருவ நண்பர்கள் குழு, ஓர் ஏரியின் அருகில் கூடினோம். பகல் பொழுதை, தண்ணீரில் விளையாடுவதிலும், உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் செலவழித்தோம். ஆனால், மாலையில் நடைபெற்ற உரையாடலை நான் ஒரு பொக்கிஷமாக இருதயத்தில் வைத்துள்ளேன். இரவு கடந்து வந்த போது, உள்ளத்தின் ஆழத்தில் இருந்த பாதிப்புகளையும், தடுமாறும் திருமண உறவுகளையும், சில அதிர்ச்சிகளின் பின்விளைவை சகிக்கும் குழந்தைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். எங்களின், ஒளிவு மறைவற்ற உடைந்த உண்மைகளையும் அத்தகைய மிகக் கஷ்டமான சூழல்களில் தேவன் உண்மையுள்ளவராய் இருந்தததையும் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு, மற்றவரை தேவனுக்கு நேராகத் திருப்பினோம். அந்த மாலைப் பொழுதுகளை பரிசுத்த கூடுகைகளாகக் கருதுகின்றேன்.

தேவன் தன் ஜனங்களை கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படி அழைத்த அந்த இரவு பொழுதும், இத்தகைய ஒரு நோக்கதோடு தான் இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். மற்ற பண்டிகைகளைப் போல, இந்த பண்டிகையையும் ஆசரிக்க ஜனங்கள் எருசலேமிற்கு பிரயாணம் செய்ய வேண்டும். அங்கு வந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆராதனை செய்ய வேண்டும், அவர்கள் அந்த பண்டிகை நாட்களில், ஒரு வாரத்திற்கு  “எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாது!” (லேவி. 23:35). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின்பு, செய்த வனாந்தர பயணத்தையும், தேவன் அவர்களை போஷித்ததையும் நினைவு கூரும்படி இந்த பண்டிகை ஆசரிக்கப் பட்டது (வ.42-43).

அவர்கள் அனைவரும் தேவனுடைய ஜனங்கள் என்ற ஒரே எண்ணம், அவர்களை இந்தக் கூடுகையின் மூலம் ஒன்று சேர்த்ததோடு, அவர்கள் தனித்தும் குழுவாகவும் கடின வேளைகளை சந்தித்தபோது, தேவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளை பிரகடனப்படுத்தவும் உதவியாயிருந்தது. நாம்  நேசிக்கின்றவர்களோடு, நாம் ஒன்று சேரும் போது, தேவன் நம் வாழ்வில் தந்துள்ளவற்றையும் அவருடைய பிரசன்னம் நம்முடைய வாழ்வில் இருப்பதையும் நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும் போது, நம்முடைய விசுவாசமும் பலப்படும்.

மன்னிக்கும்படி தெரிந்து கொள்ளல்

1999 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 23 ஆம் நாள், கிரகாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களாகிய பிலிப், தீமோத்தி ஆகியோர் தங்களுடைய சொந்த ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது, தீயிட்டு கொழுத்தப்பட்டனர். இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில், ஏழை குஷ்டரோகிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த தன்னலமற்ற சேவையைக் குறித்து, அதுவரை வெளி உலகிற்கு சிறிதளவே தெரிந்திருந்தது. இந்த விபரீதத்தின் மத்தியில், அவருடைய மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தர் ஆகியோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். அவர்கள் வெறுப்போடு அல்ல, மன்னிப்போடு செயல்படுவதைத் தெரிந்து கொண்டார்கள்.

12 ஆண்டுகள் கழித்து, அந்த வழக்கு முடிவுக்கு வந்த போது, கிளாடிஸ் அம்மையார் ஒரு செய்தியை வெளியிட்டார்கள். “நான் அந்தக் கொலையாளிகளை மன்னித்து விட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்த கசப்பும் கிடையாது…………..தேவன், கிறிஸ்துவின் மூலம் என்னை மன்னித்தார். அவர் தன்னுடைய சீடர்களும் அதனையே செய்யும்படி விரும்புகின்றார்” என்றார். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மன்னித்தலின் முக்கிய கருத்து என்பதை தேவன்  கிளாடிஸ்ஸுக்குக் காட்டினார். தன்னை துன்பப் படுத்தியவர்களுக்கு கிறிஸ்து சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்.23:34) என்று கூறிய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பைக் குறித்து, சகரியா ஆசாரியன் கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (லூக். 1:77).                                            

ஒடிசாவில் நடைபெற்ற, நினைத்து கூட பார்க்க முடியாத  இத்தகைய சோகத்தை நாம் அனுபவிக்காவிட்டாலும், ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு வகையில் கஷ்டங்களை சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு கணவன் துரோகம் இழைக்கின்றான், ஒரு பிள்ளை எதிர்த்து நிற்கின்றது, வேலை செய்யும் இடத்தில் எஜமானனின் கொடுமை என பல  நிந்தனைகளின் மத்தியில் நாம் எப்படி வாழ்வது? நாம் நமது இரட்சகரைப் பார்ப்போம். யாவராலும் தள்ளப்பட்டவராய், கொடுமை படுத்தப் பட்டபோதும், அவர் மன்னித்தார். இயேசுவிடம் நம் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதோடு, பிறரை மன்னிக்கக் கூடிய  பெலனையும் பெற்றுக் கொள்கின்றோம். கிளாடிஸ் ஸ்டேன்ஸைப் போன்று, நாம் நம்முடைய இருதயத்திலுள்ள கசப்பை நீக்கி விட்டு, மன்னிக்கும் படி தெரிந்து கொள்வோம்.

தேவனுடைய வழிநடத்துதலின் தேவை

அறிஞர் கென்னெத் பெய்லி, சாக்கி மாமாவை ஒரு நண்பனையும் விட மேலாகக் கருதினார். மிகப் பரந்த சகாரா பாலைவனத்துக்குள் சவாலான சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, சாக்கி மாமாவைத் தான், அவருடைய நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகக் கருதினார். சாக்கி மாமாவைப் பின் தொடரும் பெய்லியும், அவருடைய குழுவினரும் தங்களுடைய முழு நம்பிக்கையையும் அவர் மீது வைத்தனர். மொத்தத்தில், “நாங்கள் செல்கின்ற இடத்தின் வழியை நாங்கள் அறியோம், எங்களை வழிதவறச் செய்தால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம். நாங்கள் எங்களது முழு நம்பிக்கையையும் உங்களின் தலைமையில் வைத்துள்ளோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

சோர்ந்து, இருதய வேதனையோடு இருந்த ஒரு வேளையில், தாவீது மனித வழி நடத்துதலையெல்லாம் தாண்டி, தான் பணிசெய்கின்ற தேவனுடைய வழி நடத்துதலைத் தேடுகின்றார். சங்கீதம் 61:2 ல், “என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்” என்கின்றார். தேவனுடைய பிரசன்னத்தின் மறைவில் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அவர் ஏங்குகின்றார் (வ.2-4).

வேதாகமம் விளக்குவது போல, “வழிதப்பிப் போன” ஆடுகளைப் போல காணப்படும் மக்களின் வாழ்க்கையில் தேவனுடைய வழி நடத்துதல் மிக அவசியம் (ஏசா.53:6). நாம் நம்முடைய சொந்த வழியில் நடந்தால், உடைந்து போன உலகமாகிய இந்த வனாந்தரத்தில் நம்பிக்கையை இழந்து தொலைந்து போவோம்.

ஆனால், நாம் தனித்து விடப்படவில்லை! நம்மை வழி நடத்த ஒரு மேய்ப்பன் உள்ளார், அவர் நம்மை “அமர்ந்த தண்ணீர்கள்” அண்டையில் கொண்டு போய், ஆத்துமாவைத் தேற்றி, நீதியின் பாதையில் வழி நடத்துகின்றார் (சங்.23:2-3).

தேவனுடைய வழி நடத்துதல் உனக்கு எங்கு தேவைப் படுகின்றது?  அவரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை ஒரு போதும் விட்டு விலக மாட்டார்.

சுலபமாகச் செய்கிறது

என்னுடைய தந்தையும் நானும் மரங்களை வெட்டவும், அவற்றைச் சரியான அளவில் துண்டுகளாக்கவும், இருவர் பயன் படுத்தை கூடிய, குறுக்கே வெட்டும் ரம்பத்தை பயன் படுத்துவோம். நான் இளைஞனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருப்பதால் எளிதில் ரம்பத்தை வெட்டுக் குழியில் திணித்து விடுவேன். “எளிதாகச் செய்கின்றது, ரம்பம் அதன் வேலையை செய்யட்டும்” என்பார் என்னுடைய தந்தை.

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். “தேவனே…..செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (2:13). எளிதாகச் செய்ய முடியும். அவர் நம்மை மாற்றுகின்ற வேலையை செய்யட்டும். கிறிஸ்து கூறியுள்ளவற்றை நாம் வாசிப்பதையும், செயல் படுத்துவதையும் காட்டிலும் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று சி.எஸ். லுவிஸ் கூறியுள்ளார். “ ஓர் உண்மையான கிறிஸ்து என்ற நபர்,  உனக்குள் காரியங்களைச் செயல் படுத்தி,…… உன்னை நிரந்தரமாக ……கிறிஸ்துவைப் போல மாற்றி…… தன்னுடைய வல்லமையையும், மகிழ்ச்சியையும், அறிவையும்  நித்திய வாழ்வையும் பகிர்ந்து கொள்கின்றார்” என்று அவர் கூறுகின்றார்.

இத்தகையச் செயலைத் தான் தேவன் இன்று செயல் படித்திக் கொண்டிருக்கின்றார். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதை கவனித்துக் செயல் படுத்து, ஜெபி. “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்” (யூதா 1:21), நீங்கள் அவருக்கேச் சொந்தம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை மாற்றுகின்றார் என்ற உறுதியில் அமைதியாக காத்திருங்கள்.

“நீதியின் மேல் பசியும் தாகமும் நமக்குள்ளதா?”  என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தை உயரத்தில் வைக்கப் பட்ட பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளும்படி, அதன் கண்கள் ஆவலோடு மின்னுவதை உண்ர்ந்த அதன் தந்தை, அப்பரிசு பொருளை எடுத்து அக்குழந்தைக்கு கொடுப்பதைப் போல எண்ணிக்கொள்.

அது தேவனுடைய வேலை, மகிழ்ச்சி நம்முடையது. எளிதாகச் செய்யப்படும். ஒரு நாள் நாமும் அங்கிருப்போம்.

என்ன வேண்டுமானாலும் செய்

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.

ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).

ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு    ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).

தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.