வகை  |  odb

உறுதியாய் தரித்திரு

நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).

இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).

 

எந்த ஞானம்?

2018, ஈஸ்டர் தினத்திற்கு சற்று முன்பு, தீவிரவாதி ஒருவன் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்று, ஒரு பெண்ணை பிணையக் கைதியாய் கொண்டுசென்றான். அந்த பெண்ணைக் காப்பாற்றும் காவலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு பதிலாக தன்னை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை விடுவிக்குமாறு ஒரு காவல் அதிகாரி துணிச்சலாய் முன்வந்தார்.

அந்த வழக்கத்திற்கு மாறான துணிச்சல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரபலமான நபர்கள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களையே நீங்கள் கலாச்சார அடையாளமாய் பார்ப்பதுண்டு. அவற்றை ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவிட்டு, மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுண்டு. “நீங்கள் கனவுகண்ட வாழ்க்கையை வாழ்வதே மிக சுவாரஸ்யமான வாழ்க்கை” என்பது அப்படிப்பட்ட ஒரு பிரபல தத்துவம். “உன்னை முதலில் நீ நேசி, மற்றதெல்லாம் தானாய் உன்னிடத்தில் சேரும்” என்பதும் இன்னொரு தத்துவம். “உனக்காய் என்ன செய்யவேண்டுமோ, அதை செய்” என்பது மூன்றாவது தத்துவம். இந்த தத்துவங்களையெல்லாம் அந்த காவல் அதிகாரி கடைபிடித்திருந்திருப்பாராகில், முதலில் ஓடி ஒளிந்து தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார்.

இந்த உலகத்தில் இரண்டு வகையான ஞானம் இருப்பதாக அப்போஸ்தலர் யாக்கோபு குறிப்பிடுகிறார்: ஒன்று, பூமிக்குரிய ஞானம், மற்றது பரலோக ஞானம். முதலாவது ஞானம், சுயநலத்தினாலும் ஓழுங்கீனங்களினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது (யாக்கோபு 3:14-16); இரண்டாவது ஞானம், தாழ்மை, கீழ்ப்படிதல், சமாதானம் செய்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது (வச. 13, 17-18). பூமிக்குரிய ஞானமானது சுயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் பரலோக ஞானமானது, மற்றவர்களை முன்னிலைப்படுத்தி, தாழ்மையான கிரியைகளை நடப்பிக்க தூண்டுகிறது (வச. 13).

காவல் அதிகாரி சொன்ன நிபந்தனையை அந்த தீவிரவாதி ஏற்றுக்கொண்டான். பிணையக்கைதியாயிருந்த பெண் விடுவிக்கப்பட்டாள். ஆனால் அந்த காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று, யாரோ ஒருவருக்காய் தவறுசெய்யாத ஒரு மனிதன் உயிர்கொடுத்த சம்பவத்தை உலகம் சாட்சியிட்டது.

பரலோகத்தின் ஞானமானது சுயத்தின் மீது தேவனை வைப்பதால், தாழ்மையான கிரியைகளை செய்ய நம்மை தூண்டுகிறது (நீதிமொழிகள் 9:10). நீங்கள் எந்த ஞானத்தை இன்று பின்பற்றுகிறீர்கள்?

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது.

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45).

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

வழிநடத்துதலை ஏற்றல்

என்னுடைய சிநேகிதி மிச்செல் என் மகளுக்கு குதிரை ஏற்றம் கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை லாயத்தில் இருந்த தோல் மற்றும் வைக்கோல் வாசனை காற்றில் வந்தது. மிச்செலின் வெள்ளைக் குதிரையின் வாயில் எப்படி கயிற்றின் வளையத்தைப் பொறுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை வாயை திறந்து காண்பித்தது. அதன் காதுகளுக்கு மேல் கடிவாளத்தை இழுத்தபோது, குதிரையை மெதுவாக நகர்த்துவதற்கும் இடது அல்லது வலது பக்கம் அதை இயக்குவதற்கும் அனுமதித்ததால், அந்த கடிவாளத்தில் இருக்கும் அந்த வளையம் மிகவும் முக்கியமானது என்று மிச்செல் விளக்கினார்.

குதிரையின் வாயோராமாய் இருக்கும் அந்த வளையம் மனிதனின் நாக்கைப் போன்று முக்கியமானது. இரண்டும் பெரிய ஒன்றை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அந்த சிறு கடிவாள வளையம் குதிரையையும், சிறிய நாக்கு மனிதனின் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறது (யாக்கோபு 3:3,5).

நம்முடைய வார்த்தைகள் அனைத்து திசைகளுக்கும் தீவிரமாய் பரம்பும். “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்” (வச. 9). ஆனால், வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதால், நாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று வேதம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது (லூக்கா 6:45). ஆனால் நமக்கும் வாசமாயிருக்கும் கர்த்தருடைய ஆவியானவர், பொறுமை, நற்குணம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் சுபாவங்களில் வளருவதற்கு நமக்கு உதவிசெய்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஆவியானவரோடு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது நம்முடைய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறது. வீணான வார்த்தைகள் துதியின் சத்தமாய் மாறுகிறது. பொய்யானது சத்தியமாய் மாறுகிறது. விமர்சன உதடுகள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச எத்தனிக்கிறது.

நாவை அடக்குவது என்பது சரியான வார்த்தைகளை பேசுவதற்கான பயிற்சி மட்டுமன்று. அது ஆவியானவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, உலகத்திற்கு தேவையான தயவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் நம்மிலிருந்து பிறப்பிக்கச் செய்யும் ஆவியானவருடைய கிரியை.