வகை  |  odb

புலம்புவது தவறில்லை

நான் முழங்கால்படியிட்டு கண்ணீர் சிந்தினேன். “தேவனே, ஏன் என்னை நீர் கவனித்துக்கொள்வதில்லை?” என்று அழுதேன். அது கோவிட்-19 தொற்று வெகுவாய் பரவிய 2020ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஒருமாத காலமாய் நான் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். என்னுடைய வேலையில்லா விண்ணப்பத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. அமெரிக்க அரசு அறிவித்திருந்த ஊக்கத் தொகையும் வந்து சேர்ந்தபாடில்லை. தேவன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பியிருந்தேன். அவர் என்னை உண்மையாய் நேசிக்கிறார்; என்னை பாதுகாப்பார் என்று நம்பினேன். ஆனாலும் அந்த தருணத்தில் நான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

புலம்புவது ஒருவிதத்தில் சரியென்று புலம்பல் புத்தகம் நமக்கு காட்டுகிறது. இப்புத்தகம் கி.மு. 587இல் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்போதோ அல்லது அதற்கு பின்னரோ எழுதப்பட்டது. இது மக்கள் சந்தித்த பாடுகள் (3:1,19) அடக்குமுறை (1:18) மற்றும் பட்டினி (2:20; 4:10) போன்றவற்றை விவரிக்கிறது. ஆயினும், புத்தகத்தின் இடையில் நம்பிக்கையை ஏன் இழக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை ஆசிரியர் நினைவுகூறுகிறார்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (வச. 22-23). இந்த கடினமான பேரழிவின் மத்தியிலும், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று ஆசிரியர் நினைவுகூறுகிறார்.

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (வச. 25) என்பதை நம்புவது சிலநேரங்களில் கடினமாய் தெரிகிறது. குறிப்பாய், நம்முடைய பாடுகளுக்கு முடிவேயில்லை என்று கருதும் நேரங்களில் தேவனை நம்புவது கடினம். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் புலம்பலாம். அவர் நம்மை நிச்சயமாய் கண்ணோக்கிப் பார்ப்பார்.

வெகுசிறப்பான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.

மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.

அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்... தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.

நீதியின் தேவன்

வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய்  தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.

மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது.  மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.

நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;.  உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).

நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.

ரகசியமாகக் கொடுப்பவர்

உடல் ஊனமுற்ற வீரரான கிறிஸ்டோபரைப் பொறுத்தவரை, அன்றாட நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாகிவிட்டது. அவைகளை செய்து முடிக்க அதிக நேரம் பிடித்தது. அது அவரது வலியை அதிகரித்தது. ஆனாலும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பொருட்டு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு வாரமும் அவர் தனது தோட்டத்தில் கடினமாக உழைப்பதை வழிப்போக்கர்கள் பார்ப்பார்கள்.

ஒரு நாள் கிறிஸ்டோபருக்கு ஒரு கடிதமும் அவரது தோட்ட வேலைகளில் அவருக்கு உதவ ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் அறியப்படாத நன்கொடையாளரிடமிருந்து வந்திருந்தது. தேவைப்படுபவருக்கு ரகசியமாய் உதவுவதின் பாக்கியத்தை பெறுவதின் மூலம் கொடுத்த அந்த நபர் திருப்தியடைந்தார்.

இயேசு நாம் கொடுப்பது அனைத்துமே இரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நாம் கொடுக்கும்போது நம்முடைய நோக்கங்களை சரிபார்க்க அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 6:1). அவர் மேலும் சொன்னார்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” (வச.2). நாம் மனமுவந்து கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பாராட்டுக்களை பெறுவதற்கோ அல்லது சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கோ மக்கள் முன் நல்ல செயல்களை செய்வதை தவிர்க்க அவர்களை ஊக்குவிக்கிறார் (வச. 3). 

நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து கிடைத்தது என்பதை நாம் உணரும்போது, நம்முடைய முதுகில் யாரும் தட்டி கொடுக்கவோ அல்லது மற்றவர்களின் புகழைப் பெறவோ நாம் விரும்பமாட்டோம். ரகசியமாய் உதவிசெய்வதில் திருப்தியுள்ளவர்களாய் இருக்கமுடியும். நமக்கு நன்மைகளை பெருகச்செய்யும் எல்லாம் அறிந்த தேவன், தாராளமாய் கொடுப்பவர்கள் மீது பிரியமாயுள்ளார். அவருடைய ஒப்புதலின் வெகுமதியை எதுவும் தடுக்க முடியாது.

எனக்கு தகுதியானதா அல்லது நான் தகுதியுள்ளவனா?

ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் ஆங்கில மிஷனரி மருத்துவரான ஹெலன் ரோஸ்வேர் 1964இல் ஏற்பட்ட சிம்பா கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் அவர்களால் தாக்கப்பட்டு, தவறாய் கையாளப்பட்டதால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்த நாட்களில், “இது எனக்கு தகுதியானதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.

இயேசுவைப் பின்தொடர்வதற்கான கிரயத்தை அவள் சிந்திக்கத் தொடங்கினபோது, தேவன் அதைப் பற்றி அவளிடம் பேசுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நேர்காணலுக்கு பேட்டியளிக்கும்போது, “கிளர்ச்சியின் மிகவும் மோசமான தருணங்களில், கர்த்தர் என்னிடம், “இது எனக்கு தகுதியானதா?” என்னும் கேள்வியை மாற்றி “நான் இதற்கு தகுதியானவளா?” என்று கேட்கும்படி எனக்கு உணர்த்தினார். அவளுடைய வலி மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் “ஆம்! அவர் தகுதியானவர்” என்னும் முடிவுக்கு தான் வந்ததாக அறிவித்தார். 

தனது துன்பகரமான சோதனையின்போது அவளுக்குள் இருந்த தேவ கிருபையின் மூலம், ஹெலன் ரோஸ்வேர், அவருக்காக மரணத்தை கூட அனுபவித்த மீட்பருக்காக எதையும் சகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். “அவர் தகுதியானவர்” என்ற அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்களின் அழுகையை எதிரொலிக்கின்றன: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்!” (5:12).

நம்முடைய இரட்சகர் நமக்காக துன்பப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் இலவசமாக நாம் பெறுவதற்காக, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அனைத்துமே நம் அனைவருக்கும் தகுதியானவை. அவர் தகுதியானவர்!