வகை  |  odb

காணப்படுதல்

வழிகாட்டுதலை குறித்த ஒரு கட்டுரையில் ஹன்னா ஸ்செல் என்பவர், வழிகாட்டியானவர் ஆதரிப்பவராக, சவால் மிக்கவராக, ஊக்கமளிப்பவராக இருப்பது அவசியம் ஆனால் "முதலாவதும், மிக முக்கியமானதும் யாதெனில் ஒரு நல்ல வழிகாட்டி உங்களை காண வேண்டும்..... அறியப்படுதல் என்பது விருதுகளினாலும், பிரபலமடைவதினாலும் மட்டும் உண்டாவதில்லை சாதாரணமாக 'காணக்கூடியவராய்' இருப்பதனாலும் தான், அதுவே மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் அறியப்பட்டவர்களாய், அங்கீகரிக்கப்பட்டவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டில், பர்னபா என்பவர் (அவருடைய பெயருக்கு "ஆறுதலின் மகன்" என்று அர்த்தம்) தன்னை சுற்றிலுமிருந்த மக்களை சந்திப்பதில் சாமர்த்தியசாலி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 இல், மற்ற சீஷர்கள் சவுலை குறித்து பயந்திருந்தபோது, இவரோ அவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினார்.(வ.26) சவுல் (இவன் பவுல் என்றும் அழைக்கப்பட்டான் 13:9) இயேசுவின் விசுவாசிகளை துன்புறுத்துகிறவனாக இருந்தான்.(8:3), ஆகையால் அவனை உண்மையான சீடனாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (9:26).

பல நாட்கள் கழித்து, பவுலும், பர்னபாவும் அவர்கள் "கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று" (15:36) போய்ப்பார்க்க தங்களோடு மாற்குவை கூட்டிக்கொண்டு போவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களோடு மாற்கு வருவது பவுலுக்கு ஏற்றதாய் தோன்றவில்லை காரணம் அவர், அவர்களை இதற்கு முன்னரே தனியேவிட்டு பிரிந்து போயிருந்தார். சுவாரசியமாக, பவுல் பின்னர் மாற்குவின் உதவியை கோருகிறார் "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11).

பவுல், மாற்கு என இருவரையும் சந்திக்க பர்னபா நேரம் ஒதுக்கினார். ஒருவேளை நாம் பர்னபாவை போல மற்றொருவரிடம் உள்ள ஆற்றலை உணருபவராக இருக்கலாம் அல்லது ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவைப்படும் நபராக நாம் இருக்கலாம். நாம் ஊக்குவிக்க கூடிய நபர்களுக்கு நேராக நம்மை நடத்தவும், நம்மை ஊக்குவிக்க கூடியவர்களை நமக்கு நேராக கொண்டு வரவும் தேவனை நாம் கேட்போம்.

ஞானமுள்ள அறிவுரை

ஏப்ரல் 2019 அன்று பாரிசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து, அதின் பண்டைய கால மர உத்திரமும், கூரையில் செய்யப்பட்டிருந்த ஈயமும் இணைந்து அடுப்பைப் போல எரிந்து, அதிக சூட்டின் நிமித்தம் நிற்க கூடாமல் விழுந்தது. தேவாலயத்தின் உச்சி கோபுரம் பயங்கரமாக விழுந்த பின்னர், இப்பொழுது அதின் மணி கூண்டுகளுக்கு நேராக நெருப்பின் கவனம் திரும்பியது. எஃகினால்  செய்யப்பட்ட ராட்சத மணிகளின் மரச்சட்டங்கள் எரிந்துவிட்டால், அவைகள் நிலைகுலைந்து இரு மணி கூண்டுகளையும் கீழே விழத்தள்ளி, தேவாலயத்தை தரைமட்டமாக்கி விடும்.

தன்னுடைய தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட பாரிஸ் நகரத் தீயணைப்புத் துறையின் படைத்தலைவர் ஜெனரல் கல்லெட், அடுத்து என்ன செய்வதென்ற யோசனையிலிருந்தார். அப்பொழுது ரெமி என்ற தீயணைப்பு வீரர் தயக்கத்தோடு அவரை அணுகி, "மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, நான் கோபுரங்களின் வெளிப்புறமாக மேலே நீர் குழாய்களின் மூலம் தண்ணீரை பீச்சி அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லுகிறேன்" என்றார், ஆனால் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு படைத்தலைவர் இந்த யோசனையை நிராகரித்தார். இருந்தபோதிலும் ரெமி தொடர்ந்து அவரோடு தன் கருத்தை வலியுறுத்தினார். சீக்கிரத்தில் படைத்தலைவர் கல்லெட் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருந்தது, இளைய தீயணைப்பு வீரரின் அறிவுரையை பின்பற்றுதல் அல்லது தேவாலயம் இடிவதற்கு அதை விட்டுவிடுதல்.

ஆலோசனையை பின்பற்றுவதை குறித்து வேதம் அதிகமாக பேசுகிறது. சில சமயங்களில், வாலிபர் முதியோருக்கு கொடுக்கும் மரியாதையை இப்படி குறிப்பிடுவதாக இருந்தாலும் (நீதிமொழிகள் 6:20-23), பெரும்பாலும் அப்படி இல்லை. நீதிமொழிகள் சொல்கிறது, "ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்."(12:15) "நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."(24:6.) மேலும், "மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்" (12:15) என்று. ஞானமுள்ளவர்கள் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பர், அதை கொடுப்பவர் எவ்வயதினராயினும், எந்த பதவியிலிருப்பவராயினும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.

ஜெனரல் கல்லெட், ரெமிக்கு செவிகொடுத்தார். எரிந்துகொண்டிருந்த மணிகூண்டுகளின் சட்டங்களில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, சிறுது  நேரத்திலேயே தேவாலயம் காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு உங்களுடைய எந்த பிரச்சனைக்கு தேவாலோசனை தேவை? சிலசமயம் தேவன் தாழ்மை உள்ளவர்களை இளையவர்களின் வாய்வார்த்தைகளை கொண்டும் நடத்துகிறார்.

நாம் எல்லோரும் ஒன்றே

சிறிய விவசாய சமூகத்தில் செய்தி வேகமாக பரவுகிறது. ஜெயந்தின் குடும்பத்திற்கு ஆண்டாண்டு காலமாக சொந்தமாக  இருந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி விற்ற பிறகு, அந்த சொத்து விற்பனைக்கு மீண்டும் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பல தியாகங்கள் மற்றும் சேமிப்புகளுக்கு பின்னர் ஜெயந்த், சுமார் 200 உள்ளூர் விவசாயிகள் கூடியிருந்த அந்த ஏலமெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜெயந்தின் அற்பமான ஏலத் தொகை போதுமானதாக இருக்குமா? இப்பொழுது ஏலதாரர் உயர்ந்த ஏலத் தொகையை அறிவித்து ஆரம்பித்த பின்னர், ஜெயந்த் ஒரு பெருமூச்சோடு தனது முதலாவது ஏலத் தொகையை அறிவித்தார்.  ஏலதாரர், ஏலத்தின் முடிவை அறிவிக்கும்வரை அவரை சுற்றி இருந்த கூட்டம் அமைதியாய் இருந்தது. சக விவசாயிகள் ஜெயந்த் மற்றும் அவருடைய குடும்பத்தின் தேவைகளை தங்கள் சொந்த பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை பார்க்கிலும் முதன்மைப்படுத்தியிருந்தனர்.

விவசாயிகளுடைய கருணை நிறைந்த இந்தத் தியாகச் செயல், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் வாழவேண்டிய விதத்தை பற்றி கூறுவதை விளக்குகிறது. நம்முடைய சுயநலமான விருப்பங்களை மற்றவர்களுடைய தேவைகளை விட அதிக முக்கியத்துவம் படுத்துவதும், நம்முடைய சுயத்தை பேணுவதற்காக துடிப்பதையும் நிறுத்தும்படி பவுல் நம்மை, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2) என்று எச்சரிக்கிறார். மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்க அவரை நாம் நம்பலாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனங்களை புதிதாக்குகையில், நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்தும் நோக்கத்தோடும், அன்போடும் செயல்படுவோம். பிறரை நாம் முன்னிலைப் படுத்தும்போது, நம்மை குறித்து நாமே உயர்வாய் எண்ணுவதை தவிர்ப்போம். மேலும், தேவன் நாம் ஒரு பெரிய காரியத்தின் பகுதியாக இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார் - அதுதான் சபை (வ.3-4).

பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகள் வேதவசனங்களை புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும் உதவுகிறார். அவர் நாம் சுயநலமில்லாமல் கொடுக்கவும், உதாரத்துவமாய் நேசிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறார். ஆகையால் நாம் ஒன்றாய் செழித்தோங்க முடியும்.

அன்பின் வல்லமை

80 வயதை கடந்த ஒரு வினோதமான ஜோடி, ஒருவர் ஜெர்மனியிலிருந்து மற்றொருவர் டென்மார்க்கிலிருந்து. இருவரும் தம் தம் துணையை இழப்பதற்கு முன் 60 ஆண்டுகள் திருமண வாழ்வை அனுபவித்தனர். 15 நிமிட பயண தொலைதூரம்தான் இருவருக்கும் இருந்த போதிலும் அவர்களுடைய வீடுகள் வெவ்வேறு நாட்டில் இருந்தன. எனினும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க தொடங்கினார்கள், வழக்கமாக உணவு சமைத்து ஒன்றாக தங்கள் நேரத்தை கழித்தனர். துரதிருஷ்டவசமாக ஜெர்மானிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக, அதின் எல்லைகளை கடப்பதற்கு தடை செய்தது. ஆனாலும், தடையின்றி அனுதினமும் மாலை மூன்று மணிக்கு இருவரும் இரு நாட்டின் எல்லை கோட்டின் அருகே அமைதியான எல்லைப் பகுதியில் அவரவர்களுடைய நாட்டுக்குரிய எல்லைகளில், அருகருகே அமர்ந்து இன்பச் சுற்றுலா அனுபவித்து மகிழ்ந்தனர். "நாங்கள் இங்கே இருப்பதற்கு காரணமே அன்புதான் " என்று அந்த மனிதர் விளக்குகிறார். அவர்களுடைய அன்பு நாட்டின் எல்லைகளை விட வலிமையாகவும், பெருந்தொற்றை காட்டிலும் பலமாகவும் இருந்தது.

உன்னதப்பாட்டு அன்பின் வெல்லமுடியாத வலிமையை பற்றி ஆழமாக பதிவிடுகிறது "நேசம் மரணத்தைப்போல் வலிது" (8:6.) என்று சாலொமோன் வலியுறுத்துகிறார். நாம் யாரும் மரணத்திற்கு தப்புவதில்லை; அது தகர்க்க முடியாத வலிமையோடு இறுதி நிலையாக நம்மேல் வருகிறது. ஆயினும், எழுத்தாளர் கூறுகிறார், அன்பும் மரணத்தைப் போலவே ஒவ்வொரு அணுவிலும் சமவலிமை உடையது. இன்னும் என்ன சொல்வோம், அன்பு "அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது." (வ.6). நீங்கள் எப்போதாகிலும் நெருப்பை கொழுந்துவிட்டு எரிய பார்த்ததுண்டா? அன்பும் நெருப்பை போலவே அவிக்க இயலாது. "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;" (வ.7)

மனித அன்பும் எப்பொழுதெல்லாம் தன்னலமற்றதாயும், உண்மையுள்ளதாயும் இருக்கிறதோ, அப்போது இத்தகைய குணாதிசயங்களை பிரதிபலிக்கும். எனினும், தேவனுடைய அன்பு மாத்திரமே இத்தகைய ஆற்றலும், இத்தகைய அளவில்லா அழங்களும், இத்தகைய உறுதியான வல்லமையும் கொண்டிருக்கிறது. நமக்கு வியப்பூட்டும் செய்தி யாதெனில் தேவன் நம் ஒவ்வொருவரையும் இத்தகைய அணைக்க முடியாத அன்பினாலே நேசிக்கிறார்.

மறக்கப்படவில்லை

நாம் சரித்திர சிறப்புமிக்க, நவீன சிந்தனையாளர்களாய் இருந்த அருட்பணியாளர்களை  நினைக்கும்போது, சார்லஸ் இரேனியஸ் (1790-1838) என்ற பெயர் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. ஆனால் நிச்சயம் அது வந்தாகவேண்டும். ஜெர்மானிய தேசத்தில் பிறந்த இரேனியஸ், தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அந்தப் பகுதியின்  முதல் அருட்பணியாளர்களின் வரிசையில் வந்தார். குறுகிய காலகட்டத்திலே 90 கிராமங்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை கொண்டுபோய் சேர்த்து, மூன்றாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தார். அவர் எழுத்தாளராகவும், வேதாகமத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் "திருநெல்வேலியின் அப்போஸ்தலன்" என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார், தென்னிந்திய திருச்சபையை நிறுவிய அருட்தந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு ஏற்ற இரேனியஸின் வியத்தகு வாழ்வை சிலர் மறந்திருக்கலாம் ஆனால் அவருடைய ஆவிக்குரிய சேவையை தேவன் ஒருபோதும் மறக்க மாட்டார். தேவனுக்கென்று நீங்கள் செய்வதையும் அவர் மறக்கமாட்டார். எபிரெயருக்கு எழுதின நிருபம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறது, " உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (6:10). தேவனுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் அவர் தம்முடைய நாமத்தினாலே செய்யப்பட்ட அனைத்தையும் மெய்யாய் அறிந்திருக்கிறார், அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளார். அவ்வாறே எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம், "வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து" (வ.11) என்று நம்மை ஊக்குவிக்கிறது.

நாம் யாரும் அறியாவண்ணம் நம் சபையிலும், சமுதாயத்திலும் சேவை செய்கையில் நம்முடைய கடுமையான பணி ஒருவராலும் பாராட்டப் படவில்லை என்று நாம் உணர்வது இயல்புதான். மனம் தளராதீர்கள், நம்மை சுற்றியுள்ள ஜனங்கள் நமது சேவைகளை அங்கீகரிக்கிறார்களோ, வெகுமதி அளிக்கிறார்களோ இல்லையோ, தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை.