வந்து பணியுங்கள்
பல இன மக்கள் ஒன்றாய் இணைந்து தேவனை ஆராதித்து, பாடல்களை மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த களைத்துப்போயிந்த தாயினால் ஆராதிக்க முடியவில்லை. அழுதுகொண்டிருந்த தன் குழந்தையை ஒருபுறம் தாலாட்ட, மறுபுறம் தன் ஐந்து வயதான பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை பிடித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடைபழகும் தன்னுடைய மற்றொரு பிள்ளை ஓடிவிடாமல் பார்த்துகொண்டிருந்தாள். இதை அவளுக்குப்பின் அமர்ந்து கவனித்த ஒரு முதியவர், நடைபழகும் பிள்ளையை ஆலய வளாகத்தில் நடக்கவைக்க அழைத்து சென்றார். மற்றொரு வாலிபப் பெண், மூத்த பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை தான் பிடித்துக்கொள்வதாக செய்கையில் சொன்னாள். இரண்டு நிமிடங்களில், அந்த தாயின் களைப்பு மாறி, தன் கண்களை மூடி, நிம்மதி பெருமூச்சோடு தேவனை ஆராதித்தாள்.
ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர், மூத்த விசுவாசிகள், புதிய விசுவாசிகள் என அனைவரும் தன்னை ஆராதிக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். இஸ்ரவேலின் கோத்திரங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆசிர்வதிக்கும்படி அனைவரும் கூடிவருமாறு அறிவுறுத்துகிறார். “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு.. உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும்” (உபாகமம் 31:12-13) எனக் கூறுகிறார். நாம் வாழ்வில் எந்நிலையிலிருந்தாலும், அவருடைய ஜனங்கள் அவரை ஆராதிக்க அவர்களை நாம் ஒன்றுகூட்டுவது தேவனை கனப்படுத்தும் செயல்.
அத்திருச்சபையில் அன்று காலையிலே, அந்த தாயும், அந்த முதியவரும், அந்த வாலிபப் பெண்ணும் தேவ அன்பை பகிர்ந்து அனுபவித்தனர். ஒருவேளை நீங்களும் அடுத்தமுறை சபைக்கு செல்லும்போது, உதவுவதின் மூலம் தேவ அன்பை வெளிப்படுத்தவோ அல்லது கருணையின் செயலை அவருடைய கிருபையாக ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம்.

வேலைஸ்தலத்தில் சாட்சி
“உனக்கு மிகவும் பிடித்த அந்த துறையின் அளவை குறைக்கவேண்டுமென்றதால் இன்னும் வருத்தமா?" எவிலினின் மேனேஜர் அவளிடம் கேட்டார். “இல்லை" என்று வாயை மூடிக்கொண்டாள். அதைப்பற்றி அவர் கேலிசெய்து கொண்டேயிருந்ததால், அவள் வருந்தினாள். அவள் பல திறமையான நபர்களை கம்பெனியில் சேர்த்து, நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவ முயன்றாள். ஆனால் இடப்பற்றாக்குறை அம்முயற்சியை முடமாக்கிவிட்டது. எவிலின் கண்ணீரோடு போராடினாள், ஆனாலும் தன் மேலாளர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க தீர்மானித்தாள். அவள் நம்பியிருந்த சில மாற்றங்களை அவளால் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அவளுடைய வேலையை தன்னால் இயன்றமட்டும் சிறப்பாக அவளால் செய்ய முடிந்தது.
அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் நிருபத்தில், முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு, “மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்" (1 பேதுரு 2:13) என்று வலியுறுத்துகிறார். கடினமான பணிச்சூழலில் உத்தமமாயிருப்பது கடினம். ஆனால் நாம் ஏன் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டுமென்ற காரணத்தை, “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி" (வச. 12) பேதுரு விவரிக்கிறார். கூடுதலாக, நம்மை காணும் மற்ற விசுவாசிகளுக்கு பக்தியான எடுத்துக்காட்டாக நம்மை காட்டிக்கொள்ளலாம்.
நம்முடைய வேலைக்கு துரோகம் இழைக்கும் பணிச்சூழலில் நாமிருந்தால், கூடுமானால் வேலையை விட்டுவிடுவதே சிறந்தது (1 கொரிந்தியர் 7:21). “அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:20) என்பதை நினைவுகூர்ந்து, ஆவியானவரின் துணையோடு நம் வேலையில் நன்மை செய்வதை தொடருவோமாக. நாம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிகையில், பிறர் தேவனை பின்பற்றவும், அவரை மகிமைப்படுத்தவும் காரணமாயிருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இது அனைத்தையும் மாற்றும்
நெடுங்காலமாய், யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய யரோஸ்லாவ் பெலிகன், தன் மிகையான கல்விபட்டங்களுக்கு பேர்பெற்றவரும், “தன் தலைமுறையில் மிகக் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வரலாற்று நிபுணர்களில்” ஒருவருமாய் திகழ்ந்தார். அவர் முப்பது புத்தகங்களுக்கு மேல் பிரசுரித்துள்ளார். மேலும், தன் மிகப்பெரிய எழுத்து சேவைக்காக வாழ்நாள் விருதான கௌரவமிக்க க்ளுக் பரிசையும் (முடரபந Pசணைந) பெற்றுள்ளார். எனினும், அவருடைய மாணவர்களில் ஒருவர், மரணப்படுக்கையில் தன் ஆசிரியர் கூறிய, “கிறிஸ்து எழுந்ததுண்டானால் வேறு எதுவுமே முக்கியமில்லை, கிறிஸ்து எழாதிருந்தால் எதற்குமே அர்த்தமில்லை” என்ற இவ்வார்த்தைகளே அவர் கூறிய மிகச்சிறந்த வார்த்தைகளாக நினைவுகூருகிறார்.
பவுலின் திட நம்பிக்கையையே பெலிக்கனும் எதிரொலித்தார், “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:14). அப்போஸ்தலன் இவ்வளவு துணிவோடு சொல்லக் காரணம், உயிர்த்தெழுதல் வெறுமனே ஒரு அற்புதம் மட்டுமல்ல; மாறாக, மனித சரித்திரத்தில் தேவ மீட்பின் செயலில் உச்சக்கட்டம் இதுவே என்று அறிந்திருந்தார். உயிர்தெழுதலின் வாக்குத்தத்தம், இயேசு மரித்தோரிடமிருந்து எழுவார் என்று அவர் அளித்த உறுதி மட்டுமல்ல, ஆனால் மரித்து, பாழான வாழ்க்கைகள், சுற்றுப்புறங்கள், உறவுகள் போன்றவைகளும் கிறிஸ்துவின் மூலமாக ஒருநாளில் திரும்ப உயிர்பெறும் என்று அவர் கொடுத்த வாக்குறுதியையும் உறுதிசெய்கிறது. உயிர்த்தெழுதல் மட்டுமில்லையென்றால், நாம் குழுப்பத்தில் சிக்கியிருப்போம் என பவுல் அறிந்திருந்தார். உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணம் தான் வெற்றிபெறும்.
ஆனால், நிச்சயமாகவே “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்(தார்)” (வச. 20). ஜெயம்கொண்டவராலே அழிக்கப்பட்டு, மரணமும் தோற்றது. பின்வரப்போகும் அனைத்து உயிர்தெழுதலின் “முதற்பலன்” இயேசுவே. அவர் தீமையையும், மரணத்தையும் மேற்கொண்டுவிட்டதால், நாம் இன்று விடுதலையாக தைரியமாய் வாழலாம். இதுவே அனைத்தையும் மாற்றுகிறது.

அப்படி நடந்திருக்கக்கூடாது
“எப்படியாகிலும் இது இப்படியிருக்க கூடாதென விரும்புகிறேன்,” அந்த மனிதர், வாலிப வயதிலேயே மரித்த தன் நண்பனின் இரங்கல் கூட்டத்தில் இப்படி புலம்பினார். மானுடத்தின் காலவரையற்ற மனவேதனையின் கடுமை அவர் வார்த்தைகளிலிருந்தது. மரணம் நம் எல்லாரையும் திகைப்பூட்டும், அச்சுறுத்தும். மாற்ற முடியாததை, மாற்ற முயற்சித்து நாம் வேதனையடைகிறோம்.
இயேசுவின் மரணத்திற்குப்பின் “அப்படி நடந்திருக்கக்கூடாது” என்று சீஷர்கள் கருதியிருக்கக்கூடும். அக்கொடுமையான மணித்துளிகளை பற்றி சுவிசேஷங்கள் கொஞ்சமே சொன்னாலும், சில உண்மையான நண்பர்களின் அப்போதைய செயல்களை பதிவுசெய்துள்ளது.
யோசேப்பு, இயேசுவின் ரகசிய விசுவாசியான மதத்தலைவர் (யோவான் 19:38), திடீரென தைரியங்கொண்டு, பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்கிறார் (லூக்கா 23:52). கொடூரமாய் சிலுவையேறிய ஒரு உடலை எடுத்து பதமாக அதை அடக்கம் செய்ய எவ்வாறு ஆயத்தம் செய்திருப்பாரென்று (வச. 53) சற்றே சிந்தியுங்கள்! பாதையெங்கிலும் இயேசுவின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்து, அவர் கல்லறை வரையிலுங்கூட வந்த பெண்களின் பக்தியையும், வீரத்தையும் எண்ணிப்பாருங்கள் (வச. 55). மரணமேயானாலும் மாறா அன்பு!
இந்த பின்பற்றுபவர்களின் கூட்டம் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கவில்லை. அவர்கள் வேதனையில் பங்குபெற உடன்பட்டவர்கள். நம்பிக்கையின்றி, துயரத்தோடு அந்த அதிகாரம் நிறைவடைகிறது, “திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வச. 56).
சரித்திரத்தின் வியத்தகு சம்பவத்திற்கு, அந்த ஓய்வுநாளின் இடைவேளை காரியங்களை தயார் செய்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. கற்பனைச்செய்ய முடியாததை இயேசு செய்யப்போகிறார். அவர் மரணத்தையே “அப்படியல்ல” என மாற்றப்போகிறார்.

அவருடைய சமாதான சிலுவை
டச்சு ஓவியரான எக்பெர்ட் மோடெர்மன் வரைந்த “சிரேனே ஊரானாகிய சீமோன்”என்ற ஓவியத்தில் அவர் கண்கள் துயரத்தால் பிதுங்கியிருந்தன. சீமோனின் கண்கள் உடலளவிலும், மனதளவிலும் அவர் சுமந்த பொறுப்பின் தீவிர பாரத்தை வெளிப்படுத்தின. மாற்கு 15ம் அதிகாரத்தில், வேடிக்கைப் பார்த்த கூட்டத்திலிருந்து சீமோன் இழுக்கப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டதை அறியலாம்.
சீமோன், சிரேனே ஊரைச் சேர்ந்தவர் என மாற்கு நமக்கு அறிவிக்கிறார். அது இயேசுவின் காலத்தில் யூதர்கள் அதிகம் வசித்த வட ஆப்பிரிக்காவின் பெரிய நகரம். சீமோன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்கு வந்திருக்கலாம். அங்கே இந்த அநீதியான மரணதண்டனை நிகழ்வில் தானும் எதிர்பாராமல் பங்கேற்க, இயேசுவுக்கு சிறிய ஆனால் அர்த்தம் நிறைந்த உதவியை அவரால் செய்ய முடிந்தது (மாற்கு 15:21).
முன்னதாக மாற்குவின் சுவிசேஷத்தில், இயேசு தம் பின் செல்பவர்களிடம், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (8:34) என்றார். இயேசு தம் சீஷர்களிடம் அடையாளமாகச் சொன்னதை, கொல்கொதாவின் வீதிகளில் சீமோன் நிஜமாகவே செய்கிறார்: தனக்களிக்கப்பட்ட சிலுவையை எடுத்து, இயேசுவுக்காக அதை சுமந்தார்.
நாமும் சுமக்கவேண்டிய “சிலுவைகள்” உண்டு. அது நோயாக இருக்கலாம், கடினமான ஊழிய பணியாயிருக்கலாம்; நாம் நேசித்தவரின் மரணமாயிருக்கலாம்; அல்லது நம் விசுவாசத்தினிமித்தம் வரும் உபத்திரவமாய் இருக்கலாம். நாம் இத்துன்பங்களை விசுவாசத்தில் சுமக்கையில், நாம் ஜனங்களை இயேசுவின் துயரங்களுக்கு நேராகவும், அவர் சிலுவை தியாகத்திற்கு நேராகவும் வழிநடத்துகிறோம். அவருடைய சிலுவையே நம்மை தேவனோடு ஒப்புரவாக்கி, நம்முடைய பயணத்தில் நம்மை பெலப்படுத்துகிறது.