வகை  |  odb

தொலைந்த காரியங்கள்

தன் தேசத்தை பாழாக்கும் ஆடம்பரச் செலவுகளையும், ஊழல்களையும் கண்டு சோர்வடைந்த கொரியாவின் அரசர் யோங்ஜோ (1694-1776), காரியங்களை மாற்றத் தீர்மானித்தார். ஆனால், கூழுக்கு ஆசைப்பட்டு மீசையெடுத்த கதைப்போல பாரம்பரியமான தங்கநூல் தையல் கலையை தடைசெய்தார். இதனால், சீக்கிரமே இந்த நுணுக்கமான கலை அறிவு தேசத்தில் அழிந்துபோனது. 

2011ஆம் ஆண்டு, சிம் யியோன்-ஓக் எனும் பேராசிரியர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானித்தார். தங்க இழைகளுக்கு பதிலாக கைகளால் கத்திரிக்கப்பட்ட மல்பெரி பேப்பர்களைக் கொண்டு அந்த பழமையான பாரம்பரிய வழக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார். 

யாத்திராகமத்தில், ஆடம்பரமான முறையில் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார்கள், ஆரோனின் ஆசாரிய வஸ்திரத்தில் தங்க இழைகள் கோர்க்கப்பட்டன. திறமையான கைவேலைக் கலைஞர்கள், “அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.” (யாத்திராகமம் 39:3). அந்த நேர்த்தியான கைவினைத் திறனுக்கு என்ன ஆனது? வஸ்திரம் கிழிந்துவிட்டதா? அவைகள் சூரையாடப்பட்டதா? எல்லாம் வீணாய் போனதா? இல்லவே இல்லை. அவர்கள் அதை நேர்த்தியாய் செய்தனர் ஏனெனில் தேவன் அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

நாம் ஒவ்வொருவரும் செய்ய தேவன் ஏதோவொன்றை நமக்கும் கொடுத்திருக்கிறார். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு சிறிய அன்பின் உதவியாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் சேவைசெய்வதின் மூலம் ஏதாகிலும் ஒன்றை அவருக்கு நாம் தரலாம். கடைசியில் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று நாம் கவலைப்படத் தேவையில்லை (1கொரிந்தியர் 15:58). நாம் பரமதகப்பனுக்காய் செய்யும் ஒவ்வொரு காரியமும் நித்தியத்திற்கு பலனளிக்கக் கூடியதாயிருக்கிறது. 

ஆட எழுவோம்

இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டது. ஒரு அழகான மூத்தபெண்மணி சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஒரு காலத்தில் பாலே நடனத்தில் புகழ்பெற்றவராய் திகழ்ந்த இந்த மார்த்தா, தற்போதோ மூளையை பாதிக்கும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அவரிம் ஸ்வான் லேக் (swan lake) எனும் இசையை இசைக்கையில் மட்டும், ஆச்சரியமானது நடக்கும். அந்த இசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கயில், அவருடைய பலவீனமான கரங்கள் மெல்ல உயர ஆரம்பிக்கிறது. முதல் எக்காள இசை துவங்கும்போது, தன் சக்கரநாற்காலியிலிருந்து, அவர் செய்கை காட்டத் துவங்குகிறார். அவருடைய மனமும், உடலும் செயலிழந்துக் கொண்டிருந்தாலும், அவருடைய திறமை இன்னும் அப்படியே இருக்கிறது. 

அந்த காணொளியைப் பார்த்த மாத்திரத்தில் 1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பவுலின் உயிர்த்தெழுதல் போதனைக்கு நேராய் என் சிந்தை திரும்புகிறது. ஒரு விதை எவ்வாறு பூமியிலிருந்து துளிர்விட்டு எழும்புகிறதோ, அதேபோன்று விசுவாசிக்கிறவர்களின் சரீரம் இந்த பூமியில் அழிவுள்ளதாய், கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்;. ஆனால் அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் என்று கூறுகிறார் (வச.42-44)). ஒரு விதைக்கும், தாவரத்திற்கும் இடையே ஒரு உடல் சார்ந்த இணைப்பு இருப்பது போல, நம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், நம்முடைய ஆளத்துவமும், தாலந்துகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்படியே செழிப்பாய் இருக்கும். 

ஸ்வான் லேக் என்னும் அந்த இசை மீட்டப்படும்போது, தான் ஒரு காலத்தில் எப்படியிருந்தோம் என்று தன்னுடைய முன்னிலைமையை நினைத்து மார்த்தா சோர்வடைந்தாள். ஆனால், ஒரு மனிதர் அவளருகே வந்து, அவளுடைய கரங்களை பற்றினார். நமக்கும் அப்படியே சம்பவிக்கும். எக்காளங்கள் தொனிக்க (வச. 52), ஒரு கரம் நம்மை பற்றிப்பிடிக்கும். இதுவரை இல்லாத வகையில் நேர்த்தியான ஒரு நடனத்தை நாமும் அப்போது ஆடுவோம். 

நம் நேரத்தை மீட்டுக்கொள்ளல்

1960களில், என்னுடைய தகப்பனாரை திருமணம் செய்யும் பொருட்டு என்னுடைய தாயார் தன்னுடைய கல்லூரி படிப்பை தவிர்க்க வேண்டியிருந்தது என்ற தகவலை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டார். வீட்டுபொருளியல் துறையில் ஆசிரியராய் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய கனவையும் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பு, அவர் கல்லூரிப் பட்டம் பெறவில்லை என்றாலும், அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றிற்கு ஊட்டச்சத்து உதவியாளராக பணியாற்றினார். ஒரு வீட்டுபொருளியல் ஆசிரியரைப் போன்று, ஆரோக்கியமான உணவுகளை செய்து நிருபித்துக் காண்பித்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு தன் இருதயத்தின் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று அவர் என்னிடத்தில் பெருமிதத்துடன் கூறினார்.

வாழ்க்கை நமக்கும் அப்படியிருக்கலாம். நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாய் இருக்கலாம். ஆனால், தேவனுடனான நம்முடைய உறவும், நேரமும். அவருடைய தேறுதல், அன்பு, மீட்பு போன்ற அழகான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்ட சேதத்தினால் (வச. 25) நேரிட்ட இழப்புகளுக்கு தேவன் சரிகட்டுவதாய் யூத ஜனங்களுக்கு (யோவேல் 2:21) வாக்களிக்கிறார். நாம் சந்திக்கிற சவால்கள் மற்றும் நம்முடைய நிறைவேறாத கனவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நாம் அவருக்காய் செய்கிற தியாகங்களுக்காய் நம்மை கனப்படுத்துகிற மீட்பின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் (மத்தேயு 19:29).

நாம் ஒரு அழிவுக்கேதுவான சவாலை சந்தித்தாலும் சரி அல்லது நனவாக்கப்படாத கனவுகளின் தருணத்தை சந்தித்தாலும் சரி, நம்மை மீட்கிற தேவனை நோக்கிக் கூப்பிட்டு அவருக்கு துதிகளைச் செலுத்துவோம்.

சிறுநரிகள்

விமானி தன் தேநீர் கோப்பையை அதின் இருக்கையில் வைக்க முடியவில்லை. எனவே அதை கட்டுப்பாட்டின் பகுதியில், நடுவிலே வைத்தார். விமானம் சற்று தடுமாறியபோது, தேநீர் கோப்பை கவிழ்ந்து, அதிலிருந்த தேநீர் கட்டுப்பாட்டு பலகையில் சிந்தி, இயந்திரத்தை பழுதடையச் செய்தது. விமானம் சற்று தடுமாறி, கடைசியில் தரையிறக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு சம்பவம் வேறொரு விமானத்திற்கு ஏற்பட்ட பின்னர், அந்த விமானத்தின் கட்டமைப்பாளர்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தனர். 30கோடி விலைமதிப்புள்ள விமானத்தில் தேநீர் கோப்பை வைக்கும் இருக்கை சிறியதாக இருந்தது. இந்த சிறிய தவறானது பெரிய பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் அமைந்தது. 

சிறிய விஷயங்கள் சிலவேளைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உன்னதப்பாட்டின் நேசர் தன்னுடைய ரூபவதியைப் பார்த்து, “திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்” (2:15) என்று கூறுகிறார். திராட்சைப் பழங்களுக்கு ஆசைப்படும் நரிகள் திராட்சைத் தோட்டத்தின் மதில்கள் மேல் ஏறியும், குழிதோண்டுவதையும் அவர் பார்க்கிறார். அவைகளை தேடிப்பிடிப்பது மிகவும் கடினம். அவைகள் இரவு வேளைகளில் ஊடுருவுகின்றது. அவைகளை இலகுவாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

உங்களுடைய நெருங்கிய உறவுகளை எது அச்சுறுத்துகிறது? அது, பெரும்பாலும் பெரிய காரியமாய் இருக்காது. ஒரு சிறுவார்த்தையோ, விமர்சனமோ நம்முடைய அன்பின் வேருக்குள் ஊடுருவலாம். அவ்வப்போது ஏற்படும் சிற்சில தவறுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நல்ல, ஆழமான சிநேகத்தையோ அல்லது திருமண உறவையோ முற்றிலும் பாதிக்கும். 

அந்த சிறுநரிகளை பிடிப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக! நம்முடைய திராட்சைத் தோட்டங்களை பலப்படுத்த தேவையான மன்னிப்பை கேட்பதற்கோ அல்லது கொடுப்பதற்கோ தயங்காமல் செயல்படுவோம். நமக்கு தேவையானதை தேவன் நமக்கு அருளுவாராக!

நமக்காக ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துதல்

எங்கள் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க நாங்கள் தீர்மானித்தோம். என் பதினோரு வயது மகள், நாய்கள் என்ன சாப்பிடும் என்று அதின் வாழ்க்கை முறையைக் குறித்து மாதக்கணக்கில் ஆராய்ந்தாள்.

நாய்க்குட்டியை அதற்கென ஒரு தனியறையில் வளர்த்தால், அது சிறப்பாக செயல்படும் என்று அவள் சொன்னாள். ஆகையால், நாங்கள் அதற்கென ஒரு படுக்கையறையை ஆயத்தப்படுத்தினோம். அந்த நாய்க்குட்டியை வளர்க்கும்போது, ஆச்சரியங்கள் நிறைய காத்திருக்கும் என்றறிவோம். ஆனால், அதை வளர்க்க என் மகள் ஏறெடுத்த ஆச்சரியமான முன்னேற்பாட்டுக்கு ஈடில்லை.

வரப்போகிற நாய்க்குட்டிக்காக ஆர்வமுடன் என்ன மகள் ஏறெடுத்த இந்த முன்னேற்பாடுகள், தன் ஜீவியத்தையும், வாக்குறுதிகளையும் தன் ஜனத்தோடு பகிர ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, ஏங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவின் எண்ணத்தை எனக்கு நினைவுபடுத்தியது. பூமியில் தன்னுடைய வாழ்நாளின் கடைசிநாட்களில் இயேசு, தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று வலியுறுத்துகிறார். மேலும், அவர்களுக்காக “ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, (அவர்) இருக்கிற இடத்திலே (அவர்களும்) இருக்கும்படி” (வச. 3) அவர்களை சேர்த்துக்கொள்வேன் என்று வாக்குப்பண்ணுகிறார். 

சீஷர்கள் சீக்கிரமே பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களை சுயதேசம் திரும்பச் செய்யும் முயற்சியில் கிறிஸ்து ஈடுபட்டிருக்கிறார் எனும் உண்மையை அவர்கள் நம்பும்படி செய்தார். 

புதிய நாய்க்குட்டியை எங்கள் வீட்டிற்கு வரவேற்கும் முன்னேற்பாடு முயற்சியில் என் மகளுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆனால் அதை நான் ரசித்தேன். அதேபோன்று, நமக்காய் ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, நம்மோடு நித்திய வாழ்வை பகிர்ந்துகொள்ள நினைக்கும் நம்முடைய இரட்சகரின் ஏக்கத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறது (வச.2).