வகை  |  odb

எங்கள் பிதாவே

ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.

சேவை மனப்பான்மை

மெக்சிகோவில் உள்ள ஒரு ஊழிய ஸ்தாபனம் ஒவ்வொரு மாதமும் உள்ளூர்வாசிகளுக்கு, சுமார் 11000கி எடை உணவை இலவசமாய் கொடுத்து உதவுகிறது. அதின் தலைவர், “எவராயினும் இங்கே வரலாம். நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருக்குமிடத்திலேயே அவர்களை சந்திக்கிறோம். அவர்களின் நடைமுறைத் தேவைகளை சந்திப்பதின் மூலம் அவர்களின் ஆவிக்குரிய தேவையை சந்திப்பதே எங்கள் இலக்கு” என்கிறார். கிறிஸ்தவர்களாய் தேவன் நமக்குக் கொடுத்தவைகளை தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து, மக்களை தேவனிடம் வழிநடத்தவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். தேவனை மகிமைப்படுத்தும் சேவை மனப்பான்மையை நாம் எப்படி வளர்க்கமுடியும்?
தேவன் நமக்குக் கொடுத்த வரங்களை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம் கேட்பதின் மூலம் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம் (1 பேதுரு 4:10). தேவன் நமக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்கு அளிக்கையில், “அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்” (2 கொரிந்தியர் 9:12).
மற்றவர்களுக்கு சேவை செய்வது இயேசுவின் ஊழியத்தில் முக்கிய அம்சம். அவர் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கி, பசித்தோருக்கு உணவளித்தபோது, பலரும் தேவனுடைய நற்குணத்தையும், அன்பையும் ருசித்தனர். நம் ஜனத்தின் மீது அக்கறை கொள்கையில், நாம் அவருடைய சீஷராகிறோம். நம்முடைய கிரியைகளின் மூலம் தேவ அன்பை நாம் பிரதிபலிக்கும்போது, ''மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள்'' (வச. 13) என்று அவருடைய ஞானமான யோசனை நமக்கு நினைவூட்டுகிறது. சேவை என்பது சுயதிருப்திக்கானது அல்ல; மாறாக, பிறர் தேவனுடைய அன்பை அறியவும், அவருடைய நாமத்தை தரித்தவர்கள் மூலம் அவர் செய்யும் அதிசயமான நடத்துதலை பிறர் பார்க்கவுமே.

வீட்டிற்காக ஏங்குதல்

“ஆனி ஆஃப் கிரீன் கேபிள்ஸ்” என்ற கதையின் முக்கிய கதாபாத்திரமான ஆனி, குடும்பத்திற்காய் ஏங்கினாள். அநாதையாக்கப்பட்ட அவளுக்கு வீடு திரும்பும் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் வயது முதிர்ந்த மாத்யூ மற்றும் அவருடைய சகோதரி மரில்லா ஆகிய இருவரும் அவளுக்கு ஆதரவு கரம் நீட்ட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் வீடு திரும்பும் பாதையில் ஆனி, தான் அதிகம் பேசியதைக் குறித்து அவரிடத்தில் மன்னிப்புக் கோரினாள். “நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசு, எனக்கு ஆட்சேபனையில்லை” என்று மாத்யூ பதிலளித்தார். இந்த வார்த்தைகள் ஆனியின் காதில் தேனை பாய்ச்சியது. அவளை யாரும் விரும்பமாட்டார்கள், அவள் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் வீடு சேர்ந்தவுடன், அவர்களின் 'வீட்டு பண்ணை வேலைக்கு ஒரு சிறுவன்தான் வரப்போகிறான்' என்று அவளுடைய சகோதரர்கள் எண்ணியதை அறிந்து, அவளுடைய நம்பிக்கை சிதைகிறது. அவளை திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆனால், அவளை அவர்களுடைய குடும்பத்தின் அங்கத்தினராய் ஏற்றதால், அன்பான குடும்பத்திற்காய் ஏங்கிய ஆனியின் கனவு நனவாகிறது.
நாம் விரும்பப்படாதவர்களாகவும், தனிமையானவர்களாகவும் உணர்ந்த தருணங்கள் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் கிறிஸ்துவிலுள்ள இரட்சிப்பால், தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராய் சேர்ந்தபோது, அவரே நமக்கு பாதுகாப்பான வீடாக மாறினார் (சங்கீதம் 62:2). அவர் நம்மில் களிகூர்ந்து, நம்முடைய கவலைகள், சோதனைகள், வேதனைகள், மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து அவரிடம் பேச அழைக்கிறார். "நாம் தேவனில் இளைப்பாறுதல் அடைய முடியும்”, “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்றும் சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 5,8).
தயக்கம் வேண்டாம். தேவனிடத்தில் எவ்வளவு பேச விரும்புகிறீர்களோ, பேசுங்கள். அவர் தவறாய் நினைக்கமாட்டார். அவர் நம் மனதை குறித்து மகிழ்கிறார். அவரில் உங்களுக்கொரு அடைக்கலத்தை கண்டுகொள்வீர்கள்.

பொய்யின் பிதா

விக்டர், ஆபாச படங்களுக்கு அடிமையானான். அவன் நண்பர்கள் பலர் அத்தகைய படங்களை பார்ப்பதுண்டு. இவனும் நேரத்தை போக்க எண்ணி. அதில் சிக்கிக்கொண்டான். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணர்கிறான், அவன் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தான், மேலும் அவன் மனைவியும் அவனைப் பிரிந்தாள். எனவே, இனி அதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதால், அவைகளைப் பார்க்கமாட்டான். ஆனாலும், இது மிகவும் தாமதமோ என்று சந்தேகிக்கிறான். அவன் திருமண வாழ்வு மீட்கப்படுமா? அவன் முற்றிலுமாய் விடுதலைப்பெற்று, மன்னிக்கப்பட முடியுமா?
எல்லோரும் இதைச் செய்கிறார்கள். இதிலென்ன தவறு?.என்று நம் எதிரியாகிய பிசாசு, சோதனைகளை அற்ப விஷயங்களைப்போல கொண்டுவருவான். ஆனால் அவனுடைய திட்டங்களில் நாம் பிடிபட்ட மாத்திரத்தில், அவன் நம்மை விழத்தள்ளுகிறான். 'இது மிகவும் தாமதம்! நீ வெகு தூரம் சென்றுவிட்டாய்! இப்போது உனக்கு நம்பிக்கை ஏதுமில்லை!' என்றும் கூறுகிறான்.
நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது நம்மை வீழ்த்த என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, பிசாசு அதையெல்லாம் சொல்வான். ஆனால் இயேசுவோ, “அவன் (பிசாசு) ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்கிறார்.
பிசாசு பொய்யனென்றால், நாம் அவனுக்கு செவிசாய்க்க கூடாது. நம்முடைய பாவம் பெரிய விஷயமல்ல எனும்போதும், நமக்கு இனி நம்பிக்கையே இல்லை எனும்போதும், நாம் செவிகொடுக்க கூடாது. இத்தீமையானவனின் வார்த்தைகளை புறக்கணிக்கவும், மாறாக அவர் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் இயேசு உதவிசெய்வாராக. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (வச. 31-32) என்னும் அவருடைய வாக்குறுதியில் நாம் ஆறுதலடைவோம்.

வெளிச்சம் உண்டாகக்கடவது

என் மகளுடைய ஆரம்ப நாட்களில், அவள் பார்த்த பொருட்களின் பெயர்களையெல்லாம் நான் அவளுக்கு சொல்லிக்கொடுப்பது வழக்கம். அவளுக்கு தெரியாத ஒரு புதிய பொருளைத் தொடச்செய்து, அந்த பொருளின் பெயரையும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பேன். குழந்தையாயிருந்தபோது முதன்முறையாக அவள் “அம்மா, அப்பா” என்று உச்சரிப்பாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் “டைட்” என்ற ஒரு மிட்டாயின் பெயரையே முதன்முறையாக உச்சரித்தாள். அதை அவள் உச்சரிக்கும்போது அவளுக்கு நான் சமீபத்தில் கற்றுக்கொடுத்திருந்த வெளிச்சம் என்று பொருள்படும் “லைட்” என்ற ஆங்கில வார்த்தையையே தவறி உச்சரித்தாள்.
வெளிச்சம் என்பது, தேவன் வேதத்தில் பேசின முதல் வார்த்தைகளில் ஒன்றாக நமக்காக பதிவாகியுள்ளது. தேவ ஆவியானவர் இருளின்மேல் அசைவாடி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” (ஆதியாகமம் 1:3) என்று தேவன் தம் சிருஷ்டிப்பிற்கு வெளிச்சத்தை அறிமுகப்படுத்துகிறார். அதை அவர் நல்லது என்றும் சொன்னார். வேதம் அதை முழுமையாய் ஆமோதிக்கிறது: தேவனுடைய வார்த்தை பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான் (சங்கீதம் 119:130). “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஜீவ ஒளியைத் தருவதாகவும் இயேசு அறிவிக்கிறார் (யோவான் 8:12).
சிருஷ்டிப்பு பணியில், தேவன் முதலாவது வெளிச்சம் உண்டாகவே பேசினார். அவருடைய வேலையை செய்வதற்கு வெளிச்சம் தேவை என்பதினால் அல்ல; மாறாக, அது நமக்காக படைக்கப்பட்டது. அவரைப் பார்ப்பதற்கும், அவர் கைவண்ணத்தை நம்மை சுற்றியுள்ள சிருஷ்டியில் பார்க்கவும், தீமையிலிருந்து நன்மையை அடையாளப்படுத்துவதற்கும், மேலும் இந்த பரந்த உலகில் இயேசுவை பின்பற்றுவதற்கும் நமக்கு ஒளி அவசியப்படுகிறது.