
நம்பிக்கையின் வானவில்லைக் கண்டறிதல்
அக்டோபர் விடுமுறையின் போது, நாள்பட்ட வலியுடன் போராடிய நான் சில நாட்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாயிருந்தது. வானத்தின் மேகமூட்டம் போல் என் மனநிலை மாறியது. கடைசியாக என் கணவருடன் அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்த்து மகிழ நான் கிளம்பியபோது, சாம்பல் மேகங்கள் எங்கள் கண்களை மறைத்தன. ஆனாலும், நிழல் படிந்த மலைப்பகுதிகளையும் மந்தமான அடிவானத்தின் சில புகைப்படங்களையும் நான் எடுத்தேன்.
இரவு முழுவதும் மழை பெய்ததால் நான் ஏமாற்றமடைந்து, நான் எடுத்த டிஜிட்டல் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் என் கணவரிடம் கேமராவைக் கொடுத்தேன். “ஒரு வானவில்!” நான் எடுத்த புகைப்படத்தில், ஒரு மாலை நேர வானவில் பதிவாகியிருந்தது. சோர்வுற்றிருந்த என்னுடைய ஆவியை புதுப்பிக்க தேவன் அருளிய இந்த நம்பிக்கையின் அடையாளத்தை நான் எப்படி தவறவிட்டேன் (ஆதியாகமம் 9:13-16).
உடல் அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் பெரும்பாலும் விரக்தியின் ஆழத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். தேவனுடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய அளவற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்து நம் ஆவி புத்துணர்வு அடைய நாம் ஏங்குகிறோம் (சங்கீதம் 42:1-3). நாம் எவ்வளவு இக்கட்டான சூழலுக்குள் கடந்துசென்றாலும், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம் (வச. 4-6).
மோசமான அணுகுமுறைகள் அல்லது கடினமான சூழ்நிலைகள் நம் பார்வையை மங்கச் செய்யும் போது, அவரை நோக்கிக் கூப்பிடவும், வேதத்தை வாசிக்கவும், அவரையே முழுமையாய் நம்பவும் தேவன் நம்மை அழைக்கிறார் (வச. 7-11). நாம் தேவனைத் தேடும்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் வளைந்து நிற்கும் நம்பிக்கையின் வானவில்லை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவிசெய்வார்.

பிரித்தெடுத்தல்
1742ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில், சார்லஸ் வெஸ்லி பிரசங்கித்த நற்செய்திக்கு எதிராக ஒரு கலவரம் வெடித்தது. சார்லஸ_ம் அவரது சகோதரரான ஜானும், பாரம்பரிய திருச்சபை வழக்கங்களை மாற்ற முயற்சித்ததினால், நகர வாசிகளுக்கு அது தவறாய் தெரிந்தது.
ஜான் வெஸ்லி கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவர் தனது சகோதரருக்கு உதவ ஸ்டாஃபோர்ட்ஷையருக்கு விரைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் ஜான் தங்கியிருந்த இடத்தை சூழ்ந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களை ஜான் நேருக்கு நேர் சந்தித்தார். அவர்களுடன் பட்சமாய் பேசினார். அவர்கள் ஒவ்வொருவரின் கோபமும் தணிந்தது.
ஜான் வெஸ்லியின் சாந்தமான மற்றும் அமைதியான அணுகுமுறை ஒரு முரட்டுத்தனமான கும்பலை அமைதிப்படுத்தியது. ஆனால் அது இவருக்குள் இயல்பாய் ஏற்பட்ட சாந்தம் அல்ல; மாறாக, வெஸ்லி பின்பற்றிய இரட்சகரின் இருதயம் இது. இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என்கிறார். இந்த மென்மையான அணுகுமுறை “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (எபேசியர் 4:2)
இருங்கள் என்று பவுல் அப்போஸ்தலர் நமக்கு விடுத்த சவாலுக்குப் பின்னால் உள்ள மெய்யான சக்தியாக மாறுகிறது. அத்தகைய பொறுமை நமக்கு சாத்தியமற்றதாய் தெரிகிறது. ஆனால் நம்மில் இருக்கும் ஆவியின் கனிகளும், கிறிஸ்துவின் இருதயத்தின் மென்மையும் நம்மை வேறுபிரித்து, இந்த பகைமையான உலகத்தை மேற்கொள்ள நமக்கு உதவுகிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்ற பவுலின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறோம்.

அன்பின் ஈகை
ஆயுஷ் தன்னுடைய காலை சிற்றுண்டியை அனுதினமும் அருகில் இருக்கும் கடையில் வாங்குவது வழக்கம். அதேபோன்று ஒவ்வொரு நாளும் தேவையிலிருப்பவர்களின் காலை சிற்றுண்டிக்கான தொகையையும் செலுத்தி, அவர்களை வாழ்த்துமாறு கேஷியரிடம் சொல்லுவதும் வாடிக்கை. அந்த உதவியை பெறுபவர்களுக்கும் ஆயுஷ_க்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. உதவியைப் பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அவர் பார்ப்பதில்லை. இதை அவரால் செய்ய முடிந்த சிறிய உதவி என்று அவர் நம்புகிறார். இருப்பினும் தன்னுடைய உள்ளுர் பத்திரிக்கை ஆசிரியருக்கு வந்த முகவரியில்லாத ஒரு கடிதத்தை படித்தபோது, அவருடைய செய்கையின் தாக்கத்தை அவர் அறிந்துகொண்டார். தன்னுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ள எண்ணிய ஒரு நபரின் தீர்மானத்தை அவருடைய அந்த சிறிய உதவி எப்படி மாற்றியது என்பதை அவர் கண்டறிந்தார்.
ஆயுஷ் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் யாரோ ஒருவருக்கு காலை உணவை பரிசளிக்கிறார். அதின் பாதிப்பையும் அவர் பார்க்க நேர்ந்தது. இயேசு, “உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3) என்று சொல்லுகிறார். ஆயுஷ் செய்தது போல, அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உதவிசெய்யுமாறு அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்காமல், தேவன் மீதுள்ள அன்பினால் நாம் செய்யும் சிறியதோ அல்லது பெரிய உதவியோ, அதைப் பெறுபவர்களுக்கு நிச்சயமாய் அது உதவும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

புயலை தகர்க்கும் நம்பிக்கை
2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28).
வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம்.
உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.
