வகை  |  odb

காணாமல்போனது, கண்டுபிடித்தேன், சந்தோஷம்

“என்னை ‘ரிங் மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். இந்த ஆண்டில் மட்டும் தொலைந்துபோன 167 மோதிரங்களை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.” 

நான் என்னுடைய மனைவி கேரியுடன் கடற்கரையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, தன் கையில் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்துக்கொண்டு ஒரு வயதானவர் மணலை பரிசோதித்துக்கொண்டு இப்படியாய் பேசக்கேட்டோம். “சில மோதிரங்களில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்” என்று சொன்ன அவர், “அதை அதின் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கும்போது அவர்களின் முகங்களின் மகிழ்ச்சியை பார்க்க எனக்கு பிடிக்கும். கண்டெடுத்த மோதிரங்களை ஆன்லைனில் பதிவிட்டு, யாராகிலும் என்னை தொடர்புகொள்ளுகிறார்களா என்று பார்ப்பேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக தொலைந்துபோன மோதிரங்களையும் நான் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். மெட்டல் டிடெக்டரை வைத்து தேடுவதை நானும் விரும்புவேன், ஆனால் அதை அடிக்கடி செய்வதில்லை என்று நான் அவரிடம் சொல்ல, “நீ தேடிப்போனால் தான் அதை கண்டுபிடிக்கமுடியும்” என்று பதிலளித்தார். 

லூக்கா 15ஆம் அதிகாரத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு சம்பவத்தை நாம் பார்க்கமுடியும். தேவனை விட்டு தூரப்போன ஜனங்களை இயேசு இங்ஙனம் விமர்சிக்கிறார் (வச. 1-2). தொலைந்து போன ஆடு, வெள்ளிப்பணம், மற்றும் குமாரன் என்று மூன்று கதைகளை அங்கே சொல்லுகிறார். தொலைந்த ஆட்டைக் கண்டுபிடித்த அந்த மேய்ப்பன், “சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து... என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான்” (லூக்கா 15:5-6). அனைத்து கதைகளும் கிறிஸ்துவிலிருந்து தொலைந்துபோனவர்களைக் குறித்தது தான். கிறிஸ்துவை கண்டுபிடித்தவர்கள் மகிழ்ச்சியில் பூரிப்பாகின்றனர். 

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே” (19:10) இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார். அவருக்கு பிரியமான ஜனங்களை அவரிடத்தில் கொண்டுவருவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (பார்க்க. மத்தேயு 28:9). மற்றவர்கள் தேவனிடத்தில் திரும்பும்போது ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் காத்திருக்கிறது. தேடிப்போகும் வரை நாம் அதை கண்டுபிடிப்பதில்லை. 

தேடி வந்த தேவன்

போனி கிரே, அவள் சோகத்தில் இருந்த தருணத்தைக் குறித்து அவளுடைய சமீபத்திய ஆன்லைன் பதிவில் பகிர்ந்துகொண்டாள். “என்னுடைய வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான அத்தியாயத்தின்போது, எதிர்பாராத விதமாய் நான் பயத்தினாலும் மனச்சோர்வினாலும் பாதிக்கப்பட்டேன்” என்று பதிவிட்டிருந்தாள். கிரே, அவளுடைய பயத்தைப் போக்க பல வழிகளை கையாண்டாள். ஆனால் அந்த பிரச்சனையை தனியாளாய் கையாளுவது சாத்தியம் என்பதை சீக்கிரம் புரிந்துகொண்டாள். “என்னுடைய நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்பது எனக்கு பிடிக்காது. ஆகையினால், நாம் அமைதியாய் இருந்து என்னுடைய மனச்சோர்வு நீங்கும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் நம்மை கனவீனப்படுத்தவோ நம்முடைய வலிகளை மறைத்துக்கொள்வதையோ அனுமதிப்பதில்லை, மாறாக, அதை குணமாக்க விரும்புகிறார்.” தேவனுடைய பிரசன்னத்தில் கிரே சுகத்தைப் பெற்றாள். அவளை அச்சுறுத்திய அலைகளின் கோரப்பிடியிலிருந்து தேவன் நங்கூரமாய் செயல்பட்டு அவளை விடுவித்தார்.   

நாம் பெலவீனப்பட்டு சோர்வடையும்போது, நமக்காய் தேவன் இருக்கிறார். அவர் நம்மை தாங்குவார். சங்கீதம் 118இல் தாவீது அவனுடைய எதிரிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய கட்டத்தில் தேவனை துதித்து, தன் மீட்பிற்காய் மன்றாடுகிறான். அவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” என்று அறிக்கையிடுகிறான் (வச. 16). மோதியடிக்கும் சமுத்திரத்தின் கொடூர அலைகளைப் போன்று மனச்சோர்வு சிலவேளைகளில் நம்மை ஆட்கொண்டாலும், நம்மை நேசிக்கும் தேவன் இறங்கி வந்து நமக்கு உதவிசெய்து, “விசாலமான” இடத்திற்கு (வச. 19) நம்மை பாதுகாப்பாய் கொண்டுசேர்ப்பார். வாழ்க்கையின் சவால்களை நாம் சந்திக்கும்போது நம்முடைய அடைக்கலமாகிய தேவனையே நோக்கிப் பார்ப்போம்.

காபி வாசனை

நான் என்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, என்னுடைய இளைய மகள் கீழே இறங்கி வந்தாள். அவள் என் மடியில் அமர்ந்து குதித்து விளையாடினாள். ஒரு அப்பாவாக, நான் அவளை இறுக்கி, அவளுடைய முன்நெற்றியில் முத்தமிட்டு தகப்பனுடைய அன்பை வெளிப்படுத்தினேன். அவள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள். அவள் தன் புருவத்தை சுருக்கி, மூக்கை உறிஞ்சி நான் காபி குடிக்கும் கோப்பையை உற்று பார்த்துவிட்டு, “அப்பா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் உங்களுடைய வாசனை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னாள். 

என்னுடைய மகள் அந்த விமர்சனத்தை கிருபையோடும் சத்தியத்தோடும் முன்வைத்தாள். அவள் என்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் சிலவற்றை சொல்லுவதற்கு அவள் ஏவப்பட்டாள். நம்முடைய உறவுகளில் அதுபோன்ற சில காரியங்களை நாம் வெளிப்படையாய் சொல்லவேண்டியிருக்கிறது. 

எபேசியர் 4ஆம் அதிகாரத்தில், ஒருவருடைய தப்பிதங்களை அவர்களிடம் நேரடியாய் சொல்வதற்கு தயங்குபவர்களுக்கு பவுல் சொல்லுகிறார்: “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்(குங்கள்)” (வச. 2). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமை ஆகியவைகள் நம் உறவின் அஸ்திபாரமாய் திகழ்கிறது. தேவனுடைய வழிநடத்துதலோடு இதுபோன்ற குணாதிசயங்களை பிரஸ்தாபப்படுத்தும்போது, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” (வச. 15), “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” (வச. 29) பேசுவோம். 

யாரும் பலவீனங்களையும் குழுப்பங்களையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. நம்முடைய சுபாவங்களில் ஏதோ நாற்றம் வீசும்போது, கிருபையோடும் உண்மையோடும் தாழ்மையோடும் மென்மையாக பேசக்கூடிய உண்மையுள்ள நண்பர்களைக் கொண்டு தேவன் அதை நமக்கு தெரியப்படுத்துவார். 

அக்கினி தழல் போன்ற நேசம்

கவிஞர், ஓவியர் மற்றும் அச்சுத் தயாரிப்பாளருமான வில்லியம் பிளேக் தனது மனைவி கேத்ரினுடன் நாற்பத்தைந்து வருட திருமண வாழ்க்கையை அனுபவித்தார். அவர்களது திருமண நாள் முதல் 1827 இல் அவர் இறக்கும் வரை, அவர்கள் அருகருகே அமர்ந்திருந்து வேலை செய்தனர். கேத்ரின் வில்லியமின் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுவார். அவர்கள் வறுமை மற்றும் பல வாழ்க்கை சவால்களையும் இணைந்தே மேற்கொண்டுள்ளனர். அவரது மரணமடைந்த கடைசி வாரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், பிளேக் தனது ஓவியத்தில் மும்முரமாய் இருந்தார். அவர் தீட்டிய கடைசி ஓவியம், அவருடைய மனைவியின் முகமே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கேத்ரின் தனது கணவரின் பென்சில் ஒன்றைக் கையில் பிடித்தபடி இறந்திருந்தார். 

பிளேக்ஸின் இந்த துடிப்பான காதலானது உன்னதப்பாட்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நேசத்தை பிரதிபலிக்கிறது. இந்த பாடல்கள் திருமணத்தின் தாக்கத்தை வலியுறுத்தக்கூடியது. ஆதித்திருச்சபை விசுவாசிகள், இது இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மீது அவருடைய தணிக்கமுடியாத அன்பு என்றும் வியாக்கியானம் செய்தனர். “நேசம் மரணத்தைப்போல் வலிது” (8:6) என்று உன்னதப்பாட்டு உருவகப்படுத்துகிறது. மரணம் என்பது கடைசியும் தப்பிக்கமுடியாததுமான ஒன்றாய் இருப்பதுபோல நேசமும் இருக்கிறது. இந்த நேசத்தின் தழல் “அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (வச. 6). மற்ற அக்கினித் தழலைப்போன்று, இதை எளிதில் அணைக்கமுடியாது. “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று இந்த நேசத்தின் வலிமை வலியுறுத்தப்படுகிறது (வச. 7). 

நம்மில் யார் தான் உண்மையான நேசத்தை விரும்பமாட்டார்கள்? நாம் உண்மையான நேசத்தை எதிர்பார்க்கும்போதெல்லாம், தேவனிடத்தில் வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் ஆழமான தணியாத அன்பை பெறமுடியும். அதின் தழல் அக்கினி தழல் போன்று வலியது.