நான் அவசர அவசரமாக தபால் நிலையத்திற்குச் சென்றேன். "செய்ய வேண்டியவை"…
காலமாகிய பரிசு
பணம்

தேசத்தை ஒன்றிணைத்தல்
உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்து கொள்ளுகிறது. இது நம்பமுடியாத 5,525 மைல் பரப்பளவுகொண்ட நிலப்பகுதியையும் நீரையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு பகுதிக்கும் இடையில் இருக்கும் இடைக்கோடு நேர்த்தியாய் தெரியவேண்டும் என்பதற்காய் தொழிலாளர்கள், அந்த இருபுறத்திலும் பத்து அடிக்குட்பட்ட மரங்களை தவறாமல் வெட்டினர். “தி ஸ்லாஷ்” என்று அழைக்கப்படும் இந்த நீளமான நிலப்பரப்பு கோட்;டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கற்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பார்வையாளர்கள் அந்த பிரிக்கும் கோடு எது என்பதை நேர்த்தியாய் அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது.
அந்த கோடு மறையாமலிருப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களானது, இரண்டு வெவ்வேறு அரசியலமைப்பையும் கலாச்சாரத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும், தேவன் அந்த சூழ்நிலையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு காலத்தை எதிர்நோக்குகிறோம். ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய ஆலயம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டு உயர்த்தப்படும் ஒரு ஆசீர்வாதமான காலகட்டத்தை முன்னறிவிக்கிறார் (ஏசாயா 2:2). எல்லா நாடுகளிலிருந்தும் ஜனங்கள் தேவனின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பாதையில் மக்கள் நடப்பதற்கும் கூடுவார்கள் (வச. 3). அமைதியைக் காக்கத் தவறிய மனித முயற்சிகளை இனி நாம் நம்ப வேண்டாம். நமது மெய்யான ராஜாவாக செயல்பட்டு, தேவன் தேசங்களுக்கு இடையில் நியாயம் விசாரித்து, ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை நிவிர்த்திசெய்வார் (வச. 4).
பிரிவிணையில்லாத, சச்சரவுகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யமுடிகிறதா? அதை கொண்டுவருவதாக தேவன் நமக்கு வாக்களிக்கிறார். நம்மை சுற்றியிருக்கும் பிரிவினை பேதங்களுக்கு மத்தியிலும், நாம் “கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம்” (வச. 5). அவரையே நம்புவோம். தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நாள், தம்முடைய ஜனங்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார்.

தேவனுடைய கரத்தில்
பதினெட்டு வயதை எட்டியது என் மகளின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது: சட்டப்பூர்வமாக அவள் வயது வந்தவள். அவள் இனி நடக்கவிருக்கம் தேர்தல்களில் வாக்களிக்கமுடியும். உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு விரைவில் அவளுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும். இந்த உணர்வானது என்னை ஆக்கிரமிக்க, அவளோடு விலையேறப்பெற்றதாய் நான் கருதும் என்னுடைய மணித்துளிகளை செலவழிக்கவேண்டியிருந்தது. பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது, உலகத்தின் பிரச்சனைகளைக் குறித்து எப்படி விழிப்போடு இருக்கவேண்டும், மற்றும் நல்ல ஆரோக்கியமான தீர்மானங்களை எவ்வாறு எடுப்பது என்பது குறித்த ஆலோசனைகளை அவளுக்கு நான் கொடுக்கவேண்டியிருந்தது.
என்னுடைய மகள் அவளுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவளுக்கு கொடுப்பது ஒரு தாயாய் என்னுடைய கடமையாய் நான் கருதுகிறேன். மேலும் அவள் வாழ்க்கையை நேர்த்தியாய் வாழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகிலும் நான் செய்யும் என்னுடைய பொறுப்பு முக்கியமானதாய் எனக்கு தோன்றினாலும் அது அனைத்தும் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை. பவுல் அப்போஸ்தலர் தெசலோனிகேய திருச்சபையில் தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாய் கருதும் விசுவாசிகளுக்கு இயேசுவைக் குறித்தும் மற்றவர்களுக்கு உதவிசெய்வது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:14-15). ஆகிலும் அவர்களுடைய மெய்யான வளர்ச்சிக்காக தேவனையே சார்ந்திருக்கிறார். “உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” என்று அவர் நம்புகிறார் (வச. 23).
அவர்களுடைய “ஆவி ஆத்துமா சரீரம்” (வச. 23) ஆகியவற்றை தன்னால் தயார் செய்யமுடியாது என்று அறிந்து தேவனிடத்தில் ஒப்படைக்கிறார். தெசலோனிக்கேய திருச்சபைக்கு ஆலோசனை கொடுக்கும் வகையில் அவர் நிருபம் எழுதினாலும், அவர்களுடைய வாழ்க்கை மேம்படுவதற்கு பவுல் தேவனையே நம்புகிறார். நம்முடைய அன்பிற்குகந்தவர்களின் வாழ்க்கையை பராமரிக்கும் பொறுப்பானது தேவனுடைய கரத்தில் இருக்கிறது என்பதை இது நமக்கு கற்பிக்கிறது (1 கொரிந்தியர் 3:6).

துக்கமும் மகிழ்ச்சியும்
ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12).
ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள்.
நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம்.
