கிறிஸ்து பிறப்பின் வாக்குத்தத்தம்
நவம்பர் 1962இல், இயற்பியலாளர் ஜான் மௌச்லி, “சராசரியான பையன் அல்லது பெண் கணினியில் தேர்ச்சிபெற முடியாது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறுகிறார். மௌச்லியின் கணிப்பு அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியது. ஆனால் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் துல்லியமானது. இன்று, கணினி அல்லது கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவது ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் ஆரம்ப திறன்களில் ஒன்றாகும்.
மௌச்லியின் கணிப்பு உண்மையாகிவிட்டாலும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான கணிப்புகள் உள்ளன. உதாரணமாக, மீகா 5:2இல், “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று அறிவிக்கிறது. தாவீதின் வம்சாவளியில் வரும்படிக்கு இயேசுவை பெத்லகேமுக்கு தேவன் அனுப்பினார் (லூக்கா 2:4-7 பார்க்கவும்).
இயேசுவின் முதல் வருகையை துல்லியமாக முன்னறிவித்த அதே வேதாகமம், அவருடைய இரண்டாம் வருகையையும் உறுதியளிக்கிறது (அப் 1:11). இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்காக தான் திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:1-4).
இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் ஆராயும் இந்த கிறிஸ்மஸ் நன்னாளிலே, அவரை நாம் முகமுகமாய் தரிசிக்கப்போகும் அவருடைய வருகை தியானித்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.

கிறிஸ்மஸ் நட்சத்திரம்
“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2).
பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.

கிறிஸ்துவில் ஐக்கியம்
எங்கள் ஞாயிறு காலை ஆராதனைக்குப் பிறகு விளக்குகளை அணைப்பதற்கும் தேவாலயத்தைப் பூட்டுவதற்கும் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நபரைப் பற்றி எனக்கு ஒன்று தெரியும்: ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை அவர் தாமதமாகவே உண்ண நேரிடும். ஏனென்றால், பல விசுவாசிகள் ஆராதனைக்கு பின்னர், தேவாலயத்தில் சுற்றித் திரிவதை விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தீர்மானங்கள், இதய பிரச்சினைகள், அனுதின போராட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார்கள். ஆராதனை முடிந்து சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து ஐக்கியங்கொள்ளும் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.
ஐக்கியம் என்பது கிறிஸ்துவைப் போல் வாழும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். சக விசுவாசிகளுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் வரும் ஐக்கியம் இல்லாமல், ஒரு விசுவாசியாக இருந்தால் பல நன்மைகளை நாம் வாழ்க்கையில் இழக்க நேரிடும்.
உதாரணமாக, “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று பவுல் வலியுறுத்துகிறார். எபிரெயரின் ஆசிரியர், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் (10:25) என்று கூறுகிறார். ஏனென்றால் “ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” என்றும் ஆலோசிக்கிறார். மேலும் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (வச. 24) செயல்படும்படிக்கு அறிவுறுத்துகிறார்.
இயேசுவுக்காக வாழ அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக, “பலவீனரை தாங்குங்கள்” என்னும் ஆலோசனையை ஏற்று, நீடிய சாந்தமாய் இருக்கும்போது, விசுவாசத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் நாம் நம்மை தகுதிப்படுத்துகிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:14). தேவனுடைய துணையோடு அவ்வாறு வாழும்போது, மெய்யான ஐக்கியத்தை அனுபவிக்கவும், “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்போதும் நன்மை செய்ய” நாம் நாடலாம் (வச. 15).

சுவர்கள் இடிக்கப்பட்டன, ஒற்றுமை உருவானது
1961லிருந்து குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் பெர்லின் சுவரால் பிரிக்கப்பட்டனர். கிழக்கு ஜெர்மானிய அரசாங்கத்தால் அந்த ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தடையானது, அதின் குடிமக்கள் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லாமல் தடுத்தது. 1949லிருந்து இந்த சுவர் கட்டப்பட்ட ஆண்டிற்குள்ளதாக, ஏறத்தாழ 2.5 மில்லியனுக்கும் அதிகமான கிழக்கு ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கிச் சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1987இல் சுவரில் நின்று, “இந்தச் சுவரை இடித்துவிடுங்கள்” என்று கட்டளையிட்டார். 1989இல் சுவர் இடிக்கப்பட்டது. ஜெர்மனியின் மகிழ்ச்சியான மறுஇணைப்பிற்கு வழிவகுத்தது.
பவுல் இயேசுவால் இடிக்கப்பட்ட “பகைச்சுவர்” பற்றி எழுதுகிறார் (எபேசியர் 2:14). யூதர்களுக்கும் (கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்) மற்றும் புறஜாதிகளுக்கும் (மற்ற அனைத்து மக்களுக்கும்) இடையே தடுப்புச்சுவர் இருந்தது. மேலும் இது பெரிய ஏரோதுவால் எருசலேமில் கட்டப்பட்ட பழங்கால ஆலயத்தின் தடுப்புச்சுவர் (சோரெக்) மூலம் அடையாளப்படுத்தப்பட்டது. அது புறஜாதிகளை கோவிலின் வெளிப் பிராகாரங்களுக்கு அப்பால் நுழையவிடாமல் தடுத்தது. ஆனால் இயேசு, யூதருக்கும் புறஜாதிகளுக்கும் இடையேயான பிரிவையும், தேவனுக்கும் மற்ற ஜனங்களுக்கும் இடையான பிரிவையும் சமரசம் செய்தார். அவர் சிலுவை மரணத்தின் மூலம், பகையாய் இருந்த நடுச்சுவரை தகர்த்து, இறுதிறத்தாரையும் ஒன்றாக்கினார் (வச. 14,16). மேலும் “சமாதானத்தின் சுவிசேஷம்” (வச. 17-18) கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால் அனைவரும் ஒன்றுபடுவதை சாத்தியமாக்கியது.
இன்று, பல விஷயங்கள் நம்மை பிரிக்கக்கூடும். தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், கிறிஸ்துவில் காணப்படும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிக்கலாம் (வச. 19-22).
நம்பிக்கையின் ஒளி
என் அம்மாவின் பளபளப்பான சிவப்பு சிலுவை ஒன்று அவள் சிகிச்சை பெற்றுவந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அவரது படுக்கைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருக்கும். அவருடைய திட்டமிடப்பட்ட சிகிச்சை நாட்களுக்கு இடையில், விடுமுறை வருகைக்கு நான் தயாராக இருக்கவேண்டும். என்னுடைய விருப்பம், என்னுடைய அம்மாவுடன் ஒரு கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடவேண்டும் என்பதே. ஆனால் அந்த தருணத்தில் நான் வீட்டிலிருந்தேன். அவளுடைய அந்த சிவப்பு சிலுவையை ஒரு மரத்தில் தொங்கவிட்டிருந்தேன்.
அப்போது என் மகன் சேவியர் வர்ண விளக்குகளை ஏற்றியபோது, நான் மனதிற்குள் “நன்றி” என்று சொன்னேன். அவனுக்கு நான் நன்றிசொல்லுவதாக எண்ணி, பதிலுக்கு என்னை அவன் வாழ்த்தினான். ஆனால், எப்பொழுதும் நிலைத்திருக்கும் நம்பிக்கையின் ஒளியான இயேசுவை நோக்கி என் கண்களைத் திருப்புவதற்கு ஒளிரும் பல்புகளைப் பயன்படுத்தியதற்காக நான் தேவனுக்கு நன்றி சொன்னேன் என்பது என் மகனுக்குத் தெரியாது.
சங்கீதம் 42-ஐ எழுதிய சங்கீதக்காரன் தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் வெளிப்படையாய் வெளிப்படுத்துகிறான் (வச. 1-4). அவர் தன்னுடைய வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்கு முன்பாக, தன்னுடைய தொய்ந்த ஆத்துமாவை ஒப்புக்கொள்கிறார்: “தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமூகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (வச. 5). அவர் துக்கம் மற்றும் துன்பத்தின் அலைகளால் வெல்லப்பட்டாலும், சங்கீதக்காரனின் நம்பிக்கை தேவனின் கடந்தகால உண்மைத்தன்மையை நினைவுகூருவதன் மூலம் பிரகாசித்தது (வச. 6-10). அவர் தனது சந்தேகங்களைக் கேள்வியெழுப்பி, தனது சுத்திகரிக்கப்பட்ட நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி தன் சங்கீதத்தை நிறைவுசெய்கிறார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11).
நம்மில் பலருக்கு, கிறிஸ்துமஸ் பருவம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சேர்த்தே தூண்டுகிறது. இந்த கலவையான உணர்வுகளும் மெய்யான ஒளியான இயேசுவின் வாக்குறுதிகளின் மூலம் மீட்கப்படக்கூடும்.