கலையும் தேவனின் உள்ளமும்
எனது பெற்றோரின் வீட்டில், ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் மந்தையை மேய்ப்பதைச் சித்தரிக்கும் கலைப் படைப்பு ஒன்று உள்ளது. ஓவியம் போலத் தோற்றமளித்தாலும், சித்திர திரை மற்றும் சாயங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்டதாகும். பொருள்கள் மற்றும் நபர்களின் நிறம், ஆழம் மற்றும் வெளிப்புறத்தை வரையறுக்க பல்வேறு வகையான மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கலை, “மைசூர் மரப் பதித்த வேலை” என்று பின்னர் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு முறையும் நான் அதைப் பார்க்கும்போது, கர்த்தர் என் மேய்ப்பர் என்பதை அது எனக்கு நினைவூட்டுவதால், நான் நம்பிக்கையால் நிறைகிறேன். தேவன் என்னை ஆற்றவும், தனது பிரசன்னத்தை எனக்கு உறுதியளிக்கவும் இந்தக் கலைப் படைப்பைப் பயன்படுத்துகிறார். இந்த ஊக்கமளிக்கும் பணிக்காகவும், அத்தகைய படைப்பாற்றலைப் பெற்ற மர ஆசாரிகளுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் பல ஆண்டுகளாகக் கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கிறார். யாத்திராகமத்தில், ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் கூறினார் (வ.6). “நான் அழைத்து,” “நான் கட்டளையிட்டேன்,” “நான் அருளினேன்,” மற்றும் "நான் தேவஆவியினால் நிரப்பினேன்" என்று ஆராதனையில் பயன்படுத்தப்படும் பொருட்களை உருவாக்க பெசலெயேலையும் அகோலியாபையும் அவர் பணித்தார் (வ.2-6). “விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும்" (வ.3-5) அவர்களுக்கு ஞானத்தையும் திறமையையும் கொடுத்தார். ஆராதனையில் ஜனங்களை தம்மிடம் நெருக்கமாகக் கொண்டுவரத் தேவன் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து மற்றும் பயன்படுத்தினார்.
பெசலெயேல் மற்றும் அகோலியாப் போன்றோரின் விஷயத்தைப் போலவே, நம்முடைய கலைத்திறன் ஈவுகளெல்லாம் தேவஆவியால் நமக்கு அருளப்படுகின்றன. தேவனே நம்மைத் தேர்ந்தெடுத்து, நம்மை நியமித்து, அவருக்காகப் படைக்கும்பொருட்டு அவருடைய ஆவியால் நம்மை நிரப்பினார். இது யாருக்கு உதவப் போகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனின் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் கீழ் நாம் கலையை உருவாக்கினால், அவர் அதை ஜனங்களை ஆறுதல்படுத்தவும் அவர்களின் வாழ்க்கையையும் நம் வாழ்க்கையையும் செழிக்கச் செய்யவும் பயன்படுத்துவார்.

வார்த்தைகளுக்கான பொறுப்பேற்றல்
ஒரு சோகமான நிகழ்வுக்கு பின்னர் நிறுவனங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. ஆனால் ஒரு பதினேழு வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு புகழ்பெற்ற பள்ளி அவனைப் பாதுகாப்பதில் “துரதிர்ஷ்டவசமாக தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டது. அந்த மாணவர் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். பள்ளித் தலைவர்கள், அதைப்பற்றி அறிந்திருந்தாலும், அவரைப் பாதுகாக்க சிறிதும் முயற்சிக்கவில்லை. கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க பள்ளி நிர்வாகம் தற்போது உறுதியளித்துள்ளது.
கொடுமைப்படுத்துதலால் ஏற்படும் பாதிப்புகள் என்பது வார்த்தைகளின் வலிமைக்கு அப்பட்டமான உதாரணம். நீதிமொழிகள் புத்தகத்தில், வார்த்தைகளின் தாக்கத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம். ஏனென்றால், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதிமொழிகள் 18:21). நாம் சொல்லுவம் ஒரு வார்த்தை, ஒரு காரியத்தை உயர்த்தலாம் அல்லது நசுக்கலாம். கடுமையான சில வார்த்தைகள் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
நாம் சொல்வதைக் கொண்டு வாழ்வது எப்படி? நம்முடைய வார்த்தைகள் ஞானம் அல்லது மதியீனம் (15:2) என்று வேதம் போதிக்கிறது. ஞானத்தின் உயிரைக் கொடுக்கும் சக்தியின் ஆதாரமான தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் நாம் ஞானத்தைக் காண்கிறோம் (3:13, 17-19).
வார்த்தைகள் மற்றும் செயல்களில் - வார்த்தைகளின் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், மற்றவர்கள் கூறியவற்றால் காயமடைந்தவர்களைக் கவனித்துப் பாதுகாப்பதற்கும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. வார்த்தைகள் கொல்லலாம், ஆனால் இரக்கமுள்ள வார்த்தைகள் குணப்படுத்தலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு “ஜீவ விருட்சமாய்” (15:4) மாறும்.

உடைபட்ட உள்ளம் தரும் ஆசீர்வாதம்
அவர் முதுகு கூன் விழுந்து, கைத்தடியுடன் நடக்கிறார். ஆனால் அவருடைய பல ஆண்டுகாலமான போதக ஊழியம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலனுக்கு அவா் தேவனை சார்ந்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாயிருக்கிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கை. வில்லியம் பார்பர் ஒரு பலவீனப்படுத்தும் நோயால் கண்டறியப்பட்டார். இது முதுகெலும்பின் எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. “பார்பர், நீங்கள் போதக ஊழியத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாகிலும் வேலையை தெரிந்துகொள்ள வேண்டும். உம் போன்ற மாற்றுத் திறனாளியை இந்த சபை போதகராய் ஏற்பதற்கு விரும்பவில்லை” என்று அவரிடத்தில் நுட்பமான விதத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேவன் அவரை ஒரு போதகராக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஒரு சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.
குறைபாடுகள் உள்ளவர்களை என்ன செய்வது என்று உலகம் முழுவதுமாக அறியாவிட்டாலும், தேவன் அறிந்திருக்கிறார். அழகையும் துணிச்சலையும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் மதிப்பவர்கள், அழைக்கப்படாத முறிவுகளுடன் வரும் நன்மையை இழக்க நேரிடும். யாக்கோபின் கேள்வியும் அதன் அடியில் உள்ள கொள்கையும் கருத்தில் கொள்ளத்தக்கது: “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5). உடல்நலம் அல்லது வலிமை அல்லது பிற விஷயங்கள் குறையும் போது, ஒருவரின் நம்பிக்கை அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. தேவனுடைய பெலத்தால், அது எதிர்மாறாக இருக்கலாம். நமது பற்றாக்குறை அவரை நம்புவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கலாம். இயேசுவைப் போலவே நம்முடைய உடைந்த நிலையைக் கொண்டே உலகத்திற்கு நன்மையைக் கொண்டுவர அவரால் கூடும்.

நம் பெலனை புதுப்பித்தல்
ஒரு ஜோடி கழுகுகள் என் வீட்டில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஒரு பெரிய கூடு கட்டின. நீண்ட காலத்திற்கு முன்பே, மகத்தான அந்த கழுகுகளுக்கு குஞ்சுகள் இருந்தன. வயது முதிர்ந்த கழுகுகளில் ஒன்று கார் மோதி பரிதாபமாக இறக்கும் வரை, அவைகள் தங்கள் குஞ்சுகளை இணைத்து பராமரித்தது. பல நாட்களாக, உயிரோடிருந்த அந்த கழுகு, தொலைந்து போன துணையைத் தேடுவது போல், அருகில் உள்ள ஆற்றில் ஏறி இறங்கி பறந்தது. இறுதியாக, தன் கூட்டிற்குத் திரும்பி, தன்னுடைய சந்ததிகளை தொடர்ந்து வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
எந்தவொரு சூழ்நிலையும் ஒற்றை பெற்றோருக்கு சவாலாகவே இருக்கலாம். ஆனால் தன்னுடைய குழந்தை கொண்டுவரும் பொருளாதார ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியானது பரந்த அளவிலான அனுபவங்களை உருவாக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலைகளில் வாழ்பவர்களும், அல்லது தங்களை மேற்கொள்ளக்கூடிய பல சூழ்நிலைகளை சமாளிப்பவர்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
நாம் சோர்வாகவும் பெலவீனமாகவும் உணரும்போது தேவன் நம்முடன் இருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ளவர்; அனைத்து வல்லமையும் உடையவர்; மாறாதவர். அவருடைய பெலன் ஒருபோதும் குன்றிப்போவதில்லை. வேதம் சொல்வதை நாம் நம்பலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடை(வார்கள்)” (ஏசாயா 40:31). நம்முடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நடக்கிற யாவும் நமக்கு எதிர்த்து நிற்பதில்லை. ஏனென்றால், இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் நம்மை தகுதிப்படுத்தும் தேவனை நாம் சார்ந்து செயல்படுகிறோம். அவர் மீது நம்பிக்கை வைப்பது நம்மை தொடர்ந்து நடக்கவும், பெலவீனமடையாமல் இருக்கவும், “கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து” எழும்பவும் நம்மை அனுமதிக்கிறது (வச. 31).

தலைமுறை தலைமுறையாய்
டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.
யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).
இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம்.