
கிறிஸ்துவுக்காக ஓர் இதயம்
நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை, நீ எந்த தவறும் செய்ய மாட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு சக பணியாளரிடம், அவள் சொன்னவற்றை தவறாகப் புரிந்து கொண்ட பிறகு, என் கோபத்தை வெளிப்புறமாக மட்டும் அடக்கிக் கொண்டேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டியிருப்பதால், தேவையானதை மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்தேன் (பேசுவதை குறைப்பதின் மூலம் பதிலடி கொடுக்க எண்ணினேன்). அமைதியான போக்கு எப்படி தவறாகும்?
இதயத்திலிருந்தே பாவம் புறப்படுகிறது என இயேசு சொன்னார் (மத்தேயு 15:18−20). எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைக்கும்படி என் மௌனம் மக்களை முட்டாளாக்கியிருக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்கவில்லை. நான் கோபம் நிறைந்த இதயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். நான் தங்கள் உதடுகளால் தேவனை கனம்பண்ணிய பரிசேயர்களைப் போலிருந்தேன், ஆனால் அவர்களின் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன (வச. 8). என் வெளித்தோற்றம் உண்மையான உணர்வுகளைக் காட்டாவிட்டாலும், கசப்பு எனக்குள் கொப்பளித்தது. என் பரலோக தகப்பனுடன் நான் எப்போதும் உணர்ந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. பாவத்தை வளர்ப்பதும் மறைப்பதும் அவ்வாறு செய்கிறது.
தேவனின் கிருபையால், நான் எப்படி உணர்கிறேன் என்பதை என் சக ஊழியரிடம் கூறி மன்னிப்பு கேட்டேன். அவள் என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள், இறுதியில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்.. புறப்பட்டுவரும்" (வ.19) என்கிறார் இயேசு. நம் இதயத்தின் நிலைமை முக்கியமானது, ஏனெனில் அங்கே இருக்கும் தீமை நம் வாழ்வில் நிரம்பி வழியக்கூடும். நமது வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டும் முக்கியம்.

தேவனின் உதவியால் பேசுதல்
பட்டாம்பூச்சிகளை சத்தமிடும் உயிரினங்கள் என்று பொதுவாக யாரும் கருத மாட்டார்கள். அதோடு ஒரு மோனார்க் பட்டாம்பூச்சி சிறகுகளை அசைப்பது நடைமுறையில் நம் செவிகளுக்கு கேட்பதில்லை. ஆனால் மெக்சிகோவின் மழைக்காடுகளில் உள்ள அவைகள், தங்கள் குறுகிய வாழ்க்கையைத் தொடங்குகையில், கூட்டுமாக அவைகள் சிறிய சிறுகளையடித்து பறக்கும்போது உண்டாகும் ஒலி வியக்கத்தக்க வகையில் சத்தமாக இருக்கிறது. ஆயிரமாயிரமான மோனார்க்குகள் ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது, அது ஒரு நீர்வீழ்ச்சி போல் ஒலிக்கிறது.
நான்கு சிறகுகள் கொண்ட வித்தியாசமான உயிரினங்கள் எசேக்கியேலின் தரிசனத்தில் தோன்றியபோதும் அதேபோல வர்ணிக்கப்படுகிறது. பட்டாம்பூச்சி கூட்டத்திலும் குறைவாயிருப்பினும், அவைகளின் செட்டைகளை அடிக்கும் ஓசையை "பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும்" (எசேக்கியேல் 1:24) என்று ஒப்பிடுகிறார். அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், "இஸ்ரவேலர்களுக்கு தன்னுடைய வார்த்தைகளை" சொல்லும்படி (2:7) அழைக்கும் தேவனின் சத்தத்தை எசேக்கியேல் கேட்டார்.
எசேக்கியேல், மற்ற பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவே தேவஜனங்களிடம் சத்தியத்தை பேசும் பணியை ஏற்றார். இன்று, தேவன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நம் வாழ்வில் தம்முடைய நற்செயல்களின் உண்மையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார் (1 பேதுரு 3:15). சிலசமயம் அந்த அழைப்பு நேரடியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் "தண்ணீர் இரைச்சலை" போலவிருக்கும். மற்றசமயம், ஓசையில்ல வார்த்தைப்போல மெல்லிய சத்தமாக இருக்கும். தேவனின் அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான அழைப்பு ஒரு மில்லியன் பட்டாம்பூச்சிகளைப் போல சத்தமாக இருந்தாலும் அல்லது ஒரு பட்டாம்பூச்சிப் போல் அமைதியாக இருந்தாலும், எசேக்கியேலைப் போலவே நாம் கேட்க வேண்டும். தேவன் சொல்ல விரும்புவதைக் கேட்பதற்கு செவி சாய்க்க வேண்டும்.

எஜமானனா அல்லது ஊழியனா
"நான் எஜமானனா அல்லது ஊழியனா?", பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.
சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், "சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. "உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை" (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.
தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு "ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.

லேவியராகமம் கூட
அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன். என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.
அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.
வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது, நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.
"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.
