நம்பிக்கையின் ஒளி
என் அம்மாவின் பளபளப்பான சிவப்பு சிலுவை ஒன்று அவள் சிகிச்சை பெற்றுவந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அவரது படுக்கைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருக்கும். அவருடைய திட்டமிடப்பட்ட சிகிச்சை நாட்களுக்கு இடையில், விடுமுறை வருகைக்கு நான் தயாராக இருக்கவேண்டும். என்னுடைய விருப்பம், என்னுடைய அம்மாவுடன் ஒரு கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடவேண்டும் என்பதே. ஆனால் அந்த தருணத்தில் நான் வீட்டிலிருந்தேன். அவளுடைய அந்த சிவப்பு சிலுவையை ஒரு மரத்தில் தொங்கவிட்டிருந்தேன்.
அப்போது என் மகன் சேவியர் வர்ண விளக்குகளை ஏற்றியபோது, நான் மனதிற்குள் “நன்றி” என்று சொன்னேன். அவனுக்கு நான் நன்றிசொல்லுவதாக எண்ணி, பதிலுக்கு என்னை அவன் வாழ்த்தினான். ஆனால், எப்பொழுதும் நிலைத்திருக்கும் நம்பிக்கையின் ஒளியான இயேசுவை நோக்கி என் கண்களைத் திருப்புவதற்கு ஒளிரும் பல்புகளைப் பயன்படுத்தியதற்காக நான் தேவனுக்கு நன்றி சொன்னேன் என்பது என் மகனுக்குத் தெரியாது.
சங்கீதம் 42-ஐ எழுதிய சங்கீதக்காரன் தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் வெளிப்படையாய் வெளிப்படுத்துகிறான் (வச. 1-4). அவர் தன்னுடைய வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்கு முன்பாக, தன்னுடைய தொய்ந்த ஆத்துமாவை ஒப்புக்கொள்கிறார்: “தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமூகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (வச. 5). அவர் துக்கம் மற்றும் துன்பத்தின் அலைகளால் வெல்லப்பட்டாலும், சங்கீதக்காரனின் நம்பிக்கை தேவனின் கடந்தகால உண்மைத்தன்மையை நினைவுகூருவதன் மூலம் பிரகாசித்தது (வச. 6-10). அவர் தனது சந்தேகங்களைக் கேள்வியெழுப்பி, தனது சுத்திகரிக்கப்பட்ட நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி தன் சங்கீதத்தை நிறைவுசெய்கிறார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11).
நம்மில் பலருக்கு, கிறிஸ்துமஸ் பருவம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சேர்த்தே தூண்டுகிறது. இந்த கலவையான உணர்வுகளும் மெய்யான ஒளியான இயேசுவின் வாக்குறுதிகளின் மூலம் மீட்கப்படக்கூடும்.

மன்னித்தல் மறத்தல்
ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.
“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.
நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்... அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.
நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

தழும்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
ஃபே அவள் வயிற்றில் உள்ள தழும்புகளைத் தொட்டாள். உணவுக்குழாய்-வயிற்று புற்றுநோயை அகற்ற இன்னுமொரு அறுவை சிகிச்சையை அவள் தாங்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் அவளது வயிற்றின் ஒரு பகுதியை எடுத்து, அதில் அவர்களுடைய வேலையின் அளவை அடையாளம் தெரிந்துகொள்வதற்காக ஒரு சிறு பகுதியை தைக்காமல் விட்டுவிட்டனர். அவள் தனது கணவரிடம், “வடுக்கள், புற்றுநோயின் வலியை அல்லது குணமாகுதலின் துவக்கத்தைக் குறிக்கின்றன. எனது இந்த வடுக்களை குணமாகுதவலின் அடையாளமாக நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னாள்.
யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடிய பின்பு, இதுபோன்ற ஒரு தேர்வை தெரிந்தெடுத்தான். கர்த்தருடைய மனுஷன் யாக்கோபின் தொடை சந்தை பிடிக்க, யாக்கோபு சுளுக்கின் நிமித்தம் சோர்வாகவும் தளர்வுடனும் காணப்பட்டான். சில மாதங்களுக்குப் பிறகு, யாக்கோபு தனது இடுப்பை மென்மையாய் நீவியபோது அவன் எதைப் பிரதிபலித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?
இந்த போராட்டம் நடைபெற்றதற்கு பின்னணியாக, அவரது பல வருட வஞ்சகத்திற்காக அவன் வருத்தத்தால் நிரப்பப்பட்டானா? கர்த்தருடைய தூதன் அவன் யார் என்ற உண்மை விளங்கும் வரைக்கும் அவனை ஆசீர்வதிக்க மறுத்தார். பின்பு யாக்கோபு, தான் குதிங்காலை பிடித்தவன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் (ஆதியாகமம் 25:26 ஐப் பார்க்கவும்). அவர் தனது சகோதரன் ஏசாவையும் மாமனார் லாபானையும் தந்திரமாக கையாண்டு, அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகிறான். யாக்கோபோடு போராடிய கர்த்தருடைய தூதன், அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டபடியால், அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டுகிறான் (வச. 28).
யாக்கோபின் இந்த தொடைச்சுளுக்கானது அவனது பழைய வஞ்சக வாழ்க்கையின் முடிவையும் தேவனுடனான அவனது புதிய வாழ்க்கையின் துவக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, யாக்கோபின் முடிவையும் இஸ்ரவேலின் துவக்கத்தையும் குறிக்கிறது. தேவன் அவன் மூலமாய் பலமாய் கிரியை செய்யும் அளவிற்கு, அவனது அந்த தளர்வானது தேவன் மீது முற்றிலுமாய் சாய்ந்துகொள்வதற்கு அவனுக்கு வழிவகுத்தது.

என் தேவன் சமீபமாயிருக்கிறார்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, லூர்து என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பித்தார். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தச் சொன்னபோது, அவள் கவலைப்பட்டாள். “என்னுடைய கம்ப்யூட்டர் நன்றாக இல்லை," என்று அவள் சொன்னாள். “எனது மடிக்கணினி பழையது, மேலும் எனக்கு வீடியோ கான்பரன்சிங் இயங்குதளங்கள் பற்றித் தெரியாது” என்றும் சொன்னாள்.
சிலருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், அது அவளுக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. “நான் தனியாக வாழ்கிறேன், அதனால் எனக்கு உதவ யாரும் இல்லை,” “எனது மாணவர்கள் இதினிமித்தம் வகுப்பிலிருந்து வெளியேறிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனக்கு வருமானம் தேவை" என்று அவள் தன்னுடைய நிலையை விவரித்தாள்.
ஒவ்வொரு வகுப்பிற்கு முன்பும், லூர்து தனது மடிக்கணினி சரியாக வேலை செய்யவேண்டும் என்று ஜெபம் செய்வாள். “பிலிப்பியர் 4:5-6, வசனங்கள் என் திரையில் வால்பேப்பராக இருந்தது,” என்று அவள் சொன்னாள். “அந்த வார்த்தைகளில் நான் எப்படி ஒட்டிக்கொண்டேன்.”
நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்று என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய பிரசன்னம் பற்றிய தேவனுடைய வாக்குறுதியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் அவருடைய அருகாமையில் இளைப்பாறி, ஜெபத்தில் அவருக்கு எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும்போது, பெரியதோ அல்லது சிறியதோ, அவருடைய இளைப்பாறுதல் நம் “இருதயங்களையும்... சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7).
“கணினி குறைபாடுகளை சரிசெய்வது பற்றிய வலைத்தளங்களுக்கு தேவன் என்னை வழிநடத்தினார்” என்று லூர்து கூறினாள். “எனது தொழில்நுட்ப வரம்புகளைப் புரிந்துகொண்ட மாணவர்களையும் தேவன் எனக்குக் கொடுத்தார்.” நாம் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால், தேவனின் பிரசன்னம், உதவி மற்றும் இளைப்பாறுதல் ஆகியவை நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நாம் அனுபவிக்கக்கூடும். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (வச. 4) என்று நாம் நம்பிக்கையோடே மற்றவர்களுக்கு சொல்லக்கூடும்.
