வகை  |  odb

தேவனின் தாராளமான அன்பு

ஒரு பட்டமளிப்பு விழாவில், மேக்கிங் யுவர் பெட் எவெரி டே என்ற தலைப்பில் பேசி இணையத்தில் 100மில்லியன் முறை பார்க்கப்பட்ட  காணொளியில் தோன்றிய இராணுவ வீராகவே அவர் அறியப்படுகிறார். ஆனால் ஓய்வுபெற்ற கடற்படை அட்மிரல் வில்லியம் மெக்ராவன் மற்றொரு முக்கியமான படிப்பினையைப்  பகிர்ந்து கொள்கிறார். மத்திய கிழக்கில் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது, ​​ஒரு அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த பலர் தவறுதலாகக் கொல்லப்பட்டதை மெக்ராவன் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். அக்குடும்பத்திடம் நேர்மையாக மன்னிப்பு கேட்க வேண்டியதே சரியானது  என்று நம்பிய மெக்ராவன், மனம் உடைந்த தந்தையிடம் துணிகரமாக மன்னிப்பு கேட்டார்.

"நான் ஒரு சிப்பாய், ஆனால் எனக்கும் குழந்தைகள் உள்ளனர், என் உள்ளம் உங்களுக்காக வருந்துகிறது” என்று மெக்ராவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் அவரிடம் கூறினார். அந்த மனிதனின் பதில்? அவர் மெக்ராவனுக்கு மன்னிப்பு என்ற தாராள பரிசை வழங்கினார். அந்த மனிதனின் உயிர் பிழைத்த மகன் மூலம், “மிக்க நன்றி. உங்களுக்கு எதிராக நாங்கள் எதையும் எங்கள் உள்ளத்தில் கொள்ள மாட்டோம்" என்று அவரிடம் கூறினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதுபோன்ற தாராளமான கிருபையைப் பற்றி எழுதினார்: "நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12). வாழ்க்கை நம்மை பல்வேறு வழிகளில் சோதிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே கொலோசேயில் உள்ள சபை விசுவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வ.13).

இத்தகைய இரக்கமுள்ள, மன்னிக்கும் இதயங்களைக் கொண்டிருக்க எது நமக்கு உதவுகிறது? தேவன் தாராளமான அன்பே. பவுல் நிறைவு செய்ததுபோல்,  "இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்" (வ.14).

 

சிறை கம்பிகளின் பின்

ஒரு நட்சத்திர தடகள வீரர் மேடையில் ஏறினார், அது விளையாட்டரங்கம் அல்ல. சிறைச்சாலையில் உள்ள முந்நூறு கைதிகளிடம் ஏசாயாவின் வார்த்தைகளைப் 

பகிர்ந்துகொண்டார்.

எனினும் இந்த தருணம், ஒரு பிரபலமான விளையாட்டு வீரரைக் காட்சிப்படுத்தல் பற்றியது அல்ல, மாறாக உடைந்து புண்பட்டிருக்கும் கடலளவு ஆத்துமாக்களைப் பற்றியது. இந்த சிறப்பான தருணத்தில், தேவன் கம்பிகளுக்குப் பின்பே காட்சியளித்தார். ஒரு பார்வையாளர் கீச்சகத்தில், "தேவாலயம் ஆராதனையாலும், துதியாலும் பொங்கி வழிந்தது" என்று பதிவிட்டார். ஆண்கள் ஒன்றாக அழுது ஜெபித்தனர். இறுதியில், சுமார் இருபத்தேழு கைதிகள் கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்தனர்.

ஒருவகையில் நாம் எல்லோருமே பேராசை, சுயநலம் மற்றும் அடிமைத்தனத்தின் கம்பிகளுக்குப் பின்னால் சிக்கி, நாமே உருவாக்கிய சிறைகளில் இருக்கிறோம். ஆனால் ஆச்சரிய விதமாக, தேவன் காட்சியளிக்கிறார். அன்று காலையில்  சிறையில் முக்கிய வசனம், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?" (ஏசாயா 43:19) என்பதே. "முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்" (வ.18) என்று இந்த பகுதி நம்மை ஊக்குவிக்கிறது, ஏனெனில் தேவன், "நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (வ.25) என்று கூறுகிறார்.

ஆயினும் தேவன் தெளிவாகக் கூறுகிறார்: "என்னையல்லாமல் ரட்சகர் இல்லை" (வ.11). கிறிஸ்துவுக்கு நம் வாழ்வைக் கொடுப்பதன் மூலமே நாம் விடுதலை பெறுகிறோம். நம்மில் சிலர் அதைச் செய்ய வேண்டும்; நம்மில் சிலர் அதைச் செய்துள்ளோம், ஆனாலும் நம் வாழ்வின் எஜமான் யார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்து மூலம் தேவன் உண்மையிலேயே "ஒரு புதிய காரியத்தை" செய்வார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அப்படியானால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

 

வரவேற்பு விரிப்பு

எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், ​​அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். "வணக்கம்!", இதய வடிவில் "இல்லம்" போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், "வரவேற்பு" அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?

மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது  மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச்  சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும்,  ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

வேதாகம பிரியர்கள்

அழகான மணமகள், தனது பெருமிதமான தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு, பலிபீடத்திற்குச் செல்லத் தயாராக இருந்தாள். ஆனால் அவளுடைய பதின்மூன்று மாத தமக்கையின் மகன் அவளை முந்திக்கொண்டான். பொதுவாக உபயோகிக்கும் "மோதிரத்தை" எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவன் வேதாகமத்தை ஏந்திக்கொண்டிருந்தான். இந்த முறையில் மணமகனும், மணமகளும், இயேசுவின் உறுதியான விசுவாசிகளாக, வேதாகமத்தின் மீதான தங்கள் அன்பிற்கு சாட்சியமளிக்க விரும்பினர். பெரிதாய் கவனம் சிதறாமல், அந்த பிள்ளையும் குறுநடை போட்டு சபையின் முன்புறம் சென்றது. வேதாகமத்தின் தோல் அட்டையில் காணப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையின் பற்களின் அடையாளங்கள் எவ்வளவு அழகாய் இருந்தது. கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு அல்லது அவரை அறிய விரும்புபவர்களுக்கு வேதத்தைச் சுவைத்து எடுப்பதைக் காண்பிக்கச் செயல் விளக்கமாகும் சித்திரம்.

சங்கீதம் 119, வேதாகமத்தின் விஸ்தாரமான மதிப்பைப் போற்றுகிறது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்களின் (வ.1)  ஆசீர்வாதத்தை அறிவித்த பிறகு, ஆசிரியர் கவிதை நடையில் அதைப் பற்றி முழங்கினார், அதில் அதின் மீதான அவரது அன்பும் அடங்கும். "இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்" (வ.159); "பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்." (வ.163); "என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்" (வ.167)

தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும் உள்ள நமது அன்பை எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறோம் என்பதை நாம் எத்தகைய வண்ணம் அறிவிக்கிறோம்? அவர் மீதான நம் அன்பைச் சோதிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், நான் எதில் பங்குகொள்கிறேன்? நான் வேதத்தின் இனிமையான வார்த்தைகளை "சுவைக்கிறேனா"? என்று நம்மை நாமே ஆராய்வதாகும். பின்னர் "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்"  (34:8) என்ற இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.