மேலான மகிமை
சில நேரங்களில் வியக்கத்தக்க வகையில் ஆவிக்குரிய செய்திகள் எதிர்பாராத இடங்களில் தோன்றும். அதற்கு காமிக் புத்தகங்கள் ஒரு உதாரணம். ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர், தி ஹல்க் மற்றும் பல முக்கிய ஹீரோக்களின் பாரம்பரியத்தை கற்பனையாய் வடிவமைத்த மார்வெல் காமிக்ஸ் வெளியீட்டாளர் ஸ்டான் லீ 2018 இல் காலமானார்.
சன்கிளாஸடன் பிரபலமாகச் சிரிக்கும் அவர், பல தசாப்தங்களாக மார்வெல் காமிக்ஸில் மாதாந்திர நெடுவரிசைகளில் கையொப்பமிடும்போது, “எக்செல்சியர்” என்று எழுதுவது வழக்கம். அதற்கு “மேலான மகிமைக்கு நேராய் முன்நோக்கி செல்லுதல்” என்று அர்த்தத்தையும் விளக்கினார்.
எனக்கு அது பிடிக்கும். ஸ்டான் லீ அதை உணர்ந்தாரோ இல்லையோ, இந்த வழக்கத்திற்கு மாறான சொற்றொடரைப் பயன்படுத்துவது நிச்சயமாக பிலிப்பியர்களில் பவுல் எழுதியதைப் போலவே எதிரொலிக்கிறது. அவர் விசுவாசிகளை பின்னால் பார்க்காமல், மேலே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்: “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14).
வருத்தம் மற்றும் கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளில் நாம் எளிதில் சிக்கிக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்துவில், வருந்துவதைத் துறந்து, அவர் நமக்கு அருளும் மன்னிப்பையும் நோக்கத்தையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் தேவனுடைய மகத்தான மகிமைக்காக மேல்நோக்கிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்! எக்ஸெல்சியர்!

தேவன் நமக்கு செவிகொடுக்கிறார்
முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவசர உதவிக்கான எண்ணை அழைத்தான். அவசரகால ஆபரேட்டர் பதிலளித்தார். “எனக்கு உதவி தேவை" என்றான் சிறுவன். ஒரு பெண் அறைக்குள் நுழைந்து, "ஜானி, நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்கும் வரை, ஆபரேட்டர் அவனுக்கு உதவினார். ஜானி தனது கணித வீட்டுப்பாடத்தை செய்ய முடியாது என்று விளக்கினான். எனவே அவனுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் உதவி எண்ணை தொடர்புகொள் என்று அவனது தாயார் கற்றுக் கொடுத்ததைச் செய்தான். அவசர எண்ணை அழைத்தான். ஜானிக்கு, வீட்டுப்பாடத்தை செய்வதே தற்போதையை தேவையாய் இருந்தது. கருணையுடன் கேட்கும் அந்தச் சிறுவனின் வீட்டுப் பாடங்களுக்கு உதவுவதே அந்தத் தருணத்தில் முதன்மையானதாய் இருந்தது.
சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு உதவி தேவைப்பட்டபோது, “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்கீதம் 39:4). தேவனை “நீரே என் நம்பிக்கை” (வச. 7) என்கிறார். “என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்” (வச. 12) என்று கெஞ்சுகிறார். பின்னர் தன்னிடத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறார் (வச. 13). தாவீதின் தேவைகள் பேசப்படாவிட்டாலும், வேதாகமம் முழுவதும் தேவன் தன்னுடன் இருப்பார் என்றும், தன்னுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பார் என்றும் தாவீது அறிவித்தார்.
கர்த்தருடைய நிலைத்தன்மையில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது, நமது நிலையற்ற உணர்வுகளைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. அதே சமயம் மாறாத ஒரு தேவனுக்கு மிகப் பெரிய அல்லது சிறிய கோரிக்கை என்று எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர் நமக்குச் செவிசாய்க்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார், நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதிலளிக்கிறார்.

உதவிக்காய் தாழ்மையுடன் அணுகுதல்
எங்கள் விருந்துக்கு நாள் நெருங்கியதும், நானும் என் மனைவியும் திட்டமிட ஆரம்பித்தோம். நிறைய பேர் வருவதால், சமையல்காரரிடம் பணம் கொடுத்து சமைக்க வேண்டுமா? சமையலை நாமே செய்தால் பெரிய அடுப்பு வாங்க வேண்டுமா? அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாம் கூடாரம் ஏதும் போட வேண்டியிருக்குமா? விரைவில் எங்கள் விருந்தின் செலவு உயர்ந்தது. எல்லாவற்றையும் நாமே வழங்க முயற்சிப்பதால், மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறோம்.
சமூகத்தைப் பற்றிய வேதாகமத்தின் தரிசனம், கொடுக்கல் வாங்கல் இரண்டியும் உடையதாகும். பாவத்தில் விழுவதற்கு முன்பே, ஆதாமுக்கு உதவி தேவைப்பட்டது (ஆதியாகமம் 2:18). மற்றவர்களின் ஆலோசனையைப் பெறவும் (நீதிமொழிகள் 15:22) மற்றும் நமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் (கலாத்தியர் 6:2) நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆதித்திருச்சபை “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்” (அப்போஸ்தலர் 2:44-45). சுயநலமாய் வாழ்வதற்குப் பதிலாக, அழகான ஒன்றையொன்று சார்ந்து பகிர்ந்து கொண்டார்கள், பெற்றுக்கொண்டனர், கொடுத்தனர்.
எங்கள் விருந்துக்கு ஒரு பலகாரம் அல்லது இனிப்பை கொண்டு வரும்படி விருந்தினர்களிடம் கேட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரிய அடுப்பைக் கொண்டு வந்தார்கள், ஒரு நண்பர் கூடாரம் போட உதவிசெய்தார். உதவி கேட்பது நெருங்கிய உறவுகளை உருவாக்க எங்களுக்கு உதவியது, மேலும் மக்கள் செய்த உணவு வகைகளையும் மகிழ்ச்சியையும் தந்தது. நம்மைப் போன்ற ஒரு காலத்தில், தன்னிறைவு பெற்றிருப்பது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் தேவனிடத்தில் தாழ்மையோடு உதவிகேட்பவர்களுக்கு, தேவன் தம்முடைய கிருபையை கொடுக்கிறார் (யாக்கோபு 4:6).

கண்டு விசுவாசிக்கும்போது
“நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என் மனைவி, காரி, என்னை ஜன்னலுக்கு அழைத்து, எங்கள் முற்றத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எங்கள் வேலிக்கு வெளியே உள்ள காடுகளில் ஒரு வயது முதிர்ந்த பெண்மானைக் காட்டினாள். எங்கள் வீட்டு வேலிக்குள் இருந்த பெரிய நாய்கள், வேகமாய் அந்த மானை நோக்கி ஓடின, ஆனால் அவைகளைப் பார்த்து குரைக்கவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவைகள் முன்னும் பின்னுமாக நடந்தன. அந்த பெண் மான் நின்று நாய்களைப் பார்த்தபோது, நாய்களும் தங்கள் முன்னங்கால்களை நேராக்கிக் கொண்டு, மீண்டும் ஓடத் தயாரான நிலையில், மீண்டும் குனிந்துகொண்டன. இது வேட்டையாடும் விலங்கினத்தின் வழக்கமான நடத்தை இல்லை. அந்த பெண் மானும் நாய்களும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தன!
காரிக்கும் எனக்கும், அந்த நிகழ்வு வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த காட்சியைக் காண்பித்தது. ஏசாயா தீர்க்கதரிசி, “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (ஏசாயா 65:17) என்ற வார்த்தைகளுடன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிவிக்கிறார். மேலும்; “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்” (வச. 25) என்றும் கூறுகிறார். இனி வேட்டையாடுதல் இல்லை. அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருப்பர்.
தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் மிருக ஜீவன்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் தனது படைப்பிற்காக, குறிப்பாக “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு” என்னென்ன ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்பதை அவை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன (1 கொரிந்தியர் 2:9). அது எவ்வளவு அழகான இடமாக இருக்கப்போகிறது! விசுவாசத்தின் மூலம் நாம் அவரை நம்பும்போது, அவருடைய சமூகத்தில் நித்திய காலமாய் இளைப்பாறுதலை அனுபவிக்கக்கூடிய யதார்த்தத்தை நாம் காணும்படிக்கு அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.
ஞானமான கரிசனை
அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.
பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது, பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.
