
தேவனில் ஒழுக்கமான வாழ்க்கை
அது ஜூன் 2016, ராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவளது வண்டியிலிருந்து, ராணி கூட்டத்தை நோக்கி கை அசைத்து, சிவப்பு நிற சீருடையணிந்த வீரர்களின் மிகசீரான நீண்ட வரிசைகளுக்கு முன்னால் கடந்து சென்றாா்கள். இங்கிலாந்தில் அது உஷ்ணமான நாள், மேலும் காவலர்கள் தங்கள் பாரம்பரிய அடர் கம்பளி கால்சட்டை, தாடை வரை பொத்தான்கள் போடப்பட்ட கம்பளி மேலாடைகள் மற்றும் பாரிய கரடி-உரோம தொப்பிகளை அணிந்திருந்தனர். வீரர்கள் சூரியனுக்குக் கீழே கடுமையான வரிசைகளில் நின்றபோது, ஒரு காவலர் மயக்கமடையத் தொடங்கினார். வியத்தகு வகையில், அவர் தன்னை கடுமையாகிக் கட்டுப்படுத்தி, வெறுமனே முன்னோக்கி விழுந்தார், மணல் சரளையில் அவரது முகம் புதைந்தபோது அவரது உடல் ஒரு பலகை போன்று நேராக இருந்தது. அங்கே அவர் அப்படியே கிடந்தார், விறைப்பாகவே விழுந்து கிடந்தார்.
இந்த காவலர் சுயகட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கும், அவர் மயங்கி விழுந்தபோதும் தனது உடலைச் சரியான இடத்தில் வைத்திருப்பதற்கும் பல வருடப் பயிற்சியும் ஒழுக்கமும் தேவைப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிப்பட்ட பயிற்சியை விவரிக்கிறார்: "என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" (1 கொரிந்தியர் 9:27 ) என்று அவர் எழுதினார். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” (வ. 25) என்று அவர் கண்டுணர்கிறார்.
தேவனின் கிருபையே (நம் சுய முயற்சிகள் அல்ல) நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் வலுவூட்டும் ஆதாரமாக இருந்தாலும், நமது ஆவிக்குரிய வாழ்க்கை கடுமையான ஒழுக்கத்திற்குப் பாத்திரமானது. நம் மனதையும், இருதயத்தையும், உடலையும் ஒழுங்குபடுத்தத் தேவன் நமக்கு உதவுவதால், சோதனைகள் அல்லது கவனச்சிதறல்களுக்கு மத்தியிலும் கூட, நம் கவனத்தை அவர் மீது வைக்கக் கற்றுக்கொள்கிறோம்.

கருணையின் எளிய செயல்கள்
என் அம்மா சிகிச்சையிலிருந்தபோது, பூமியில் அவளுடைய கடைசி நாட்களை நெருங்கியபோது, ஒரு முதியோர் இல்ல பராமரிப்பாளரின் உண்மையான கருணை என்னை அசைத்தது. நலிவடைந்த என் அம்மாவை அவளது நாற்காலியிலிருந்து மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமர்த்திய பிறகு, செவிலிய உதவியாளர் அம்மாவின் தலையைக் கோதி மெதுவாக அவள்மேல் சாய்ந்து கொண்டு, "நீங்கள் மிகவும் இனிமையானவர்" என்று கூறினார். பிறகு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள். அவளுடைய கருணை என்னை அன்றும் இன்றும் கண்ணீரை வரவழைத்தது.
அவளது ஒரு எளிய கருணை செயல், ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அது தேவைப்பட்டது. இந்த பெண்ணின் பார்வையில் என் அம்மா ஒரு நோயாளி மட்டும் அல்ல என்பதை அறிந்து அவளோடு ஒத்துழைக்க எனக்கு உதவியது. அவள் அவளை மிகவும் மதிப்புமிக்க நபராகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்த பிறகு, போவாஸ் ரூத்துக்கு இரக்கம் காட்டினார், அறுவடை செய்பவர்களுக்குப் பின்னால் எஞ்சிய தானியங்களைச் சேகரிக்க அனுமதித்தார். அறுவடை செய்யும் ஆண்களுக்கு அவளைத் தனியாக விட்டுவிடுமாறு கட்டளையிட்டார் (ரூத் 2:8-9). நகோமியின் மீதான ரூத்தின் அக்கறையினால் அவனது கருணை உந்தப்பட்டது: "உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும்.. எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." (வ. 11). அவர் அவளை ஒரு அந்நியராகவோ அல்லது விதவையாகவோ பார்க்கவில்லை, ஆனால் ஒரு தேவையிலுள்ள பெண்ணாகவே பார்த்தார்.
நாம், "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12) வாழத் தேவன் விரும்புகிறார் . தேவன் நமக்கு உதவுவதால், நம்முடைய எளிய தயவான செயல்களால் உள்ளங்களை உற்சாகப்படுத்தவும், நம்பிக்கையூட்டவும், பிறரிடம் கருணையைப் பிறப்பிக்கவும் முடியும்.

சோ்ந்திருந்து மலைகளை மேற்கொள்ளுதல்
இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: "நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?
ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும் வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சமுதாய ஆதரவு" முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.
யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், "தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது" (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். "அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.
நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.

தீங்கின் வழியில்
எனது காலை நடைப்பயிற்சியின் போது, தவறான திசையில் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டதைக் கவனித்தேன். ஓட்டுநர் தூங்கியதாலும், மது போதையிலிருந்ததாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து குறித்து அறியவில்லை. நிலைமை ஆபத்தானது, நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளை விழிப்பூட்டி வாகனத்தின் பயணிகள் பக்கத்திற்கு நகர்த்திய பிறகு, நான் ஓட்டுநர் இருக்கையில் ஏறினேன், நான் அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு ஒட்டி சென்றேன்
உடல் சார்ந்த ஆபத்து மட்டுமே நாம் எதிர்கொள்ளும் தீங்கு அல்ல. அத்தேனேவில் உலக ஞானமும் புத்திசாலித்தனமும் நிரைந்த ஜனங்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருப்பதை பவுல் பார்த்தார், காரணம் "பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது" அவர் "தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தார்" (அப்போஸ்தலர் 17:16). கிறிஸ்துவைக் கருத்தில் கொள்ளாமல் தவறான கருத்துக்களுடன் சுற்றித்திரிபர்களுக்கு அப்போஸ்தலனின் உள்ளார்ந்த பதில், இயேசுவின் மூலமாகவும் இயேசுவுக்குள்ளாகவும் தேவனுடைய நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும் (வ.18, 30-31). கேட்ட சிலர் நம்பினர் (வ.34).
கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வாழ்வின் மெய்யான அர்த்தத்தைத் தேடுவது ஆபத்தானது. இயேசுவில் மன்னிப்பையும் மெய்யான நிறைவையும் கண்டவர்கள், மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டு ஒப்புரவாகுதலின் செய்தியைப் பெற்றுள்ளனர் (பார்க்க 2 கொரிந்தியர் 5:18-21). இந்த உலக வாழ்க்கையின் மயக்கத்தில் இருப்பவர்களுடன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது, தீங்கிழைக்கும் வழியிலிருந்து ஜனங்களைத் தட்டிப்பறிக்கத் தேவன் இன்னும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
