வகை  |  odb

'கிட்டத்தட்ட உண்மை' எனப்படுவதும் பொய்யே

ஒளிப்பதிவு? சிறப்பாக இருந்தது. தோற்றம்? நம்பக்கூடியது. கருத்து? சுவாரஸ்யமானதும், தொடர்புள்ளதுமானது. பாலிவுட் நடிகரான அமீர் கான், வழக்கத்திற்கு மாறான அரசியல் ரீதியான அறிக்கைகளை வெளியிடும் காணொளியாக அது இருந்தது. இணையத்தில் பலர் இது உண்மை என்று நம்பினர், மேலும் இது நடிகரின் புதிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும்  எண்ணினர்.

ஆனால் இந்த பிரபலமான காணொளி போலியானது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி நடிகரின் போலியான ஆள்மாறாட்டம் ஆகும், மேலும் இது கலகத்தை உருவாக்கும் சுயநல நோக்கோடு புனையப்பட்டது. உண்மையில் அந்த அறிக்கைகளை நடிகர் வெளியிடவில்லை, மேலும் காணொளியானது அதிக பரபரப்பானது போலவே, அது பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

நமது தொழில்நுட்பங்களின் காரணமாக, பொய்கள் பெரிதாக்கப்பட்டு, அவை உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்குப் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறோம். தெய்வீக ஞானத்தின் தொகுப்பான நீதிமொழிகள் என்ற புத்தகம், உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. "சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்" (12:19). அடுத்த பழமொழியே நமக்குச் சொல்கிறது, "தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்" (வ.20).

தேவனின் கட்டளைகள் முதல் பாலிவுட் நடிகர்கள் பற்றிய காணொளிகள் வரை, அனைத்திற்கும் நேர்மை பொருந்தும். சத்தியம்  "என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்"

மேய்ப்பனிடமிருந்து துணிவு

2007  டீ20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலிருந்த சுமார் 1,00,000 பேர் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். மிஸ்பா முதலில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்ஸர் விளாசினார். இருப்பினும், ஜோகிந்தர் ஷர்மா இன்னும் அமைதியாக அடுத்த பந்து வீசினார். இந்த முறை பந்தை ஒரு ஜோடி இந்திய கைகள் கவ்வின, ஒரு விக்கெட் விழுந்தது. மிஸ்பா ஆட்டமிழந்தார், அரங்கம் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது, இந்தியா தனது முதல் டீ20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதுபோன்ற உணா்ச்சிமிக்க தருணங்களில்தான் சங்கீதம் 23:1 போன்ற வேதாகம வசனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். நமக்குப் பெலனும் உறுதிப்பாடும் தேவைப்படும்போது, தேவனை ​​ஒரு மேய்ப்பனாக உருவகப்படுத்துகையில், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் அவற்றைப் பெறலாம்.

சங்கீதம் 23 ஒரு பிரியமான சங்கீதம், ஏனென்றால் நம்மை அயராமல்  பராமரிக்கும் அன்பான மற்றும் நம்பகமான மேய்ப்பன் இருப்பதால், நாம் ஆறுதலையும் அல்லது சமாதானத்தையும் பெறலாம் என்று இது நமக்கு உறுதியளிக்கிறது. தீவிரமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் உண்டாகும் அச்சம் மற்றும் தேவன் வழங்கும் ஆறுதல் ஆகிய இரண்டிற்கும் தாவீது சாட்சியமளித்தார் (வ. 4). "தேற்றும்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உறுதியைக் குறிக்கிறது, அல்லது அவரது வழிநடத்தும் பிரசன்னத்தால் உண்டாகும் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது.

சவாலான சூழ்நிலைகளில், விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், நல்ல மேய்ப்பன் நம்முடன் நடப்பார் என்ற இதமான நினைவூட்டலைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி நாம் தைரியம் பெறலாம்.

தேசங்களை நேசித்தல்

மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த அன்பான மற்றும் கடினமாய் உழைக்கும் பெற்றோரின் மகளாக, தங்கள் குடும்பங்களிலேயே முதலாவதாகச்  சிறந்த எதிர்காலத்திற்காக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த அவர்களின் துணிச்சலுக்காக நான் கடமைப்பட்டுள்ளேன். நியூயார்க் நகரத்தில் இளைஞர்களாகச் சந்தித்த அவர்கள், திருமணம் செய்துகொண்டு, என்னையும் என் சகோதரியையும் பெற்றெடுத்தனர், மேலும் அவரவருக்கான வணிகத்தைச் செய்தனர்.

ஒரு நியூயார்க் நகர வாசியாக, நான் எனது லத்தின் பாரம்பரியத்தைத் தழுவி வளர்ந்தேன். மேலும், பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களால் ஈர்க்கப்பட்டேன். உதாரணமாக, நான் ஒருமுறை முன்பு பிராட்வே காட்சியரங்கம் இருந்த இடத்தில் ஆராதிக்கும் பல கலாச்சார மக்கள் கொண்ட சபையில், ஒரு மாலை ஆராதனையில் எனது விசுவாச சாட்சியைப் பகிர்ந்துகொண்டேன். தேவனின் அன்பைப் பற்றிப் பல்வேறு கலாச்சாரக் குழுக்களுடன் பேசுவதும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றிணைவதைப் பார்ப்பதும், பரலோகம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறு கண்ணோட்டம் மட்டுமே.

வெளிப்படுத்துதலில், அப்போஸ்தலனாகிய யோவான் பரலோகத்தைப் பற்றிய இந்த அற்புதமான கட்சியை நமக்குத் தருகிறார்: “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” (வெளிப்படுத்துதல் 7:9) நம் இரட்சகராகிய தேவன், "சதாகாலங்களிலும்" "துதியும் மகிமையும்" பெறுவதற்கு பாத்திரர் (12).

பரலோகம் எப்படி இருக்கும் என்பதை இப்போது கண்ணோட்டமாகப் பார்க்கிறோம். ஆனால் ஒரு நாள், இயேசுவை நம்பும் நாம் அவரோடும், பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த  மக்களோடும் ஒன்றிணைவோம். தேவன் தேசங்களை நேசிப்பதால், கிறிஸ்துவில் உள்ள நமது உலகளாவிய குடும்பத்தை நாமும் நேசிப்போமாக.

நம்பத்தகுந்த நமது தகப்பன்

எனது ஆறடி மூன்றங்குலம் உயரமான மகன் சேவியர், சிரித்து குறுநடை போடும் தனது குழந்தையான ஆனந்தை எளிதாக உயரே தூக்கினான். அவன் தனது மகனின் சிறிய கால்களைத் தனது பெரிய கைகளால் சுற்றிப் பிடித்து, அவற்றைத் தனது உள்ளங்கையில் உறுதியாகப் பற்றினான். தன் நீண்ட கையை நீட்டி, தன் மகன் தன்னிச்சையாக சமநிலைப்பட ஊக்குவித்தான், ஆனால் தேவைப்பட்டால் அவனைப் பிடிக்க மற்றொரு கையை தயாராக வைத்திருந்தான். ஆனந்த், கால்களை நிமிர்த்தி நின்றான். பரந்த புன்னகையுடன், கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, அவனது கண்கள் தந்தையின் பார்வையில் பதிந்தன.

நமது பரலோகத் தகப்பன் மீது கவனம் செலுத்துவதன் நன்மைகளை ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3). அவரை வேத வாக்கியங்களின் மூலம் தேடுவதற்கும், ஜெபத்தினாலும் ஆராதனையினாலும் அவருடன் இணைந்திருக்கவும் தங்களை அர்ப்பணித்திட தேவஜனங்களை அவர் ஊக்குவித்தார். அத்தகைய உண்மையுள்ளவர்கள், தகப்பனுடனான தங்கள் உறுதியான ஐக்கியத்தின் மூலம் கட்டப்பட்ட ஒரு திடமான நம்பிக்கையை அனுபவிப்பார்கள்.

தேவனின் பிரியமான பிள்ளைகளாகிய நாம், "கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்." (வ.4) என்று தைரியமாக அபயமிடலாம். ஏன்? ஏனென்றால் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதா நம்பத்தக்கவர். அவரும், அவா் வாா்த்தைகளும் ஒருபோதும் மாறாது.

நாம் நம் பரலோகத் தகப்பன் மீது நம் கண்களைப் பதிக்கும்போது, ​​அவர் நம் கால்களை அவருடைய கரங்களில் உறுதியாக வைப்பார். அவர் எப்போதும் அன்பாகவும், உண்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று நாம் உறுதி கொள்ளலாம்!

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார்.  "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில்,  அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).

"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல்  தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின்  நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில்,  நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?