
இனி அந்நியர் இல்லை
“நீங்கள் இந்த இடத்திற்கு உரியவர் இல்லை.” அந்த வார்த்தைகள் ஒரு எட்டு வயது சிறுமியின் இதயத்தை நசுக்கியது, தொடர்ந்து வேதனைப்பட்டாள். அவரது குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது. மேலும் அவரது குடியேற்ற அட்டையில் அந்நியர் என்ற வார்த்தை முத்திரையிடப்பட்டிருந்தது. அவள் அந்த நாட்டிற்கு சொந்தமானவள் இல்லை என்று உணர்ந்தாள்.
வயது முதிர்ந்தவளானாலும், இயேசுவை விசுவாசித்தாலும் அவள் தன்னை ஒரு விரும்படாத அந்நியனாகவே உணர்ந்தாள். அவளுடைய வேதாகமத்தைப் படிக்கும்போது, எபேசியர் 2-ன் வாக்குறுதிகளை அவள் கண்டுபிடித்தாள். 12ஆம் வசனத்தில் அந்நியர் என்ற அந்த கடினமான வார்த்தையை அவள் கண்டுபிடித்தாள்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவள் தொடர்ந்து வாசிக்கையில், கிறிஸ்துவின் தியாகம் தன் நிலையை எப்படி மாற்றியது என்பதைப் பார்த்தாள். அவள் வசனம் 19 ஐப் படித்தாள். “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,” என்பதை வாசித்து, தேவ ஜனத்துடன் அவள் ஒரு குடிமகளாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். தான் பரலோகத்தின் பிரஜை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். இனி ஒருபோதும் அவள் வெளிநாட்டினராக இருக்க மாட்டாள். தேவன் அவளை ஏற்றுக்கொண்டார்.
நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனுக்கு அந்நியராயிருக்கிறோம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. இயேசு “தூரமாயிருந்த” இருந்த அனைவருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (வச. 17), தம்மை நம்புகிற அனைவரையும் தம்முடைய நித்திய ராஜ்யத்தின் சக குடிமக்களாக மாற்றி, கிறிஸ்துவின் சரீரமாக ஐக்கியப்படுத்தினார்.

ராஜ வருகை
உலகளாவிய பார்வையாளர்கள் பில்லியன்களில் மதிப்பிடப்பட்ட நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக இருக்கலாம். அன்று ஒரு மில்லியன் மக்கள் லண்டனின் தெருக்களில் வரிசையாக நின்றனர், மேலும் 250,000 பேர் அந்த வாரத்தில் ராணியின் சவப்பெட்டியைப் பார்க்க மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஐந்நூறு மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் ஒரு வலிமை மற்றும் பண்புக்காக அறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
உலகம் தனது பார்வையை கிரேட் பிரிட்டன் மற்றும் அதன் ராணியின் பக்கம் திரும்பியபோது, என் எண்ணங்கள் வேறொரு நிகழ்வை நோக்கி திரும்பியது - ஒரு ராஜ வருகை. ஒரு நாள் வரப்போகிறது; அப்பொழுது தேசங்கள் ஒன்று கூடி ஒரு மிகப் பெரிய ராஜாவை அங்கீகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 45:20-22). வலிமையும் பண்பும் கொண்ட ஒரு தலைவர் (வச. 24). அவருக்கு முன்பாக “முழங்கால் யாவும்... முடங்கும், நாவு யாவும் (அவரை) முன்னிட்டு ஆணையிடும்” (வச. 23). உலகத் தலைவர்கள் உட்பட, அவருக்குக் காணிக்கை செலுத்தி தங்கள் நாடுகளை அவருடைய வெளிச்சத்தில் நடக்கவைப்பார்கள் (வெளிப்படுத்துதல் 21:24,26). இந்த ராஜாவின் வருகையை அனைவரும் வரவேற்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறவர்கள் அவருடைய ஆளுகையை என்றென்றும் அனுபவிப்பார்கள் (ஏசாயா 45:24-25).
ஒரு ராணி வெளியேறுவதைப் பார்க்க உலகம் கூடியது போல், ஒரு நாள் அதன் இறுதி ராஜா திரும்பி வருவதைக் காணும். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை வணங்கி அவரை ஆண்டவராக அங்கீகரிக்கும் அந்த நாள் எப்பேற்பட்ட நாளாய் இருக்கப் போகிறது! (பிலிப்பியர் 2:10-11).
வாழ்கையின் உயர்வு தாழ்வுகள்
ஒரு (ஃபேஸ்புக்) முனநூல் நினைவு, பாம்பு-ஏணி விளையாட்டில் வெற்றிபெற்ற என்னுடைய ஐந்து வயது மகளின் புகைப்படத்தை பிரசுரித்திருந்தது. நாங்களும் குழந்தைகளாக இருந்தபோது இந்த போர்டு விளையாட்டை அடிக்கடி விளையாடியதால், எனது சகோதரனையும் சகோதரியையும் இடுகையில் குறியிட்டேன். இந்த விளையாட்டு வேடிக்கையானது மற்றும் பல நூற்றாண்டுகளாக விளையாடப்படுகிறது. மக்கள் எண்ணுவதைக் கற்றுக்கொள்வதற்கும் இது உதவுகிறது. மேலும் ஒரு ஏணியில் ஏறி, 100 மதிப்பெண்ணை வேகமாகப் பெறுவதன் மூலம் விளையாட்டை வெல்வதற்கான சிலிர்ப்பை வழங்குகிறது. ஆனால் கவனியுங்கள்! நீங்கள் தவறி 98ஆம் இடத்தில் போய் நின்றால், அங்கேயிருக்கும் பாம்பிலிருந்து சரிந்து வெகு தூரம் கீழிறங்கிவிடுவீர்கள்.
அதுவும் வாழ்க்கை பிரதிபலிக்கிறதல்லவா? நம்முடைய நாட்களின் ஏற்ற தாழ்வுகளுக்கு இயேசு நம்மை அன்புடன் தயார்படுத்தினார். நமக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசு கூறுகிறார் (யோவான் 16:33). ஆனால் அவர் சமாதான செய்தியையும் பகிர்ந்து கொண்டார். நாம் எதிர்கொள்ளும் சோதனைகளால் நாம் அசைக்கப்பட வேண்டியதில்லை. ஏன்? கிறிஸ்து உலகத்தை வென்றார்! அவருடைய வல்லமையை விடப் பெரியது எதுவுமில்லை. எனவே நாமும் நம் வழியில் வரும் அனைத்தையும் அவர் நமக்கு கொடுத்திருக்கும் பெலத்தால் மேற்கொள்ள முடியும் (எபேசியர் 1:19).
பாம்பு-ஏணி விளையாட்டைப் போன்றே, சில சமயங்களில் வாழ்க்கை நம்மை மகிழ்ச்சியுடன் மேலேற அனுமதிக்கும் ஒரு ஏணியை அளிக்கிறது. பல நேரங்களில் வழுக்கும் பாம்பின் வழியாய் நாம் கீழிறங்கவேண்டியிருக்கிறது. ஆனால் நம்பிக்கையின்றி வாழ்க்கை என்ற விளையாட்டை நாம் விளையாட வேண்டியதில்லை. அதையெல்லாம் சமாளிக்க இயேசுவின் வல்லமை நமக்கு இருக்கிறது.


தேவனுடைய நீதியும் கிருபையும்
பிரிட்டிஷ் ஓவியர் ஜான் மார்ட்டின் (1789-1854) நாகரிகங்களின் அழிவை சித்தரிக்கும் அபோகாலிப்டிக் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றவர். இந்த அற்புதமான காட்சிகளில், மனிதர்கள் அழிவின் அளவைக் கண்டு வியப்படைகிறார்கள்; நெருங்கி வரும் அழிவுக்கு எதிராக பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். இவருடைய ஒரு ஓவியம், “நினிவேயின் வீழ்ச்சி,” இருண்ட உருளும் மேகங்களின் கீழ் பெருகிவரும் அலைகளின் அழிவிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதை சித்தரிக்கிறது.
மார்ட்டின் ஓவியம் வரைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியான நாகூம் நினவேக்கு விரோதமான நியாயத்தீர்ப்பை அறிவித்தார். தங்கள் சுய ஆதாயத்திற்காய் மற்றவர்களை ஒடுக்குகிறவர்களின் மீதான தேவ கோபத்தை அறிவிக்கும்பொருட்டு, மலைகள் நடுங்குவது, மலைகள் உருகுவது, பூமி நடுங்குவது போன்ற உருவகங்களை நாகூம் பயன்படுத்துகிறார் (நாகூம் 1:5). பாவத்திற்கான தேவனுடைய கோபாக்கினையில் கிருபை இடம்பெறாமல் இல்லை. தேவனுடைய வல்லமையைக் குறித்த மற்றவர்களுக்கு நினைவூட்டும் நாகூம், தேவனை “நீடிய சாந்தமுள்ளவர்” (வச. 3) என்றும் “தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (வச. 7) என்றும் சித்தரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு செய்தியை வாசிப்பது கடினமாய் தோன்றலாம். ஆனால் தீமையை மேற்கொள்ளாத உலகம் பயங்கரமானதாக இருக்கும். நியாயத்தீர்ப்பு செய்தியோடு நாகூம் முடித்துவிடவில்லை. தேவன் ஒரு நல்ல மற்றும் நீதியான உலகத்தை விரும்புகிறார் என்பதை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 15). அந்த நற்செய்தி இயேசுவாகும். அவர் பாவத்தின் விளைவுகளை சுமந்தார். அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடிகிறது (ரோமர் 5:1, 6).
