
பாழானவற்றிற்கு அப்பாலான தேவனின் வாக்குத்தத்தம்
"லாரா புயல்" மெக்சிகோ வளைகுடா வழியாக அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நோக்கி வீசியதால், தீவிர எச்சரிக்கை விடப்பட்டது. மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசுவதை ஒரு ஷெரிப் குறிப்பிட்டு, இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்: “தயவுசெய்து வெளியேறுங்கள். ஆனால் நீங்கள் இங்கேயே இருந்தால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள எண் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரை எழுதி பத்திரமாக உங்கள் சட்டைப் பையில் வைக்கவும். அது இங்கே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லாரா புயல் நிலத்தைத் தாக்கியவுடன், அதின் அழிவுகரமான விளைவை அவர்களால் பார்க்க மட்டுமே முடியும் என்று மீட்புக் குழுவினருக்குத் தெரியும். அதன் வீரியத்திற்குமுன் உதவியற்றவர்களாய் இருப்பர்.
பழைய ஏற்பாட்டிலிருந்த தேவஜனங்கள் இயற்கையான அல்லது ஆவிக்குரிய பேரழிவை எதிர்கொண்ட போதெல்லாம், அவருடைய வார்த்தைகள் மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன, அழிவின் மத்தியிலும் அவருடைய பிரசன்னத்தை வாக்களித்தன. “அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து.. அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்” (ஏசாயா 51:3) என்றார். மேலும், தேவன் எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு மீட்பையும் குணமாகுதலையும் உறுதியளித்தார். அவர்கள் அவரை மட்டுமே நம்பும்போதே அது அவர்களை நிச்சயமாகப் பின்தொடரும். "வானம் புகையைப்போல் ஒழிந்துபோம்" என்றாலும், தேவன் கூறினார் அவருடைய "இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்" (வ. 6) என்று. பாதிப்பு எப்படிப்பட்டதாயினும், அவர்களுக்கான அவரது உறுதியான நன்மை ஒருபோதும் தடைப்படாது.
தேவன் நம்மைக் கஷ்டங்களுக்கு விலக்குவதில்லை, ஆனால் அவருடைய சீர்பொருத்தும் குணமாக்குதலானது, பேரழிவிற்கு மேம்பட்டது என்று அவர் வாக்களிக்கிறார்.

இயேசுவின் கதை
கேட் ஹான்கியை அதிகமானோர் அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர் ஒரு வியத்தகு பெண்மணி. ஆசிரியர், சுவிசேஷகர், பள்ளி ஒருங்கிணைப்பாளர், அருட்பணியாளர் மற்றும் கவிஞராக அவர் 1800களில், இங்கிலாந்தில் உண்மையாக இயேசுவுக்கு ஊழியம் செய்தார். 1867 ஆம் ஆண்டில், கேட் கடும் நோயால் வாதிக்கப்பட்டார். அவர் தேறுகையில், “தி ஸ்டோரி வாண்டட்" மற்றும் “தி ஸ்டோரி டோல்ட்" என இரு பகுதிகளாக ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அது, இயேசுவுடனும் அவரது வாழ்க்கை சம்பவங்களுடனும் அவளுக்கிருந்த உறவை நெருக்கமான முறையில் வெளிக்காட்டுகிறது.
எல்லா வசனங்களும் இயேசுவையே சுட்டிக்காட்டி, அவருடைய கதையையே சொல்கின்றன. யோவான் தனது நிருபத்தை ஆரம்பிக்கையில், தாங்கள் எவ்வாறு தனிப்பட்ட முறையில் இயேசுவை அனுபவித்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்: “எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற.. உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1 யோவான் 1:1). அவருடனான எங்கள் அனுபவத்தின் காரணமாகவே நாங்கள் இயேசுவின் கதையைச் சொல்கிறோம் என்று அப்போஸ்தலன் எழுதுகிறார்: “அந்த ஜீவன் வெளிப்பட்டது.. அந்த ஜீவனை நாங்கள் கண்டு..உங்களுக்கு அறிவிக்கிறோம்” (வ.2). பின்னர், யோவான் நம்மைக் கவரும் ஒரு கருத்தைக் கூறுகிறார்: "தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிற(து)தினாலும்" (2:14). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் கதை நம்முடைய கதை. அவருடனான நமது சொந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் கிறிஸ்துவின் கதையைச் சொல்ல நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.
இதைத்தான் கேட் ஹான்கி தனது கவிதையில் செய்தார். இறுதியில், அவரது கவிதையின் இரண்டு பகுதிகளும் இந்த பிரியமான பாடல்களாக மாறியது: "ஐ லவ் டூ டெல் மை ஸ்டோரி" மற்றும் "டெல் மீ தி ஓல்ட், ஓல்ட் ஸ்டோரி". ஒருவேளை, கேட் போல நாமும் நம்முடைய சொந்த வார்த்தைகளில், தனித்துவமான வழிமுறையில் இயேசு நம்மை நேசித்து, நம்மிடம் வந்து, நம்மை மீட்ட கதையைப் பிறருடன் பகிரலாம்.

தேவனின் கரம்
1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.
ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).
புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).

தேவனே, ஏன் என்னை?
ஜிம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவகையான இயக்க நரம்பணு நோயுடன் போராடி வருகிறார். அவரது தசைகளில் உள்ள நரம்பணுக்கள் சிதைவதால் அவரது தசைகள் வீணாகின்றன. அவர் தனது சிறந்த இயக்க திறன்களை இழந்துவிட்டார் மற்றும் அவரது கைகால்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டார். அவரால் இனி சட்டை பொத்தான் போடவோ அல்லது காலணி அணியவோ முடியாது. மேலும் கைகளால் கரண்டியைப் பிடிப்பதும் சாத்தியமற்றதாகிவிட்டது. ஜிம் தனது சூழ்நிலையோடு போராடி, தேவன் ஏன் இப்படி நடக்க அனுமதிக்கிறார்? ஏன் எனக்கு? எனக் கேட்கிறார்.
தேவனிடம் தங்கள் கேள்விகளைக் கொண்டு வந்த இயேசுவின் பல விசுவாசிகளின் கூட்டத்தில் இவரும் ஒருவர். சங்கீதம் 13 இல், “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்” (வ.1-2) என்று தாவீது கூக்குரலிடுகிறார்.
நாமும் நம் குழப்பங்களையும் கேள்விகளையும் தேவனிடம் எடுத்துச் செல்லலாம். “எவ்வளவு காலம்?” என்றும் "ஏன்?" என்றும் நாம் அழும்போது அவருக்குப் புரியும். அவருடைய ஆகச்சிறந்த பதில் இயேசுவிலும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சிலுவையையும் காலியான கல்லறையையும் பார்க்கும்போது, தேவனின் "கிருபையின்மேல்" நம்பிக்கை வைத்து, அவருடைய இரட்சிப்பில் களிகூர (வ. 5) நாம் தன்னம்பிக்கை பெறுகிறோம். வாழ்வின் இருண்ட நேரங்களிலும், நாம் "கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்" (வ. 6) எனலாம். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய நித்தியமான நல்ல நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.
