வகை  |  odb

கடைசியில் ஒன்றுசேர்க்கப்படுதல்

1960 ஆம் ஆண்டில், ஓட்டோ ப்ரீமிங்கர் தனது “எக்ஸோடஸ்” திரைப்படத்தின் மூலம் சர்ச்சையைத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த யூத அகதிகளின் கற்பனைக் கதையை இந்தத் திரைப்படம் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட ஒரு இளம் யூதப் பெண் மற்றும் ஒரு அரேபிய மனிதனின் உடல்கள் விரைவில் இஸ்ரவேல் தேசமாக இருக்கும் நாட்டின் அதே கல்லறையில் புதைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

பிரேமிங்கர் முடிவை நம்மிடத்தில் விட்டுவிடுகிறார். இது விரக்தியின் உருவகமா, என்றென்றும் புதைக்கப்பட்ட கனவா? அல்லது வெறுப்பும் குரோதமும் கொண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு மக்கள் - இறப்பிலும் வாழ்விலும் ஒன்று சேர்வதால் அது நம்பிக்கையின் அடையாளமா?

ஒருவேளை சங்கீதம் 87-ஐ எழுதியதாகக் கருதப்படும் கோராகின் புத்திரர்கள் இந்தக் காட்சியின் பிந்தைய பார்வையை எடுத்திருக்கலாம். நாங்கள் இன்னும் காத்திருக்கும் ஒரு அமைதியை அவர்கள் எதிர்பார்த்தனர். எருசலேமைப் பற்றி, “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (வச. 3) என்று சொல்லுகிறது. யூத மக்களுக்கு எதிராகப் போரிட்ட வரலாற்றைக் கொண்ட தேசங்கள் ஒரே உண்மையான கடவுளை ஒப்புக்கொள்ள ஒன்றுசேரும் ஒரு நாளைப் பற்றி அவர்கள் பாடினர்: ராகாப் (எகிப்து), பாபிலோன், பெலிஸ்தியர்கள், தீரு, எத்தியோப்பியர்கள் (வச. 4). அனைவரும் எருசலேமிடமும், அதின் தேவனிடத்திற்கும் இழுக்கப்படுவார்கள்.

சங்கீதத்தின் முடிவு கொண்டாட்டமானது. எருசலேமில் உள்ள மக்கள், “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று பாடுவார்கள். அவர்கள் யாரைப் பாடுகிறார்கள்? ஜீவத் தண்ணீராக இருப்பவர், எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (யோவான் 4:14). நிலையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடியவர் இயேசு ஒருவரே.

விசுவாசத்தில் அடியெடுத்து வைத்தல்

சிறப்புப் பேச்சாளர் தேவனை நம்பி “நதியில் அடியெடுத்து வைப்பதன்” ஞானத்தைப் பற்றி பேசினார். தேவனை நம்பிய ஒரு போதகரைப் பற்றி அவர் கூறினார். அவருடைய நாட்டில் புதிய சட்டம் இருந்தபோதிலும் ஒரு பிரசங்கத்தில் வேதாகமத்தின் உண்மைகளைப் பேசத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு முப்பது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வேதாகமத்தைக் குறித்த தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வலியுறுத்தவும் அவருக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்களும் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது —தண்ணீரில் இறங்குவது அல்லது கரையில் தங்குவது. எகிப்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் யோர்தான் நதியின்; கரையில் நின்றார்கள். அது வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் துணிந்து இறங்கினர். தேவன் தண்ணீரை குறையச் செய்தார்: “ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று..” (யோசுவா 3:15-16). 

நாம் நம் வாழ்வில் தேவனை நம்பும்போது, வேதாகமத்தின் உண்மைகளைப் பேசுவதைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது தெரியாத பிரதேசத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தாலும், முன்னேறுவதற்கு ஆண்டவா் நமக்கு தைரியத்தைத் தருகிறார். போதகரின் விசாரணையின் போது, நீதிமன்றம் அவரது பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் நற்செய்தியைக் கேட்டது. மேலும், யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பாதுகாப்பாகக் கடந்து, வருங்கால சந்ததியினருடன் தேவனுடைய வல்லமையைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (வச. 17; 4:24).

விசுவாசத்தில் நாம் துணிந்து அடியெடுத்து வைத்தால், தேவன் மற்றதைப் பார்த்துக்கொள்வார்.

கிறிஸ்துவுக்குள் உண்மையை பேசுதல்

ஒரு நபர் தனது தனிப்பட்ட போக்குவரத்து டிக்கெட்டுகளை பொய் சொல்லி பெறுதில் வல்லவர். அவர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜரானபோது, “நான் என் சிநேகிதியுடன் சண்டையிட்டேன், அவள் எனக்குத் தெரியாமல் என் காரை எடுத்துச் சென்றுவிட்டாள்" என்று கதை சொல்லுவார். மேலும், பணியில் இருந்தபோது தவறான நடத்தைக்காக அவர் பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் இறுதியாக அவர் மீது நான்கு பொய்ச் சாட்சியங்கள் மற்றும் ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த மனிதருக்கு, பொய் சொல்வது வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.

இதற்கு நேர்மாறாக, உண்மையைச் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பழக்கம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். எபேசியர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதன் மூலம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிடுவார்கள் என்று அவர் நினைப்பூட்டினார் (எபேசியர் 2:1-5). இப்போது, அவர்கள் புதிய நபர்களைப் போல வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிட்ட செயல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் “பொய்யைக் களைந்து,” “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (4:25) என்று ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. அது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், எபேசியர்கள் எப்போதும் தங்கள் வார்த்தைகள் செயல்கள் மூலம் "மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக" இருக்க வேண்டும் (வச. 29).

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவது போல (வச. 3-4), இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் சத்தியத்திற்காக பிரயாசப்படுவோம். அப்போது திருச்சபை ஒன்றுபடும், தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.

தற்போது கிருபை

எனது நண்பன் ஜெரியின் வேலை ஸ்தலத்தில் சிறிய இடைவேளையில் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு துரித உணவு விடுதிக்கு விரைந்தோம். அதே நேரத்தில் வாசலில் வந்த ஆறு இளைஞர்கள் எங்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்தனர். எங்களுக்கு அதிக நேரம் இல்லை என்பதை அறிந்து, உள்ளுக்குள் முணுமுணுத்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் முதலில் ஆர்டர் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்த இரு வரிசைகளிலும் ஒரு குழுவாக நின்றார்கள். “இப்போது கிருபை காண்பியுங்கள்” என்று ஜெரி தனக்குத்தானே கிசுகிசுப்பதை நான் கேட்டேன். ஆஹா! நிச்சயமாக, முதலில் எங்கள் தேவைகள் சந்திக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு நலமானதாக இருந்திருக்கும். ஆனால் என்னுடையது மட்டுமல்ல, மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு ஒரு சிறந்த நினைவூட்டலாக அத்தருணம் அமைந்தது. 

அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” (1 கொரிந்தியர் 13:5) என்று வேதம் போதிக்கிறது. “அடிக்கடி . . . மற்றவர்களின் நலன், திருப்தி, நன்மை ஆகியவற்றைத் தனக்கென விரும்புகிறது,” என்று இந்த அன்பைப் பற்றி வேத விளக்கவுரையாளர் மேத்யூ ஹென்றி எழுதுகிறார். தேவனுடைய அன்பு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நம்மில் பலர் எளிதில் எரிச்சலடையும் ஒரு உலகில், மற்றவர்களிடம் பொறுமையாக இருப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் தேவனிடத்தில் உதவி மற்றும் கிருபையை அடிக்கடி கேட்கிறோம் (வச. 4). நீதிமொழிகள் 19:11, “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று கூறுகிறது. 

அதுதான் கடவுளுக்கு கனம் தரும் அன்பான செயல், மேலும் அவர் தனது அன்பைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்களுக்குக் கொண்டு வர அதைப் பயன்படுத்தலாம்.

தேவனுடைய பலத்துடன், இப்போது மற்றவர்களுக்கு கருணை காண்பிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.