எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

தேவனே, உமக்கு செவிகொடுக்கிறேன்

தாயாரின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கிரஹாமின் முதல் செவிப்புலன் கருவியை மருத்துவர்கள் அவரது காதில் பொருத்தியபோது, அசௌரியத்தால் நெருக்கப்பட்டான். மருத்துவர் அந்த சாதனத்தை இயக்கிய சில நிமிடங்களில், கிரஹாம் அழுகையை நிறுத்தினான். அவன் கண்கள் விரிந்தன. அவன் புன்னகைத்தான். தனது தாயின் குரல் அவனை ஆறுதல்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும், அவன் பெயரை அழைப்பதையும் அவனால் கேட்க முடிந்தது.

குழந்தை கிரஹாம் தனது தாய் பேசும் சத்தத்தைக் கேட்டான். ஆனால் அவருடைய குரலை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றும் அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு உதவி தேவைப்பட்டது. இதேபோன்ற கற்றல் செயல்முறைக்கு இயேசு ஜனங்களை அழைக்கிறார். நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன், அவர் நன்றாக அறிந்த மற்றும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துதலை பெறும் ஆடுகளாக மாறுகிறோம் (யோவான் 10:3). நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பதையும், செவிசாய்ப்பதையும் பயிற்சி செய்யும்போது, நாம் அவரை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பிரயாசப்படுகிறோம் (வச. 4).

பழைய ஏற்பாட்டில், தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார். புதிய ஏற்பாட்டில், மாம்சத்தில் உதித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்வின் மூலம் ஜனங்களோடு நேரடியாக இடைபட்டார். இன்று நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி அவற்றை நேர்த்தியாய் புரிந்துகொள்ளச் செய்யும் தெய்வீக வார்த்தைகளை வேதத்தில் இடம்பெறச்செய்திருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு நாம் பாத்திரவான்களாக்கப்பட்டுள்ளோம். வேதத்தின் மூலமாகவும் அவருடைய ஜனத்தின் மூலமாகவும் இயேசு நம்மிடத்தில் பேசுகிற வேளையில், ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும். வேதத்தின் வார்த்தைகளுடன் எப்போதும் ஒத்துப்போகும் தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணும்போது, “தேவனே, நான் உம் சத்தத்தைக் கேட்கிறேன்” என்று நன்றியுடன் துதி செலுத்தக்கூடும். 

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, ​​சிலர் "போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்" என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.

தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, "நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்" (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே" என்றான் (வ. 29).

போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, ​​அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.

தேவனே அவற்றை படைத்தார்

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி கடற்கரை மீன் கண்காட்சியில் நாங்கள் நுழைந்தபோது எனது மூன்று வயது மகன் சேவியர் என் கையை அழுத்தினான். உயரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட கூம்பு திமிங்கலத்தின் முழு அளவிலான எலும்புக்கூட்டை காண்பித்து, "எவ்வளவு பெரியது!" என்றான். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்போது அவனது ஆச்சரியமான மகிழ்ச்சி பெருகியது. உணவளிக்கும் நேரத்தில் நீர்நாய்களால் தண்ணீர் தெறித்துச் சிதறியதை பார்த்து சிரித்தோம். நீல நீரில் நடனமாடும் தங்க பழுப்பு நிற ஜெல்லிமீன்களால் மயங்கி, ஒரு பெரிய கண்ணாடி மீன்வளச் சாளரத்தின் முன் அமைதியாக நின்றோம். "தேவன் சமுத்திரத்தின் ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார், உன்னையும் என்னையும் படைத்தது போலவே" என்றேன். "ஆஹா" என சேவியர் கிசுகிசுத்தான்.

சங்கீதம் 104 இல், சங்கீதக்காரன் தேவனின் அபரிமிதமான படைப்பை வியந்து, "கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்" (வ. 24) பாடினான். "பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு" (வ. 25) என்று அறிவித்தான். அவர் படைத்த அனைத்திற்கும் தேவனின் தாராளமான மற்றும் திருப்திகரமான போஷிப்புகளை அவன் பறைசாற்றினான் (வ. 27-28). ஒவ்வொன்றின் ஆயுசுநாட்களையும் தேவன் தீர்மானித்துள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார் (வ. 29-30).

"நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்" (வ. 33) என்று நாமும் சங்கீதக்காரனோடு இனைந்து அா்ப்பனிப்போடு அறிக்கையிடுவோம். பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு உயிரினமும் நாம் தேவனை புகழ்வதற்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவை அனைத்தையும் அவரே படைத்தார்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில்,  "பூமியின் சுழற்சி வேகம்" அதிகரித்துள்ளதால் , பூமி "தடுமாறுகிறது" மற்றும் "வேகமாக சுழல்கிறது" என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். "உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்." (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து  நேர்த்தியாக ஆளுவதைக்  கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

தேவனின் பேரன்பின் சுழற்சி

என் முப்பது வயதில், இயேசுவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தபின் புதிய விசுவாசியான என் உள்ளத்தில் அதிக கேள்விகள் இருந்தன. நான் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியபோது, கேள்விகள் இன்னும் அதிகமாயிற்று. "தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் எப்படிக் கீழ்ப்படிய கூடும்? நான் இன்று காலைதான் என் கணவரை மனமுடையச் செய்துவிட்டேனே!" என்று ஒரு நண்பரிடம் கேட்டேன்.

"வேதாகமத்தை தொடர்ந்து வாசி, இயேசு உன்னை நேசிப்பது போல நீயும் பிறரை நேசிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடு" என்றாள் தோழி.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்த பிறகு, அந்த எளிய ஆனால் ஆழமான சத்தியம் அவருடைய பேரன்பின் சுழற்சியின் மூன்று படிகளை கடைப்பிடிக்க இன்னும் எனக்கு உதவுகிறது: முதலாவதாக, அப்போஸ்தலன் பவுல், இயேசுவை பின்பற்றுவோர் வாழ்வில் அன்பே மையமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான கடனை" கடைப்பிடிப்பதின் மூலம், ஆண்டவருக்கு கீழ்ப்படிவார்கள். "பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்." (ரோமர் 13:8). இறுதியாக, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது;"(வ.10) என்பதால் இதைச் கடைப்பிடிப்பதின் மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.

 

கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பலியாகக் கொடுக்கப்பட்டதால் தேவனுடைய பேரன்பை நாம்  அனுபவித்திருப்பதால், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இவ்வன்பைப் பிரதிபலிக்க முடியும். இயேசுவுக்கான நமது நன்றியுணர்வு, நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகளால் மற்றவர்களை நேசிக்க வழிவகுக்கிறது. அன்பாகவே இருக்கும் உண்மையான தேவனிடமிருந்தே அந்த மெய்யான அன்பு பாய்ந்தோடுகிறது, (1 யோவான் 4:16,19).

அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!

வாஞ்சையுள்ள இரட்சகர்

வீட்டிற்கு தாமதமாய் வந்த நிக்கோலஸ் வரும் வழியில் வீடு ஒன்றில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு, எரிந்துகொண்டிருந்த அந்த வீட்டை நோக்கி ஓடி, அங்கிருந்த நான்கு பிள்ளைகளை விபத்திலிருந்து காப்பாற்றினார். இன்னும் ஒரு குழந்தை உள்ளேயே இருக்கிறது என்பதை நிக்கோலஸ_க்கு அங்கிருந்து பராமரிப்பாளர் அறிவித்த மாத்திரத்தில், நிக்கோலஸ் சற்றும் தாமதிக்காமல் பற்றியெரிந்துகொண்டிருந்த அந்த வீட்டினுள் பாய்ந்தார். ஆறு வயது சிறுமியுடன் இரண்டாவது மாடியில் சிக்கிய நிக்கோலஸ், ஜன்னலை உடைத்தார். அவசரக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்தவேளையில், சிறுமியை கையில் வைத்துக் கொண்டு அவர் பாதுகாப்பாக குதித்தார். மற்றவர்களின் மீதான அவருடைய அந்த அக்கறையினிமித்தம் அங்கிருந்த அனைத்து குழந்தைகளையும் அவர் காப்பாற்றினார். 

மற்றவர்கள் மீதான அக்கறையினிமித்தம் நிக்கோலஸ், தன்னுடைய உயிரை துச்சமாய் மதித்து தியாக மனப்பான்மையோடு செயல்பட்டார். இந்த சக்திவாய்ந்த அன்பின் செயல், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க தம்முடைய உயிரைக் கொடுத்த மற்றொரு வாஞ்சையுள்ள மீட்பர் காட்டிய தியாக அன்பை நமக்கு பிரதிபலிக்கிறது. அவர் இயேசு. “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6). பவுல் அப்போஸ்தலர் சொல்லும்போது, மாம்சத்தில் வந்த முழுமையான தேவனாகிய கிறிஸ்து, நம்மால் விலைக்கிரயம் செலுத்த முடியாது என்பதை அறிந்து தன்னுடைய ஜீவனை நமக்காய் முழுமனதோடு கொடுத்திருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச. 8). 

நம்முடைய வாஞ்சையுள்ள இரட்சகராகிய இயேசுவுக்கு நாம் நன்றியும் நம்பிக்கையும் அளிக்கும்போது, நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் மற்றவர்களை தியாகமாக நேசிக்க அவர் நமக்கு அதிகாரமளிக்க முடியும்.

தென்பட்ட நம்பிக்கை

கடல்சார் ஆய்வாளர் சில்வியா ஏர்லே, பவளப்பாறைகள் சீரழிவதை நேரில் கண்டுள்ளார். அவர் “மிஷன் ப்ளு” என்னும் நிறுவனத்தை உலகளாவிய “நம்பிக்கை புள்ளிகளின்" வளர்ச்சிக்காக நிறுவினார். உலகெங்கிலும் உள்ள இந்த சிறப்பு இடங்கள் “கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.” இது பூமியில் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பகுதிகளுக்கு அதிக கவனிப்பு கொடுப்பதின் மூலம், விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள சமூகங்களின் உறவுகளை மீட்டெடுப்பதையும், ஆபத்தான உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கின்றனர்.

சங்கீதம் 33 இல், தேவன் அனைத்தையும் உண்டாக்கி, அவைகள் உறுதியாய் நிற்கக்கூடியவைகள் என்பதை கண்டார் என்று சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார் (வச. 6-9). தேவன் தலைமுறைகள் மற்றும் தேசங்களின் மீது ஆளுகைசெய்கிறார் (வச. 11-19). அவர் மட்டுமே உறவுகளை மீட்டெடுக்கிறார், உயிர்களைக் காப்பாற்றுகிறார், மற்றும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறார். இருப்பினும், தேவன் உண்டாக்கிய உலகத்தின் மீதும் அதின் மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்கு அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். 

மேகங்கள் நிறைந்த, சாம்பல் நிற வானத்தின் குறுக்கே தெறிக்கும் வானவில்லை காணும்போதோ, கடலின் அலைகள் கரையில் மோதும்போதும், நாம் அவரை நம்பியிருக்கிறபடியால் அவருடைய மாறாத அன்பை பறைசாற்றலாம் (வச. 22).

உலகத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று நம்மை நம்பத் தூண்டும் மனச்சோர்வுக்கும் பயத்திற்கும் ஒருவேளை நாம் ஆளாகக்கூடும். இருப்பினும், தேவனுடைய பராமரிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நாம் நம் பங்கைச் செய்யும்போது, அவரை சிருஷ்டிகராகக் கனப்படுத்தவும், மற்றவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும்போது அவரை அவர்கள் கண்டுபிடிக்க நாம் உதவலாம்.

நம்பிக்கையின் ஒளி

என் அம்மாவின் பளபளப்பான சிவப்பு சிலுவை ஒன்று அவள் சிகிச்சை பெற்றுவந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அவரது படுக்கைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருக்கும். அவருடைய திட்டமிடப்பட்ட சிகிச்சை நாட்களுக்கு இடையில், விடுமுறை வருகைக்கு நான் தயாராக இருக்கவேண்டும். என்னுடைய விருப்பம், என்னுடைய அம்மாவுடன் ஒரு கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடவேண்டும் என்பதே. ஆனால் அந்த தருணத்தில் நான் வீட்டிலிருந்தேன். அவளுடைய அந்த சிவப்பு சிலுவையை ஒரு மரத்தில் தொங்கவிட்டிருந்தேன்.

அப்போது என் மகன் சேவியர் வர்ண விளக்குகளை ஏற்றியபோது, நான் மனதிற்குள் “நன்றி” என்று சொன்னேன். அவனுக்கு நான் நன்றிசொல்லுவதாக எண்ணி, பதிலுக்கு என்னை அவன் வாழ்த்தினான். ஆனால், எப்பொழுதும் நிலைத்திருக்கும் நம்பிக்கையின் ஒளியான இயேசுவை நோக்கி என் கண்களைத் திருப்புவதற்கு ஒளிரும் பல்புகளைப் பயன்படுத்தியதற்காக நான் தேவனுக்கு நன்றி சொன்னேன் என்பது என் மகனுக்குத் தெரியாது.

சங்கீதம் 42-ஐ எழுதிய சங்கீதக்காரன் தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் வெளிப்படையாய் வெளிப்படுத்துகிறான் (வச. 1-4). அவர் தன்னுடைய வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்கு முன்பாக, தன்னுடைய தொய்ந்த ஆத்துமாவை ஒப்புக்கொள்கிறார்: “தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமூகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (வச. 5). அவர் துக்கம் மற்றும் துன்பத்தின் அலைகளால் வெல்லப்பட்டாலும், சங்கீதக்காரனின் நம்பிக்கை தேவனின் கடந்தகால உண்மைத்தன்மையை நினைவுகூருவதன் மூலம் பிரகாசித்தது (வச. 6-10). அவர் தனது சந்தேகங்களைக் கேள்வியெழுப்பி, தனது சுத்திகரிக்கப்பட்ட நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி தன் சங்கீதத்தை நிறைவுசெய்கிறார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11).

நம்மில் பலருக்கு, கிறிஸ்துமஸ் பருவம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சேர்த்தே தூண்டுகிறது. இந்த கலவையான உணர்வுகளும் மெய்யான ஒளியான இயேசுவின் வாக்குறுதிகளின் மூலம் மீட்கப்படக்கூடும்.

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.

மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9).

தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார்.