தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன
அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..
பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.
நீதியரசர்
1957 இல் வெளிவந்த பிரபல திரைப்படம் ஒன்றின் காட்சியில், நீதிபதி "ஒருவன் இறந்துவிட்டான். இன்னொருவனின் உயிருக்கு ஆபத்து” என்பார். சந்தேகத்திற்கிடமான அந்த வாலிபனுக்கு எதிராகச் சாட்சியங்கள் அதிகமாய் இருந்தன. ஆனால் விவாதங்களின் போது, நடுவர் குழுவில் பிளவு உண்டானது. பன்னிரண்டு பேர் கொண்ட குழுவில், ஒருவர் மட்டும் "குற்றம் இல்லை" என்றார். விவாதம் சூடுபிடிக்க, அதில் சாட்சியத்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியதால் அந்த நீதிபதி கேலி செய்யப்படுகிறார். உணர்வுகள் மேலோங்க, நடுவர் குழுவின் தவறான மற்றும் பாரபட்சமான சொந்த போக்குகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஒவ்வொருவராக, நீதிபதிகள் தங்கள் வாக்குகளை "குற்றமற்றவன்" என்று மாற்றுகிறார்கள்.
இஸ்ரவேல் என்ற புதிய தேசத்திற்குத் தேவன் தம்முடைய கற்பனைகளை வழங்கியபோது, அவர் நேர்மையான தைரியத்தை வலியுறுத்தினார். "தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக" (யாத்திராகமம் 23:2) என்றார் தேவன். சுவாரஸ்யமாக, "வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக." (வ.3) என்றும் "எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக" (வ. 6) என்றும் நீதிமன்றம் செயல்பட வேண்டும். நீதியுள்ள நியாயாதிபதியான தேவன், நம்முடைய எல்லா நடவடிக்கைகளிலும் உத்தமத்தை விரும்புகிறார்.
இந்த திரைப்படத்தில்,"குற்றவாளி இல்லை" என்று வாக்களித்த இரண்டாவது நீதிபதி, முதலாவது நீதிபதியிடம், "பிறரின் கேலிக்கு எதிராகத் தனித்து நிற்பது எளிதல்ல" என்று கூறினார். ஆனாலும் அதுதான் தேவனுக்குத் தேவை. அந்த நீதிபதி உண்மையான ஆதாரங்களையும், விசாரணையில் தனிநபரின் மனிதாபிமானத்தையும் கண்டார். தேவனின் பரிசுத்த ஆவியின் மென்மையான வழிகாட்டுதலில், நாமும் தேவனின் சத்தியத்திற்காக நிற்கவும், திராணியற்றவர்களுக்காகப் பேசவும் முடியும்.
இருதயப் பிரச்சனை
“சகோதரர். டிம், நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” எனது நண்பர், கானா நாட்டு போதகர், ஒரு மண் குடிசையில் சாய்ந்திருந்த செதுக்கப்பட்ட ஒரு பொருளின் மீது தனது டார்ச் லைட்டை ஒளிரச் செய்து என்னிடத்தில் அப்படி கேட்டார். அமைதியாக, “அந்த சிலை தான் இவர்களுடைய விக்கிரகம்” என்றார். ஒவ்வொரு செவ்வாய் மாலையும், பாஸ்டர். சாம் இந்த தொலைதூர கிராமத்தில் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இந்த புதர்வழியாய் பயணம் செய்வது வழக்கம்.
எசேக்கியேல் புத்தகத்தில், யூதேய ஜனங்கள் எவ்விதம் விக்கிரக ஆராதனையில் சிக்குண்டார்கள் என்று நாம் பார்க்கமுடியும். எருசலேமின் தலைவர்கள் எசேக்கியேல் தீர்க்கதரிசியை பார்க்க வந்தபோது, “இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி(யுள்ளனர்)” (14:3) என்று தேவன் எசேக்கியேலுக்கு வெளிப்படுத்துகிறார். மரத்தினாலும் மண்ணினாலும் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அவருடைய பிரச்சனை அல்ல. அது அவர்களுடைய இருதயத்தின் பிரச்சனை என்பதை எசேக்கியேல் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் அனைவரும் அந்த பிரச்சனையினால் பாதிக்கப்படுகிறோம்.
அலிஸ்டர் பெக் என்னும் வேதாகம ஆசிரியர், “தேவனைத் தவிர்த்து நம்முடைய சமாதானத்திற்காகவும், சுய அங்கீகாரத்திற்காகவும், திருப்திக்காகவும் அல்லது நம்முடைய விருப்பத்திற்காகவும் நாம் எதையெல்லாம் தேடுகிறோமோ” அதுவே விக்கிரகம் என்று குறிப்பிடுகிறார். நம்முடைய பார்வைக்கு நல்லதாய் தெரிகிற காரியங்கள் கூட விக்கிரகமாய் மாறலாம். ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு நம்முடைய சுயமதிப்பையும் விருப்பத்தையும் எங்கு தேடினாலும் அது விக்கிரக ஆராதனையே.
“திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (வச. 6) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் அதைச் செய்வதற்கு இஸ்ரவேல் தகுதியற்றது என்பதை நிரூபித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தேவனிடத்தில் அதற்கான தீர்வு இருந்தது. கிறிஸ்துவின் வருகையையும் பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் சிந்தையில் வைத்து, “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையி(டுவேன்)” (36:36). என்று வாக்குபண்ணுகிறார். இதை நாம் தனியாய் சாதிப்பது சாத்தியமில்லை.
சரியான கிறிஸ்துமஸ் காட்சி
அந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தினத்தை அற்புதமாகப் படமாக்கியிருந்தனர். குடும்பத்திலுள்ள மூன்று சிறுவர்கள், மேய்ப்பர்களை போல வேடமணிந்து, புல்வெளியில் நெருப்பைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். திடீரென தூதன் வானிலிருந்து இறங்குவதைப்போல, அவர்களுடைய பெரிய அக்காள் குன்றிலிருந்து இறங்கி வந்தாள். ஆனால் அவள் அணிந்திருந்த நவநாகரீக காலணி மட்டும் பொருந்தவில்லை. பின்னிசைகள் இசைக்க, மேய்ப்பர்கள் வானை ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள். புல்வெளியில் சற்றுதூரம் நடந்தவர்கள், குழந்தை இயேசுவாக இருந்த தங்கள் கடைசி தம்பியைக் கண்டடைகிறார்கள். தூதனாக இருந்த பெரிய அக்காள் இப்போது மரியாளாக இருந்தாள்.
காணொளி முடிந்ததும் சிறப்புக் காட்சிகளாக, காணொளியை இயக்குகையில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து காட்சிகளாக வழங்கினர். அதில், "எனக்குக் குளிருகிறது" என்று குழந்தைகள் சிணுங்குகிறார்கள். "நான் இப்பொழுதே கழிவறைக்குச் செல்லவேண்டும்", "போதும், வீட்டுக்குப் போகலாம்" என்று குழந்தைகள் அலுத்துக்கொள்ள, அவர்களின் தாயாரோ "குழந்தைகளே கவனியுங்கள்" என்று பலமுறை சொல்கிறார். அந்த நேர்த்தியான கிறிஸ்துமஸ் காணொளியை விட, அதின் பின் இருந்த எதார்த்தம் முரணாகவே இருந்தது.
இதைப்போல கிறிஸ்துமஸ் சம்பவத்தை அற்புதமான முடிவுள்ள ஒரு கதையாகப் பார்ப்பது எளிது. ஆனால், இயேசுவின் வாழ்க்கை நாம் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமானதல்ல. பொறாமைகொண்ட ஏரோது, இயேசு குழந்தையாய் இருக்கையிலேயே அவரை கொல்ல பார்த்தான் (மத்தேயு 2:13). மரியாளும், யோசேப்பும் அவரை தவறாகப் புரிந்துகொண்டனர் (லூக்கா 2:41–50). உலகம் அவரை பகைத்தது (யோவான் 7:7). சிலகாலத்திற்கு அவருடைய சகோதரரும் அவரை விசுவாசிக்கவில்லை (7:5). அவர் மேற்கொண்ட பணி அவரை கொடூரமான மரணத்திற்கு நடத்தியது. இவையெல்லாவற்றையும் தமது பிதாவை மகிமைப்படுத்தவும், நம்மை மீட்கவுமே செய்தார்.
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு அந்த குடும்பத்தினரின் ஒளிப்பதிவு முடிகிறது. நாம் என்றென்றைக்கும் வாழக்கூடிய எதார்த்தம் அதுவே.
மூலக் காரணம்
1854ஆம் ஆண்டு, லண்டனில் ஏதோ ஒன்று ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. அது கெட்ட காற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். தேம்ஸ் ஆற்றில் கழிவு நீர்த்தேக்கம் இருந்ததால் மோசமான துர்நாற்றம் வீசியது. அதுவே “பெரிய துர்நாற்றம்” என்று அறியப்பட்டது.
ஆனால் அந்த துர்நாற்றத்திற்கு காற்று காரணமில்லை. அந்த காலரா தொற்றுநோய்க்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என்று டாக்டர் ஜான் ஸ்னோவினின் ஆராய்ச்சி காட்டுகிறது.
இன்னொரு பிரச்சனையைக் குறித்த நாம் நீண்ட காலமாய் அறிந்திருக்கிறோம். அதின் நாற்றம் பரலோகம் வரை வீசுகிறது. நாம் உடைந்த ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த பிரச்சனையை நாம் தவறாய் அடையாளம் கண்டு, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அதின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சமூகத் திட்டங்களும் கொள்கைகளும் சில நன்மைகளை தருகின்றன. ஆனால் அவை சமூகத்தின் தீமைக்கு மூலக் காரணமான நம்முடைய பாவ இதயங்களை குணமாக்க சக்தியற்றவை.
“மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது” (மாற்கு7:15) என்று இயேசு சொன்னபோது, அவர் சரீர வியாதிகளைக் குறித்து குறிப்பிடவில்லை. மாறாக, அவர் நம் ஒவ்வொருவரின் ஆவிக்குரிய நிலையைக் கண்டறிகிறார். “அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்” (வச. 15) என்று சொல்லுகையில், நமக்குள் பதுங்கியிருக்கும் தீமைகளின் எண்ணங்களை அவர் பட்டியலிடுகிறார் (வச. 21-22).
தாவீது, “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்” (சங்கீதம் 51:5) என்கிறார். அவருடைய புலம்பல் நமக்கும் பொருந்தும். நாமும் துவக்கத்திலிருந்தே உடைக்கப்பட்டவர்கள். அதினால் தான் தாவீது “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” (வச. 10) என்று விண்ணப்பிக்கிறார். இயேசு தன்னுடைய ஆவியினாலே நமக்குள் உருவாக்கும் புதிய இருதயம் ஒவ்வொரு நாளும் நமக்கு அவசியம்.
அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதை விட்டுவிட்டு, அதின் மூலக் காரணத்தை இயேசு சுத்திகரிக்கும்படி அனுமதிக்கலாம்.
அனைத்தும் அறிந்த தேவன்
ராகுலுக்கும் நிஷாவிற்கும் அந்த வாரம் கடினமானதாயிருந்தது. ராகுல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்தொற்று பாதிப்பின் நாட்களில், வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருந்து அவருடைய நான்கு பிள்ளைகளும் சோர்ந்துபோயிருந்தனர். அத்துடன் மிஞ்சியிருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு நல்ல ஆகாரத்தை நிஷாவினால் சமைக்க முடியவில்லை. அந்த தருணத்தில், கேரட் சாப்பிடவேண்டும் என்று அவள் ஏங்கினாள்.
சரியாய் ஒருமணி நேரம் கழித்து, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவருடைய சினேகிதி அனிதாவும் அபிஷேக்கும் அவர்களுக்காய் நேர்த்தியான உணவைச் சமைத்துக்கொண்டு வந்திருந்தனர். அதில் கேரட்டும் இடம்பெற்றிருந்தது.
பிசாசுக்கு எல்லாம் தெரியுமா? இல்லை. தேவனுக்கு எல்லாம் தெரியும் என்பதைப் பிரதிபலிக்கும் ஆச்சரியமான ஒரு யூத கதை உள்ளது. பார்வோன், “பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிட... கட்டளையிட்டான்” (யாத்திராகமம் 1:22). அந்த படுகொலைச் சம்பவம் அதி உன்னதமான ஒரு காரியத்தை நிகழ்த்தியது. மோசேயின் தாயும் தன் பிள்ளையைப் பாதுகாப்பாய் நதியில் மிதக்க விடுகிறாள். அந்த நைல் நதியிலிருந்து தேவ ஜனத்தை பின் நாட்களில் மீட்கப்போகும் குழந்தையை பார்வோன் குமாரத்தி மீட்டெடுக்கிறாள். அந்த குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை அவனுடைய தாயிடத்திலேயே ஒப்படைத்ததே ஆச்சரியம் (2:9).
இந்த யூத தேசத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட ஒரு பிள்ளை உதிக்கும். அதனுடைய வாழ்க்கை ஆச்சரியம் நிறைந்ததாயும் தெய்வீக தொடுதல் நிரம்பியதாயிருக்கும். அனைத்திற்கும் மேலாக, நம்முடைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இயேசு நம்மை மீட்டெடுக்கும் பாதையை நமக்குக் காட்டுவார்.
கடினமான சூழ்நிலைகளும் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. “தேவன் எனக்கு கேரட் கொடுத்தார்” என்று நிஷா பெருமிதம் கொள்ளுகிறாள்.
ஆண் பிள்ளை
ஒரு வருடத்திற்கு முன்னதாக, “ஆண் பிள்ளை” என்று வெறுமனே ஒரு குழந்தை பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறந்த சில மணித்துளிகளில் புறக்கணிக்கப்பட்ட அந்த பிள்ளை, மருத்துவமனை வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பிள்ளை கண்டெடுக்கப்பட்ட மாத்திரத்தில் சமூக சேவகர்கள், அந்த பிள்ளையின் குடும்பமாய் மாறப்போகிற ஒரு தம்பதியினருக்கு அவசர அழைப்பு விடுத்தனர். தம்பதியினர் அந்த பிள்ளையைக் கையில் எடுத்து, அதை “கிரேசன்” (அவனுடைய நிஜ பெயர் அல்ல) என்று அழைத்தனர். அந்த பிள்ளையைத் தத்தெடுக்கும் ஒழுங்குகள் நேர்த்தியாய் செய்யப்பட்டு, “கிரேசன்” என்றே அப்பிள்ளைக்குப் பெயரிடப்பட்டது. இன்று உங்களோடு சகஜமாய் உறவாடக்கூடிய அளவிற்கு அப்பிள்ளை வளர்ந்திருக்கிறது. அவன் ஒரு காலத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.
தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், மோசே தேவனுடைய சுபாவங்களையும் அவர் இஸ்ரவேலுக்காய் செய்த நன்மைகளையும் புரிந்துகொண்டான். “கர்த்தர் உன் பிதாக்கள் மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம்” வைத்தார் (உபாகமம் 10:15) என்று கூறுகிறார். அன்பின் பாதை நீளமானது. “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (வச.18) என்று மோசே சொல்லுகிறார். “அவரே உன் புகழ்ச்சி... உன் தேவன் அவரே” (வச.21).
தத்தெடுப்பின் மூலமாகவோ அல்லது அன்பு மற்றும் சேவையின் மூலமாகவோ தேவனுடைய அன்பைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த தம்பதியினர், கவனிக்கப்படாத திக்கற்ற ஒரு பிள்ளைக்கு தேவனுடைய அன்பின் கரத்தை நீட்டி ஆதரவு தெரிவித்தனர். நாமும் அவருடைய கரங்களாகவும் பாதங்களாகவும் செயல்படமுடியும்.
வழக்கத்திற்கு மாறான சகாப்தம்
ரோம பேரரசர் கான்ஸ்டான்டின் (கி.பி.272–337), தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை, தேவனை அறியாதவராகவே செலவிட்டிருந்தாலும், கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தும் வழக்கத்தை மாற்றி, மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், இன்றும் நாம் உபயோகிக்கும் கால அட்டவணையை கி.மு (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி (கிறிஸ்துவுக்கு பின்) என்று சரித்திரத்தையே இரண்டாய் பகுத்துக் கொடுத்தார்.
இந்த முறையை உலகப்பிரகாரமான வழக்கமாக மாற்றும் ஏற்பாடாகக் கால அட்டவணையை பொது சகாப்தம் (CE), பொது சகாப்தத்திற்கு முன் (BCE) என மாற்றிவிட்டனர். தேவனை எவ்வாறெல்லாம் உலகம் தவிர்க்கிறது என்பதற்கு உதாரணமாகச் சிலர் இதைக் குறிப்பிடுவர்.
ஆனால் தேவனைத் தவிர்க்கவே முடியாது. எவ்வாறாகப் பெயரை மாற்றினாலும் காலத்தின் நடுமையத்தை நிர்ணயிப்பது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களே. வேதத்தில், எஸ்தர் புத்தகத்தில் தேவன் என்ற சொல்லேயில்லாமல் இருப்பது சற்று முரண்பாடாய் தோன்றலாம். ஆனால் அதிலுள்ள சரித்திரமே தேவன் அளித்த விடுதலையைப் பற்றியதுதான். சொந்த தேசத்தை விட்டுத் துரத்தப்பட்டவர்களாக, அந்நிய தேசத்தில் யூதர்கள் வாழ்ந்தார்கள். அந்த அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அதிகாரி அவர்களைக் கொல்லப் பார்த்தான் (எஸ்தர் 3:8–9, 12–14). ஆயினும் எஸ்தர் ராஜாத்தி மூலமாகவும், அவளுடைய சித்தப்பாவான மொர்தெகாய் மூலமாகவும் தேவன் தமது ஜனத்தை விடுவித்தார். இதின் நினைவாக பூரிம் எனும் யூத பண்டிகையையும் இந்நாள் வரைக்கும் கொண்டாடுகின்றனர் (9:20–32).
இப்போது உலகம் இயேசுவை எவ்வாறாக மதிப்பிட்டாலும் சரி, அவர் அனைத்தையும் மாற்றிவிட்டார். இப்போது அவர் நம்மை ஒரு வழக்கத்திற்கு மாறான ஒரு சகாப்தத்திற்கு அழைக்கிறார், அங்கே உண்மையான நம்பிக்கையும் வாக்குறுதியும் உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்மைச் சுற்றிலும் பார்ப்பதுதான், அப்போது நாம் அவரை காண்போம்.
வாழ்நாள் பாடம்
ஷிபுமோனும் எலிசபெத்தும் கேரள மாகாணத்தின் பசுமையான ஊரிலிருந்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து, பாம்பு பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அவ்வளவு யாரும் சென்றதில்லை. ஆனாலும் அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலைத் தொடரக்கூடாது என்பதற்காக இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
யோய்தா என்னும் பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று. ஆனால் அதற்கு தேவனுக்கான வாழ்நாள் அர்ப்பணம் என்று அர்த்தம். நேர்த்தியாக ஆட்சி செய்த யோவாஸ் ராஜாவின் நாட்களில் இவன் ஆசாரிய ஊழியம் செய்தான் - யோய்தாவிற்காய் நன்றி. யோவாஸ் ஏழு வயதாயிருக்கும்போது, அவரை ராஜாவின் ஸ்தானத்திற்கு அபிஷேகம் பண்ணியது ஆசாரியனாகிய இந்த யோய்தா (2 இராஜ. 11:1-16). ஆனால் இது அதிகார பறிப்பு இல்லை. யோவாஸின் முடிசூட்டு நிகழ்வில் யோய்தா, “அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கை பண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும்” செய்தான் (வச. 17). அவன் தேசத்தின் மீது சீர்திருத்தத்தை ஏற்படுத்தினான். “யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்” (2 நாளாகமம் 24:14). அவனுடைய அர்ப்பணிப்பிநிமித்தம், “அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்” (வச. 16).
தேவனை மையமாய் வைக்கும் இந்த வாழ்க்கை முறையை, “ஒரே பாதையில் நிலையான கீழ்ப்படிதல்” என யூஜின் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். புகழ், பதவி மற்றும் சுயநலத்தினால் கறைபடிந்திருக்கிற உலகத்தில் இவ்வகையான கீழ்ப்படிதல் அவசியப்படுகிறது.