எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

கண்ணியத்தை விரிவுபடுத்துதல்

மேகியின் இளம் நண்பர் தேவாலயத்திற்கு அணிந்து வந்த உடை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளி, அங்கே அசௌகரியத்துடன் தனது இருக்கையை மாற்றினாள். மாறி மாறி அவளது மிகக் குட்டையான கீழாடையை இழுத்து, தன் கைகளினால் சங்கடத்துடன் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.

அவள் உடுத்தியிருக்கிற உடை மீதில் உள்ள கவனத்தைத் திசை திருப்ப “ஓ, குளிர்கிறதா?” என்று மேகி கேட்டபின். “இதோ! என் சால்வையை எடுத்துக்கொள் என்றாள்.” மேகி பலரைத் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதன் மூலமும், அவர்கள் சங்கோச்சப்படாமல் ஆலயத்தில் ஆராதிக்க உதவுவதின் மூலமும் அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார். நற்செய்தியானது அவளது அற்புதமான முறைகள் மூலம் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைவரையும் கண்ணியமாக நடத்தினாள்.

விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசுவிடம் கொண்டுவந்து, அவா் முன் அவளை நடுவே நிறுத்தி குற்றச்சாட்டினாா்கள். ஆனால் கிறிஸ்து குற்றம் சாட்டுபவர்களை அங்கிருந்து அனுப்பும் வரை தன் கவனத்தை அவள் மீது வைக்கவில்லை. அவர்கள் போனதும் அவளைத் திட்டியிருக்கலாம். மாறாக, “இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.” (யோவான் 8:10). பிந்தைய கேள்விக்கான பதில், நிச்சயமாக இல்லை. எனவே இயேசு அவளுக்கு ஒரு சுருக்கமாகச் சுவிசேஷமாகக் கூறியது: “....நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.” (வ. 11) என்ற அழைப்பாகும்.

மக்கள் மீதான உண்மையான அன்பின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையான அன்பு, தீர்ப்பிடாமல் கண்ணியத்தையும் மன்னிப்பையும் வழங்குகிறது.

அனைத்து பதில்கள்

டேல் எர்ன்ஹார்ட் ஜூனியர் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்ட மோசமான தருணத்தை விவரிக்கிறார். மோட்டார் பந்தய ஜாம்பவான் டேல் எர்ன்ஹார்ட் சீனியர், டேடோனா-500 என்ற மோட்டார் பந்தயத்தின் முடிவில் ஒரு பயங்கரமான விபத்தில் கொல்லப்பட்டார். டேல் எர்ன்ஹார்ட் ஜூனியரும் அந்த பந்தயத்தில் பங்குபெற்றிருந்தார். “என்னால் மீண்டும் அதை சாதிக்கமுடியாது” என்ற சத்தம் இளைய எர்ன்ஹார்டடிடமிருந்து வந்தது. “இது அதிர்ச்சி மற்றும் துக்கம் மற்றும் பயத்தின் மணி.” ஆனால் அதற்கு பின்னர், “இனி இதை நான் தனித்து மேற்கொள்ளப்போகிறேன்” என்பதே தனிமையான உண்மை.

“அப்பா கூட இருப்பது என்பது ஒரு தேர்வுக்கு மறைமுகமாய் எடுத்துச் செல்லும் பிட் தாளைப் போன்றது” என்று எர்ன்ஹார்ட் ஜூனியர் ஒப்பிடுகிறார். “அப்பா கூட இருப்பது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருப்பது போன்று” என்று உருவகப்படுத்துகிறார்.

இயேசுவின் சீஷர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலைப் பெற்றுக்கொள்ள இயேசுவைப் பார்த்தனர். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் தினம், சீஷர்களை தான் தனியே விடுவதில்லை என்று இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16-17) என்று வாக்களிக்கிறார்.

தம்மை நம்பும் அனைவருக்கும் இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (வச. 23) என்று சொல்லுகிறார்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்களோடு, “எல்லாவற்றையும்” போதித்து அருளுகிற ஆவியானவர் உடனிருந்து, இயேசு கற்றுக்கொடுத்த யாவையும் அவர்களுக்கு உணர்த்துகிறார் (வச. 26). நம்மிடத்தில் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நம்மிலிருக்கும் ஆவியானவர் அனைத்து பதில்களையும் அறிந்திருக்கிறார்

தீர்க்கதரிசிகளின் செய்தி

1906ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் உலகத் தொடருக்கு முன், விளையாட்டு எழுத்தாளர் ஹக் புல்லர்டன் ஒரு புத்திசாலித்தனமான கணிப்பை முன்வைத்தார். வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிகாகோ கப்ஸ் அணி முதல் மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் தோல்வியடைந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று சொன்னார். மேலும் நான்காம் ஆட்டத்தில் மழைபெய்யும் என்றார். அவர் சொன்னதுபோலவே நடந்தது. பின்னர், 1919 இல், அவரது பகுப்பாய்வுத் திறன் மூலம் சில வீரர்கள் ஆட்டமிழப்பார்கள் என்று சொல்லியதும் நிறைவேறியது. அவர்கள் சூதாட்டக்காரர்களால் லஞ்சம் பெற்றதாக புல்லர்டன் சந்தேகித்தார். அதிலும் அவர் சொன்னபடியே நடந்தது.

புல்லர்டன் ஒரு தீர்க்கதரிசி கிடையாது. ஆனால் ஆதாரங்களை நன்றாக ஆராய்ந்தவர். எரேமியா தீர்க்கதரிசி நிஜத்தில் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிற்று. எருதின் நுகத்தை கழுத்தில் பூண்ட எரேமியா, யூதா பாபிலோனியர்களுக்கு அடிபணிந்து வாழும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (எரேமியா 27:2,12). ஆனால் அனனியா என்னும் கள்ளத் தீர்க்கதரிசி அவனுக்கு விரோதமாய் பேசி, நுகத்தை உடைத்துப்போட்டான் (28:2-4,10). அனனியாவைப் பார்த்து எரேமியா, “அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை... இந்த வருஷத்திலே நீ சாவாய்” (வச. 15-16) என்று சொன்னான். இரண்டு மாதங்கள் கழித்து அனனியா செத்துப்போகிறான் (வச. 17).

புதிய ஏற்பாடு, “பூர்வகாலங்களில்... தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரெயர் 1:1-2) என்று சொல்லுகிறது. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் வேதவாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய சத்தியங்கள் நமக்கு இன்னும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது

அனைத்தையும் இழத்தல்

பொறியியல் பாலங்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றை கட்டிய பிறகு, சீசர் ஒரு புதிய முயற்சியை செயல்படுத்த திட்டமிட்டார். எனவே அவர் தனது முதல் தொழிலை விற்று வங்கியில் பணத்தை சேமித்து, மீண்டும் அதை முதலீடு செய்ய திட்டமிட்டார். ஆனால் அந்த இடைவெளியில் அவரது அரசாங்கம், தனியார் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. சீசரின் வாழ்நாள் சேமிப்பு, ஒரே நொடியில் இல்லாமல் போய்விட்டது.  
தனக்கு நேரிட்ட அந்த அநீதியைக் குறித்து யாரையும் குற்றப்படுத்த முயற்சிக்காமல், தேவனிடத்தில் முன்னேறிச் செல்வதற்கான வழியை சீசர் விண்ணப்பித்தார். அதன் பிறகு, அவர் மீண்டும் எளிமையாய் தன் ஓட்டத்தைத் துவங்க ஆரம்பித்தார்.  
அதேபோன்ற ஒரு முக்கியமான தருணத்தில், யோபு தனக்கு உண்டான எல்லாவற்றையும் இழந்து நின்றான். அவனுடைய குமாரர்களையும் வேலையாட்களையும் இழந்தான் (யோபு 1:13-22). தன் சரீர பெலத்தை இழந்தான் (2:7-8). யோபுவின் பதிலானது, எல்லா காலத்துக்கும் உரிய மாதிரியாய் நமக்கு இருக்கிறது. அவன், “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (1:21) என்று சொல்கிறான். “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை” (வச. 22) என்று நிறைவடைகிறது.  
யோபுவைப் போலவே சீசரும் தேவனை நம்புவதற்கு தெரிந்துகொண்டார். ஒரு சில வருடங்களிலேயே, தன் முந்தின தொழிலைப் பார்க்கிலும் அதிக லாபம் ஈட்டக்கூடிய வெற்றி இலக்கை அடைந்தார். இவருடைய கதையும் யோபுவின் முடிவையே நினைவுபடுத்துகிறது (யோபு 42 பார்க்கவும்). சீசர் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவில்லையென்றாலும், அவருடைய பொக்கிஷம் பூமியில் இல்லை; பரலோகத்தில் இருக்கிறது (மத்தேயு 6:19-20) என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் அப்போதும் தேவனையே நம்பியிருந்திருப்பார். 

சாட்சிகள்

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ (1807-1882) என்ற கவிஞரின் “சாட்சிகள்” என்ற கவிதைத் தொகுப்பில், மூழ்கிய அடிமைக் கப்பலை குறித்து விவரிக்கிறார். “சங்கிலியில் உள்ள எலும்புக்கூடுகள்" பற்றி அவர் எழுதியது போல், லாங்ஃபெலோ அடிமைத்தனத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட எண்ணற்ற பெயர் தெரியாத நபர்களுக்காய் இரங்கல் தெரிவித்தார். கடைசி சரணத்தில், “இவை அடிமைகளின் துயரங்கள், அவைகள் ஆழத்திலிருந்து அலறுகிறது; அறியப்படாத கல்லறைகளிலிருந்து கதறுகிறது; நாங்களே அதற்கு சாட்சிகள்!” என்று முடிக்கிறார்.  
ஆனால் இந்த சாட்சிகள் யாரிடம் பேசுகிறார்கள்? அத்தகைய மௌன சாட்சியம் வீண் இல்லையா? 
அவையெல்லாவற்றையும் பார்க்கும் சாட்சி ஒருவர் இருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றபோது, எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்தான். “ என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று தேவனிடம் கேட்டான். ஆனால் தேவன் “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதியாகமம் 4:9-10) என்று சொன்னார்.  
காயீனின் பெயர் இன்றும் ஒரு எச்சரிப்பின் சத்தமாகவே திகழ்கிறது. “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்” என்று சீஷனாகிய யோவான் எச்சரிக்கை விடுக்கிறார் (1 யோவான் 3:12). ஆபேலின் பெயரும் இன்றும் நிலைநிற்கிறது. ஆனால் வித்தியாசமான வழியில்! “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்” (எபிரெயர் 11:4) என்று எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆபேலைக் குறித்து சாட்சிகொடுக்கிறார்.  
ஆபேல் இன்னும் பேசுகிறார். அதுபோல மரித்து வெகுநாளாய் ஆன அடிமைகளின் அந்த எலும்புக்கூடுகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அநீதி தழைத்தோங்குகிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்த்து நின்று அவர்களுக்காய் குரல்கொடுப்போம். தேவன் அனைத்தையும் பார்க்கிறார். அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

நீண்ட விளையாட்டு

துனின் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டபோது, இராணுவம் விசுவாசிகளை பயமுறுத்தி, அவர்களின் பண்ணை விலங்குகளை கொல்லத் தொடங்கியது. வாழ்வாதாரத்தை இழந்த துனின் குடும்பம், பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக, துன் தனது குடும்பத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தார். தேவன் தன்னுடன் இருப்பதை அவர் அறிந்திருந்தும், பிரிவின் போது இரண்டு குடும்ப உறுப்பினரை இழந்ததால் விரக்தியில் இருந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, மற்றொரு மக்கள் குழுவினர் இதைப் போலவே கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். ஆகவே, அந்த மக்களை (இஸ்ரவேலர்) எகிப்திலிருந்து வெளியே வழிநடத்த தேவன் மோசேயை நியமித்தார். மோசே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் பார்வோனை அணுகியபோது, எகிப்திய அதிகாரி அடக்குமுறையை 
தீவிரப்படுத்தினான் (யாத்திராகமம் 5:6-9). பார்வோன்: நான் கர்த்தரை 
அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான் (வ.2). மக்கள் மோசேயிடம் முறையிட்டனர், அவர் தேவனிடம் முறையிட்டார் (2.20-23). 
  
இறுதியில், தேவன் இஸ்ரவேலர்களை விடுவித்தார், அவர்கள் விரும்பிய சுதந்திரத்தைப் பெற்றார்கள். ஆனால் தேவனின் வழியிலும், நேரத்திலும். அவர் ஒரு நீண்ட காலம் எடுத்து, அவருடைய குணாதிசயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். பெரிய விஷயத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார். துன் அகதிகள் முகாமில் தனது ஆண்டுகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார், புதுதில்லி வேதாகம கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இப்போது அவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு போதகர். ஒரு புதிய அடைக்கலத்தை கண்டுகொண்டு அவரைப் போலவே இருந்த மக்களுக்கு போதகரானார்."ஒரு அகதியான எனது கதை ஒரு ஊழியனாக மற்றவரளை வழிநடத்துவதற்காக என்னை புடமிட்டது," என்று அவர் கூறினார். அவரது சாட்சியில், யாத்திராகமம் 15:2 இல், மோசேயின் பாடலை மேற்கோள் காட்டுகிறார், "கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்” (யாத்திராகமம் 15:2). அவர் இன்று நம்முடையவராய் இருக்கிறார். 
  

சரியான ஒன்றைச் செய்வது

"ஜேசன்"என்ற கைதியின் கடிதம் என்னையும் என் மனைவியையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியது. நாங்கள்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவுவதற்காக நாய்க்குட்டிகளை, "வளர்ப்பு" நாய்களாக பயிற்றுவிக்கிறோம். அத்தகைய ஒரு நாய்க்குட்டி அடுத்த பயிற்சி கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. அது சிறை கைதிக்களால் பயிற்றுவிக்கப்பட்ட நாயாகும். ஜேசன் எங்களுக்கு எழுதிய இக்கடிதம், அவரது கடந்த காலத்தின் வேதனையை வெளிப்படுத்தியது. பின்னர் அவன் கூறினான், "ஸ்னிக்கர்ஸ் நான் பயிற்றுவித்த பதினேழாவது சிறந்த நாய். அது என்னை நிமிர்ந்து பார்த்த போது, இறுதியில் நான் சரியான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது போல் உணர்ந்தேன்". 
  
மனவருத்தம் என்பது ஜேசனுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். யூதாவின் ராஜாவான மனாசேக்கு அனைத்தும் ஏராளம் இருந்தது. 2 நாளாகமம் 33, அவனுடைய சில அட்டூழியங்களை கோடிட்டுக் காட்டுகிறது: புறமத தேவர்களுக்கு வெளிப்படையாகவே பாலியல் சார்ந்த பலிபீடங்களைக் கட்டுதல் (வ. 3), சூனியம் செய்தல் மற்றும் தனது சொந்தக் குழந்தைகளை பலியிடுதல் (வ. 6). அவன் இந்த மோசமான பாதையில் முழு தேசத்தையும் வழிநடத்தினான் (வச. 9). 
  
"கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்" (வ.10) இறுதியில், தேவன் அவனது கவனத்தை திருப்பினார். பாபிலோனியர்கள் படையெடுத்து, ”அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்” (வ.11), ”தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்” (வ.12) தேவன் அவனுக்கு செவிசாய்த்தார், அவனை மீண்டும் ராஜாவாக மாற்றினார். மனாசே புறமத நடைமுறைகளுக்குப் பதிலாக, உண்மையான ஒரே தேவ வழிபாட்டைத் துவங்கினான் (வ. 15-16). 
  
உங்கள் மனவருத்தங்கள் உங்களை மேற்கொண்டு விடும் போல் தோன்றுகிறதா? இப்போதும் தாமதமாகவில்லை. மனந்திரும்புதலின் தாழ்மையான ஜெபம் செய்யுங்கள். தேவன் அதைக் கேட்பார். 

பயன்பாட்டிற்கு உதவாத சிறு கயிறுகள்

மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது.  
பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம்.  
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர்.  
தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28).  
தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம்.  

இயேசுவில் மறுமலர்ச்சி

திறன், பல படிப்புகள் மற்றும் கலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், லியோனார்டோ பிரசித்தி பெட்ரா தனது வரிகளில் "நம்முடைய இந்த மோசமான நாட்கள்" என்றும், "மனிதர்களின் மனதில் நம்மைப் பற்றிய எந்த நினைவையும் விட்டுச் செல்லாமல்" நாம் இறந்துவிடுகிறோம் என்று புலம்பினார்.

"நான் வாழ கற்றுக்கொள்ளும்போதே, சாகவும் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார் லியோனார்டோ. அவர் புரிந்துகொண்டதை காட்டிலும் உண்மைக்கு அருகே இருந்தார். எப்படி மாிக்க வேண்டுமென்று கற்றுக்கொள்வதே வாழ்வுக்கான வழி. எருசலேமில் இயேசுவின் வெற்றி பவனிக்கு பின் (இப்போது நம் குருத்தோலை ஞாயிறென்று கொண்டாடுகிறோம்; பார்க்கவும் யோவான் 12:12–19), அவர், " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (வ. 24) என்றார். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி இப்படி பேசினார், ஆனால் நம் அனைவரையும் உள்ளடக்கியதாக அதை விரிவுபடுத்தினார்: "தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்" (வ. 25).

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடன் "அடக்கம்" பண்ணப்படுவதை பற்றி, "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்" (ரோமர் 6:4–5) என்று எழுதினார்.

அவரது மரணத்தின் மூலம், இயேசு நமக்கு மறுபிறப்பை வழங்குகிறார், அதுவே மறுமலர்ச்சியின் அர்த்தம். அவர் தனது பிதாவுடன் நித்திய வாழ்வுக்கான வழியை உருவாக்கினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.