எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

தருண் ஜேக்கப்கட்டுரைகள்

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாடும் பள்ளத்தாக்குகள்

என் மாமியார் அவரது நாய்களுடன் பேசும் திறனைப் பற்றி நான் அடிக்கடி அன்புடன் கேலி செய்வது உண்டு. அந்த நாய்கள் குரைக்கும்போது, அவர் அவைகளுக்கு அன்பாய் பதிலளிப்பார். அவர் மாத்திரமல்ல, நாய்களை வளர்க்கக்கூடியவர்கள் அவைகளின் சிரிப்பையும் அவ்வப்போது உணரக்கூடும். நாய், பசு, நரி, சீல் மற்றும் கிளி போன்ற உயிரினங்கள் அனைத்தும் “குரல் விளையாட்டு சிக்னல்களை” கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனை சிரிப்பு என்றும் அழைப்பர். இந்த உடல்மொழிகளை வைத்து, அவைகள் யாருடனும் சண்டையிடவில்லை, மாறாக, தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

விலங்குகள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது, மற்ற படைப்புகள் தங்கள் சொந்த வழியில் தேவனை எவ்விதம் துதிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. தாவீது தனது சுற்றுப்புறங்களைப் பார்த்தபோது, “மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது” என்றும் “பள்ளத்தாக்குகள்... கெம்பீரித்துப் பாடுகிறது” என்றும் அவருக்கு தோன்றியிருக்கிறது (சங்கீதம் 65:12-13). தேவன் தேசத்தை பராமரித்து, செழுமைப்படுத்தி, அழகையும் வாழ்வாதாரத்தையும் அவற்றிற்கு கொடுத்திருக்கிறார் என்பதை தாவீது உணர்ந்தார்.

நமது சுற்றுப்புற சூழல்கள் இயல்பில் பாடல் பாடக்கூடியவைகள் அல்லவெனினும், அவை தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை சாட்சியிடக்கூடியவைகள் மட்டுமின்றி, நம்முடைய குரல் ஓசையில் அவரை துதிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பூமியின் குடிகள் அனைவரும் அவருடைய படைப்பின் ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியின் ஆரவார துதிகளை அவருக்கு செலுத்துவோம் (வச. 8). அவற்றை தேவன் கேட்டு புரிந்துகொள்ளுவார் என்று விசுவாசிப்போம். 

காண்பதற்கு கண்கள்

அன்சு தனது மூன்று குழந்தைகளுக்கு “கண்களாக” இருக்கவேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவர்கள் மூவரும் பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் குடியரசில் உள்ள தங்களின் கிராமத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்போதெல்லாம், அவள் குழந்தையைத் தனது முதுகில் கட்டிக்கொண்டு, மூத்த பிள்ளைகள் இருவரின் கைகளையும் பிடித்தபடியே, எப்போதும் வாழ்க்கையின் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தாள். மாந்திரீகத்தால் குருட்டுத்தன்மை ஏற்படுவதாகக் கருதப்பட்ட ஓர் கலாச்சாரத்தில் வாழ்ந்த இந்த அன்சு, விரக்தியடைந்து தேவனிடத்தில் உதவிக்காய் மன்றாடினாள்.

அப்போது அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் “மெர்சி ஷிப்ஸ்” பற்றி அவளிடம் சொன்னார். அவை ஏழைகளுக்கு நம்பிக்கையையும், சுகமளிக்கும் இயேசுவின் மாதிரியை அடையாளப்படுத்தும் விதத்தில் முக்கிய அறுவைசிகிச்சைகளையும் சேவையாக செய்துவந்த ஓர் ஊழிய ஸ்தாபனம். அவர்களிடத்தில் உதவி கிடைக்குமா என்ற நிச்சயமில்லாமல் அவர்களை அணுகினாள். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவளின் மூன்று பிள்ளைகளுக்கும் பார்வை கிடைத்தது.

தேவனுடைய நடத்துதல் எப்போதுமே இருளில் மூழ்கியவர்களுடன் சேர்ந்துவந்து, அவர்களுக்கு அவருடைய ஒளியைக் கொண்டுவருவதாகும். ஏசாயா தீர்க்கதரிசி, தேவன் புறஜாதிகளுக்கு ஒளியாய் இருக்கிறார் (ஏசாயா 42:6)என்று அறிவிக்கிறார். அவர் குருடருடைய கண்களைத் திறப்பார் (வச. 7). சரீரப்பிரகாரமான குருடுகளை மட்டுமின்றி, ஆவிக்குரிய ரீதியான பார்வையற்ற நிலைமையையும் அவர் மாற்றுவார். அவர் தனது ஜனத்தின் கரத்தைப் பிடித்திருப்பதாக வாக்களிக்கிறார் (வச. 6). பார்வையற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுத் தந்தார். இருளில் வாழ்ந்தவர்களுக்கு ஒளியைக் கொண்டு வந்தார். நீங்கள் இருளில் மூழ்கிவிட்டதாக உணர்ந்தால், ஒளியை பெற்றுக்கொள்வதற்கு நம்முடைய அன்பான தகப்பனுடைய வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் அவரை பற்றிக்கொள்ளுங்கள்.

 

கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்

முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன்.

புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).

இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை” தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார்.