எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

சுவா்கள் மீது தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இந்த போதகா் குடும்பத்திற்குத் தெரியாது. இக்கூட்டம் ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

சுவா்கள் மீது தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இந்த போதகா் குடும்பத்திற்குத் தெரியாது. இக்கூட்டம் ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்மஸ_க்கு அடுத்த நாள்

கிறிஸ்துமஸ் தினத்தின் மகிழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த நாள் கொஞ்சம் மந்தமாவதாக உணர்ந்தேன். நாங்கள் இரவு முழுவதும் நண்பர்களுடன் தங்கியிருந்தோம். ஆகையால் சரியாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் பனி பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு, பனிமூட்டமான உணர்வில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 
கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு மந்தமான உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அளவுக்கு அதிகமாக உண்பதாலோ, வானொலியில் இருந்து பாடல்கள் திடீரென காணாமல் போனதாலோ, போன வாரம் வாங்கிய பரிசுப் பொருட்கள் பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் மாயாஜால மகிழ்ச்சியானது விரைவில் கலைந்துவிடும்! 
இயேசு பிறந்த நாளின் அடுத்த தினத்தைப் பற்றி வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நடைபயணமாய் வந்து, தங்குமிடமில்லாமல் அலைந்து, பிள்ளைபேறு பெற்றெடுத்த பிரசவ வலியோடு மரியாள் இருக்க, கூடியிருந்த மேய்ப்பர்கள் சொல்லாமல் கலைந்து சென்றது (லூக்கா 2:4-18) போன்ற தொடர் சம்பவங்களினால் மரியாளும் யோசேப்பும் சோர்ந்துபோயிருந்திருக்கக்கூடும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், மரியாள் தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்து, தேவ தூதன் அவளை சந்தித்த சம்பவம் (1:30-33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42-45), மற்றும் அவளுடைய குழந்தையின் மகிமையான எதிர்காலம் என்று அவைகளைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்கிறேன். மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19) என்று வேதம் சொல்கிறது. அது அவளுடைய அன்றைய மனச்சோர்வையும் உடல் வலியையும் குறைத்திருக்க வேண்டும். 
ஒருவேளை நம்முடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், வெறுமனே கழிகிற நாளாய் இருக்கக்கூடும். ஆனால் அந்த நாட்களில் நாமும் மரியாளைப் போலவே, நம் உலகத்திற்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம், அவருடைய பிரசன்னத்தால் நிறைவோம்.  

கிறிஸ்மஸ் மனநிலை

டேவிட் மற்றும் ஆங்கி வெளிநாடு செல்ல தேவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தனர். அவர்கள் அப்போது செய்ய நேரிட்ட ஆசீர்வாதமான ஊழியம் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களின் நடவடிக்கையில் ஒரு குறை இருந்தது. டேவிட்டின் வயதான பெற்றோர் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகைகளை தனியாக கொண்டாடுவார்கள். 
டேவிட் மற்றும் ஆங்கி, தனது பெற்றோர்களின் கிறிஸ்துமஸ் தனிமையை போக்குவதற்கு அவர்களுக்கு முன்னமே பரிசுகளை வாங்கிக்கொடுத்தும், பண்டிகை தினத்தன்று காலையில் போன் செய்தும் பேசினர். ஆனால் அவரது பெற்றோர் உண்மையில் விரும்பியது அவர்களோடிருப்பதைத் தான். டேவிட்டின் வருமானம் குறைவு என்பதினால், அவர்கள் எப்போதாவது தான் தங்கள் பெற்றோரின் வீட்டிற்கு வந்து செல்ல முடியும். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? டேவிட்டுக்குக்கு ஞானம் தேவைப்பட்டது. 
நீதிமொழிகள் 3 என்பது ஞானத்தைக் கண்டடைவதைக் குறித்த ஒரு பாடத்திட்டம். நம் சூழ்நிலைகளை தேவனிடம் கொண்டு செல்வதன் மூலம் ஞானத்தை நாம் எவ்வாறு பெறுவது என்பதைக் காட்டுகிறது (வச. 5-6). அன்பு, விசுவாசம் போன்று ஞானத்தின் பல்வேறு குணாதிசயங்களைக் குறித்து விவரிக்கிறது (வச. 3-4, 7-12). மேலும் அதின் நன்மைகளான சமாதானம் மற்றும் நீடித்த ஆயுள் (வச. 13-18) ஆகியவைகளையும் விவரிக்கிறது. மேலும் “நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது” (வச. 32) என்று தேவன் வலியுறுத்துகிறார். அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது தீர்வுகளை பகிர்ந்துகொள்கிறார். 
ஒரு நாள் இரவு தன் பிரச்சனையைப் பற்றி ஜெபித்தபோது, டேவிட் ஒரு யோசனை செய்தார். அடுத்த கிறிஸ்மஸ் நாளில், அவரும் ஆங்கியும் தங்களின் சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டு, உணவு மேஜையை அலங்கரித்து, இரவு உணவைக் கொண்டுவந்துவைத்தனர். டேவிட்டின் பெற்றோரும் அவர்களுடைய வீட்டில் அவ்வாறே செய்தனர். பின்னர், ஒவ்வொரு டேபிளிலும் லேப்டாப்பை வைத்து, வீடியோ லிங்க் மூலம் ஒன்றாக உணவு அருந்தினர். ஏறக்குறைய அவர்கள் ஒரே அறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது அன்றிலிருந்து ஒரு குடும்ப வழக்கமாகிவிட்டது. 
தேவன் டேவிட்டுக்கு தன்னுடைய இரகசியத்தை புரிந்துகொள்ளும் ஞானத்தை அளித்தார். அவர் எங்கள் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை அவர் எங்களோடு மென்மையாய் பகிர்ந்துகொண்டார். 

பிரகாசிக்கும் சுடர்கள்

அந்த நகரத்தைப் பற்றி நான் முதலில் கவனித்தது அதன் ஏழ்மை. அடுத்து, அதன் மதுபானக் கடைகள், "சேரிகள்," மற்றும் மக்களிடமிருந்து பணத்தை சம்பாதிக்க என்னும் நுகர்வோர் உற்பத்தியாளர்களுக்கான மாபெரும் விளம்பர பலகைகள். நான் இதற்கு முன்பு இதுபோன்ற பல நகரங்களுக்குச் சென்றிருந்தபடியால், இந்த நகரம் ஒரு புதிய தாழ்வை எட்டியது போல் எனக்குத் தோன்றியது. 
இருப்பினும், மறுநாள் காலை ஒரு டாக்ஸி டிரைவரிடம் பேசியபோது என் மனநிலை பிரகாசமாக இருந்தது. “எனக்கு உதவ விரும்பும் நபர்களை எனக்கு அனுப்புமாறு நான் ஒவ்வொரு நாளும் தேவனிடம் கேட்கிறேன்,” என்று அவர் கூறினார். “அடிமைகள், விபச்சாரிகள், உடைந்த வீடுகளில் இருப்பவர்கள் கண்ணீருடன் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூறுவார்கள். நான் காரை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்காக நான் ஜெபம் செய்வேன். இது என்னுடைய ஊழியம்” என்று அவர் சொன்னார்.  
நம்முடைய விழுந்துபோன உலகத்திற்கு இயேசுவின் சந்ததிகளைக் குறித்து விவரித்த பிறகு (பிலிப்பியர் 2:5-8), அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து (வச. 13), “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு” (வச. 16), “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (வச. 15), “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற” (வச. 14) அனுபவத்திற்குள் நாம் கொண்டுவரப்படுகிறோம். அந்த டாக்ஸி டிரைவரைப் போல, இயேசுவின் ஒளியை இருளுக்குள் கொண்டு வருவோம். 
கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் உலகை மாற்றுவதற்கு உண்மையாக வாழ வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் டாசன் கூறுகிறார். ஏனெனில் அந்த வாழ்க்கையில், “தெய்வீக வாழ்வின் அனைத்து மர்மங்களும் அடங்கியுள்ளன” என்று கூறுகிறார். உலகின் இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசித்து, கிறிஸ்துவின் சந்ததியாய் உண்மையாக வாழ நமக்கு அதிகாரம் அளிக்க கர்த்தருடைய ஆவியானவரிடம் கேட்போம். 

எல்லோரும் ஆராதிக்கின்றனர்

நான் சமீபத்தில் கீரிஸில் இருக்கும் ஏதென்ஸ்க்கு சென்றிருந்தேன். அதில் தத்துவவாதிகள் கற்பித்த மற்றும் ஏதெனியர்கள் வழிபட்ட சந்தை வழியாய் நாங்கள் நடந்துசென்றபோது, அப்போலோ மற்றும் ஜீயஸ் தெய்வங்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பலிபீடங்களைக் கண்டேன். இவை அனைத்தும் ஒரு காலத்தில் அதீனா தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டிருந்த அக்ரோபோலிஸின் நிழலில் இருந்தன. 
நாம் இன்று அப்போலோ அல்லது ஜீயஸ் போன்ற விக்கிரகங்களை வணங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆன்மீக உணர்வுகள் இன்னும் குறையவில்லை. “எல்லோரும் ஆராதிக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் கூறுகிறார். மேலும், “நீங்கள் பணத்தையும் பொருட்களையும் வணங்கினால்... அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது... உங்கள் உடலையும் அழகையும் வணங்குங்கள்... அது உங்களை அசிங்கமாக உணரச்செய்யும்... உங்கள் புத்தியை வணங்குங்கள்... நீங்கள் முட்டாள்தனமாய் உணருவீர்கள்” என்றும் சொல்லுகிறார். நம்முடைய காலகட்டத்தில் அநேக கடவுள்கள் உள்ளனர். அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று சொல்லமுடியாது.  
பவுல் சந்தைவழியாய் கடந்துவந்தபோது, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்று கூறுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலம் (வச. 31) மக்களுக்கு தன்னை அறியச்செய்யும் தேவன் (வச. 27) உலகத்தின் அனைத்தையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தருமான (வச. 24-26) ஒரே தேவனைக் குறித்து பவுல் அவர்களுக்கு விவரிக்கிறார். அப்போலோ மற்றும் ஜீயஸ் போல இந்த கடவுள் மனித கைகளால் உருவாக்கப்படவில்லை. பணம், தோற்றம் அல்லது புத்திசாலித்தனம் நம்மை அழிப்பதுபோல அவரை ஆராதிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.  
நமக்கு நோக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்க நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதுவே நமது “கடவுள்.” அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு பூமிக்குரிய கடவுளும் நம்மைத் தோல்வியடையச் செய்யும் போது, ஒரே உண்மையான தேவனை கண்டறிதல் சாத்தியம் (வச. 27). 

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக! 

அந்நியர்களை உபசரித்தல்

ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.

உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.

ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.

ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.