எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

பிரகாசிக்கும் சுடர்கள்

அந்த நகரத்தைப் பற்றி நான் முதலில் கவனித்தது அதன் ஏழ்மை. அடுத்து, அதன் மதுபானக் கடைகள், "சேரிகள்," மற்றும் மக்களிடமிருந்து பணத்தை சம்பாதிக்க என்னும் நுகர்வோர் உற்பத்தியாளர்களுக்கான மாபெரும் விளம்பர பலகைகள். நான் இதற்கு முன்பு இதுபோன்ற பல நகரங்களுக்குச் சென்றிருந்தபடியால், இந்த நகரம் ஒரு புதிய தாழ்வை எட்டியது போல் எனக்குத் தோன்றியது. 
இருப்பினும், மறுநாள் காலை ஒரு டாக்ஸி டிரைவரிடம் பேசியபோது என் மனநிலை பிரகாசமாக இருந்தது. “எனக்கு உதவ விரும்பும் நபர்களை எனக்கு அனுப்புமாறு நான் ஒவ்வொரு நாளும் தேவனிடம் கேட்கிறேன்,” என்று அவர் கூறினார். “அடிமைகள், விபச்சாரிகள், உடைந்த வீடுகளில் இருப்பவர்கள் கண்ணீருடன் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூறுவார்கள். நான் காரை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்காக நான் ஜெபம் செய்வேன். இது என்னுடைய ஊழியம்” என்று அவர் சொன்னார்.  
நம்முடைய விழுந்துபோன உலகத்திற்கு இயேசுவின் சந்ததிகளைக் குறித்து விவரித்த பிறகு (பிலிப்பியர் 2:5-8), அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து (வச. 13), “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு” (வச. 16), “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (வச. 15), “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற” (வச. 14) அனுபவத்திற்குள் நாம் கொண்டுவரப்படுகிறோம். அந்த டாக்ஸி டிரைவரைப் போல, இயேசுவின் ஒளியை இருளுக்குள் கொண்டு வருவோம். 
கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் உலகை மாற்றுவதற்கு உண்மையாக வாழ வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் டாசன் கூறுகிறார். ஏனெனில் அந்த வாழ்க்கையில், “தெய்வீக வாழ்வின் அனைத்து மர்மங்களும் அடங்கியுள்ளன” என்று கூறுகிறார். உலகின் இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசித்து, கிறிஸ்துவின் சந்ததியாய் உண்மையாக வாழ நமக்கு அதிகாரம் அளிக்க கர்த்தருடைய ஆவியானவரிடம் கேட்போம். 

எல்லோரும் ஆராதிக்கின்றனர்

நான் சமீபத்தில் கீரிஸில் இருக்கும் ஏதென்ஸ்க்கு சென்றிருந்தேன். அதில் தத்துவவாதிகள் கற்பித்த மற்றும் ஏதெனியர்கள் வழிபட்ட சந்தை வழியாய் நாங்கள் நடந்துசென்றபோது, அப்போலோ மற்றும் ஜீயஸ் தெய்வங்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பலிபீடங்களைக் கண்டேன். இவை அனைத்தும் ஒரு காலத்தில் அதீனா தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டிருந்த அக்ரோபோலிஸின் நிழலில் இருந்தன. 
நாம் இன்று அப்போலோ அல்லது ஜீயஸ் போன்ற விக்கிரகங்களை வணங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆன்மீக உணர்வுகள் இன்னும் குறையவில்லை. “எல்லோரும் ஆராதிக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் கூறுகிறார். மேலும், “நீங்கள் பணத்தையும் பொருட்களையும் வணங்கினால்... அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது... உங்கள் உடலையும் அழகையும் வணங்குங்கள்... அது உங்களை அசிங்கமாக உணரச்செய்யும்... உங்கள் புத்தியை வணங்குங்கள்... நீங்கள் முட்டாள்தனமாய் உணருவீர்கள்” என்றும் சொல்லுகிறார். நம்முடைய காலகட்டத்தில் அநேக கடவுள்கள் உள்ளனர். அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று சொல்லமுடியாது.  
பவுல் சந்தைவழியாய் கடந்துவந்தபோது, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்று கூறுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலம் (வச. 31) மக்களுக்கு தன்னை அறியச்செய்யும் தேவன் (வச. 27) உலகத்தின் அனைத்தையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தருமான (வச. 24-26) ஒரே தேவனைக் குறித்து பவுல் அவர்களுக்கு விவரிக்கிறார். அப்போலோ மற்றும் ஜீயஸ் போல இந்த கடவுள் மனித கைகளால் உருவாக்கப்படவில்லை. பணம், தோற்றம் அல்லது புத்திசாலித்தனம் நம்மை அழிப்பதுபோல அவரை ஆராதிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.  
நமக்கு நோக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்க நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதுவே நமது “கடவுள்.” அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு பூமிக்குரிய கடவுளும் நம்மைத் தோல்வியடையச் செய்யும் போது, ஒரே உண்மையான தேவனை கண்டறிதல் சாத்தியம் (வச. 27). 

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக! 

அந்நியர்களை உபசரித்தல்

ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.

உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.

ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.

ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.

எந்த ஞானம்?

2018, ஈஸ்டர் தினத்திற்கு சற்று முன்பு, தீவிரவாதி ஒருவன் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்று, ஒரு பெண்ணை பிணையக் கைதியாய் கொண்டுசென்றான். அந்த பெண்ணைக் காப்பாற்றும் காவலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு பதிலாக தன்னை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை விடுவிக்குமாறு ஒரு காவல் அதிகாரி துணிச்சலாய் முன்வந்தார்.

அந்த வழக்கத்திற்கு மாறான துணிச்சல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரபலமான நபர்கள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களையே நீங்கள் கலாச்சார அடையாளமாய் பார்ப்பதுண்டு. அவற்றை ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவிட்டு, மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுண்டு. “நீங்கள் கனவுகண்ட வாழ்க்கையை வாழ்வதே மிக சுவாரஸ்யமான வாழ்க்கை” என்பது அப்படிப்பட்ட ஒரு பிரபல தத்துவம். “உன்னை முதலில் நீ நேசி, மற்றதெல்லாம் தானாய் உன்னிடத்தில் சேரும்” என்பதும் இன்னொரு தத்துவம். “உனக்காய் என்ன செய்யவேண்டுமோ, அதை செய்” என்பது மூன்றாவது தத்துவம். இந்த தத்துவங்களையெல்லாம் அந்த காவல் அதிகாரி கடைபிடித்திருந்திருப்பாராகில், முதலில் ஓடி ஒளிந்து தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார்.

இந்த உலகத்தில் இரண்டு வகையான ஞானம் இருப்பதாக அப்போஸ்தலர் யாக்கோபு குறிப்பிடுகிறார்: ஒன்று, பூமிக்குரிய ஞானம், மற்றது பரலோக ஞானம். முதலாவது ஞானம், சுயநலத்தினாலும் ஓழுங்கீனங்களினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது (யாக்கோபு 3:14-16); இரண்டாவது ஞானம், தாழ்மை, கீழ்ப்படிதல், சமாதானம் செய்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது (வச. 13, 17-18). பூமிக்குரிய ஞானமானது சுயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் பரலோக ஞானமானது, மற்றவர்களை முன்னிலைப்படுத்தி, தாழ்மையான கிரியைகளை நடப்பிக்க தூண்டுகிறது (வச. 13).

காவல் அதிகாரி சொன்ன நிபந்தனையை அந்த தீவிரவாதி ஏற்றுக்கொண்டான். பிணையக்கைதியாயிருந்த பெண் விடுவிக்கப்பட்டாள். ஆனால் அந்த காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று, யாரோ ஒருவருக்காய் தவறுசெய்யாத ஒரு மனிதன் உயிர்கொடுத்த சம்பவத்தை உலகம் சாட்சியிட்டது.

பரலோகத்தின் ஞானமானது சுயத்தின் மீது தேவனை வைப்பதால், தாழ்மையான கிரியைகளை செய்ய நம்மை தூண்டுகிறது (நீதிமொழிகள் 9:10). நீங்கள் எந்த ஞானத்தை இன்று பின்பற்றுகிறீர்கள்?

கிறிஸ்துவுக்குள் வேற்றுமையில் ஒற்றுமை

வணிக ஆய்வாளர் ஃபிரான்சிஸ் எவன்ஸ் ஒருமுறை, 125 காப்பீட்டு விற்பனையாளர்களை ஆய்வு செய்து, அவர்களை வெற்றிகரமாக்கியது என்ன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் திறமை காரணமாய் அமையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மாறாக, வாடிக்கையாளர்கள் அரசியல், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தங்களோடு சரிநிகராய் இருப்பவர்களிடமே காப்பீடு எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர்கள் இதை ஹோமோபிலி என்றழைக்கின்றனர். அதாவது, நம்மைப்போல் இருப்பவர்களை விரும்பும் போக்கு என்று அர்த்தம்.

நம்மைப் போன்ற சிந்தை கொண்டவர்களை விரும்பும்போக்கானது, திருமணம் மற்றும் சிநேகிதர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செய்கைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதுபோன்ற சிந்தை ஆபத்தானது. நம்மைப் போன்ற சிந்தை மற்றும் எண்ணம் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயமானது இனம், அரசியல், பொருளாதாரம் என்று பல பிரிவுகளாய் பிரியக்கூடிய அபாயம் நேரிடுகிறது.

முதலாம் நூற்றாண்டில், யூதர்கள் யூதர்களோடும், கிரேக்கர்கள் கிரேக்கர்களோடுமே பழக்கம் வைத்திருந்தனர். பணக்காரனும் ஏழையும் சேருவதேயில்லை. ரோமர் 16:1-16இல் ரோமத் திருச்சபையில், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் (யூதர்கள்), எப்பனெத் (கிரேக்கன்), பெபேயாள் (அநேகருக்கு உதவிசெய்தவள் என்பதினால் ஐசுவரியவாட்டியாய் இருந்திருக்கக்கூடும்), மற்றும் பிலொலோகு (பொதுவாக அடிமைகளுக்கு கொடுக்கப்படும் பெயர்) என்று பல பெயர்களை பவுல் பட்டியலிடுகிறார். இந்த வித்தியாசமான மக்களை ஒன்றிணைத்தது எது? “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (கலாத்தியர் 3:28) என்னும் இயேசுவே அவர்களை ஒன்றிணைக்கிறார்.

நம்மைப் போன்ற சுபாவம் கொண்டவர்களோடு வாழ்வதும், திருச்சபைக்கு செல்வதும் இயல்பானது. ஆனால் இயேசு அதைக் கடந்துசெல்வதற்கு நம்மை உந்துகிறார். பல பிரிவுகளினாலே பிளவுபட்டிருக்கும் உலகத்தில், வித்தியாசமான மனிதர்களை ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாய் கூட்டிச் சேர்க்கிறார்.

கீழ்த்தள மக்கள்

எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும். 
  
அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளைப் படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது. 
  
மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும். 
  
கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27-31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24). நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் அனைவருக்கும் இன்றியமையாதது மதிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நம்பிக்கை ஜூன் 1965 இல், ஆறு டோங்கன் இன இளைஞர்கள் சாகசத்தைத் தேடி தங்கள் தீவிலிருந்து படகில் சென்றனர். ஆனால் முதல் இரவில் ஒரு புயல் அவர்களின் பாய் மரம் மற்றும் சுக்கானை உடைத்தபோது, அவர்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத 'அட்டா’ தீவை அடைவதற்கு முன்பு உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆனது. 
  
சிறுவர்கள் இணைந்து அட்டா தீவில் உயிர் பிழைக்க, சிறிய உணவுத் தோட்டம் அமைப்பது, மழைநீரைச் சேமிக்க மரத்தடிகளில் குழிபறிப்பது, தற்காலிக உடற்பயிற்சி கூடம் கட்டுவது போன்றவற்றில் இணைந்து பணியாற்றினார்கள். ஒரு சிறுவன் பாறையிலிருந்து விழுந்ததில் கால் முறிந்தபோது, மற்றவர்கள் குச்சிகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அதை குணப்படுத்த உதவினர். வாக்குவாதங்கள் கட்டாய சமரசத்துடன் ஒப்புரவாக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் பாடல் மற்றும் ஜெபத்துடன் துவங்கியது. அவர்கள் மரித்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாக வெளிவந்ததை எண்ணி அவர்களது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். 
  
முதல் நூற்றாண்டில் இயேசுவின் விசுவாசியாக இருப்பது ஒரு தனிமைப்படுத்தப்படும் அனுபவமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு, அடிக்கடி குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதால், நீங்கள் அலைந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒழுக்கத்துடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 4:7), ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் (வ. 8), வேலையைச் செய்ய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் (வவ.10-11) எனக் குறிப்பிடுகிறார். காலப்போக்கில், தேவன் அவர்களை அவர்களின் சோதனையின் மூலம் "சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்" (5:10) சோதனைக் காலங்களில், "விசுவாசம் மற்றும் நம்பிக்கை" நமக்கு தேவை. நாம் ஜெபித்து ஒற்றுமையுடன் வேலை செய்யும் போது, தேவன் நம்மையும் நிலைநிறுத்துவார். 

கோ-கார்ட் வாகனத்தை சரிசெய்தல்

எனது சிறுவயதில் நான் தங்கியிருந்த வீட்டின் கேரேஜ் பல நினைவுகளை எனக்கு வைத்திருக்கிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில், என்னுடைய தந்தை காரில் எங்களை கேரேஜிக்கு அழைத்துச் செல்வார். அங்கே உடைந்துபோன கோ-கார்ட் எனப்படும் ஒரு சிறிய ரக பந்தய கார் தென்பட்டது. அதை பழுதுபார்த்து புதுப்பிக்க எண்ணினோம். அதற்கு புதிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி என்று அதை புதுப்பித்து, நான் அதை பந்தய சாலையில் ஓட்ட முயற்சிக்கும்போது எனது தகப்பனார் வேறு ஏதாகிலும் வாகனம் அப்பக்கம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வார். இந்த சிறிய ரக வாகனத்தை ஓட்டுவதைக்காட்டிலும் பெரிய காரியங்களை அந்த கேரேஜில் நான் அனுபவித்தேன். ஆம்! ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு தேவனை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.  
தேவனுடைய மெய்யான சுபாவத்துடன் மனிதன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் (ஆதியாகமம் 1:27-28). அவர் “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” தகப்பனாய் வீற்றிருக்கிறார் (எபேசியர் 3:14-15). பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சுபாவத்தினால் அல்லாமல், பிதாவாகிய தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு உகந்த மாதிரியாய் தேவன் திகழ்கிறார்.  
என்னுடைய தகப்பன் எல்லாவிதத்திலும் நேர்த்தியானவர் இல்லை. ஒவ்வொரு தகப்பன் தாயைப் போல அவரும் சிலவேளைகளில் பரலோகத்தை பிரதிபலிக்க தவறலாம். ஆனால் அந்த கேரேஜில் இருந்த அந்த கோ-கார்ட் பந்தய காரை சரிசெய்வதில் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் பார்த்தபோது, தேவனுடைய குணாதிசயங்களை என்னால் நினைவுகூர முடிந்தது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.