எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஃபோ ஃபாங் சியாகட்டுரைகள்

அந்தக் கணங்களை பொக்கிஷமாகச் சேகரித்து வையுங்கள்

சூ டாங்க்போ என்பவர் சீனாவிலுள்ள மிகப் பெரிய கவிஞரும், கட்டுரை எழுதுபவரும் ஆவார். அவர் நாடு கடத்தப்பட்டிருந்த போது, முழு நிலவைப் பார்த்த போது, தன்னுடைய சகோதரனை நினைத்து, ஒரு பாடல் எழுதினார். “நாம் மகிழ்ச்சியடைகின்றோம் வருத்தப்படுகின்றோம், சேகரிக்கின்றோம் விட்டுவிடுகின்றோம், அப்படியே நிலாவும் வளர்கின்றது, தேய்கின்றது. காலம் செல்லும் போது, எதுவுமே நேர்த்தியாக இருப்பதில்லை” என்று எழுதினார். “நாம் நேசிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாக, இந்த அழகிய காட்சியை நாம் இருவரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ரசிக்கின்றோம்” என்று எழுதினார்.

அவர் எழுதிய இப்பாடலின் கருத்தை நாம் பிரசங்கி புத்தகத்தில் காண்கின்றோம். போதகர் என்று அழைக்கப்படும் அதன் ஆசிரியர் (1:1), “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு,………………..தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு (வ.3:4-5) என்பதைக் காண்கின்றார். இரண்டு எதிர் எதிரான காரியங்களை இணைத்துக் கூறும் ஆசிரியர், சீன கவிஞரைப் போன்று, எல்லா நல்ல காரியங்களும் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும் என்று கூறுகின்றார்.

இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல, என்பதற்கு அடையாளம், தேய்பிறை மற்றும் வளர் பிறை என்கின்றார். தேவன் உருவாக்கிய இந்த உலகத்தில் அனைத்துப் படைப்புகளையும் தன் வார்த்தையால் உருவாக்கினார். தேவன் தான் படைத்த  யாவற்றையும் பார்க்கின்றார், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (வ.11).

வாழ்வில் எது நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. சில வேளைகளில் வேதனை தரும் பிரிவுகளாலும் நிறையலாம். ஆனால் அனைத்துமே தேவனுடைய கண்காணிப்பில் தான் நடைபெறுகின்றது என்பதை மனதில் கொள்வோம். நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியோடு தொடர்வோம், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கெட்ட காரியங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வோம், ஏனெனில், நம்முடைய அன்பு தேவன் நம்மோடு இருக்கின்றார்.

மீட்கப்பட வேண்டும்

ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான்    சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.

ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25).  இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது  மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம்,  தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான்,  தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.

இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய்         அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.

சந்தேகமும் விசுவாசமும்

மேத்யூ கடுமையான தலை வலியினால் விழித்துக் கொண்டான், இது ஒரு வகை ஒற்றைத் தலைவலியாக இருக்கும் என எண்ணினான். ஆனால் அவன் படுக்கையை விட்டு எழுந்ததும் தரையில் சரிந்தான். அவன் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட போது, மருத்துவர்கள் அவனை பக்க வாதம் தாக்கி இருக்கிறது என்றனர், மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்றபின்பு, அவர் சிந்திக்கும் மற்றும் பேசும் ஆற்றலைத் திரும்பப் பெற்றார், ஆனால் மூட்டு வலியோடு தான் நடக்க முடிகின்றது. விரக்தியினால் அடிக்கடி பாதிக்கப் பட்டாலும், யோபு புத்தகம் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

யோபு தன்னுடைய செல்வம் அனைத்தையும், தன்னுடைய பிள்ளைகளையும் ஒரே நாளில் இழ   ந்தான். இந்த அதிர்ச்சி தரும் செய்திகளின் மத்தியிலும், அவன் முதலாவது தேவனை நம்பிக்கையோடு பார்த்தான், அவரே எல்லாவற்றையும் தந்தவர் என்று அவரைத் துதித்தான். குழப்பத்தின் மத்தியிலும் சர்வ வல்ல தேவனைப் போற்றினான் (யோபு 1:21). அவனுடைய உறுதியான விசுவாசம் நம்மை வியக்கச் செய்கின்றது. ஆனாலும், யோபு விரக்தியோடு போராடினார். அவன் சுகவீனமான போது (2:7) தான் பிறந்த நாளைச் சபித்தான் (3:1). தன்னுடைய வேதனையிலும், அவன் தன் நண்பர்களோடும் தேவனோடும் உண்மையாய் இருந்தான். கடைசியாக, நன்மையும் தீமையும் தேவனுடைய கரத்திலிருந்து வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டான் (13:15; 19:25-27).

நம்முடைய வேதனையின் மத்தியில், நாம் நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையேயும், சந்தேகத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையேயும் ஊசலாடிக் கொண்டிருக்கலாம். நம்முடைய துன்ப நேரத்தில் ஊக்கம் இழந்தவர்களாக அல்ல, நம்முடைய கேள்விகளோடு தேவனிடம் வரும்படி நம்மை அழைக்கின்றார். சில வேளைகளில் நம்முடைய விசுவாசம் குன்றிப் போனாலும், என்றும் உண்மையுள்ள தேவன் பேரில் நம்பிக்கையோடிருப்போம்.

தேவனைக் குறித்த பசி

இயேசுவைப் புதிதாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வேதாகமத்தை வாசிப்பதற்கு மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தன் கண்பார்வையையும், இரண்டு கரங்களையும் ஒரு வெடி விபத்தில் இழந்தார். ஒரு பெண் தன்னுடைய உதடுகளின் உதவியால் பிரெயில் எழுத்துக்களை வாசிக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட போது, அவரும் அதனைச் செய்ய முயற்சித்தார், ஆனால் உதடுகளின் முனையிலுள்ள உணர்வு நரம்புகளும் செயல் இழந்து விட்டன என்பதை அப்பொழுது கண்டுபிடித்தார். கடைசியாக பிரெயில் எழுத்துக்களை நாவின் நுனியினால் உணரமுடிகிறது என்பதைக் கண்ட போது, மிகவும் மகிழ்ந்தார்! வேதாகமத்தை வாசிக்க ஒரு வழியைக் கண்டு கொண்டார்.

தேவனுடைய வார்த்தையைப் பெற்ற போது, எரேமியா தீர்க்கதரிசி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார், யூதா ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைத் தள்ளிவிட்டதைப் போலல்லாமல் (எரே.8:9) எரேமியா, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே.15:16) என்கின்றார். எரேமியா கீழ்படிந்தார், அவருடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியடை ந்தார். ஆனாலும் அவருடைய கீழ்ப்படிதலின் நிமித்தம், தன்னுடைய சொந்த ஜனங்களாலேயே துன்புறுத்தப்பட்டார் (15:17).

நம்மில் சிலரும் இத்தகைய அநுபவங்களைச் சந்தித்திருக்கலாம். நாம் வேதாகமத்தை மகிழ்ச்சியோடு வாசிக்கின்றோம், ஆனால் தேவனுக்குக் கீழ்படியும் போது, துன்பங்களுக்கும், தள்ளிவிடுதலுக்கும் ஆளாகின்றோம். எரேமியாவைப் போன்று, நம்முடைய குழப்பங்களை தேவனிடம் கொண்டு வருவோம், தேவன் எரேமியாவிற்கு கொடுத்த வார்த்தையை மீண்டும் கூறி பதிலளிக்கின்றார். தேவன் அவரை தீர்க்கதரிசியாக அழைத்த போது கொடுத்த வார்த்தைகளை மீண்டும் கூறுகின்றார் (வச. 19:21; 1:18-19). தேவன் தன்னுடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நினைவுபடுத்துகின்றார், நாமும் இந்த நம்பிக்கையோடு இருப்போம், அவர் உண்மையுள்ளவர், ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டார்.

வைக்கோல் போர் ஜெபங்கள்

இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிக ஜனங்களைத் தேவன் அனுப்பும்படி சாமுவேல் மில்ஸ் என்பவரும், அவருடைய நான்கு நண்பர்களும் அடிக்கடி கூடி ஜெபித்து வந்தனர். 1806ஆம் ஆண்டு, ஒரு நாள், அவர்கள் தங்கள் ஜெபத்தை முடித்து விட்டுத் திரும்பியபோது, ஒரு பெரிய புயல் காற்றில் அகப்பட்டனர். எனவே அவர்கள் ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதிலிருந்து அவர்களுடைய வாராந்திர ஜெபக்கூடுகை “வைக்கோல் போர் ஜெபக்கூடுகை” என்றழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலகளவில் செயல்படும் ஓர் இயக்கமானது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபக்குழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவில் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நம் ஜெபத்தின் மூலம், தேவன் செயல்படக் கூடியதை அது நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. 

அவருடைய பிள்ளைகள் ஒரு பொதுவான நோக்கத்தோடு தன்னிடம் வரும்போது, நம்முடைய பரலோகத் தந்தை வெகுவாக மகிழ்ச்சியடைகின்றார். அது, ஒரு குறிப்பிட்ட பாரத்தை குடும்ப நபர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு, ஒரு மனதோடு குடும்ப ஜெபத்தில் வருவது போலவுள்ளது.

அதிகமான துன்பங்களைச் சந்தித்த காலத்தில், மற்றவர்களின் ஜெபத்தின் மூலம் தேவன் தனக்கு எப்படி உதவினார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகின்றார். “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” (2 கொரி. 1:10-11) தேவன் நம்முடைய ஜெபங்களை, சிறப்பாக நம்முடைய குழு ஜெபங்களை , இவ்வுலகில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுத்துகின்றார். 

நாம் அநேகராகக் கூடி ஜெபிக்கும் போது, தேவன் தரும் நன்மைகளுக்காக நாம் சேர்ந்து மகிழ்வோம். நம்முடைய அன்புத் தந்தை, நாம் அவரிடம் வரும்படி காத்திருக்கின்றார், ஏனெனில் நாம் நினையாத வழிகளில், நம்மூலம் அவர் கிரியை செய்ய முடியும்.

 

கண்ணுக்குத் தெரியாத உண்மைகள்

டிஸ்கவர் பத்திரிகையின் பதிப்பாசிரியரான ஸ்டீபன் காஸ், தன் அன்றாட வாழ்வில் நிலவுகிற கண்ணுக்குத் தெரியாத உண்மைகளை பற்றி சிந்திக்கத் தீர்மானித்தார். நியூ யார்க் நகரிலிருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்துசென்றபோது, ‘ரேடியோ அலைகளைக் காணமுடிந்தால், பல்உருகாட்டி (கலைடோஸ்கோப்பு) ஜொலிப்பதுபோல இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேல்பகுதி ஜொலித்து, நியூயார்க்க நகரத்தையே ஒளிவெள்ளமாக்குவது தெரியும்’ என்று யோசித்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் ரேடியோ மற்றும் டிவி அன்டெனாக்கள் மொய்த்தவண்ணம் இருக்கும். ரேடியோ சமிக்ஞை, டிவி சமிக்ஞை, வைஃபை என தன்னைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்தவியல் புலம் இருந்ததை அவர் உணர்ந்திருந்தார்.

கண்ணுக்குத் தெரியாத ஓர் உண்மை பற்றி, எலிசாவின் வேலைக்காரனும்கூட ஒருநாள் காலையில் அறிந்து கொண்டான். காலையில் எழுந்து வந்தவன், சீரியாவின் படைகள் தன்னையும் தன் எஜமானையும் சுற்றி வளைத்திருப்பதைக் கண்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் போர்க்குதிரைகளில் ஏறியிருந்த வீரர்கள்தாம் தென்பட்டார்கள்! (2 இரா. 6:15). வேலைக்காரன் நடுங்கினான், ஆனால் எலிசா நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனென்றால், தங்களைச் சுற்றிலும் தூதர்களுடைய சேனைகள் இருந்ததை அவர் கண்டார். “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று சொன்னார் (வச. 16). பிறகு, எதிரிகள் வளைக்கப்பட்டிருப்பதையும், எல்லாம் ஆண்டவரின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன் வேலைக்காரனும் பார்க்கும்படியாக அவனுடைய கண்களைத் திறக்கவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார் (வச. 17).

முற்றிலும் முடங்கிப்போய், உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வதையும் மறக்கவேண்டாம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்”
(சங். 91:11).

மாற்றம் வரலாம்

ஒரு சனிக்கிழமை மாலையில் எங்கள் ஆலயத்திலுள்ள சில இளைஞர்கள் பிலிப்பியர் 2:3-4ல் குறிப்பிட்டுள்ளவற்றைக் குறித்து ஒருவரையொருவர் சில கடினமான கேள்விகளைக் கேட்கும்படி கூடி வந்திருந்தனர். “நீங்கள் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” சில கடினமான வாதங்கள் என்னவென்றால். எவ்வளவு அடிக்கடி நீ மற்றவர்கள் மீது கரிசனையுடையவனாயிருக்கின்றாய்? மற்றவர்கள் உன்னைக் குறித்து எப்படி விமர்சிக்கின்றனர்? பெருமையானவனென்றா? தாழ்மையானவனென்றா? ஏன்?

நான் அதனை கவனித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய வெளிப்படையான பதில்கள் என்னுடைய ஆர்வத்தை ஈர்த்தன. இளைஞர்கள் தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களை மாற்றிக் கொள்வது கடினமான காரியம் என ஒத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் மாற வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது. ஓர் இளைஞன், “தன்னலம் என்பது என்னுடைய இரத்தத்திலேயேயுள்ளது” எனப் புலம்பினான்.

இயேசு கிறிஸ்துவின் ஆவி நமக்குள்ளே வாசம் பண்ணினால், அவர் மூலமாக நமக்குள்ளேயுள்ள தன்னலமான எண்ணங்கள் மறைந்து, பிறருக்குப் பணி செய்பவராக நம்மை மாற்ற முடியும். எனவேதான் பவுல், பிலிப்பி சபையினரிடம் தேவன் அவர்களுக்குச் செய்துள்ளவற்றையும், அவர்களை தேவன் மாற்றியுள்ளதையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கின்றார். தேவன் அவர்களை கிருபையாக ஏற்றுக் கொண்டார். தமது அன்பினால் அவர்களைத் தேற்றினார். அவர்களுக்கு உதவும்படி பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் கொடுத்துள்ளார் (பிலி. 2:1-2). அவர்களும், நாமும், நம்மைத் தாழ்த்துவதேயன்றி, வேறெவ்வாறு அந்த கிருபையை பெற பதில் செய்ய முடியும்?

ஆம், நம்முடைய மாற்றத்திற்குக் காரணமானவர் தேவனே. அவராலேயே நம்மை மாற்றமுடியும். ஏனெனில் தேவனே நம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (வச. 13) நாமும் நம்மீது கவனம் செலுத்துவதை விட்டு, தாழ்மையோடு பிறருக்குப் பணிசெய்வோம்.

உன்னால் எதை விட முடியவில்லை?

“உன்னால் விட முடியாத ஒன்று எது?" என வானொலி தொகுப்பாளர் கேட்டார். கேட்போர் சிலர் ஆர்வத்தோடு பதிலளித்தனர். சிலர் தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர். ஒரு கணவன், மரித்துப்போன தன் மனைவியின் நினைவுகளைக் குறிப்பிட்டார், வேறுசிலர் இசையின் மூலம் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவையும், ஒரு தாயாகும் கனவையும் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைப் பொக்கிஷமாக வைத்துள்ளோம். ஒரு நபர், ஒன்றை நிறைவேற்றல், ஒன்றை அடைதல் என நாம் ஏதோ ஒன்றை விட முடியாமல் வைத்திருக்கின்றோம்.

ஓசியா புத்தகத்தில். தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனங்களை கைவிடுவதில்லையெனவும், அவர்களைத் தனது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றார். இஸ்ரவேலின், நேச மணவாளனான தேவன் அவளுக்குத் தேவையான யாவற்றையும், நிலம், ஆகாரம், தண்ணீர், உடை மற்றும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேலோ வேசித்தனம் பண்ணி தேவனைப் புறக்கணித்து தங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வேறு இடத்தில் தேடினர். தேவன் அவளை எவ்வளவுக்கு அதிகமாய் தேடினாரோ அவ்வளவு தூரமாய் அவள் சோரம் போனாள் (ஓசியா 11:2) எப்படியிருந்தாலும், அவள் தேவனை மிகவும் வேதனைப்படுத்தினாலும் தேவன் அவர்களைக் கைவிடுவதில்லை (வச. 8). அவர் இஸ்ரவேலை சீர்ப்படுத்தி, விடுவிப்பார். அவருடைய விருப்பமெல்லாம் அவளோடு தன்னுடைய உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதே (வச. 11).

இன்று தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த உறுதியைத் தருகின்றார். அவர் நம்மீது வைத்துள்ள அன்பு நம்மை ஒருபோதும் கைவிடும் அன்பல்ல (ரோம. 8:37-39). நாம் அவரை விட்டு அலைந்து திரிந்தோமேயானால், அவர் நாம் மீண்டும் அவரிடம் வரும்படி ஏங்குகின்றார். அவர் நம்மை சீர்ப்படுத்தும் போது, நாம் தேற்றப்படுவோம், அதுவே அவர் நம்மை சேர்த்துக் கொள்வதின் அடையாளம், அவர் நம்மைத் தள்ளிவிடுபவரல்ல. நாம் அவருடைய பொக்கிஷம், அவர் நம்மைக் கைவிடுவதில்லை.