எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

புகழ்ச்சியைச் செலுத்து

பொதுவாக, ஒரு வரைபடத்தைப் பார்த்தால் அதன் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் கணிக்க முடியும். நம்முடைய சிந்தனையில், நாம் வசிக்கும் வீட்டை உலகத்தின் மையமாகக் கருதுவோம். எனவே நாம் நம் இருப்பிடத்தை மையத்தில் புள்ளியிட்டு குறித்துக்கொண்டு, அதிலிருந்து மற்றவற்றை வரைய ஆரம்பிப்போம். அருகிலுள்ள பட்டணங்களைக் குறிப்பிட, வடக்கே 50 மைல் தொலைவிலுள்ளது என்றோ, தெற்கே அரை நாள் வாகனத்தில் செல்லும் தொலைவு என்றோ அனைத்தையும் நாமிருக்கும் இடத்தைக் கொண்டே குறிப்பிடுவோம். பழைய ஏற்பாட்டில் சங்கீதங்களெல்லாம், புவியில் தேவனுடைய இருப்பிடமாகக் கருதப்படும் எருசலேமை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. எனவே வேதாகமத்தின் படி உலகின் மையம் எருசலேம் ஆகும்.

எருசலேமைப் புகழ்ந்து பாடும் அநேக சங்கீதங்களில், சங்கீதம் 48ம் ஒன்று. இந்த “தேவனுடைய நகரம், அவருடைய பரிசுத்த பர்வதம்” “வடிப்பமான ஸ்தானமும், சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது” (வச. 1-2). “அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்”, “தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்” (வ.3,8). தேவனுடைய புகழ்ச்சி எருசலேம் ஆலயத்தில் ஆரம்பித்து, “பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது” (வச. 9-10).

நீ இதனை எருசலேமிலிருந்து வாசித்தால் தான், நீ வேதாகம அடிப்படையில் உலகின் மையத்தில் இருப்பாய். ஆனாலும் நீ இருக்கிற இடம் மிக முக்கியமானது, ஏனெனில் அவருடைய புகழ்ச்சி “ பூமியின் கடையாந்திரங்கள் பரியந்தமும்” (வச. 10) எட்டும் வரை தேவன் ஓய்ந்திருப்பதில்லை. தேவன் தன்னுடைய இலக்கினை அடைவதில் நீயும் பங்கு பெற விரும்புகின்றாயா? தேவனுடைய பிள்ளைகளோடு சேர்ந்து, ஒவ்வொரு வாரமும் அவரை ஆராதனை செய், ஒவ்வொரு நாளும் அவருடைய மகிமைக்கென வாழ். நம்மையும், நமக்குள்ள யாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்கும் போது, அவருடைய புகழ்ச்சி “பூமியின் கடையாந்திரங்கள்” மட்டும் எட்டும்.

போகிறது, போகிறது, போயேவிட்டது

நகைச் சுவை மிக்க ஓவியர் பாங்க்ஸி, மற்றுமொரு குறும்புதனத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிறுபெண் பலூன் ஒன்றினை வைத்திருப்பது போன்று, அவர் வரைந்த படம், லண்டனிலுள்ள சோத்பை என்ற, ஏலம் விடப்படும் இடத்தில், ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. ஏலம் விடுபவர் “விடப்பட்டது” என்று சத்தமாகக் கூறிய மறு வினாடியில், ஓர் எச்சரிக்கை மணி அடித்தது, சட்டத்தில் இணைக்கப் பட்டிருந்த அ ந்த படம், துண்டுகளாக வெட்டும் கருவியின் வழியே நழுவி கீழே இறங்கியது. ஏலம் எடுக்க வந்திருந்தவர்களின் மத்தியில் இருந்த பாங்க்ஸி, தன்னுடைய மிகச் சிறந்த படம் அழிகிறதே என, “போகிறது, போகிறது, போயேவிட்டது” என்று கத்தினார்.

பாங்க்ஸி தன்னுடைய குறும்புதனத்தை செல்வந்தர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார். அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை. செல்வத்துக்குள்ளும் அநேக குறும்புத்தனங்கள் நிறைந்துள்ளன. தேவன், “இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” (வ.4-5) என்கின்றார்.

உலகப் பொருட்கள் பணத்தைப் போன்று அழிந்து போகக் கூடியன. அவற்றைச் சம்பாதிக்க, நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனாலும் அவற்றை இழக்க அநேக வழிகள் உள்ளன. தவறான முதலீடுகள், பணமதிப்பு குறைகிறது, நாம் செலவழித்ததைக்  கட்டவேண்டியுள்ளது, திருடர்கள் திருடுகின்றார்கள், நெருப்பும், வெள்ளமும் அழித்து விடுகின்றது, இவற்றையெல்லாம் தாண்டி பணத்தைச் சேமித்து வைத்திருந்தால், தொடர்ந்து செலவுகள் வந்து கொண்டேயிருக்கிறது.. கண் மூடி விழிப்பதற்குள் உன்னுடைய வாழ்வு போய்க்கொண்டேயிருக்கிறது, இன்னும் போய் கொண்டேயிருக்கிறது, போயே விட்டது. 

என்ன செய்வது? தேவன் மேலும் சில வார்த்தைகளைச் சொல்கின்றார். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு, நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (வ.17-18). உன் வாழ்வை இயேசுவின் மேல் கட்டு, அவரே உன்னை என்றென்றும் காக்க வல்லவர்.

எதை நோக்கிச் செல்கின்றாய்?

வடக்குத் தாய்லாந்திலுள்ள ஓர் இளைஞர் கால்பந்து அணியினர், ஒரு குகையை ஆராயத் திட்டமிட்டனர். குகைக்குள் ஒரு மணி நேரம் செலவிட்ட பின், திரும்பினர். அவர்கள் நுழைவாயிலை அடைந்த போது, அங்கு வெள்ள நீர் நிரம்பியிருந்ததைக் கண்டனர். வெள்ள நீர் உயர, உயர அவர்களும் குகைக்குள்ளே  இன்னும் வெகு தூரம் சென்றனர். நாட்கள் கடந்தன, கடைசியாக, அவர்கள் குகைக்குள்ளே இரண்டு மைல்களுக்கப்பால் (நான்கு கிலோமீட்டர்) சிக்கிக் கொண்டனர். இரண்டு வாரங்களுக்குப் பின், அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். எப்படி அவர்கள் இந்த நம்பிக்கையற்ற இடத்தில் மாட்டிக்கொண்டனர் என்று அநேகர் ஆச்சரியப்பட்டனர். பதில்: ஒவ்வொரு அடியாக பின் தள்ளப்பட்டனர்.

தாவீது, தனக்கு உண்மையாயிருந்த போர்வீரனான உரியாவைக் கொன்ற போது, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய நாத்தான், அவனை எதிர்கொள்கின்றான். “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகக்” (1 சாமு. 13:14) கண்ட ஒரு மனுஷன் எப்படி கொலைகாரனானான்? ஒவ்வொரு அடியாக, நடந்தது. தாவீது, ஒரே நாளில், ஒன்றுமில்லாமையிலிருந்து கொலைகாரனாகிவிடவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டான். கொஞ்சக்காலமாக, அவனுடைய ஒவ்வொரு தவறான தீர்மானமும், அவனை ஒரு தவறிலிருந்து, மற்றொரு தவறுக்குள் தள்ளியது. அது இரண்டாம் முறை பார்த்ததில் ஆரம்பித்தது. பின்னர் அது காமப்பார்வையாக மாறியது. அவன் தன்னுடைய அரச அதிகாரத்தை பயன் படுத்தி, பத்சேபாளை அழைக்கின்றான், அவள் கர்ப்பம் தரித்ததை மறைப்பதற்காக, யுத்தத்தில் முன்னணியிலிருக்கும் அவளுடைய கணவனை அழைத்தனுப்புகின்றான். தன்னுடைய படைகளெல்லாம் யுத்தத்திலிருக்கும் போது, தான் மட்டும் தன்னுடைய மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை, தாவீது அவனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்.

நாம் கொலை குற்றத்திற்கு ஆளாவதும், குகைக்குள் அகப்பட்டுக்கொள்வதும் நம்முடைய சொந்த திட்டமில்லை. நாம் இயேசுவை நோக்கி செல்கின்றோமா அல்லது பிரச்சனையை நோக்கி செல்கின்றோமா என்பதே காரணம். பெரிய பிரச்சனைகள் ஒரே நாள் இரவில் உருவாவதில்லை. அவை நமக்குள் படிப் படியாக, ஒவ்வொரு அடியாக நுழைகின்றது.

உன்னுடைய மதிப்பென்ன?

வல்லமையான எழுத்தாளரான கெய்ட்லின்,  தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துப் போராடிய போது ஏற்பட்ட மன அழுத்தத்தை விவரிக்கின்றார். அவளுடைய உடல் சார்ந்த போராட்டத்தைக் காட்டிலும், மனதின் போராட்டம் மிகவும் ஆழமாக இருந்தது. அது உண்மையென்பதையும் உணர்ந்தாள். “எத்தனை விரும்பத்தகாதவள் நான், நீ பழக விரும்பும் பெண்ணாக நான் இல்லை.” என்றாள். தான் நேசிக்கப்படத் தகுந்தவளல்ல, பயன் படுத்தி விட்டு, தூக்கி எறியப் பட, நான் விரும்பவில்லை எனவும் கூறினாள்.

தேவன் நம்மை புரிந்து கொள்கின்றார். அவர் அன்போடு இஸ்ரவேலரைப் பாதுகாத்தார், ஆனால் அவர்களோ அவருடைய மதிப்பைக் குறைத்தனர். “எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்” (சகரி. 11:12) இது, ஓர் அடிமையின் மதிப்பு. வேறொருவனுடைய கவனக்குறைவால், எஜமானன் ஒருவனின் அடிமை மரித்துப் போனால், அதற்கு ஈடாக, அவன் முப்பது சேக்கல் நிறை வெள்ளியைக் கொடுக்க வேண்டும் என்பதாக யாத்திராகமம் 21:32ல் காண்கின்றோம்.இந்த மிகக் குறைந்த மதிப்பினை தேவனுக்குக் கொடுத்து, தேவனை அவமதித்தனர். அப்பொழுது தேவன் சகரியாவிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்து விடு, இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு,” என்று தேவன் இளப்பமாகக் கூறுகின்றார் (சகரி. 11:13).

இயேசுவின் நண்பன், அவருக்கு துரோகம் மட்டும் இழைக்கவில்லை, அவமானமும் அடையச் செய்தான். யூத மதத் தலைவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தனர், எனவே அவர்கள் யூதாஸுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தனர், ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய மிகக் குறைந்த விலை மதிப்பைக் கொடுத்தனர். அவன் அதை வாங்கிக் கொண்டான் (மத். 26:14-15; 27:9) யூதாஸ் இயேசுவை மிகக் குறைவாக மதிப்பிட்டான், அவரை கீழ்த்தரமான தொகைக்கு விற்றுப் போட்டான்.

இயேசுவையே தரக்குறைவாக மதிப்பிட்ட மக்கள், உன்னையும் தரக்குறைவாக மதிப்பிடும் போது ஆச்சரியப்பட வேண்டாம். மற்றவர்கள் உனக்கு தரும் மதிப்புமல்ல, நீ உன்னை நினைத்து வைத்திருக்கும் மதிப்புமல்ல, உன்னுடைய மதிப்பு, தேவனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. உன்னுடைய மதிப்பை, தன்னுடைய ஜீவனைக் கொடுக்கின்ற அளவுக்கு விலையேறப் பெற்றதாக தேவன் கருதுகின்றார்.

அவன் கற்றுக் கொண்டான்

போதகர் வாட்சன் ஜோன்ஸ், தன்னுடைய இளம்வயதில், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதை நினைத்துப் பார்க்கின்றார். அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய தந்தை அவனுக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவன் அருகிலிருந்த முற்றத்தில், சிறுமிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் தன் தந்தையிடம்,” அப்பா, நான் இதனைக் கற்றுக் கொண்டேன்” என்றான். ஆனால் அவன் கற்றுக் கொள்ளவில்லை அவனுடைய சைக்கிளை,அவனுடைய தந்தை உறுதியாக பிடித்திருப்பதாலேயே அவனால் ஓட்ட முடிந்தது என்பதை அவன் பின்புதான் தெரிந்து கொண்டான் .அவன் நினைத்திருந்தபடி, அவன் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.

நம்முடைய பரலோகத் தந்தையும், நாம் நன்கு முதிர்ச்சி பெற வேண்டுமென விரும்புகிறார்” மேலும், நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும்வரைக்கும் சிலரை நம்மை வழிநடத்தும் படி ஏற்படுத்துகின்றார் (எபே. 4:11-13). ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது, சரீர வளர்ச்சியிலிருந்து வேறுபட்டது .பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளை, பெற்றோரின் உதவியின்றி, தனித்து செயல்படக்கூடிய திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென வளர்க்கின்றனர். ஆனால் நம்முடைய பரிசுத்த தந்தை, ஒவ்வொரு நாளும் நாம் அவரையே சார்ந்தவர்களாக வளர வேண்டுமென விரும்புகின்றார். 

 “ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது” என்று பேதுரு தன்னுடைய கடிதத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் கடிதத்தை முடிக்கும் போது, “ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” என்று வலியுறுத்திக் கூறுகின்றார் (2 பேது. 1:2; 3:18). முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள், இயேசுவைச் சார்ந்திருத்தலை, ஒருபோதும் விட்டு விடுபவர்களல்ல.

“ நம்மில் சிலர், நம்முடைய வாழ்க்கையாகிய வண்டியின் கைப்பிடியை உறுதியாகப் பற்றியிருக்கும் இயேசுவின் கரத்தை தட்டி விடுவதற்கு மிகவும் ஆவலாயிருக்கிறோம்” என்று வாட்சன் எச்சரிக்கின்றார். நாம் நிலை தடுமாறி, விழ ஏதுவாகும் போது, நம்மைத் தாங்கி, தூக்கி, அணைத்துக் கொள்ள தயாராக இருக்கும் அவருடைய வலிமையான கரங்களைத் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். நாம் கிறிஸ்துவை சார்ந்து கொள்ளாமல், நம்மால் வளர முடியாது. இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் நம்முடைய வேர்கள் ஆழமாகச் சென்றால் தான், நாம் நன்கு வளர முடியும்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

இறுக்கமான வட்டங்கள்

என்னுடைய வகுப்புத்தோழன் ஒருவன் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு சடைநிறைந்த வயதான நாயைப் பரிசளித்தார். அது குட்டிகள் போடமுடியாத அளவிற்கு வயதானதாக இருந்தது. ஆனால், வெகுவிரைவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை என்னவெனில், அந்த நாயானது, ஒரு கூண்டுக்குள்ளேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தது என்பதேயாகும். அது தன்னுடைய இறுக்கமான வட்டங்களுக்குள்ளே மட்டும் தான் நடக்கும். அது நீளமான பாதையில் ஓடமுடியாது. ஒரு பெரிய விளையாட்டு ஸ்தலத்தில்கூட அது தன்னை வேலியடைத்ததாகவே நினைத்துக்கொள்ளும்.

ஆதிக்கிறிஸ்தவர்களில் பல யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமானங்களினாலே வேலியடிக்கப்பட்டிருந்தனர். நியாயப்பிரமானமானது நல்லதாக இருந்தாலும், பாவத்திலிருந்து அவர்களை உணர்வடையச்செய்து இயேசுவுக்கு நேராகத் திருப்புவதாக இருந்தாலும் (கலா. 3:19-25), இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் சுயாதீனத்தினாலும், கர்த்தருடைய கிருபையினாலும் உண்டான புதிய விசுவாசத்தின்படியே வாழவேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். அவர்கள் தயங்கினார்கள். இந்த எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்மையாகவே விடுதலையாக்கப்பட்டிருந்தனரா?

நமக்கும் இவ்விதமான பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை நாம் கடுமையான சட்டத்திட்டங்களுள்ள திருச்சபையில் வளர்ந்து இருக்கலாம். அல்லது நாம் கடுமையான ஒழுக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், இப்பொழுது நாம் கிறிஸ்துவினால் நமக்குக் கொடுக்கப்படுகிற சுதந்திரத்தை தழுவிக்கொள்ளவேண்டிய நேரமாகும் (கலா. 5:1). இயேசுவானர் நம்மை விடுதலையாக்கி, அவருக்கு நாம் அன்பினாலே கீழ்ப்படிய வேண்டுமென விரும்புகிறார் (யோவா. 14:21). மற்றவர்களுக்கு அன்பினாலே சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறார் (கலா. 5:13). மிகப்பெரிய சந்தோஷமும், அன்பும், 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவா. 8:36) என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

லிங்கனின் பாக்கெட்

1865ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஃபோர்ட்; தியேட்டரில் சுடப்பட்ட இரவு, அவருடைய பாக்கெட்டில் கீழ்க்கண்டவைகள் இருந்தன. இரண்டு மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ்ஸை சுத்தம் செய்யும் திரவம், ஒரு பாக்கெட் கத்தி, ஒரு கடிகாரம், ஒரு கைக்குட்டை, ஒரு தோல் பர்ஸ் அதனுள்ளே 5 டாலர்கள். சங்கத்தின் பணம், 8 செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். அதோடு அவரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டுகிற பல பாராட்டுதல்களும் இருந்தன.

தலைவருடைய பாக்கெட்டிலுள்ள சங்கப்பணம் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரைக்குறித்த நல்ல செய்திகளைக் குறித்து நான் அறிந்தவனாதலால் சந்தேகப்படவில்லை. எல்லாருக்கும் உற்சாகப்படுத்துதல் அவசியம், அதுவும் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெருந்தலைவர்களுக்கும். ஒரு வேளை தன்னுடைய மரணத்திற்கு சற்று முன்பு அந்த பாராட்டு செய்திகளைத் தன் மனைவிக்கு அவர் வாசித்துக் காண்பித்திருக்கக் கூடும்.

யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எல்லாருக்குமே! உங்களைச் சுற்றிப்பாருங்கள். உங்கள் கண்ணுக்கெட்டும் வரை உள்ளவர்கள் அவர்கள் தோற்றத்திலிருப்பதை விட நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் எல்லாருமே தோற்றுப்போனவர்கள், பல குறைபாடுகளைக் கொண்டவர்கள்.

நாம் எல்லாரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, 'நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்" (ரோம. 15:2) என்ற வசனத்தைப் போலவும் நல்ல வார்த்தைகளை பேசதீர்மானித்து, 'இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்." (நீதி. 16:24) என்ற வசனத்தைப் போலவும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட வசனங்களை ஒரு தாளிலோ அல்லது கைப்பேசியிலோ மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளும்படி நாம் முயல்வோமா? அவ்வாறு செய்வோமாயின், நாம் இயேசுவைப்போல மாறி தன்னைத்தானே பிரியப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்காக வாழ்பவராக மாறிவிடுவோம் (ரோம. 15:3).

எல்லாம் எதற்கும் பிரயோஜனமில்லை

ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமைப்படுவது வருத்தகரமானது, துயர்தரக்கூடியது. ஹெராயினின் அளவுக்கேற்ப உடலும் பழகிவிடுவதால், அதேயளவு போதை கிடைப்பதற்கு ஹெராயினின் அளவை அதிகரிக்கவேண்டிய அவசியம் உண்டாகிவிடுகிறது. ஓரளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும்போது, அது உயிரைப் பறித்துவிடுகிறது. அளவுக்கதிகமாக ஹெராயின் உட்கொண்டு யாராவது மரித்துவிட்டதாக ஹெராயின் அடிமைகள் கேள்விப்படும்போது, உடனே அவர்களுக்கு பயம் உண்டாவதில்லை; மாறாக “அது எங்கே கிடைக்கிறது?” என்று விசாரிப்பார்கள்.

இந்தக் கீழ்த்தரமான போக்குபற்றி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் எனும் புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ்  எச்சரித்திருக் கிறார். பாவச்சோதனையை சாமர்த்தியமாகக் கொடுப்பது எப்படியென ஒரு பிசாசு விளக்கம் கொடுப்பதுபோல அந்தப் புத்தகத்தில் கற்பனைசெய்து எழுதியிருப்பார். இன்பம் தருகிற ஏதாவது விஷயத்தில் முதலில் ஈடுபட வேண்டும், தேவன் அனுமதித்திருக்கிற நல்ல இன்பங்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவன் தடைசெய்திருக்கும் விதத்தில் அதை அனுபவிக்கும்படித் தூண்டவேண்டும். தூண்டுதலுக்கு மனிதன் இணங்கினதுமே, அந்த இன்பம் அவனுக்குக் கிடைக்காமல் செய்து, அதற்காக அவன் அதிகம் ஏங்கும்படி அவனை வசியப்படுத்தவேண்டும். “அந்த இன்பத்தை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைத்து, அதைப் பெறுவதற்கான ஆசையை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில், “அந்த மனிதனின் ஆத்துமாவைச் சிறைப்படுத்தி, அவனுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்” என்று அந்தப் பிசாசு சொல்லுவதாக எழுதியிருப்பார்.

 இந்த நாசகரமான சுழற்சியை பாலின்ப பாவச்சோதனையை வைத்து நீதிமொழிகள் 7 விவரிக்கிறது. பாலுணர்வு என்பது தேவன் தந்திருக்கிற நல்லதொரு ஈவு. ஆனால் பாலுணர்வு நுகர்வை திருமண பந்தத்திற்கு வெளியே அனுபவிக்க முயலும்போது, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது’ போலாகும்
(வச. 22). நம்மைவிட பலசாலிகளான மனிதர்கள் எல்லாம் தீங்கான விஷயங்களை அனுபவிக்க முயன்று, தங்களையே அழித்திருக்கிறார்கள். எனவே, “செவிகொடுங்கள்,” “உன் இருதயம் (தவறான) வழியிலே சாயவேண்டாம்” (வச. 24-25). பாவம் நம்மை மயக்கலாம், அடிமைப்படுத்தலாம், ஆனால் எப்படியானாலும் முடிவு மரணம்தான். வசனம் 27. தேவனுடைய பெலத்தால், பாவச்சோதனையை மேற்கொள்ளும்போது, அவருக்குள் மெய்யான சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.