எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

தேவனால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டது

ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.  
அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார். 
நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத டெலாண்டைப் போல நாங்கள் திகைத்துப் போனோம். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார்.  
நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.  

மூன்று ராஜாக்கள்

புகழ்பெற்ற ஹாமில்டனின் இசையில், இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ், நகைச்சுவையாக ஒரு கார்ட்டூன் சித்திரத்தில் குழப்பமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். இருப்பினும், ஜார்ஜ் மன்னரின் புதிய வாழ்க்கை வரலாறு, அவர் ஹாமில்டன் அல்லது அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொடுங்கோலன் இல்லை என்று கூறியது.

அமெரிக்கர்கள் சொல்லுவது போல ஜார்ஜ் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அவர்களின் சுதந்திரப் போராட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் தனது “நாகரிகமான, நல்ல சுபாவத்தால்” அப்படி செய்யவில்லை. 

ஜார்ஜ் மன்னன் வருத்தத்துடன் இறந்தானா? யாருக்குத் தெரியும்? அவர் தனது குடிமக்களிடம் கடுமையாக செயல்பட்டிருந்தால், அவரது ஆட்சி ஒருவேளை இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்குமா?

அந்த விவாதம் தேவையற்றது. வேதாகமத்தில் யோராம் ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். “யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்” (2 நாளாகமம் 21:4). “அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வச. 6). அவனது இரக்கமற்ற ஆட்சி அவனது மக்களை அந்நியப்படுத்தியது. அவர்கள் அவனது மரணத்திற்காக அழவில்லை. “அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை” (வச. 19).

மூன்றாம் ஜார்ஜ் மிகவும் மென்மையாக இருந்தாரா என்று வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கலாம். ஆனால் யோராம் நிச்சயமாக மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவான் 1:14) வந்த இயேசுவின் வழியே ஒரே சிறந்த வழி. கிறிஸ்துவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை (அவர் உண்மையை எதிர்பார்க்கிறார்). ஆனாலும் அவர் தோல்வியுற்றவர்களை அரவணைக்கிறார் (அவர் கிருபையை நீட்டிக்கிறார்). தம்மை விசுவாசிக்கிற நம்மை அவருடைய வழியைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். பின்னர், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலம், அவர் அவ்வாறு செய்ய நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.  

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

அடைக்கல மக்கள்

பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.

ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.

ஒரு நாள் இரவில் ரூத் போவாஸ_டைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).

வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார்.  
அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம்.  
வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும். 
உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

இயேசுவே பதில்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் போதனையை நன்கு செவிகொடுத்து கேட்ட அவரது ஓட்டுநர், அவர் பேசிய அனைத்தையும் நன்கு கேட்டுவிட்டு, அவரே சொற்பொழிவாற்றுவதற்கு போதுமான தகவல் இருப்பதாக அறிவித்தார். அப்போது ஐன்ஸ்டீன், அடுத்த கல்லூரியில் சொற்பொழிவாற்றும்போது, அவர்கள் என்னை நேரில் கண்டதில்லை என்பதினால் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து உரையாற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் கேள்வி-பதில் நேரம் வந்தது. அதில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு கேள்விக்கு, ஓட்டுநர் அந்த நபரைப் பார்த்து, “நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக்கூடிய ஒரு எளிய கேள்வியை நீங்கள் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொல்ல, ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அந்த கேள்விக்கு பதிலளித்தாராம். வேடிக்கையான ஆனால் கற்பனையான கதை இங்கே முடிகிறது. 
தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மிகவும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தான் உருவாக்கின பொற்சிலையை அவர்கள் வணங்காவிட்டால், அவர்களை அக்கினி சூளையில் போடுவதாக நேபுகாத்நேச்சார் பயமுறுத்தினான். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” (தானியேல் 3:15) என்று கேட்கிறான். தானியேலின் நண்பர்கள் பணிந்துகொள்ள மறுத்ததினால், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப்போட்டான்.  
அவர்கள் தனியே செல்லவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்கள் சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்கமுடியாத வகையில் பதிலளித்தார் (வச. 24-25). அப்போது நேபுகாத்நேச்சார், “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே” என்று தேவனை துதித்து, “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்” (வச. 28-29).  
சில சமயங்களில், சூழ்நிலை நம் கைமீறிப் போவதாக நாம் உணரலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் துணை நிற்கிறார். அவர் நம்மை சுமந்துசெல்வார்.  

போகட்டும் விடு

புனித அகஸ்டினின் “அறிக்கைகள்” என்று வெளியிடப்பட்ட அவருடைய சுயசரிதையானது இயேசுவுடனான அவருடைய நீண்ட பயணத்தை பிரதிபலிக்கிறது. ஒரு சமயம், பேரரசரை புகழ்ந்து பேசுவதற்காக அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரைப் பார்த்து புகழ்ந்து பேசும்போது, அவருடைய அந்த முகஸ்துதி வரிகளை கேட்டு குடிபோதையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் கைதட்டி கேலிசெய்வதைப் பார்த்தார். அந்த குடிபோதையில் இருந்த மனிதன் இப்படிப்பட்ட முகஸ்துதிகள் மூலம் வரும் மேன்மைகளை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து, அன்றிலிருந்து உலக வெற்றிகளுக்காகவும் மேன்மைகளுக்காகவும் பிரயாசப்படுவதை நிறுத்திக்கொண்டார்.  
ஆகிலும் அவர் இச்சைக்கு அடிமையாயிருந்தார். பாவத்திற்கு அடிமையாயிருக்கும் வரையில் இயேசுவிடத்தில் திரும்பமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தாலும், விபச்சார பாவத்தில் அவர் தரித்திருந்தார். ஆகையால் அவர் “எனக்கு இச்சையடக்கம் தாரும்... ஆனால் உடனே வேண்டாம்” என்று ஜெபிக்க ஆரம்பித்தாராம்.  
அகஸ்டின், போதுமான அளவிற்கு பாவத்திற்கும் இரட்சிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையினால் உந்தப்பட்டவராய், ரோமர் 13:13-14ஐ எடுத்து வாசித்தார். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும்… உள்ளவர்களாய் நடவாமல்... துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” 
அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தது. தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அகஸ்டினுடைய வாழ்க்கையில் இருந்த இச்சையின் சங்கிலிகளிலிருந்து அவரை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு…” கொண்டுவந்தார். “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:13-14). அகஸ்டின் ஒரு போதகரானார். ஆனாலும் அவர் இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆகிலும் அவ்வாறு சோதிக்கப்படும்போது யாரை நோக்கவேண்டும் என்பதை தற்போது நன்கு அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம் தஞ்சமடைந்தார். நீங்கள் தஞ்சமடைய ஆயத்தமா?  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.