எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

தழும்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஃபே அவள் வயிற்றில் உள்ள தழும்புகளைத் தொட்டாள். உணவுக்குழாய்-வயிற்று புற்றுநோயை அகற்ற இன்னுமொரு அறுவை சிகிச்சையை அவள் தாங்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் அவளது வயிற்றின் ஒரு பகுதியை எடுத்து, அதில் அவர்களுடைய வேலையின் அளவை அடையாளம் தெரிந்துகொள்வதற்காக ஒரு சிறு பகுதியை தைக்காமல் விட்டுவிட்டனர். அவள் தனது கணவரிடம், “வடுக்கள், புற்றுநோயின் வலியை அல்லது குணமாகுதலின் துவக்கத்தைக் குறிக்கின்றன. எனது இந்த வடுக்களை குணமாகுதவலின் அடையாளமாக நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னாள்.  
யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடிய பின்பு, இதுபோன்ற ஒரு தேர்வை தெரிந்தெடுத்தான். கர்த்தருடைய மனுஷன் யாக்கோபின் தொடை சந்தை பிடிக்க, யாக்கோபு சுளுக்கின் நிமித்தம் சோர்வாகவும் தளர்வுடனும் காணப்பட்டான். சில மாதங்களுக்குப் பிறகு, யாக்கோபு தனது இடுப்பை மென்மையாய் நீவியபோது அவன் எதைப் பிரதிபலித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? 
இந்த போராட்டம் நடைபெற்றதற்கு பின்னணியாக, அவரது பல வருட வஞ்சகத்திற்காக அவன் வருத்தத்தால் நிரப்பப்பட்டானா? கர்த்தருடைய தூதன் அவன் யார் என்ற உண்மை விளங்கும் வரைக்கும் அவனை ஆசீர்வதிக்க மறுத்தார். பின்பு யாக்கோபு, தான் குதிங்காலை பிடித்தவன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் (ஆதியாகமம் 25:26 ஐப் பார்க்கவும்). அவர் தனது சகோதரன் ஏசாவையும் மாமனார் லாபானையும் தந்திரமாக கையாண்டு, அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகிறான். யாக்கோபோடு போராடிய கர்த்தருடைய தூதன், அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டபடியால், அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டுகிறான் (வச. 28).  
யாக்கோபின் இந்த தொடைச்சுளுக்கானது அவனது பழைய வஞ்சக வாழ்க்கையின் முடிவையும் தேவனுடனான அவனது புதிய வாழ்க்கையின் துவக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, யாக்கோபின் முடிவையும் இஸ்ரவேலின் துவக்கத்தையும் குறிக்கிறது. தேவன் அவன் மூலமாய் பலமாய் கிரியை செய்யும் அளவிற்கு, அவனது அந்த தளர்வானது தேவன் மீது முற்றிலுமாய் சாய்ந்துகொள்வதற்கு அவனுக்கு வழிவகுத்தது.  

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.  
நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10). 
நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார். 
நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.  

தேவனால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டது

ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.  
அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார். 
நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத டெலாண்டைப் போல நாங்கள் திகைத்துப் போனோம். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார்.  
நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.  

மூன்று ராஜாக்கள்

புகழ்பெற்ற ஹாமில்டனின் இசையில், இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ், நகைச்சுவையாக ஒரு கார்ட்டூன் சித்திரத்தில் குழப்பமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். இருப்பினும், ஜார்ஜ் மன்னரின் புதிய வாழ்க்கை வரலாறு, அவர் ஹாமில்டன் அல்லது அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொடுங்கோலன் இல்லை என்று கூறியது.

அமெரிக்கர்கள் சொல்லுவது போல ஜார்ஜ் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அவர்களின் சுதந்திரப் போராட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் தனது “நாகரிகமான, நல்ல சுபாவத்தால்” அப்படி செய்யவில்லை. 

ஜார்ஜ் மன்னன் வருத்தத்துடன் இறந்தானா? யாருக்குத் தெரியும்? அவர் தனது குடிமக்களிடம் கடுமையாக செயல்பட்டிருந்தால், அவரது ஆட்சி ஒருவேளை இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்குமா?

அந்த விவாதம் தேவையற்றது. வேதாகமத்தில் யோராம் ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். “யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்” (2 நாளாகமம் 21:4). “அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வச. 6). அவனது இரக்கமற்ற ஆட்சி அவனது மக்களை அந்நியப்படுத்தியது. அவர்கள் அவனது மரணத்திற்காக அழவில்லை. “அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை” (வச. 19).

மூன்றாம் ஜார்ஜ் மிகவும் மென்மையாக இருந்தாரா என்று வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கலாம். ஆனால் யோராம் நிச்சயமாக மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவான் 1:14) வந்த இயேசுவின் வழியே ஒரே சிறந்த வழி. கிறிஸ்துவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை (அவர் உண்மையை எதிர்பார்க்கிறார்). ஆனாலும் அவர் தோல்வியுற்றவர்களை அரவணைக்கிறார் (அவர் கிருபையை நீட்டிக்கிறார்). தம்மை விசுவாசிக்கிற நம்மை அவருடைய வழியைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். பின்னர், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலம், அவர் அவ்வாறு செய்ய நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.  

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

அடைக்கல மக்கள்

பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.

ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.

ஒரு நாள் இரவில் ரூத் போவாஸ_டைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).

வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார்.  
அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம்.  
வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும். 
உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.