எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

வீட்டை சுத்தம் பண்ணுதல்

சமீபத்தில் நான் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டிற்கு எனது அறையை மாற்றினேன். என் அறையை மாற்றும் காரியம், நான் எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. ஏனென்றால் எனது பழைய அறையிலிருந்த பழைய குப்பைகளை புதிய அறைக்கு மாற்ற எனக்கு விருப்பமில்லை. எனது புதிய அறையில் எந்தவிதத் தேவையற்ற பொருட்களும்மின்றி முற்றிலும் புதியவற்றையே வைக்க விரும்பினேன். நான் என் அறையிலிருந்த பொருட்களை, பிறருக்கு இலவசமாக கொடுக்கக்கூடியவை, மறு சுழற்சி செய்யக்கூடியவை என பிரிப்பதற்குப் பல மணிநேரம் செலவழித்தேன். வேண்டாத பொருட்களைப் பல பைகளில் சேகரித்து எனது அறை வாசலின் முன் வைத்து விட்டேன். இந்த செயல் என்னை மிகவும் சோர்வடையச் செய்தது. ஆனால், அவ்வேலைகள் முடிந்தபின், எனது புதிய அறை என் நாட்களை மிக மகிழ்ச்சியுடன் கழிக்கத்தக்கதாக மிக அழகான அறையாக மாறியது.

என் வீட்டைச் சுத்தம் செய்த இந்த செயல் 1 பேதுரு 2:1யை வாசித்த பொழுது அதைப்பற்றிய புதிய கண்ணோட்டத்தை எனக்குத் தந்தது. “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிடுங்கள்’’ (1 பேது. 2:2) என்று நமது கவனத்தை ஈர்க்கத்தக்கதாக மேற்கூறப்பட்ட சுத்தப்படுத்துதல் என்ற நிகழ்ச்சி, கிறிஸ்துவுக்குள் அவர்கள் பெற்ற புதிய ஜீவனை குறித்து அவர்கள் அறிக்கை இட்ட உடன்தான் நிகழ்கிறது (1 பேது. 1:1-12). சகல  துர்க்குணங்களையும் ஒழித்துவிட பேதுரு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் (1 பேது. 1:13-2:3). கர்த்தரோடு நாம் இணைந்து வாழும் வாழ்க்கை குறைவுள்ளதாகவும் பிறர் மேலுள்ள நமது அன்பு கறைபடக்கூடியதாகவும் இருப்பதை உணர்ந்தால், நாம் நமது இரட்சிப்பைக் குறித்து கேள்வி கேட்கத் தேவை இல்லை. இரட்சிக்கப்படுவதற்காக நாம் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், நாம் இரட்சிக்கப்பட்டதால்தான் நமது வாழ்க்கை மாறுகிறது (1:23).

கிறிஸ்துவுக்குள்ளாக நமது வாழ்க்கை உண்மையாகவே புதிதாக மாறி இருப்பதுபோலவே, நம்மில் ஏற்கனவே உள்ள துர்க்குணங்கள் ஒரே இரவில் நம்மிடமிருந்து மறைந்து போவதில்லை. ஆகவே, நமது அனுதின வாழ்க்கையில் பிறரை முழுமனதுடன் நேசிப்பதிலிருந்தும் (1:22) ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதிலிருந்தும் (2:2), நம்மைத் தடுக்கும் அனைத்து குணங்களையும், நாம் அன்றாடம் நீக்கி நம்மை சுத்திகரித்துக் கொண்டால் தான் சுத்தமான இருதயத்தை நாம் பெறமுடியும். சுத்தமாக்கப்பட்ட புதிய வாழ்வில் கிறிஸ்துவின் வல்லமையினாலும், அவருடைய ஜீவனாலும் புதிதாக்கப்பட்ட அற்புத நிகழ்ச்சியை நாம் அனுபவிக்கலாம்.

நம்பிக்கைக்கு உரியவர்

“என்னால் எவரையும் நம்ப முடியாது. ஏனென்றால் நான் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் காயப்பட்டு போகிறேன்”, என்று கண்ணீரோடு என் தோழி கூறினாள். அவளுடைய காதலன் அவளுடனான உறவை துண்டித்துக் கொண்ட பிறகு அவளைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப ஆரம்பித்தான். இது என்னை மிகவும் கோபமூட்டியது. அவன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்த என் தோழி, மனமுடைந்து போனாள். துயரமான குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்த அவள், மீண்டுமாக பிறர் மீது நம்பிக்கை  வைக்க போராடிக் கொண்டிருந்தபொழுது, ‘ஒரு மனுஷனையும் நம்ப முடியாது’ என்கிற எண்ணத்தை ஊறுதிப்படுத்துவது போல இத்துரோகம் செய்துவிட்டது.

அவளை ஆறுதல்படுத்துவதற்கு வார்த்தைகள் இன்றி நான் தடுமாறினேன். ஏதேதோ கூறி அவளை ஆறுதல்படுத்த முயன்ற என்னால், ‘நம்பிக்கைகுரியவர்களை காண்பது மிகக்கடினம்’ என்னும் அவளுடைய எண்ணத்தை போக்கமுடியவில்லை. முற்றிலும் நம்பிக்கைக்குரிய அன்பான மக்கள் அநேகர் உண்டென்றும் என்னால் கூறமுடியவில்லை. அவளுடைய இத்துயரமான சம்பவம், என் வாழ்வில், நான் எதிர்கொண்ட துயரமான துரோகத்தை நினைவூட்டியது. வேதாகமம் கூட மனித சுபாவத்தை எவ்வித ஒளிவுமறைவின்றி  வெளிப்படையாக பதிவு செய்துள்ளது. என் தோழியின் புலம்பலைப் போலவே நீதிமொழிகள் புத்தகத்தின் ஆசிரியரும், துரோகத்தின் வலியை நித்திய நினைவுச்சின்னம் போல பதிவுசெய்துள்ளார் (2௦:6).

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பிறருடைய கொடுமைகள் என்பது ஒரு கதையின் ஒரு பகுதிதான். ஏனென்றால் பிறரால் உண்டான காயங்களும் அதின் வலி வேதனைகளும் உண்மையாக இருப்பினும், முழமையான பரிபூரண அன்பு உண்டு என்பதை இயேசு வெளிப்படுத்தி காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, அவர் தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, அவர்கள் ஒருவரிலொருவர் வைத்துள்ள அன்பைக் கண்டு இவ்வுலகம் அவர்களை  அவருடைய சீஷர்கள் என்று அறிந்துககொள்வார்கள் என்று கூறினார் (யோவா.13:35), ஆகவே, ஒரு சிலர் நம்மைக் காயப்படுத்தினாலும், நிபந்தனையற்ற ஆதரவும் அக்கறையும் காட்டும் அன்பு நிறைந்த அநேகர் நமக்குண்டு என்பதை நாம் நினைவுகூறவேண்டும். நாமும் அவருடைய பரிபூரண அன்பில் இளைப்பாறி, உள்ளத்திலே சுகமடைந்து, அவர் நம்மை நேசித்தது போலவே தோழமையோடும் தைரியத்தோடும் பிறரை நேசிப்போமாக.