காத்திருக்க விரும்புதல்
காத்திருத்தல் என்பது நம் அமைதியை திருடும் திருடனாய் இருக்கலாம். ரமேஷ் சீதாராமன் என்னும் கணிணி விஞ்ஞானியின் கூற்றுப்படி, “இணையதளங்களில், சில வலைதளங்கள் தோன்ற ஏற்படும் தாமதம் மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் பிறப்பிக்கிறது” என்று கூறுகிறார். ஆன்லைனில் ஒரு காணொலியை காண்பதற்கு, அதிகபட்சம் ஒருவர் இரண்டு விநாடிகள் மட்டுமே காத்திருக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். ஐந்து விநாடிகள் கடந்தவுடன் இருபத்தைந்து சதவிகித மக்கள் பதிவிறக்கும் முயற்சியை கைவிடுகின்றனர், பத்து விநாடிகள் கழித்து ஏறத்தாழ பாதிபேர் அணைத்து முயற்சிகளையும் கைவிடுகின்றனர். நாம் பொறுமையேயில்லாத ஜனங்கள்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு, அந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவத்தின் மத்தியிலும், ஒருவரையொருவர் நேசிக்கவும், கனப்படுத்தவும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இந்த நம்பிக்கை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் (யாக்கோபு 5:7-10). அவருடைய இந்த கருத்தை வலியுறுத்துவதற்கு பயிரிடுகிற விவசாயியை உதாரணமாக்குகிறார். பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் (வச. 7) ஒரு விவசாயி காத்திருப்பது போல, இயேசுவின் வருகை வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். அவர் வரும்போது, கோணலானவைகளை செவ்வையாக்கி, இளைப்பாறுதலை உண்டுபண்ணுவார்.
அவருக்காய் காத்திருக்கும்போது சிலவேளைகளில், அவரை நாம் மறுதலிக்க தூண்டப்படுகிறோம். ஆனால் காத்திருக்கும் வேளையில், “விழித்திருங்கள்” (மத்தேயு 24:42), உண்மையாய் இருங்கள் (மத்தேயு 25:14-30), அவருடைய வழியில் நடந்து, அவருடைய சுபாவத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12). கிறிஸ்துவின் வருகை எப்போது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் வரும்வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம்.
நம் சௌகரியத்திற்கல்ல
அபிஷ்வாஸ் தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது பாதையில் திசைதிரும்பிய ஒரு கார், அவனை எதிர்வரும் வாகனத்தின் மீது மோதச் செய்தது. இரு வாரங்கள் கழித்து ஒரு சிகிச்சை மையத்தில் கண்விழித்த போதுதான், அவனுடைய மோசமான நிலை புரிந்தது. அதிலும் மோசமாக, தண்டுவடம் காயப்பட்டதால் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அபிஷ்வாஸ், தான் குணமாக ஜெபித்தான், ஆனால் அது அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, "இந்த வாழ்வின் நோக்கமே நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதுதான். துரதிருஷ்டவசமாக அது நமக்கு எல்லாமே நன்மையும், இன்பமுமாய் இருக்கும்பட்சத்தில் சாத்தியமாகாமல் , நம் வாழ்க்கை கடினமாகும்போதும், ஒவ்வொரு நாளையும் கடக்கவே ஜெபத்தின் மூலமாக தேவனை சார்ந்துகொள்வது கட்டாயமாகும்போதும் தான் அது சாத்தியமாகும்" என்பதை தேவன் தனக்கு உருக்கமாக கற்றுக்கொடுத்ததாக விசுவாசிக்கிறான்.
தேவனோடுகூட சரியான உறவிலிருப்பதால் உண்டாகும் இரு நன்மைகளை குறித்து அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார் அவை: உபத்திரவத்தில் பொறுமை மற்றும் உபத்திரவத்தை குறித்து மேன்மைபாராட்டுவது (ரோமர் 5:3-4) இவ்விரு நன்மைகளும் ஏதோ மனவலிமை பெற்று துன்பத்தை சகிக்கவோ அல்லது துன்பத்தில் இன்பம் காணவோ நம்மை அழைக்கவில்லை. மாறாக, தேவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கைக்கு நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவுடன் கூடிய உபத்திரவம், "பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது" (வ.3). இவை அனைத்துமே நம் தகப்பன் நம்மை கைவிடமாட்டார் மாறாக நம்மோடு அக்கினியிலும் கூட நடப்பார், நமது எதிர்காலத்திலும் நடத்துவார் என்ற விசுவாசத்திலிருந்து வழிகின்றன.
தேவன் நமது உபத்திரவங்களில் நம்மை சந்தித்து அவருக்குள் நாம் வளர உதவுகிறார். துன்பங்களை அவருடைய தண்டனைகளாக பார்ப்பதை விடுத்து அவைகளை கொண்டு நம்மை அவர் மெருகேற்றும் வழிமுறைகளை கண்டுகொண்டு நமது குணாதிசயங்களை வளர்த்து "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதை" (வ.5) அனுபவிப்போமாக.
விழிப்புடன் இரு!
ஒரு ஜெர்மானிய வங்கி ஊழியர் 62.40 யூரோக்கள் பணத்தை ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யும்போது, திடீரென்று ஒரு குட்டித் தூக்கம் தூங்கிவிட்டார். எனவே அவரின் கைவிரல் தவறுதலாக “2” என்ற பட்டனை அழுத்திவிட, 222 மில்லியன் யூரோக்கள் (தோராயமாக 1959 கோடி ரூபாய்) அந்த வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. அதனிமித்தம், அந்த பரிமாற்றத்தை சரிபார்க்கவேண்டிய அவருடைய சக வங்கி ஊழியரின் வேலையும் பறிபோனது. அந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டாலும், அவருடைய இந்த செயல் வங்கி ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.
சீஷர்கள் விழிப்பாய் இல்லையென்றால் அவர்கள் பெரிய தவரை செய்ய நேரிடும் என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். இயேசு கெத்செமனே என்னும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து ஜெபம்பண்ணும்போது, அவர் இந்த உலக வாழ்வில் அதுவரை அனுபவித்திராத அளவு துக்கமும் வியாகுலமும் அடைந்தார். அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் ஜெபிக்கவும், அவரோடே கூட விழித்திருக்கும்படியாகவும் கூறினார் (மத்தேயு 26:38). ஆனால் அவர்கள் தூங்கிவிட்டார்கள் (வச. 40-41). அவர்கள் ஜெபிக்கவும் விழித்திருக்கவும் இயலாமல் அவரை மறுதலித்து தோற்றனர். கிறிஸ்துவிற்கு பெரிய தேவை ஏற்பட்டபோது சீஷர்கள் ஆவிக்குரிய விழிப்புணர்வில் குறைவுபட்டனர்.
நாம் இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தி, ஆவிக்குரிய விழிப்புணர்வோடும் அர்ப்பணிப்புடனும் ஜெபத்தில் நேரம் செலவிடுவோம். அவ்வாறு செய்யும்போது எல்லா சோதனைகளையும் சகிக்கவும், கிறிஸ்துவை மறுதலிக்கும் பெரிய தவறை செய்யாமல் இருக்கும்படியாகவும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.
தேவனின் திசைகாட்டி
இரண்டாம் உலகப்போரின்போது வால்டெமெர் செமெனோவ் ஒரு உதவி பொறியாளராய், எஸ்.எஸ் ஆக்கோவா கைடு என்ற கப்பலில் பணியாற்றினார். வடக்கு கரோலினாவுக்கு ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் நங்கூரமிட்ட ஜெர்மானியர்களின் நீhமூழ்கிக் கப்பல் ஒன்று இந்த கப்பலை நோக்கி குண்டுகளை வீசின. கப்பல் தாக்கப்பட்டு, தீப்பிடித்து, நீரில் மூழ்க ஆரம்பித்தது. செமெனோவும் அவருடைய குழுவினரும் உயிர்காப்புப் படகின் மூலமாக தப்பித்து, திசைகாட்டியின் உதவியுடன் கப்பல் பாதையை நோக்கிச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களை கண்டுபிடித்த கண்காணிப்பு விமானம், ப்ரும் என்ற அமெரிக்க கப்பலின் மூலம் அடுத்த நாளே அவர்களை மீட்டது. அந்த திசைகாட்டிக்காக நன்றி. செமெனோவும், 26பேர் கொண்ட அவருடைய குழுவினரும் உயிர் பிழைத்தனர்.
தேவனுடைய ஜனங்கள் வேதாகமம் என்னும் வாழ்க்கையின் திசைகாட்டியைக் கொண்டு வழிநடத்தப்படுகின்றனர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அவர் வேதத்தை “தீபம்” என்று ஒப்பிட்டு (சங். 119:105), தேவனைத் தேடுவோரின் பாதைக்கு வெளிச்சமளிக்கக்கூடியதாய் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சங்கீதக்காரன், வேதத்தைக் கொண்டு ஆவிக்குரிய அச்சரேகையையும் தீர்க்கரேகையையும் கொண்ட நமக்கு திசைகாட்டவும் உயிர்பிழைக்கவும் செய்ய தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார். ஆகையினால், அவர் நடப்பதற்கு தேவையான ஒளியையும், தேவனுடைய பிரசன்னத்தில் கரைசேர்க்கும்படியாகவும் தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (43:3).
கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நம்முடைய பாதைகளை தவறவிடும்போது, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தில் உள்ள பாதையில் தேவன் நம்மை நடத்தமுடியும். வேதாகமத்தை வாசிக்கும்போதும், கற்றுக்கொள்ளும்போதும், அதின் ஞானத்தை கைக்கொள்ளும்போதும் தேவன் நம் இருதயத்தையும் சிந்தையையும் மறுரூபமாக்குவார்.
நேர்த்தியான பெயர்
ஆகஸ்ட் மாதத்தின் உஷ்ணமான ஒருநாளில் என் மனைவி என்னுடைய இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருந்த வரை அவன் பெயரில்லாமலேயே இருந்தான். ஐஸ்கிரீம் கடைகளில் அமர்ந்தும், நீளமான கார் பயணம் மேற்கொண்டும் அவனுக்கு பெயரை தீர்மானிக்க முயன்றோம். எங்களால் முடியவில்லை. அவனுக்கு மீகா என்று பெயர் சூட்டும் வரைக்கும் அவனை “வில்லியம்ஸின் குழந்தை” என்றே அழைத்தோம்.
நேர்த்தியான ஒரு பெயரை தேர்ந்தெடுப்பது சற்று வெறுப்பான ஒன்று. உலகத்தை நித்திய மாற்றத்திற்குள் கொண்டுவரும் இலக்குடன் இவ்வுலகத்திற்கு வந்த தேவனைப்போல் நாம் இல்லை. ஆகாஸ் ராஜாவின் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்பொருட்டு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்கும்படிக்கு தேவன் ஆகாஸை ஏவினார் (ஏசாயா 7:10-11). அடையாளத்தைக் கேட்க ராஜா மறுத்தாலும், தேவனாகவே ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (வச. 14). தேவன் அந்த பிள்ளைக்குப் பெயரிடுகிறார். அந்த பிள்ளையானது நம்பிக்கையிழந்திருக்கிற மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாய் இருப்பார். இயேசுவின் பிறப்பைப் பதிவுசெய்யும் மத்தேயு அந்த பெயருக்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார் (மத்தேயு 1:23). இயேசு இம்மானுவேலாய் இருப்பார். அவர் தேவனுடைய ஸ்தானாதிபதியாக மட்டுமல்லாது, பாவத்தினால் நம்பிக்கையிழந்திருந்த மக்களை மீட்கும்பொருட்டு, மாம்சத்தில் உதித்த தேவனாயிருப்பார்.
தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய குமாரனே அந்த அடையாளம். அவருடைய குமாரனுடைய பெயர் இம்மானுவேல் - தேவன் நம்மோடிருக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் பெயர். அந்த இம்மானுவேலை நாம் இன்று பற்றிக்கொள்ளும்படியாகவும், அவர் நம்மோடு இருக்கிறார் என்று அறியவும் அவர் நம்மை அழைக்கிறார்.
அவர் வெறுமையானதை நிரப்புகிறார்
பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள்.
இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28).
நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு.
மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல்
“சலிப்பு எனக்கு பிடிக்கும்” என்ற வலைப்பதிவின் உரிமையாளர் ஜேம்ஸ் வார்டு, 2010ல் “சலிப்புக் கருத்தரங்கு” என்று ஒன்றை ஒழுங்குசெய்திருந்தார். அது யாராலும் கவனிக்கப்படாத மிகவும் சாதாரணமான, ஒரு நாள் கொண்டாட்டம். இதற்கு முன்பாக, அந்த கருத்தரங்குகளில், தும்மல், வெண்டிங் இயந்திரத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் 1999ன் இங்க் பிரிண்டர்கள் போன்றவற்றில் ஏன் சத்தம் வருகிறது போன்ற சலிப்பான தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. வார்டுக்கு அவைகள் மிகவும் சலிப்பானவைகள் என்பது நன்றாய் தெரியும். ஆகையினால் அந்தக் கருத்தரங்கில், ஆர்வமூட்டக்கூடிய, அர்த்தமுள்ள, ரசிக்கக்கூடிய தலைப்புகளை தெரிந்தெடுக்கும்படி செய்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அர்த்தமற்ற காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில், ராஜாக்களில் ஞானியான சாலமோன் முயற்சித்தான். அவன் பெரிய வேலைகளை செய்தான், மந்தைகளை வாங்கினான், வீடுகளைக் கட்டினான், பாடகர்களை சேகரித்தான், கட்டடங்களைக் கட்டினான் (பிரசங்கி 2:4-9). இவற்றில் சில மதிப்பு மிக்கவைகள், சில மதிப்புக் குறைந்தவைகள். அவற்றில் அர்த்தத்தைத் தேட முயன்ற ராஜா, சலிப்பைத் தவிர வேறொன்றையும் பெறவில்லை (வச. 11). தேவனை சேர்த்துக்கொள்ளாமல், மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓரு உலகப் பார்வையை சாலமோன் தனக்காக தேட முயன்றார். ஆனால் தேவனை நினைப்பதின் மூலமாகவும் அவரை ஆராதிப்பதின் மூலமாகவுமே மகிழ்ச்சியை கண்டுபிடிக்கமுடியும் என்ற முடிவுக்கு வருகிறார் (பிரசங்கி 12:1-7).
இந்த சலிப்பின் சூறாவளியில் சிக்கியிருக்கும் நாம், நம்முடைய சிருஷ்டிகரை நினைத்து (வச. 1), நம்முடைய சிறிய கருத்தரங்கைத் துவக்குவோம். தேவன் அதை அர்த்தமுள்ளதாய் மாற்றுவார். அவரை நினைத்து அவரையே ஆராதிக்கும்போது, சாதாரணமானவற்றில் ஆச்சரியத்தையும், வழக்கமாய் செய்வதில் நன்றியுணர்ச்சியையும், அர்த்தமற்றவைகளில் மகிழ்ச்சியையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவார்.
துவக்ககால வாழ்க்கைக் கையேடு
என்னுடைய தாயாரின் திடீர் மரணத்திற்கு பின்பு, நான் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட விரும்பினேன். எனவே அதை செய்வது எப்படி என்று பழகும் அறிமுகக் கையேட்டை புரட்ட ஆரம்பித்தேன். எதிலிருந்து துவக்குவது, தலைப்பை எப்படி தேர்ந்தெடுப்பது, ஈர்க்கக்கூடிய பதிவுகளை எப்படி பதிவிடுவது என்று கற்று, 2016ஆம் ஆண்டு என் முதல் பதிவை வெளியிட்டேன்.
நித்திய ஜீவனை பெறுவது எப்படி என்னும் ஆரம்பகால கையேட்டை பவுல் எழுதியுள்ளார். ரோமர் 6:16-18ல் நாமெல்லோரும் பாவிகளாய் பிறந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியும் (வச.18) என்னும் நிஜத்தைப் பிரதிபலிக்கிறார். அதைத் தொடர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருப்பதையும் தேவனுக்கு அடிமையாயிருப்பதையும், அவருடைய ஜீவனுக்கேதுவான வழிகளோடு விவரிக்கிறார் (வச. 19-20). மேலும் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (வச.23) என்று கூறுகிறார். மரணம் என்பது தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிந்திருப்பது. கிறிஸ்துவை மறுதலிப்பதினால் நமக்கு நேரிடக்கூடிய அவலம் இது. ஆனால் தேவன் நமக்கு கிறிஸ்துவில் புதுவாழ்வை வாக்களித்துள்ளார். அது பூமியில் துவங்கி பரலோகத்தில் முடிவில்லாமல் அனுபவிக்கக்கூடிய நித்திய வாழ்வு.
நித்திய ஜீவனைக் குறித்த பவுலின் இந்த ஆரம்பகால கையேடு நமக்கு இரண்டு தேர்வுகளை முன்வைக்கிறது. பாவத்தைத் தேர்ந்தெடுத்தால் மரணம் அல்லது இயேசுவின் பரிசை தேர்ந்தெடுத்தால் நித்திய ஜீவன். நீங்கள் இந்த ஜீவனுக்கேதுவான வரத்தை பெற்றுக்கொள்ள பிரயாசப்படுங்கள். ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால் இன்று அந்த பரிசை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்பின் மகா பெரிய செயல்
ஒரு தேசிய வனப்பகுதியில், தேன் காளான் என்று பரவலாக அறியப்படும் ஒரு வகை பூஞ்சை 2,200 ஏக்கர் பரப்பளவில் மரத்தின் வேர்வழியாகப் பரவுகிறது. இது, இதுவரை கண்டிராத மிகப் பெரிய உயிரினமாகும். இது ஆயிரம் மடங்கிற்கு மேலாக தன்னுடைய கருப்பு குறுகு நீள்படிவ இழைகளை வனத்திற்கு இடையில் நெய்து, மரங்கள் வளரும்போதே அவைகளை கொன்றுவிடுகிறது. “ரைஸோமார்ஃப்ஸ்” என்று இந்த குறுகு நீள்படிவ இழைகள், மண்ணுக்குள் சுமார் பத்து அடி ஆழம் மட்டும் சுரங்கம் போல் ஊடுறுவுகிறது. இந்த உயிரினம் நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தாலும், அது ஒரு ஒற்றை நுண்துளை போல ஆரம்பமானது.
ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் - ஆதாம் மற்றும் இயேசு – ஆகிய இரு நபர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறார் (ரோமர் 5:14-15). ஆதாமுடைய பாவம் எல்லா மனுஷருக்கும் ஆக்கினையும் மரணமும் கொண்டுவந்தது (வச. 12). ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷரும் பாவிகளாகி, தேவனுக்கு முன்பாக ஆக்கினைக்கு நிற்கவேண்டியிருந்தது (வச. 17). ஆனால் மனுக்குலத்தின் பாவப் பிரச்சனையை கையாள அவருக்கு ஒரு வழி இருந்தது. சிலுவையில் இயேசுவின் நீதியான செயலினிமித்தம் தேவன், நித்திய ஜீவனையும், அவர் முன் நிற்கும்படியான உரிமையையும் கொடுக்கிறார். கிறிஸ்துவின் அன்பு மற்றும் கீழ்படிந்த செயல், ஆதாமின் ஒரே கீழ்படியாமையை மேற்கொள்ளும் வல்லமையுடையதாயும், எல்லாருக்கும் ஜீவனைக் கொடுக்க வல்லமை வாய்ந்ததாயும் இருந்தது (வச. 18).
இயேசு தம்முடைய சிலுவை மரணத்தினால், அவரை விசுவாசிக்கும் யாவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறார். நீங்கள் இன்னும் அவருடைய மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெறவில்லையென்றால், இன்றைக்கே அதைச் செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு விசுவாசியாயிருந்தால், அன்பினிமித்தம் அவர் செய்த மகா பெரிய செயலுக்காக அவரைத் துதியுங்கள்.