எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

தேவனுக்கான நல்ல பிரச்சனை

ஒரு நாள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் பிளேடைக் கொண்டு தன்னுடைய கையை கீறிக்கொள்வதைப் பார்த்தாள். அதை சரிசெய்வதற்கு அவனுடைய கையிலிருந்த அந்த பிளேடைப் பிடுங்கி, தூக்கியெறிந்தாள். அவளுடைய செயலுக்கு அவள் பாராட்டப்படாமல், பத்து நாட்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். ஏன்? பள்ளியில் அனுமதிக்கப்படாத பிளேடை அவள் சிறிது நேரம் கையில் பிடுங்கி வைத்திருந்ததை குற்றமாய் கருதி, அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை மறுபடியும் செய்வாயா? என்று அவளிடம் கேட்டபோது, “எனக்கு பிரச்சனை ஏற்பட்டாலும்... அதை மறுபடியும் செய்வேன்” என்று அவள் துணிச்சலாய் பதிலளித்திருக்கிறாள். நன்மை செய்யப்போன அவள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள் (அவளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்). இராஜ்யத்தைக் குறித்த இயேசுவின் போதனை, மார்க்கத் தலைவர்களுடன் இதுபோன்ற நல்ல பிரச்சனைக்கு வழிநடத்திற்று.  

சூம்பின கையுடைய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை கேள்விப்பட்ட பரிசேயர்கள் தங்கள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டினர். ஓய்வுநாளில் குழியில் சிக்கியிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை மீட்பது அவசியம் என்று தன்னுடைய ஜனத்திற்கு விளங்கப்பண்ணிய இயேசு, “ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்” (மத்தேயு 12:12) என்று கூறுகிறார். அவரே ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என்பதினால், ஓய்வுநாளில் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை இயேசுவே சொல்லுகிறார் (வச. 6-8). இயேசுவின் இந்த செய்கை மார்க்கத் தலைவர்களை கோபமூட்டும் என்பதை இயேசு அறிந்திருந்தும், இந்த சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்குகிறார் (வச. 13-14).  

கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் நல்ல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அதில் மனிதர்களைப் பிரியப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படாமல், தேவனை மாத்திரம் பிரியப்படுத்த பிரயாசப்படுவோம். தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் அதை நாம் செய்ய முற்படும்போது, நாம் இயேசுவை பிரதிபலித்து, விதிமுறைகள் மற்றும் சடங்காச்சாரங்களைக் காட்டிலும் மக்கள் முக்கியம் என்று கருத முற்படுகிறோம்.

தேவனுடைய வழித்தடத்தில் செல்லுதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, 218 பேருடன் சென்ற ரயில், வடமேற்கு ஸ்பெயினில் தடம் புரண்டதில் 79 பேர் இறந்தனர், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனரால் அந்த விபத்தை விளக்க முடியவில்லை, ஆனால் வீடியோ காட்சிகள் அதை செய்தது. ஒரு கொடிய வளைவைத் தாண்டும் முன் ரயில் மிக வேகமாக சென்று, ரயிலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேக அளவை தாண்டியது. ஸ்பெயினின் தேசிய இரயில் நிறுவனத்தில் முப்பது வருட அனுபவமிக்கவராக இருந்தபோதிலும், ஓட்டுநர் வேக எல்லையை புறக்கணித்ததால் பலர் உயிரிழந்தனர்.

 

உபாகமம் 5 இல், மோசே தனது மக்களுக்கான தேவனின் உடன்படிக்கை எல்லைகளை நினைப்பூட்டினார். மோசே ஒரு புதிய தலைமுறையினருக்கு தேவனின் அறிவுறுத்தலை, அவருடனான தங்கள் சொந்த உடன்படிக்கையாகக் கருதும்படி ஊக்கப்படுத்தினார் (வ. 3), அவர் பத்துக் கட்டளைகளை மீண்டும் கூறினார் (வவ. 7-21). கட்டளைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், முந்தைய தலைமுறையின் கீழ்ப்படியாமையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மோசே இஸ்ரவேலர்களை பயபக்தியோடும், தாழ்மையோடும், தேவனின் உண்மைத்தன்மையைக் கவனத்தில் கொள்ளும்படி அழைத்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார், அவருடைய வழிகளில் உண்மையாய் நடப்பவர்கள், தங்கள் வாழ்க்கையையோ, மற்றவர்களின் வாழ்க்கையையோ சிதைக்க மாட்டார்கள். தேவ ஞானத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் விழுவார்கள்.

 

இன்று, தேவன் நம்மை வழிநடத்திச் செல்வதால், வேதவாக்கியங்களை நம் மகிழ்ச்சியாகவும், ஆலோசகராகவும், நம் வாழ்வின் பாதுகாப்புத் தண்டவாளமாகவும் கொள்வோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவதால், அவருடைய ஞானமான பாதுகாப்பிற்குள் முழு மனதுடன் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கலாம்.

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ் வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் ட்விட்டரைப் பார்த்து ட்வீட் செய்தார்: “ஹாய் @வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.

 

நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியை பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. “என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்” (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், “அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி” (வ.9) என்றார்.

.

"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் செய்யும் கூக்குரல்களைக் கேட்டு, “நான் இங்கே இருக்கிறேன்” என்று தேவன் கூறுவதால்.    

அன்பான எச்சரிப்பு

2010 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சுனாமி தாக்கி நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லது வெகுவாக குறைத்திருக்கலாம். சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் துண்டிக்கப்பட்டு செல்பாட்டில் இல்லாமல் இருந்தன. 

இயேசு, தம்முடைய சீஷர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கும் மனந்திரும்பாத பாவங்களைக் குறித்து எச்சரிப்பு விடுக்கும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்தினார். ஒருவருக்கு விரோதமாய் பாவம் செய்த விசுவாசிக்கு, அவருடைய பாவத்தை தாழ்மையுடனும் தனிப்பட்ட விதத்தில் ஜெபத்தோடும் சுட்டிக்காட்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார் (மத்தேயு 18:15). அவர் மனந்திரும்பினால், அவருடனான பிரச்சனை நீங்கி, உறவு புதுப்பிக்கப்படும் (வச. 16). பாவம் செய்த அந்த நபர் மனந்திரும்பாவிடில், அந்த பிரச்சனையை சபையின் முன்னிலையில் கொண்டுவரவேண்டும் (வச. 17).  தவறிழைத்தவர் தன் தவறைக் குறித்து மனம்வருந்தாத பட்சத்தில், அவர்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபித்து கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கத் தவறக்கூடாது. 

கிறிஸ்துவின் பிரதிநிதிகளாய் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மனந்திரும்பாத பாவங்களை மென்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் எச்சரித்து, பரலோக தேவனிடத்திலும் மற்ற சக விசுவாசிகளிடத்திலுமான அவர்களின் உறவைப் புதுப்பிக்க பிரயாசப்படுவோம். இயேசு “அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன” என்று வாக்களித்திருக்கிறார் (வச. 20). 

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது. 

பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16). 

கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம். 

சிறு துண்டைக் காட்டிலும் அதிகமானது

நாமெல்லாரும் ஒரு புதிய இடத்திற்கு போகும்போது, பழைய இடத்தின் ஞாபகங்களில் நம்மில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது இயல்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக, அண்டார்டிகாவில் உள்ள வில்லாஸ் லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்ற குளிர் வெறிச்சோடிய இடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராக மாற, உங்களிடமிருந்து ஒரு பகுதியை விட்டுச் செல்வது மிகவும் அவசியம். அருகில் உள்ள மருத்துவமனை 625 மைல்கள் தொலைவில் இருப்பதால், ஒரு நபர் தனது அப்பென்டிக்ஸ் குடல் வெடித்தால் அதிகமான பாதிப்பிற்குள்ளாகவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனும் அங்கு செல்வதற்கு முன் முதலில் குடல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு இது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால், ஜனங்கள் தங்கள் சொந்த வழியில் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால் தேவனுடைய சீஷராவது என்றால் என்ன என்பதை இயேசு விவரிக்கிறார் (மத்தேயு 16:25-27). அவர் சொல்லும்போது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (வச. 24) என்று சொல்லுகிறார். இது தேவனுடைய இராஜ்யத்திற்கு தடையாயிருக்கும் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. மேலும் நாம் சிலுவை சுமக்க தயாராகும்போது, சமுதாய மற்றும் அரசியல் பாதிப்புகளை மரணபரியந்தம் சகிப்பதற்கு நாம் ஆயத்தமாயுள்ளோம் என்பதை அறிக்கையிடுகிறோம். விட்டுவிடுவது, மற்றும் எடுத்துச் செல்வதோடு தேவனை பின்பற்றும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருடைய ஊழியத்தையும் தியாகத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு இது தேவனுடைய படிப்படியான உருவாக்கும் திட்டமாகும். 

இயேசுவைப் பின்பற்றுவது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அதிகமானது. அவரைப் பின்பற்றுவது என்பது, அவருடைய உதவியோடு, அவருக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய சரீரத்தையும் அவருக்கும் முற்றிலும் கீழ்ப்படுத்துவதாகும். 

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

இயேசுவில் இளைப்பாறுதலை கண்டறிதல்

அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின்  தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: "நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்" என்றார். துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.

இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். "என்னிடத்தில் வாருங்கள்" என்கிறார். நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).

நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.     

நமது குருவைப் போல

ஒரு வைரல் வீடியோவில், மூன்று வயது வெள்ளை பட்டை கராத்தே மாணவி தனது பயிற்சியாளரை தத்ரூபமாகப் பிரதிபலித்தாள். ஆர்வத்துடனும் உறுதியுடனும் அந்தச் சிறுமி தன் ஆசானோடு  மாணவர்க்கான உறுதிமொழியைக் கூறினாள். பின்னர், நிதானத்துடனும் கவனத்துடனும், அழகான மற்றும் ஆற்றலின் சிறிய பிம்பமாகிய அவள், தன் ஆசிரியர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் பின்பற்றினாள். அவள் மிக அற்புதமாக அதைச் செய்தாள்!

இயேசு ஒருமுறை கூறினார், "சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40). உதாரத்துவம், அன்பு மற்றும் குற்றப்படுத்தாமை போன்றவற்றில் தம்மை பிரதிபலிக்குமாறு தம் சீடர்களுக்கு வலியுறுத்தினார் (வ. 37-38) மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்வது அவசியமென்றும் அவர் தம் சீடர்களிடம் கூறினார்: “ குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா” (வ. 39). குருட்டு வழிகாட்டிகளாக மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பரிசேயர்களை இந்த தரநிலை தகுதியற்றதாக்கியது என்பதை அவருடைய சீடர்கள் பகுத்தறிய வேண்டியிருந்தது (மத்தேயு 15:14). மேலும் அவர்கள் தங்கள் குருவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்துவின் சீடர்களின் நோக்கம் இயேசுவைப் போல் ஆக வேண்டும் என்பதுதான். ஆகவே, தாராள மனப்பான்மை மற்றும் அன்பைப் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைக் கவனமாகக் கவனித்து, அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

இன்று இயேசுவைப் பின்பற்ற முயலும் விசுவாசிகளாகிய நாம் அறிவிலும், ஞானத்திலும், நடத்தையிலும் அவரைப் போல் ஆக, நம் வாழ்வை நம் மாபெரும் குருவிடம் ஒப்படைப்போம். உதாரத்துவமான, அன்பான வழிகளைப் பிரதிபலிக்க அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்.