எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

இரு வீடுகள்

வீடுகளின் ஸ்திரத்தன்மையை பரிசோதிக்கத் தீர்மானித்த பொறியாளர்கள், மூன்று வகையான வீடுகளைக் கட்டி, அதை 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் மூலம் பரிசோதித்தனர். அதில் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட வீடு முற்றிலும் அழிந்துபோனது. மண் சாந்து மற்றும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட வீடும் விழுந்துபோனது. ஆனால் நல்ல தரமான சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடானது பலத்த விரிசல்களோடு அப்படியே நின்றது. “இதில் நீங்கள் எந்த வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியோடு பொறியாளர் இந்த ஆய்வினை நிறைவுசெய்தார். 

தேவனுடைய இராஜ்யத்தின் மேன்மையைக் குறித்த இயேசுவின் போதனையின் இறுதியில், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று குறிப்பிடுகிறார். பலத்த காற்று வீசியபோதும் அந்த வீடு நிலைத்து நின்றது. ஆனால் அதற்கு முரணாக, தன்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26) என்றும் குறிப்பிடுகிறார். பெருங்காற்று வீசியபோது, புயலின் கோரத்தை தாங்க முடியாமல் அந்த வீடானது விழுந்துபோனது.  

இயேசு மக்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார்: கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நிலையான அஸ்திபாரத்தில் வீட்டைக் கட்டுவது அல்லது சுய வழியில் வீட்டைக் கட்டுவது. நாம் சரியானதைத் தெரிந்தெடுக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகளின் மீதும் கட்டுகிறோமா? அல்லது சுய வழியில் கட்டுகிறோமா? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீது கட்ட முற்படுவோம்.

 

இரக்கமுள்ள தகப்பன்

எட்டு வயது நிரம்பிய கேபிரியலுக்கு மூளையிலிருந்த கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அது அவனுடைய தலையின் ஒரு ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியது. அந்த தழும்பிநிமித்தம், நான் ஒரு மிருகத்தைப் போல உணருகிறேன் என்று அவன் சொல்லக் கேட்ட அவனுடைய அப்பா, ஒரு யோசனையை செயல்படுத்தினார். தன்னுடைய மகன் மீதான தன்னுடைய அன்பிற்கு அடையாளமாய், கேபிரியேலுக்கு இருப்பதுபோலவே தன்னுடைய தலையின் ஓரத்திலும் ஒரு வடிவத்தை பச்சைக் குத்திக்கொண்டார்.

தேவன் “தன் பிள்ளைகளுக்கு” இதே போன்ற இரக்கமுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 103:13). மனித வாழ்க்கையை தெய்வீக அன்போடு உருவகப்படுத்தி தாவீது கூறுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு மென்மையாய் இரங்குவதுபோல தேவன் இரங்குகிறார் என்று குறிப்பிடுகிறார் (வச. 17). ஒரு மாம்சீக தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குவதுபோலவே, பரலோகத்திலிருக்கும் தேவனும் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தேவன் தன் ஜனங்கள் மீது மனதுருகும் இரக்கமுள்ள தகப்பன். நாம் நேசிக்கப்படாதவர்களாயும் பெலவீனர்களாயும் உணரும்போது, நம் மீதான பரலோக தகப்பனின் அன்பை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே” (1 யோவான் 3:16)   

நம்முடைய இரட்சிப்பிற்கேதுவான இரக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த செய்கையின் மூலம் அவர் நம்மீது வைத்த அன்பை அவருடைய சிலுவையினூடாய் நாம் பார்க்கமுடியும். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15) என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அதை நிரூபிக்க அவரிடத்தில் தழும்புகள் உண்டு.

தேவையற்ற விருந்தினர்கள்

ஷில்பாவும் அஜய்யும், ஒரு அழகான இடத்தில் அற்புதமான தேனிலவைக் கொண்டாடினர். இருப்பினும் அவர்கள் வீடு திரும்பியபோது, அஜய்யின் பாதங்களில் ஒரு விசித்திரமான அரிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தம்பதியினர் தொற்றுநோய் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிய ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட கொப்புளங்கள் மூலம் அவரது கால்களுக்குள் புகுந்துவிட்டதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். ஒரு எதிர்பார்ப்புடன் துவங்கிய தேனிலவு, தேவையற்ற விருந்தினர்களுடனான ஒரு சவாலான போரில் முடிவடைந்தது.

பாவத்தை எதிர்த்துப் போராட தேவனிடம் உதவி கேட்காவிட்டால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவரது கனவு, பாவம் மற்றும் முரட்டாட்டம் என்னும் தேவையற்ற விருந்தினர்களுடன் போராக மாறும் என்பதை தாவீது அறிந்திருந்தார். இயற்கை உலகில் தேவன் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார் (சங்கீதம் 19:1-6) என்றும், தேவனுடைய போதனையில் ஞானத்தை அடைந்து (வச. 7-10), காணப்பட்ட அவரது ஞானத்தை அறிவித்த பிறகு, தன்னுடைய கீழ்ப்படியாமை என்னும் ஆணவ எண்ணங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்படி, தாவீது தேவனிடம் உதவி கேட்கிறார். “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்; துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று எழுதுகிறார் (வச. 12-13). பாவம் என்ற தொற்று நோய் தன்னைத் தாக்காமல் இருக்க தன்னிடம் மனித வளம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். எனவே, அவர் ஞானமாக தேவனிடம் உதவி கேட்டார்.

தேவனை கனப்படுத்தும் விதத்தில் வாழ நினைக்கும் நம்முடைய வாழ்க்கையானது, பாவத்தினால் தடைசெய்யப்படவில்லை என்பதை நாம் எவ்விதம் உறுதிசெய்துகொள்ள முடியும்? நம் கண்களை அவர் மீது வைத்திருப்போம். நம் பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்புவோம். தேவையற்ற ஆவிக்குரிய ஒட்டுண்ணிகள் நம் வாழ்க்கையை சிதைக்காமல் இருக்க, தெய்வீக உதவியை நாடுவோம்.

உன்னால் முடியும்!

(பவுலும் பர்னபாவும்) லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்) அப்போஸ்தலர் 14:21-22.

ஊக்கம் என்பது ஆக்ஸிஜன் போன்றது - அது இல்லாமல் நாம் வாழ முடியாது. குற்றாலீஸ்வரன் என்று அழைக்கப்படும் பதிமூன்று வயது குற்றால் ரமேஷ{க்கு இது உண்மையாக இருந்தது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டிய இளைய இந்திய நீச்சல் வீரர் என்ற சாதனையைப் படைத்த சிறுவன், உலக சாதனை படைத்தான். ஆனால் அவனது பயிற்சியாளர் கே.எஸ். இளங்கோவன் இல்லாமல் இது சாத்தியமில்லை. இளங்கோவன், கோடைக்கால நீச்சல் முகாமில் அவனது திறமையைக் கண்டறிந்தார். ஆங்கிலக் கால்வாயின் குளிர்ந்த நீரில் இந்த சாதனையைச் செய்ய அவன் பயிற்சி செய்தபோது, பலர் அவனை அதையரியப்படுத்தினர். மேலும் அவனை இந்தியாவுக்குத் திரும்பச் செல்லச் சொன்னார்கள். இருப்பினும், அவனது பயிற்சியாளரும் தந்தையும் கொடுத்த ஊக்கம், அவனது இலக்கை முடிக்க அவனுக்கு தேவையான ஊக்கத்தை அளித்தது.

கொந்தளிப்பான, குளிர்ச்சியான தண்ணீர் இயேசுவின் விசுவாசிகளை கைவிட விரும்பியபோது, பவுலும் பர்னபாவும் தங்கள் பயணத்தைத் தொடர அவர்களை ஊக்கப்படுத்தினர். அப்போஸ்தலர்கள் தெர்பை பட்டணத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்த பிறகு, அவர்கள் “லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்)” (அப்போஸ்தலர் 14:21-22). விசுவாசிகள் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்க அவர்கள் உதவினார்கள். பிரச்சனைகள் அவர்களை வலுவிழக்கச் செய்தன. ஆனால் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், கிறிஸ்துவுக்காக வாழ்வதற்கான அவர்களின் தீர்மானத்தை பலப்படுத்தியது. தேவனின் பலத்தில், அவர்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதை உணர்ந்தனர். இறுதியாக, பவுலும் பர்னபாவும் அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப் பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்” (வச. 22) என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார்கள்.

இயேசுவுக்காக வாழ்வது ஒரு சவாலான, கடினமான எதிர்நீச்சல் போன்றது. நமக்கு சில நேரங்களில் விட்டுக்கொடுக்க தோன்றலாம். அதிர்ஷ்டவசமாக, இயேசுவும் அவரில் வாழும் விசுவாசிகளும் நாம் முன்னேறிச்செல்ல தேவையான ஊக்கத்தை அளிக்க முடியும். அவரோடு அதை நாம் மேற்கொள்ள முடியும். 

தேவன் நமக்காக யுத்தம்செய்கிறார்

தன் குழந்தையை பாதுகாக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அவள் நிரூபித்தாள். அவளது ஐந்து வயது மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் அலறும் சத்தம் கேட்டது. அவள் வெளியே விரைந்தாள். அங்கே தன்னுடைய மகனை ஒரு புலி பற்றியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அந்த பெரிய புலி தன் மகனின் மேல் வாயில் தலை வைத்திருந்தது. தன் உள் வலிமை அனைத்தையும் வரவழைத்து, தன் மகனை பற்றியிருந்த அந்த புலியின் தாடையிலிருந்து அவனைக் காப்பாற்ற போராடினாள். இந்த தாயின் துணிச்சலான செயல், வேதத்தில் தேவனுடைய உறுதியான அன்பையும் பாதுகாப்பையும் விளக்குவதற்கு தாயின் அன்பை உருவகமாய் பயன்படுத்தியதை நினைப்பூட்டுகிறது.

ஒரு கழுகு தன் குஞ்சுகளை கவனித்துக்கொள்வது போல தேவன் தம் மக்களை அன்புடன் கவனித்து ஆறுதல்படுத்துகிறார் (உபாகமம் 32:10-11; ஏசாயா 66:13). மேலும் தன்னுடைய பிள்ளையோடு இருக்கும் பிரியாத பிணைப்பினிமித்தம், அப்பிள்ளையை போஷிப்பதுபோல, தேவன் தன் ஜனத்தை ஒருபோதும் மறப்பதுமில்லை, அவர்கள் மீதான உருக்கமான இரக்கத்தை ஒருபோதும் எடுத்துப்போடுவதில்லை (ஏசாயா 54:7-8). இறுதியாக, ஒரு பறவை தன் சிறகுகளின் கீழ் தன் குஞ்சுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல, தேவன் தம்முடைய ஜனத்தை “தம் சிறகுகளாலே மூடுவார்.” அவர்களுக்கு “அவருடைய சத்தியம் பரிசையும் கேடகமாகும்” (சங்கீதம் 91:4).

சில நேரங்களில் நாம் தனிமையாக, மறக்கப்பட்டவர்களாய், அனைத்து வகையான ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களாய் உணர்கிறோம். தேவன் நம் மீது இரக்க உருக்கமாய் இருக்கிறார் என்பதையும், நமக்காக யுத்தம்பண்ணுவார் என்பதையும் நம்மை அறியச் செய்வாராக.

அவருக்காய் ஏங்குங்கள்!

“இது தான் நான் சாப்பிடும் கடைசி உருளைக்கிழங்கு சிப்ஸ்” என்று நாம் சொல்லி ஐந்தே நிமிடம் ஆன பின்பு, மீண்டும் ஏன் அதை சாப்பிடுவதற்கு ஏங்குகிறோம்? இக்கேள்விக்கு மைக்கேல் மோஸ், தன் “சால்ட் ஷுகர் ஃபேட்” என்ற புத்தகத்தில் பதிலளிக்கிறார். அமெரிக்காவின் பெரிய நொறுக்குத்தீனி உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்காய் மக்களை எவ்விதம் ஏங்கச் செய்கின்றனர் என்று அவர் விவரிக்கிறார். ஒரு பிரபல நிறுவனம் இது போன்ற மக்களின் ஏக்கத்தை தூண்டும் அம்சத்தை கண்டறியவே நிபுணர்களின் ஆய்விற்கு ஆண்டுக்கு ரூபாய் 222 கோடி செலவழிக்கிறதாம். 

அந்நிறுவனத்தைப் போலல்லாமல், நம் ஆத்துமாவிற்கு திருப்தியை தரும் ஆவிக்குரிய ஆகாரத்திற்காய் ஏங்கும்படி இயேசு நமக்கு உதவுகிறார். இயேசு, “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்று கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அவர் இரண்டு காரியங்களை வலியுறுத்துகிறார்: முதலாவது, அவர் சொல்லுகிற அப்பம் என்பது பொருளல்ல, அது ஒரு நபர் (வச. 32). இரண்டாவது, பாவமன்னிப்பிற்காய் மக்கள் இயேசுவை நம்பும்போது, அவருடன் சரியான முறையில் நெருங்கி, ஆத்துமாவின் சகல ஏக்கங்களுக்கான திருப்தியை அடைவார்கள். நம்மை திருப்தியாய் வழிநடத்தக்கூடிய நித்திய ஜீவ அப்பம் அவரே. 

நம் விசுவாசத்தை இயேசுவின் மீது வைக்கும்போது, பரலோகத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாகிய அவருக்காய் நாம் ஏங்குவோம். அவர் நம்மை பெலப்படுத்தி, நம் வாழ்க்கையை மறுரூபமாக்குவார். 

வயது வெறும் எண்ணிக்கையே

சாதிப்பதற்கு, இளம் வயது தடையில்லை. அது பதினோரு வயதேயான மிகாய்லாவையும் தடைசெய்யவில்லை. எலுமிச்சை பாணம் அருந்துவதற்கு பதிலாக மிகாய்லா எலுமிச்சை பாணத்தை வியாபாரமாக்கினாள். “மீ அண்ட் தி பீஸ் லெமெனேட்” என்ற அவள் வியாபாரம், தன் பாட்டியின் சமையல் குறிப்போடு ஆரம்பமாகி, ஷார்க் டேங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களால் 60,000 டாலர்கள் முதலீட்டை ஈட்டினாள். மேலும் அவள் பிரபலமான மளிகை வியாபாரியின், ஐம்பத்தைந்து கடைகளில் தன்னுடைய எலுமிச்சை பாணத்தை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.

மிகாய்லாவின் வேகமும், அவளது லட்சியங்களும், “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு” (1 தீமோத்தேயு 4:12) என்று தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை நமக்கு நினைப்பூட்டுகின்றன.
தீமோத்தேயு, மிகாய்லாவை போல சிறுபிள்ளையல்ல; எனினும், தன் சபையாரோடு ஒப்பிடுகையில் அவர் இளையவராகவே இருந்தார். ஜனங்கள் தன்னை அலட்சியம் செய்வதைக்குறித்து வேதனைப்பட்டார். மேலும் அப்போஸ்தலன் பவுலிடம் அவர் பயின்றிருந்தாலும், தங்களை வழிநடத்தும் அளவிற்கு அவர் முதிர்ச்சியடையவில்லை என சிலர் கருதினர். அவருடைய தகுதிகளை பிறருக்கு நிரூபித்துக்காட்டும்படிக்கு பவுல் அவரை அறிவுறுத்தவில்லை; மாறாக, அவருடைய வார்த்தைகள், வாழும் முறை, சபையினரை நேசித்தல், விசுவாசத்தை வாழ்ந்து காட்டுதல் மற்றும் கற்போடு இருத்தல் (வச. 12) ஆகியவற்றால் அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியை நிரூபிக்க தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார். இத்தகைய முன்மாதிரியாக அவர் இருந்தால், அவரைப் போதகராக, மேய்ப்பராக எவரும் அசட்டை செய்யமுடியாது.

நாம் எந்த பருவத்தினராயினும், இவ்வுலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கிறிஸ்துவை மையப்படுத்தி முன்மாதிரியாக நாம் இருக்க, தேவனே நமக்கு தேவையானவற்றை அருளுகிறார். சுவிசேஷத்தால் நம் வாழ்வை வடிவமைக்கிறார். ஆகவே நாம் பதினேழு வயது வாலிபனோ, அல்லது எழுபது வயது வயோதிகரோ, பிறரோடு சுவிசேஷம் பகிர நாம் தகுதியானவர்களே.

காத்திருக்க விரும்புதல்

காத்திருத்தல் என்பது நம் அமைதியை திருடும் திருடனாய் இருக்கலாம். ரமேஷ் சீதாராமன் என்னும் கணிணி விஞ்ஞானியின் கூற்றுப்படி, “இணையதளங்களில், சில வலைதளங்கள் தோன்ற ஏற்படும் தாமதம் மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் பிறப்பிக்கிறது” என்று கூறுகிறார். ஆன்லைனில் ஒரு காணொலியை காண்பதற்கு, அதிகபட்சம் ஒருவர் இரண்டு விநாடிகள் மட்டுமே காத்திருக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். ஐந்து விநாடிகள் கடந்தவுடன் இருபத்தைந்து சதவிகித மக்கள் பதிவிறக்கும் முயற்சியை கைவிடுகின்றனர், பத்து விநாடிகள் கழித்து ஏறத்தாழ பாதிபேர் அணைத்து முயற்சிகளையும் கைவிடுகின்றனர். நாம் பொறுமையேயில்லாத ஜனங்கள்.  

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு, அந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவத்தின் மத்தியிலும், ஒருவரையொருவர் நேசிக்கவும், கனப்படுத்தவும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இந்த நம்பிக்கை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் (யாக்கோபு 5:7-10). அவருடைய இந்த கருத்தை வலியுறுத்துவதற்கு பயிரிடுகிற விவசாயியை உதாரணமாக்குகிறார். பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் (வச. 7) ஒரு விவசாயி காத்திருப்பது போல, இயேசுவின் வருகை வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். அவர் வரும்போது, கோணலானவைகளை செவ்வையாக்கி, இளைப்பாறுதலை உண்டுபண்ணுவார். 

அவருக்காய் காத்திருக்கும்போது சிலவேளைகளில், அவரை நாம் மறுதலிக்க தூண்டப்படுகிறோம். ஆனால் காத்திருக்கும் வேளையில், “விழித்திருங்கள்” (மத்தேயு 24:42), உண்மையாய் இருங்கள் (மத்தேயு 25:14-30), அவருடைய வழியில் நடந்து, அவருடைய சுபாவத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12). கிறிஸ்துவின் வருகை எப்போது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் வரும்வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம். 

நம் சௌகரியத்திற்கல்ல

அபிஷ்வாஸ்  தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது பாதையில் திசைதிரும்பிய ஒரு கார், அவனை எதிர்வரும் வாகனத்தின் மீது மோதச் செய்தது. இரு வாரங்கள் கழித்து ஒரு சிகிச்சை மையத்தில் கண்விழித்த போதுதான், அவனுடைய மோசமான நிலை புரிந்தது. அதிலும் மோசமாக, தண்டுவடம் காயப்பட்டதால் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அபிஷ்வாஸ், தான் குணமாக ஜெபித்தான், ஆனால் அது அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, "இந்த வாழ்வின் நோக்கமே நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதுதான். துரதிருஷ்டவசமாக அது நமக்கு எல்லாமே நன்மையும், இன்பமுமாய் இருக்கும்பட்சத்தில் சாத்தியமாகாமல் , நம் வாழ்க்கை கடினமாகும்போதும், ஒவ்வொரு நாளையும் கடக்கவே ஜெபத்தின் மூலமாக தேவனை சார்ந்துகொள்வது கட்டாயமாகும்போதும் தான் அது சாத்தியமாகும்" என்பதை தேவன் தனக்கு உருக்கமாக கற்றுக்கொடுத்ததாக விசுவாசிக்கிறான்.

தேவனோடுகூட சரியான உறவிலிருப்பதால் உண்டாகும் இரு நன்மைகளை குறித்து அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார் அவை: உபத்திரவத்தில் பொறுமை மற்றும் உபத்திரவத்தை குறித்து மேன்மைபாராட்டுவது (ரோமர் 5:3-4) இவ்விரு நன்மைகளும் ஏதோ மனவலிமை பெற்று துன்பத்தை சகிக்கவோ அல்லது துன்பத்தில் இன்பம் காணவோ நம்மை அழைக்கவில்லை. மாறாக, தேவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கைக்கு நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவுடன் கூடிய உபத்திரவம், "பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது" (வ.3). இவை அனைத்துமே நம் தகப்பன் நம்மை கைவிடமாட்டார் மாறாக நம்மோடு அக்கினியிலும் கூட நடப்பார், நமது எதிர்காலத்திலும் நடத்துவார் என்ற விசுவாசத்திலிருந்து வழிகின்றன.

தேவன் நமது உபத்திரவங்களில் நம்மை சந்தித்து அவருக்குள் நாம் வளர உதவுகிறார். துன்பங்களை அவருடைய தண்டனைகளாக பார்ப்பதை விடுத்து அவைகளை கொண்டு நம்மை அவர் மெருகேற்றும் வழிமுறைகளை கண்டுகொண்டு நமது குணாதிசயங்களை வளர்த்து "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதை" (வ.5) அனுபவிப்போமாக.