எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

தேவனின் பொருட்டு சேவை செய்தல்

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் செப்டம்பர் 2022இல் இறந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தியாகமான சேவை மக்களால் பார்க்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிய கௌரவமாகக் கருதினர். “அவரது மாட்சிமைக்காக எங்கள் கடைசி கடமையை செய்ய இது ஒரு வாய்ப்பு” என்று ஒரு இராணுவ வீரர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்தார் என்பது அல்ல, ஆனால் அவர் அதை யாருக்காக செய்கிறார் என்பது ஒரு முக்கியமான வேலையாக மாறியது. 
வாசஸ்தலத்தின் அலங்காரப் பொருட்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட லேவியர்களும் இதே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆசாரியர்களைப் போலல்லாமல், கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள் மற்றும் மெராரியர்களுக்கு சாதாரணமான வேலைகள் ஒதுக்கப்பட்டன: பெட்டி, மேஜை, குத்துவிளக்கு, பீடங்கள், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகள், தொங்குதிரை அதினுடைய எல்லா வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டனர் (எண்கள் 3:25-26, 28, 31, 36-37). அவர்கள் இந்த ஆசரிப்புகூடார வேலைக்காக தேவனால் நியமிக்கப்பட்டனர். அவர்களின் சந்ததியர் அதை தொடர்ந்துசெய்ய கட்டளையிடப்பட்டனர்.  
என்ன ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை! இன்று, நம்மில் பலர் வேலையில், வீட்டில் அல்லது தேவாலயத்தில் என்ன செய்கிறோம் என்பது பட்டங்களையும் சம்பளத்தையும் மதிக்கும் உலகிற்கு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் தேவன் வேறு விதமாக பார்க்கிறார். நாம் அவர் பொருட்டு ஊழியம் செய்து அவருடைய நாம மகிமைக்காகப் பிரயாசப்படுவோமாகில் நம்முடைய பணியானது முக்கியமான ஒன்றாய் மாறுகிறது என்பதில் ஐயமில்லை.  

ஜெபத்தின் மூலம் அன்பு

பல ஆண்டுகளாக, ஜான் தேவாலயத்தில் ஒருவித எரிச்சலுடன் இருந்தார். அவர் மோசமான மனநிலையுடையவர், அடிக்கடி முரட்டுத்தனமாக இருந்தார். தனக்கான “சேவை” செய்யப்படவில்லை என்றும், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச்  செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டேயிருந்தார். அவரை நேசிக்கப்படுவதற்கு மிகவும் கடினமானவராய் இருந்தார்.  
அதனால் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது,அவருக்காக பிரார்த்தனை செய்வது எனக்கு கடினமாக இருந்தது. அவரது கடுமையான வார்த்தைகள் மற்றும் விரும்பத்தகாத குணத்தின் நினைவுகள் என் மனதை நிரப்பின. ஆனால் இயேசுவின் அன்பின் அழைப்பை நினைவுகூர்ந்ததால், ஒவ்வொரு நாளும் ஜானுக்காக ஒரு எளிய பிரார்த்தனை செய்ய நான் உந்தப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய விரும்பத்தகாத குணங்களைப் பற்றி நான் கொஞ்சம் குறைவாகவே சிந்திக்க ஆரம்பித்தேன். அவருக்கு வலிக்கவேண்டும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணியதுண்டு. ஆனால் இப்போதோ, அவரை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.  
ஜெபம், நம்மையும், நம் உணர்வுகளையும், மற்றவர்களுடனான நமது உறவுகளையும் தேவனுக்கு வெளிப்படுத்திக் காண்பித்து, அவருடைய பார்வையை எல்லாவற்றிலும் நுழைய அனுமதிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நம்முடைய சித்தத்தையும் உணர்ச்சிகளையும் மாற்றும்பொருட்டு பரிசுத்த ஆவியானவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கும்போது, அவர் நம்முடைய இருதயங்களை மெதுவாகவும் நிலையாகவும் மறுரூபமாக்குவார். நம் எதிரிகளை நேசிப்பதற்கான இயேசுவின் அழைப்பு ஜெபத்திற்கான அழைப்போடு இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை: “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” (லூக்கா 6:28). 
ஜானைக் குறித்து நலமானதை யோசிக்க நான் இன்னும் போராடுகிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆவியானவருடைய துணையோடு, தேவனுடைய பார்வையோடும் இதயத்தோடும் அவரை மன்னிப்புக்கும் அன்புக்கும் தகுதியானவராய் பார்க்க நான் பழகிக்கொண்டிருக்கிறேன்.  

உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை

சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான்.

இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார்.

தெரியாத வழி

நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

துக்கத்தில் நம்பிக்கை

லூயிஸ் ஒரு கலகலப்பான, விளையாட்டுத்தனமான பெண். அவள் சந்திக்கிற அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுவாள். ஐந்து வயதில் ஓர் அரிய நோயினால் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய திடீர் மரணம் அவளுடைய பெற்றோர் டே டேக்கும், பீட்டருக்கும், அவர்களுடன் பணிபுரிந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் வருந்தினோம். 
  
ஆனால் அவளுடைய பெற்றோர் டே டேயும், பீட்டரும் அதைக் கடந்து செல்வதற்கான வலிமையைக் கண்டுகொண்டனர். அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நான் டே டேவிடம் கேட்டபோது, லூயிஸ் இளைப்பாறும் இயேசுவின் அன்பான கரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் பெலனைப் பெற்றதாகச் சொன்னாள். "நித்திய வாழ்விற்குச் சென்ற எங்கள் மகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும், "தேவனின் கிருபையினாலும், பலத்தினாலும், துக்கத்தின் வழியாக செல்லவும், அவர் ஒப்படைத்த பொறுப்பை தொடர்ந்து செய்யவும் முடிந்தது" என்றும் கூறினாள். 
  
டே டே யின் நம்பிக்கை மற்றும் ஆறுதல், தம்முடைய குமாரனில் தன்னை வெளிப்படுத்திய தேவனுக்குள் இருந்தது. வேதத்தில் விசுவாசம் வைப்பதென்பது வெறும் நம்பிக்கையை விட அதிகமானது. அவர் ஒருபோதும் மீறாத தம்முடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கொண்டுள்ள நிச்சயமாகும். பிரிந்த நண்பர்களுக்காக வருந்துபவர்களைப் பவுல் ஊக்குவித்தபடி, நம்முடைய துக்கத்தில் இந்த வல்லமை வாய்ந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளலாம்: ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறமே; அப்படியே 
இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்”(I தெசலோனிக்கேயர் 4:14). இந்த உறுதியான நம்பிக்கை இன்று நமக்கு பலத்தையும், ஆறுதலையும் தரட்டும்; நமது துக்கத்திலும் கூட

ஆசீர்வதிக்கப்பட்ட வழக்கம்

காலையில் ரயிலில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து, திங்கட்கிழமை பரபரப்பை உணர்ந்தேன். நெரிசல் நிறைந்த கேபினில் இருந்தவர்களின் தூக்கம், எரிச்சலான முகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் வேலைக்கு செல்லும் சரியான மனநிலையில் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும். சிலர் உட்காரும் இருக்கையை பிடிக்க முண்டியடித்து முன்னேற, மேலும் பலர் உள்ளே நுழைய முற்பட்டதால் முகச் சுளிவுகள் வெடித்தன. இதோ வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சாதாரண நாளாக இதுவும் நகர்ந்து செல்லுகிறது.  
திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு, கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் நம்முடைய அன்றாட வழக்கத்தை செயல்படுத்த முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். உணவு உண்பதற்கு வெளியே செல்லமுடியாத நிலை. சிலர் அலுவலகங்களுக்கும் செல்லமுடியவில்லை. ஆனால் தற்போது நாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறோம். வழக்கம்போல செய்யும் இயல்பு காரியங்கள் சலிப்பு தட்டகூடியதாய் இருந்தாலும் அது ஆசீர்வாதம் என்னும் நற்செய்தியை நான் உணர்ந்தேன்.  
சாலொமோன் ராஜா, நாம் அன்றாடம் ஏறெடுக்கும் பிரயாசங்களில் இருக்கும் அர்த்தமற்ற காரியங்களைக் குறித்து பேசுகிறார் (பிரசங்கி 2:17-23). சிலவேளைகளில் அது முடிவில்லாததாகவும், அர்த்தமற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் தெரியலாம் (வச. 21). ஆனாலும் புசித்து குடித்து ஒவ்வொரு நாளும் திருப்தியாய் இருப்பது தேவனிடத்திலிருந்து கிடைத்த நன்மை என்பதை அவர் வலியுறுத்துகிறார் (வச. 24).  
நாம் வழக்கமாய் செய்யும் காரியங்களினால் சலிப்படையும்போது, இந்த காரியங்கள் அனைத்தும் மேன்மையானது என்பதை அறிவோம். நாம் புசித்து, குடித்து, கையிட்டு செய்யும் பிரயாசங்களில் திருப்தியடைவது என்பது தேவன் நமக்கருளிய ஈவு என்று எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துவோம் (3:13).  

இயேசுவில் தொடருவோம்

காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன்.  
“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார்.  
என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார்.  
பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது.

தூரம் அல்லவே அல்ல

ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான்  (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.

பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: " நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து" (லூக்கா 22:32).

ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.