எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

நான் யார்?

உள்ளுர் ஊழியத்திற்கான தலைமைக் குழுவின் உறுப்பினராக, குழு விவாதத் தலைவர்களாக எங்களுடன் சேர மற்றவர்களை அழைப்பது எனது வேலையின் ஒரு பகுதியாகும். என்னுடைய அழைப்பிதழ்கள், தேவைப்படும் நேர அவகாசத்தை விவரித்து கூட்டங்கள் மற்றும் வழக்கமான தொலைபேசி அழைப்புகளின் போது தலைவர்கள் தங்கள் சிறிய குழு பங்கேற்பாளர்களுடன் ஈடுபட வேண்டிய வழிகளை கோடிட்டுக் காட்டியது. ஒரு தலைவராக ஆவதற்கு அவர்கள் செய்யும் தியாகத்தை உணர்ந்து, அவர்களை அதிகமாய் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. சில வேளைகளில், “இதை நான் கனமாக எண்ணுகிறேன்” என்னும் அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தும். நிராகரிப்பதற்கான நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்துவதைத் திருப்பிக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக விவரித்தனர். 
கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான உபகரணங்களைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, தாவீது இதேபோன்ற பிரதிபலிப்பைக் கொண்டிருந்தார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்?” (1 நாளாகமம் 29:14). தாவீதின் இந்த தயாள குணம், தன்னுடைய வாழ்க்கையிலும் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையிலும் தேவனுடைய கிரியைகளின் அடிப்படையில் உந்தப்பட்டது. அவருடைய பணிவினிமித்தம், நாங்கள் “அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்” (வச. 15) என்று அவர் தன்னை தாழ்த்துகிறார்.  
நாம் நம்முடைய நேரம், திறமை அல்லது பொருளாதாரம் என்று எதை ஆண்டவருக்காய் கொடுத்தாலும், அதை நம்முடைய வாழ்க்கையில் கொடுத்த தேவனுக்கு நாம் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. நம்மிடம் உள்ள அனைத்தும் அவருடைய கையிலிருந்து வருகிறது (வச. 14). பதிலுக்கு, நாம் அவருக்கு நன்றியுடன் கொடுக்க முடியும். 

சாத்தியமில்லாத பரிசு

என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?

 இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம்.

நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும்.  

சிவப்பு ஆடை திட்டம்

சிவப்பு ஆடைத்திட்டம் பிரிட்டிஷ் கலைஞரான கிர்ஸ்டி மேக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்களில் ஒரு முக்கிய அங்கமாய் மாறியுள்ளது. பதின்மூன்று ஆண்டுகளாக, எண்பத்து நான்கு பர்கண்டி பட்டுத் துண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களால் (மற்றும் ஒரு சில ஆண்களால்) எம்ப்ராய்டரி செய்யப்பட்டன. அந்த துண்டுகள், அந்த திட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாமல் ஒதுக்கப்பட்டிருந்த பல கலைஞர்களின் கதைகளைச் சொல்லும்வண்ணம் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.

இந்த சிவப்பு ஆடையைப் போலவே ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்ட வஸ்திரம் “விவேகமான இருதயமுள்ள” (யாத்திராகமம் 28:3) பலரால் வடிவமைக்கப்பட்டது. ஆசாரியர்களின் அந்த பிரத்யேகமான வஸ்திரத்தில், இஸ்ரவேலின் வாழ்க்கை சரிதைகள், அதிலுள்ள கற்களில் கோத்திரங்களின் பெயர்கள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை ஆரோன் “கர்த்தருக்கு முன்பாக… ஞாபகக்குறியாகச் சுமந்துவர” (வச. 12) அறிவுறுத்தப்படுகிறார். அங்கிகள், இடைக்கச்சைகள் மற்றும் குல்லாக்கள் ஆகியவைகள் தேவனை சேவித்து மக்களை ஆராதிக்க தகுதிப்படுத்திய ஆசாரியர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்பொருட்டு கொடுக்கப்படுகிறது (வச. 40).

கிறிஸ்துவின் மூலம் உடன்படிக்கை உறவில் அங்கத்தினராய் சேர்க்கப்பட்ட நாம், ஆசாரியக்கூட்டமாய் அழைப்பைப் பெற்று, ஒருவரையொருவர் தேவனை ஆராதிக்க ஊக்கப்படுத்துவோம் (1 பேதுரு 2:4-5,9). இயேசுவே நமது பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14). ஆசாரியர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு பிரத்யேகமான ஆடையையும் நாம் அணியாவிட்டாலும், அவருடைய கிருபையால், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழ்கிறோம் (கொலோசெயர் 3:12).

ஆராதனை பண்டிகை

பெரிய கூட்டங்களில் பங்கேற்பது என்பது உங்களை ஆச்சரியமான விதங்களில் மாற்றமடையச் செய்யும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களில் பல நாள் கூட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு, ஆராய்ச்சியாளர் டேனியல் யூட்கினும் அவரது சகாக்களும், இதுபோன்ற பெரிய கூட்டங்கள் நம்முடைய ஒழுக்கரீதியான வாழ்க்கையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையையும் பாதிக்கும் என்பதைக் கற்றுக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்பவர்களில் 63 சதவீதம் பேர் மறுரூபமாக்கபட்ட அனுவத்தை பெற்றதாக அவர்களின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

ஆயினும் தேவனை ஆராதிக்க மற்றவர்களுடன் நாம் ஒன்றுகூடும்போது, ஒரு மதச்சார்பற்ற பண்டிகையின் சமூக மாற்றத்தை விட அதிகமாக நாம் அனுபவிக்க முடியும்;. நாம் தேவனோடு தொடர்புகொள்கிறோம். பண்டைய நாட்களில் ஆண்டு முழுவதும் பண்டிகைகளுக்காக எருசலேமில் மக்கள் கூடிவந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடனான தொடர்பை முழுமையாய் அனுபவித்தனர்;. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகை” (உபாகமம் 16:16) ஆகிய நாட்களில் ஆலயத்தில் தங்கும் நவீன வசதிகள் இல்லாதபோதிலும், வருடத்திற்கு மூன்றுதரம் கூடிவந்தார்கள். இந்த கூடுகைகள், நினைவுகூருதல், ஆராதனை, குடும்பம், வேலைக்காரர்கள், அயல்நாட்டவர் மற்றும் பலருடன் தேவனுடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது (வச. 11).

அவரைத் தொடர்ந்து ஆராதிக்கவும், அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்கவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்ய மற்றவர்களுடன் நாமும் ஒன்றாகக் கூடுவோம்.

சாக்லேட் பனி துகள்கள்

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது. 
  
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் 
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர். 
  
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51). 
  
 

தேவனுடைய கரத்தில்

பதினெட்டு வயதை எட்டியது என் மகளின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது: சட்டப்பூர்வமாக அவள் வயது வந்தவள். அவள் இனி நடக்கவிருக்கம் தேர்தல்களில் வாக்களிக்கமுடியும். உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு விரைவில் அவளுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும். இந்த உணர்வானது என்னை ஆக்கிரமிக்க, அவளோடு விலையேறப்பெற்றதாய் நான் கருதும் என்னுடைய மணித்துளிகளை செலவழிக்கவேண்டியிருந்தது. பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது, உலகத்தின் பிரச்சனைகளைக் குறித்து எப்படி விழிப்போடு இருக்கவேண்டும், மற்றும் நல்ல ஆரோக்கியமான தீர்மானங்களை எவ்வாறு எடுப்பது என்பது குறித்த ஆலோசனைகளை அவளுக்கு நான் கொடுக்கவேண்டியிருந்தது.  
என்னுடைய மகள் அவளுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவளுக்கு கொடுப்பது ஒரு தாயாய் என்னுடைய கடமையாய் நான் கருதுகிறேன். மேலும் அவள் வாழ்க்கையை நேர்த்தியாய் வாழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகிலும் நான் செய்யும் என்னுடைய பொறுப்பு முக்கியமானதாய் எனக்கு தோன்றினாலும் அது அனைத்தும் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை. பவுல் அப்போஸ்தலர் தெசலோனிகேய திருச்சபையில் தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாய் கருதும் விசுவாசிகளுக்கு இயேசுவைக் குறித்தும் மற்றவர்களுக்கு உதவிசெய்வது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:14-15). ஆகிலும் அவர்களுடைய மெய்யான வளர்ச்சிக்காக தேவனையே சார்ந்திருக்கிறார். “உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” என்று அவர் நம்புகிறார் (வச. 23).  
அவர்களுடைய “ஆவி ஆத்துமா சரீரம்” (வச. 23) ஆகியவற்றை தன்னால் தயார் செய்யமுடியாது என்று அறிந்து தேவனிடத்தில் ஒப்படைக்கிறார். தெசலோனிக்கேய திருச்சபைக்கு ஆலோசனை கொடுக்கும் வகையில் அவர் நிருபம் எழுதினாலும், அவர்களுடைய வாழ்க்கை மேம்படுவதற்கு பவுல் தேவனையே நம்புகிறார். நம்முடைய அன்பிற்குகந்தவர்களின் வாழ்க்கையை பராமரிக்கும் பொறுப்பானது தேவனுடைய கரத்தில் இருக்கிறது என்பதை இது நமக்கு கற்பிக்கிறது (1 கொரிந்தியர் 3:6).  

விசுவாசத்தின் விதைகள்

கடந்த வசந்த காலத்தில், திடீரென்று ஒரு நாள் இரவில் வீசிய பயங்கரமான காற்றினிமித்தம் வீட்டின் முற்றத்திலிருந்த மேப்பிள் மரத்தின் விதைகள் சிதறி, எங்கள் வீட்டு புல்வெளியில் விழுந்தது. அடுத்த நாள் காலையில் சிதறியிருந்த குப்பைகளை எந்திரத்தின் துணையோடு அகற்ற முயற்சித்தபோது, அந்த சின்னஞ்சிறிய விதைகள் மண்ணுக்குள் ஆழ்த்தப்பட்டது. இரண்டு வாரங்களில், நூற்றுக்கணக்கான மேப்பிள் செடிகள் எங்கள் புல்வெளியில் முளைத்து ஒரு மேப்பிள் காடு உருவாக ஆரம்பித்திருந்தது.  
ஒரே பெரிய மரத்திலிருந்து இத்தனை சிறிய மரங்கள் உருவானதைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்த சிறிய மரங்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவில் நான் பெற்றுக்கொண்ட புதுவாழ்வையும், என்னிலிருந்து அநேகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும் மாதிரியாகவும் நான் பார்த்தேன். நமக்கு கிடைக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை நாம் நேர்த்தியாய் பயன்படுத்தி, நமக்குள்ளிருக்கிற அந்த நம்பிக்கையைக் குறித்து... உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம் (1 பேதுரு 3:15).  
நீதியினிமித்தம் நாம் பாடுகளை சகிக்கும்போது (வச. 14), அதை இயேசுவை இதுவரை ஏற்றுக்கொள்ளாத மக்கள் வெளிப்படையாய் பார்க்கும்போது, அது அவர்களின் ஆர்வத்தை தூண்டும். அந்த ஆர்வத்தோடு அவர்கள் நம்மை அணுகும்போது, தேவன் நமக்கு அருளிய புதுவாழ்வை அவர்களுக்கு நாம் கொடுக்க எப்போதும் ஆயத்தமாயிருப்போம். ஆவிக்குரிய பலத்த காற்று வீசும் தருவாயில் அவைகளை ஒரேயடியாய் எல்லோருக்கும் நாம் பிரசங்கிக்கவேண்டியதில்லை. மாறாக, ஏற்றுக்கொள்ள பக்குவப்பட்டிருக்கும் இருதயத்தில் மென்மையாகவும் மரியாதையுடனும் விசுவாசத்தின் விதையை நாம் விதைக்க பிரயாசப்படுவோம்.  

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.  

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.