எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிம்யா லோடெர்கட்டுரைகள்

உறுதியாய் தரித்திரு

நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 

ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).

இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).

சத்தத்தின் வல்லமை

வரலாற்றில் பெயர்பதித்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் சமுதாயத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள். ஃபிரடெரிக் டக்ளஸை சிந்தித்துப் பாருங்கள். ஏற்றத் தாழ்வு ஒழிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய அவரது உரைகள் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய ஒரு இயக்கத்தைத் தூண்டின. அவர் அமைதியாய் இருக்க தீர்மானித்திருந்தால் என்னவாகியிருக்கும்? மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் உதவுவதற்கும் நம் குரலைப் பயன்படுத்துவதற்கான திறனை நாம் அனைவரும் பெற்றுள்ளோம். ஆனால் துணிந்து பேசுவதற்கான பயம் நம்மை முடக்குகிறது. இந்த பயம் நம்மை ஆளுகை செய்யும்போது, தெய்வீக ஞானம் மற்றும் உற்சாகத்தின் பிறப்பிடமும் ஆதாரமுமான தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம். 

தேவன் ஏரேமியாவை தேசங்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைக்க அழைப்புவிடுக்கும்போது, அவன் தன் சொந்த திறமைகளைக் குறித்து சந்தேகப்பட்டான். அவன் “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (எரேமியா 1:6) என்று கதறுகிறான். ஆனால் எரேமியாவின் சத்தத்தை எதிர்கால சந்ததிகள் கேட்கும் அந்த வாய்ப்பை இழக்கச்செய்யும் அவனுடைய பயம் அவனை ஆளுகைசெய்யாத வண்ணம் தேவன் அவனைப் பார்த்துக்கொண்டார். தான் சொல்லுவதை மட்டும் நீ செய்தால் போதுமானது என்று அவனுக்கு தேவன் ஆலோசனை சொல்லுகிறார் (வச. 7).   

தேவன் நம்மை எப்படி பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்பொருட்டு அவரிடத்தில் கேட்கும்போது, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை தேவன் வெளிப்படுத்துவார். அவருடைய உதவியுடன், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தைரியமாக நம் குரலை உயர்த்துவோம். 

விசுவாச அடிகள்

மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். 

அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினால் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம். 

நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம்.

சீர்படுத்தும் தேவன்

நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர். 

பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார். 

வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.

உறவுகளை ஒப்புரவாக்குதல்

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 

கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம். 

தேவனில் பலப்படுதல்

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.  

பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது  (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும். 

ஆவிக்குரிய புதுப்பிப்பு

சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.

வெறுமையாய் ஓடுதல்

“இனி என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று என் சிநேகிதி கண்ணீரோடு சொன்னாள். ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியில் ஒரு செவிலியராக அவள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அவள் விவாதிக்கும்போது அப்படி சொன்னாள். “தேவன் என்னை செவிலிய சேவை செய்ய அழைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உணர்வுபூர்வமாய் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றாள். அவள் மிகவும் சோர்வுற்றிருக்கிறாள் என்பதை அறிந்து, “நீ இப்போது உதவியற்றவளாய் உணருகிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் உன்னை வழிநடத்தி பெலப்படுத்துவார்” என்று ஆறுதல் சொன்னேன். அந்த நேரத்தில் அவள் ஜெபிக்க தீர்மானித்தாள். விரைவில் அவளுடைய சோர்வுகள் மறைந்து ஒரு புதிய தெளிவுடன் காணப்பட்டாள். செவிலியர் பணியை தொடர்ந்து செய்வதற்கு மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு கடந்துசென்று சேவை செய்ய தேவன் அவளுக்கு பெலன் கொடுத்தார். 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாம் பாரங்களினால் அழுத்தப்படும்போது நம்முடைய உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் தேவனை நோக்கிப் பார்ப்போம். ஏனெனில் அவர்  “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசாயா 40:28). ஏசாயா தீர்க்கதரிசி தேவனைக் குறித்து, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 29) என்று சொல்லுகிறார். தேவனுடைய பெலன் நித்தியமானது என்றாலும், நாம் சரீரப்பிரகாரமாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை அவர் அறிவார் (வச. 30). ஆனால் வாழ்க்கையின் சவால்களை மட்டும் கடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்முடைய பெலத்திற்காக நாம் தேவனை சாரும்போது, அவர் நம்மை மீட்டெடுத்து, புதுப்பித்து, விசுவாசத்தில் வளருவதற்கான நிச்சயத்தை நமக்குத் தருவார்.

தேடி வந்த தேவன்

போனி கிரே, அவள் சோகத்தில் இருந்த தருணத்தைக் குறித்து அவளுடைய சமீபத்திய ஆன்லைன் பதிவில் பகிர்ந்துகொண்டாள். “என்னுடைய வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான அத்தியாயத்தின்போது, எதிர்பாராத விதமாய் நான் பயத்தினாலும் மனச்சோர்வினாலும் பாதிக்கப்பட்டேன்” என்று பதிவிட்டிருந்தாள். கிரே, அவளுடைய பயத்தைப் போக்க பல வழிகளை கையாண்டாள். ஆனால் அந்த பிரச்சனையை தனியாளாய் கையாளுவது சாத்தியம் என்பதை சீக்கிரம் புரிந்துகொண்டாள். “என்னுடைய நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்பது எனக்கு பிடிக்காது. ஆகையினால், நாம் அமைதியாய் இருந்து என்னுடைய மனச்சோர்வு நீங்கும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் நம்மை கனவீனப்படுத்தவோ நம்முடைய வலிகளை மறைத்துக்கொள்வதையோ அனுமதிப்பதில்லை, மாறாக, அதை குணமாக்க விரும்புகிறார்.” தேவனுடைய பிரசன்னத்தில் கிரே சுகத்தைப் பெற்றாள். அவளை அச்சுறுத்திய அலைகளின் கோரப்பிடியிலிருந்து தேவன் நங்கூரமாய் செயல்பட்டு அவளை விடுவித்தார்.   

நாம் பெலவீனப்பட்டு சோர்வடையும்போது, நமக்காய் தேவன் இருக்கிறார். அவர் நம்மை தாங்குவார். சங்கீதம் 118இல் தாவீது அவனுடைய எதிரிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய கட்டத்தில் தேவனை துதித்து, தன் மீட்பிற்காய் மன்றாடுகிறான். அவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” என்று அறிக்கையிடுகிறான் (வச. 16). மோதியடிக்கும் சமுத்திரத்தின் கொடூர அலைகளைப் போன்று மனச்சோர்வு சிலவேளைகளில் நம்மை ஆட்கொண்டாலும், நம்மை நேசிக்கும் தேவன் இறங்கி வந்து நமக்கு உதவிசெய்து, “விசாலமான” இடத்திற்கு (வச. 19) நம்மை பாதுகாப்பாய் கொண்டுசேர்ப்பார். வாழ்க்கையின் சவால்களை நாம் சந்திக்கும்போது நம்முடைய அடைக்கலமாகிய தேவனையே நோக்கிப் பார்ப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).