எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

தேவன் நம் தேவைகளை அறிகிறார்

மணிலாவில் ஜீப்னி (பிலிப்பைன்ஸில் உள்ள பொதுப் போக்குவரத்தின் ஒரு வடிவம்) வாகன ஓட்டுநராக பணியாற்றிய லாண்டோ என்பவர், சாலையோரக் கடையில் நின்று கொட்டை வடிநீர் (காபி) அருந்தினார். கோவிட்-19 கட்டுப்பாட்டிற்கு பின்னர் தினசரி பயணிகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கினர். மேலும் இன்று விளையாட்டு நிகழ்வு இருப்பதால் அதிக பயணிகள் வரக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். அவ்வாறு வந்தால், நான் இழந்த பணத்தை மீண்டும் பெறக்கூடும், என் கவலைகள் மாறக்கூடும் என்று அவர் எண்ணினார். 

அவர் தனது வாகனத்தை இயக்க முற்படும்போது, அருகில் இருந்த இருக்கையில் ரோனியைக் கண்டார். அந்த துப்புரவு தொழிலாளி, ஏதோ கவலையுடன் அமர்ந்திருந்தார். ஏதோ சொல்ல வருகிறார் என்பது போல் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்று லாண்டோ நினைத்தார். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால் தாமதிக்க முடியாது. ஆனால் அவர் ரோனியை அணுகவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அதனால் அவரை அணுகி விசாரித்தார். 

கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30).  

ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார். 

 

கிறிஸ்துவுக்காக ஓர் இதயம்

நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை, நீ எந்த தவறும் செய்ய மாட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு சக பணியாளரிடம், அவள் சொன்னவற்றை தவறாகப் புரிந்து கொண்ட பிறகு, என் கோபத்தை வெளிப்புறமாக மட்டும் அடக்கிக் கொண்டேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டியிருப்பதால், தேவையானதை மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்தேன் (பேசுவதை குறைப்பதின் மூலம் பதிலடி கொடுக்க எண்ணினேன்). அமைதியான போக்கு எப்படி தவறாகும்?

இதயத்திலிருந்தே பாவம் புறப்படுகிறது என இயேசு சொன்னார் (மத்தேயு 15:18−20). எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைக்கும்படி என் மௌனம் மக்களை முட்டாளாக்கியிருக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்கவில்லை. நான் கோபம் நிறைந்த இதயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். நான் தங்கள் உதடுகளால் தேவனை கனம்பண்ணிய பரிசேயர்களைப் போலிருந்தேன், ஆனால் அவர்களின் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன (வச. 8). என் வெளித்தோற்றம் உண்மையான உணர்வுகளைக் காட்டாவிட்டாலும், கசப்பு எனக்குள் கொப்பளித்தது. என் பரலோக தகப்பனுடன் நான் எப்போதும் உணர்ந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. பாவத்தை வளர்ப்பதும் மறைப்பதும் அவ்வாறு செய்கிறது.

தேவனின் கிருபையால், நான் எப்படி உணர்கிறேன் என்பதை என் சக ஊழியரிடம் கூறி மன்னிப்பு கேட்டேன். அவள் என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள், இறுதியில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்.. புறப்பட்டுவரும்" (வ.19) என்கிறார் இயேசு. நம் இதயத்தின் நிலைமை முக்கியமானது, ஏனெனில் அங்கே இருக்கும் தீமை நம் வாழ்வில் நிரம்பி வழியக்கூடும். நமது வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டும் முக்கியம்.

இயேசு நிறுத்துகையில்

என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் முன்வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

"நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே" என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை  அவர் கேட்டார், "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்" என்று கிறிஸ்து கேட்டார். "ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்." என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: "நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்.

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, "ஒரு நாள்" என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, "ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்" என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த "முள்" அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம் தான் பவுல்  தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" (வ.10). உண்மையிலேயே "வளர்வது" என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.

இயேசுவில் நிலைத்திருத்தல்

சில வருடங்களுக்கு முன்பாக, நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு சிற்றாலய ஆராதனை நடைபெறும். அப்போது ஒருமுறை எங்கள் ஆராதனையில் மூன்று ஆசிரியர்கள் “கர்த்தர் சிறந்தவர்” என்னும் ஆங்கிலப் பாடலை முழு ஆர்வத்துடன் பாடினது எனக்கு நினைவிருக்கிறது. தங்கள் தேவனிடத்தில் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை அவர்களின் முகங்கள் பிரகாசித்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், சரீரப் பிரகாரமாய் அவர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் இந்த விசுவாசமே அதை மேற்கொள்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாயிருந்தது. 

இன்று என்னுடைய ஆசிரியர்களின் விசுவாசத்தை பிரதிபலித்த அந்த பாடல் என்னுடைய கடினமான தருணங்களில் எனக்கும் உறுதுணையாய் நிற்கிறது என்று சொல்வேன். எனக்கு அது சில விசுவாச வீரர்களின் உந்தப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்களில் ஒன்று. எபிரெயர் 12:2-3இல் “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்த” (வச. 2) இயேசுவை நோக்கி பின்செல்ல இது நமக்கு நினைவுபடுத்துகிறது.  

போராட்டங்ளோ அல்லது உபத்திரவங்களோ, வாழ்க்கையின் எந்த சூழ்நிலையாயிருப்பினும், கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் கைக்கொண்ட அநேகரை நாம் உதாரணங்களாய் எடுத்துக்கொள்ளக்கூடும். இயேசுவும் நமக்கு முன்னிருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் எவ்விதம் விசுவாசத்தில் பயணம் செய்தனரோ அதேபோன்று நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக்கடவோம் (வச. 1). ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு... அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (வச. 3) என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். 

என்னுடைய ஆசிரியர்கள் தற்போது பரலோகத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்து, “விசுவாச வாழ்க்கை சவாலான ஒன்று, தொடர்ந்து ஓடு” என்று உற்சாகப்படுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். 

என் தேவன் சமீபமாயிருக்கிறார்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, லூர்து என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பித்தார். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தச் சொன்னபோது, அவள் கவலைப்பட்டாள். “என்னுடைய கம்ப்யூட்டர் நன்றாக இல்லை," என்று அவள் சொன்னாள். “எனது மடிக்கணினி பழையது, மேலும் எனக்கு வீடியோ கான்பரன்சிங் இயங்குதளங்கள் பற்றித் தெரியாது” என்றும் சொன்னாள்.

சிலருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், அது அவளுக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. “நான் தனியாக வாழ்கிறேன், அதனால் எனக்கு உதவ யாரும் இல்லை,” “எனது மாணவர்கள் இதினிமித்தம் வகுப்பிலிருந்து வெளியேறிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனக்கு வருமானம் தேவை" என்று அவள் தன்னுடைய நிலையை விவரித்தாள்.

ஒவ்வொரு வகுப்பிற்கு முன்பும், லூர்து தனது மடிக்கணினி சரியாக வேலை செய்யவேண்டும் என்று ஜெபம் செய்வாள். “பிலிப்பியர் 4:5-6, வசனங்கள் என் திரையில் வால்பேப்பராக இருந்தது,” என்று அவள் சொன்னாள். “அந்த வார்த்தைகளில் நான் எப்படி ஒட்டிக்கொண்டேன்.”

நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்று என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய பிரசன்னம் பற்றிய தேவனுடைய வாக்குறுதியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் அவருடைய அருகாமையில் இளைப்பாறி, ஜெபத்தில் அவருக்கு எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும்போது, பெரியதோ அல்லது சிறியதோ, அவருடைய இளைப்பாறுதல் நம் “இருதயங்களையும்... சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7).

“கணினி குறைபாடுகளை சரிசெய்வது பற்றிய வலைத்தளங்களுக்கு தேவன் என்னை வழிநடத்தினார்” என்று லூர்து கூறினாள். “எனது தொழில்நுட்ப வரம்புகளைப் புரிந்துகொண்ட மாணவர்களையும் தேவன் எனக்குக் கொடுத்தார்.” நாம் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால், தேவனின் பிரசன்னம், உதவி மற்றும் இளைப்பாறுதல் ஆகியவை நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நாம் அனுபவிக்கக்கூடும். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (வச. 4) என்று நாம் நம்பிக்கையோடே மற்றவர்களுக்கு சொல்லக்கூடும்.

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார்.

பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13).

“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார்.

தேவனை நம்புதல்

எனக்கு அவசரமாக இரண்டு மருந்துகள் தேவைப்பட்டன. ஒன்று என் அம்மாவின் ஒவ்வாமைக்காகவும் மற்றொன்று என் மருமகளின் அரிக்கும் தோலழற்சிக்காகவும் இருந்தது. அவர்களின் அசௌகரியம் மோசமடைந்தது. ஆனால் அவர்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அவநம்பிக்கையான மற்றும் ஆதரவற்ற நிலையில், ஆண்டவரே, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமைகள் சமாளிக்கக்கூடியதாக மாறியது. தேவன் இப்படியாக சொல்வது போல் தோன்றியது: “நான் சில சமயங்களில் குணமடைய மருந்துகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் மருந்துகள் இறுதியாக தீர்வு அல்ல. நான் செய்வேன். அவைகள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள்.”

சங்கீதம் 20 இல், தாவீது ராஜா தேவனின் நம்பகத்தன்மையில் ஆறுதல் பெற்றார். இஸ்ரவேலர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது மிகப்பெரிய பலம் “கர்த்தருடைய நாமத்தினால்” வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (வச. 7). அவர்கள் அவர் யார், அவருடைய மாறாத தன்மை மற்றும் தவறாத வாக்குறுதிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகிய கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்தார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சர்வ மகத்துவமும் வல்லமையும் கொண்டவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பார் (வச. 6) என்ற உண்மையை அவர்கள் நம்பினர்.

கடவுள் நமக்கு உதவ இந்த உலகத்தின் வளங்களைப் பயன்படுத்தினாலும், இறுதியில், நம்முடைய பிரச்சனைகளின் மீதான வெற்றி அவரிடமிருந்தே வருகிறது. அவர் நமக்கு ஒரு தீர்மானத்தை கொடுத்தாலும் சரி அல்லது சகித்துக்கொள்ளும் கிருபைளை கொடுத்தாலும் சரி, அவர் சொல்லும் அனைத்தும் அவர் நம்மோடு இருப்பார் என்று நம்பலாம். நம்முடைய பிரச்சனைகளில் நாம் மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவருடைய நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நாம் அவற்றை துணிந்து எதிர்கொள்ள முடியும்.

இயேசுவை பற்றிக்கொள்

அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. படிக்கட்டுகள் சுழல்வது போல் தெரிந்ததால், நான் விரக்தியடைந்து, படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தேன். என் இதயம் துடித்ததும், என் கால்கள் தளர்ந்ததும், நான் அந்த படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டேன். அதன் வலிமைக்காய் நன்றிசெலுத்தினேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. அதன் விளைவு ஆபாயகரமானது இல்லை என்றாலும், அதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்றாலும், அன்று நான் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தேன் என்பதை என்னால் மறக்கவே முடியாது.

அதனால்தான் இயேசுவைத் தொட்ட பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவள் பலவீனமான நிலையில் கூட்டத்தினூடாக நகர்ந்தது மட்டுமல்லாமல், அவரை அணுகுவதற்கான முயற்சியில் நம்பிக்கையையும் காட்டினாள் (மத்தேயு 9:20-22). அவள் பயப்படுவதற்கு சரியான காரணம் இருந்தது. யூதச் சட்டம் அவளை தீட்டாகவும், அந்த தீட்டை அவள் வெளிப்படையாய் காண்பித்தால், அதின் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அவள் சந்திக்க நேரிடும் (லேவியராகமம் 15:25−27). ஆனால் நான் அவருடைய அங்கியைத் தொட்டால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு உறுதியாய் இருந்தது. மத்தேயு 9:21-ல் “தொடுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது வெறும் தொடுதல் அல்ல, மாறாக “ பற்றிப் பிடித்துக்கொள்வது” அல்லது “தன்னை இணைத்துக் கொள்வது” என்ற வலுவான பொருளைக் கொண்டுள்ளது. அந்தப் பெண் இயேசுவை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அவளை குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள்.

ஜனக்கூட்டத்தின் நடுவே, ஒரு பெண்ணின் மேலான விசுவாசத்தை இயேசு கண்டார். நாமும் விசுவாசத்தில் துணிந்து, நம்முடைய தேவையில் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை வரவேற்று, நமக்கு உதவிசெய்வார். நிராகரிப்பு அல்லது தண்டனைக்கு பயப்படாமல் நம் கதையை அவரிடம் சொல்லலாம். “என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசு இன்று நமக்குச் சொல்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார்.