எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

தேவனை நம்புதல்

எனக்கு அவசரமாக இரண்டு மருந்துகள் தேவைப்பட்டன. ஒன்று என் அம்மாவின் ஒவ்வாமைக்காகவும் மற்றொன்று என் மருமகளின் அரிக்கும் தோலழற்சிக்காகவும் இருந்தது. அவர்களின் அசௌகரியம் மோசமடைந்தது. ஆனால் அவர்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அவநம்பிக்கையான மற்றும் ஆதரவற்ற நிலையில், ஆண்டவரே, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன். 
சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமைகள் சமாளிக்கக்கூடியதாக மாறியது. தேவன் இப்படியாக சொல்வது போல் தோன்றியது: “நான் சில சமயங்களில் குணமடைய மருந்துகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் மருந்துகள் இறுதியாக தீர்வு அல்ல. நான் செய்வேன். அவைகள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள்.” 
சங்கீதம் 20 இல், தாவீது ராஜா தேவனின் நம்பகத்தன்மையில் ஆறுதல் பெற்றார். இஸ்ரவேலர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது மிகப்பெரிய பலம் “கர்த்தருடைய நாமத்தினால்” வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (வச. 7). அவர்கள் அவர் யார், அவருடைய மாறாத தன்மை மற்றும் தவறாத வாக்குறுதிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகிய கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்தார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சர்வ மகத்துவமும் வல்லமையும் கொண்டவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பார் (வச. 6) என்ற உண்மையை அவர்கள் நம்பினர். 
கடவுள் நமக்கு உதவ இந்த உலகத்தின் வளங்களைப் பயன்படுத்தினாலும், இறுதியில், நம்முடைய பிரச்சனைகளின் மீதான வெற்றி அவரிடமிருந்தே வருகிறது. அவர் நமக்கு ஒரு தீர்மானத்தை கொடுத்தாலும் சரி அல்லது சகித்துக்கொள்ளும் கிருபைளை கொடுத்தாலும் சரி, அவர் சொல்லும் அனைத்தும் அவர் நம்மோடு இருப்பார் என்று நம்பலாம். நம்முடைய பிரச்சனைகளில் நாம் மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவருடைய நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நாம் அவற்றை துணிந்து எதிர்கொள்ள முடியும். 

இயேசுவை பற்றிக்கொள்

அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. படிக்கட்டுகள் சுழல்வது போல் தெரிந்ததால், நான் விரக்தியடைந்து, படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தேன். என் இதயம் துடித்ததும், என் கால்கள் தளர்ந்ததும், நான் அந்த படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டேன். அதன் வலிமைக்காய் நன்றிசெலுத்தினேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. அதன் விளைவு ஆபாயகரமானது இல்லை என்றாலும், அதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்றாலும், அன்று நான் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தேன் என்பதை என்னால் மறக்கவே முடியாது. 
அதனால்தான் இயேசுவைத் தொட்ட பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவள் பலவீனமான நிலையில் கூட்டத்தினூடாக நகர்ந்தது மட்டுமல்லாமல், அவரை அணுகுவதற்கான முயற்சியில் நம்பிக்கையையும் காட்டினாள் (மத்தேயு 9:20-22). அவள் பயப்படுவதற்கு சரியான காரணம் இருந்தது. யூதச் சட்டம் அவளை தீட்டாகவும், அந்த தீட்டை அவள் வெளிப்படையாய் காண்பித்தால், அதின் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அவள் சந்திக்க நேரிடும் (லேவியராகமம் 15:25−27). ஆனால் நான் அவருடைய அங்கியைத் தொட்டால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு உறுதியாய் இருந்தது. மத்தேயு 9:21-ல் “தொடுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது வெறும் தொடுதல் அல்ல, மாறாக “ பற்றிப் பிடித்துக்கொள்வது” அல்லது “தன்னை இணைத்துக் கொள்வது” என்ற வலுவான பொருளைக் கொண்டுள்ளது. அந்தப் பெண் இயேசுவை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அவளை குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள். 
ஜனக்கூட்டத்தின் நடுவே, ஒரு பெண்ணின் மேலான விசுவாசத்தை இயேசு கண்டார். நாமும் விசுவாசத்தில் துணிந்து, நம்முடைய தேவையில் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை வரவேற்று, நமக்கு உதவிசெய்வார். நிராகரிப்பு அல்லது தண்டனைக்கு பயப்படாமல் நம் கதையை அவரிடம் சொல்லலாம். “என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசு இன்று நமக்குச் சொல்கிறார். 

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும்.

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.  

நம் நம்பிக்கையின் நங்கூரம்

ஒரு மங்கலான சந்தில் அட்டைத் துண்டுகளுக்கு அடியில் மக்கள் தூங்கும் காட்சியை நான் படம்பிடித்தேன். “அவர்களுக்கு என்ன தேவை?” என்று என்னும் ஆறாம் வகுப்பு ஞாயிறுபள்ளியில் கேட்டேன். “உணவு” என்று யாரோ சொன்னார்கள். “பணம்” என்றான் இன்னொருவன். “பாதுகாப்பான இடம்,” என்று ஒரு சிறுவன் யோசித்து பதில் சொன்னான். பின்னர் ஒரு சிறுமி, “நம்பிக்கை” என்று பதில் சொன்னாள்.

“நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதே நம்பிக்கை” என்று அவள்; விளக்கம்கொடுத்தாள். சவால்கள் காரணமாக, வாழ்க்கையில் நல்லதை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லாதபட்சத்தில், அவள் அவ்வாறு பேசியது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆயினும்கூட, என் மாணவர்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் வேதாகமம் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” (எபிரெயர் 11:1) என்பது நிஜமானால், நல்லதே நடக்கும் என்று நாம் விசுவாசிப்பது சிறந்தது.

எந்த மேன்மையான நன்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடே எதிர்பார்க்கலாம்? “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது” (4:1). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தேவன் கொடுக்கிற இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இரட்சிப்பின் நம்பிக்கை, அவருடைய வல்லமையின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்கால பரலோக வீட்டின் உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்முடைய தேவைகளின் மத்தியில், ஏன் தேவனுடைய உத்திரவாதமும் இயேசுவின் இரட்சிப்பும் நம்முடைய வாழ்க்கையின் நங்கூரமாய் இருக்கிறது என்பதை விவரிக்கிறது (6:18-20). உலகத்திற்கும் நம்பிக்கை தேவை: சரியான மற்றும் மோசமான தருணங்களில் தேவன் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார் என்பது உறுதி. நாம் அவரை நம்பும்போது, அவர் தம்முடைய காலத்தில் நமக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நாம் அறிய முற்படுவோம்.  

விட்டுவிடுங்கள்

கீத் பணிபுரிந்த புத்தகக் கடையின் உரிமையாளர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். ஆனால் அவரது உதவியாளரான கீத் ஏற்கனவே பீதியில் இருந்தார். புத்தகக் கடை சீராக இயங்கினாலும், அதை தன்னால் நேர்த்தியாய் மேற்பார்வையிட முடியாது என்று கீத் சற்று பதற்றத்திலிருந்தார். ஆகையால் வெறித்தனமாய் தன்னால் முடிந்த அனைத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட துவங்கினார்.

“போதும் நிறுத்து” என்று அவரது முதலாளி ஒரு வீடியோ அழைப்பின் மூலம் அவரிடம் கூறினார். “நான் தினமும் உனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வேலைகளை மட்டும் நீ செய்தால் போதும். கவலைப்படாதே கீத். சுமை உன் மீது இல்லை; அது என் மீது உள்ளது" என்று தெரியப்படுத்தினார்.

மற்ற நாடுகளோடு இஸ்ரவேலுக்கு கலகம் ஏற்படும்போது, தேவன் அவர்களை அமர்ந்திருக்கும்படி சொல்லுகிறார் (சங்கீதம் 46:10). அதாவது, “சுயமாய் முயற்சிசெய்வதை நிறுத்துங்கள், நான் சொல்வதைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்காக யுத்தஞ்செய்வேன்” என்று சொல்லுகிறார். எதுவும் செய்யாமல் இஸ்ரவேல் அமைதிகாக்கவில்லை; மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் தேவனை சார்;ந்துகொண்டனர்.

நாமும் அதையே செய்வதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்பும் தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் என்பதினால் அதை நம்மால் நேர்த்தியாய் செய்யமுடியும். “அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று,” “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (வச. 6,9). ஆகையால் அவருடைய அடைக்கலத்தையும் பெலத்தையும் நாம் நம்பலாம் (வச. 1). நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை, அது தேவனிடத்தில் இருக்கிறது.

நீங்கள் சோர்ந்திருக்கும்வேளையில்

நான் ஒரு நாளின் வேலை முடிகிற தருவாயில் என் மடிக்கணினி முன்பாக அமர்ந்திருந்தேன். அன்று நான் செய்துமுடித்த வேலையைப் பற்றி நான் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் களைப்படைந்திருந்தேன். வேலையில் ஒரு பிரச்சனையால் என் தோள்கள் கவலையின் சுமையால் வலித்தன. மேலும் ஒரு பிரச்சனையான உறவைப் பற்றி என் மனம் யோசித்துக்கொண்டிருந்தது. அவைகள் அனைத்திலிருந்தும் விடுபட எண்ணி, அன்றிரவு டிவி பார்ப்பதில் என் கவனத்தை செலுத்தினேன்.  
நான் என் கண்களை மூடினேன். “அண்டவரே” என்று அழைத்தேன். அதைக்காட்டிலும் வேறெதையும் சொல்லமுடியாத அளவிற்கு நான் சோர்வுற்றிருந்தேன். அந்த ஒரு வார்த்தையில் என் மொத்த களைப்பையும் உள்ளடக்கினேன். ஆனால் அந்த வார்த்தைக்குள் தான் களைப்புகள் புகும் என்பதை நான் உடனே அறிந்துகொண்டேன்.  
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார். ஒரு நல்ல தூக்கத்தில் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை.  தொலைக்காட்சி வாக்குறுதியில் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை. ஒரு பிரச்சனை தீர்ந்தவுடன் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை. இவைகள் இளைப்பாறுதலுக்கான நல்ல ஆதாரங்களாக இருந்தாலும், அவை வழங்கும் ஓய்வு குறுகிய காலமே. மேலும் அவைகள் நமது சூழ்நிலைகளைச் சார்ந்தது. 
அதற்கு மாறாக, இயேசு கொடுக்கும் இளைப்பாறுதலானது, அவருடைய மாறாத சுபாவத்தில் ஊன்றியிருக்கும் நித்திய இளைப்பாறுதல். அவர் எப்போதும் நல்லவராகவேயிருக்கிறார். அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், பாடுகளின் மத்தியிலும் அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதலை அளிக்கிறார். அவரால் மட்டுமே கொடுக்க முடிந்த பெலத்தையும் மீட்பையும் பெற்றுக்கொள்ள அவரையே நம்பி சார்ந்துகொள்வோம்.  
“என்னிடத்தில் வாருங்கள்” என்று இயேசு சொல்கிறார். “என்னிடத்தில் வாருங்கள்.” 

எனது நோக்கம் என்ன?

"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களைச் செலவிடுகிறார்கள்" என அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார்."நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்" என்பார். 
  
இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல், ஹெரால்ட்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். "பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார். 
  
ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: 
பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வள வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில் எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது. 
  
நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது.  
அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது.  
நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.