எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

கிறிஸ்துவுக்காக ஓர் இதயம்

நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை, நீ எந்த தவறும் செய்ய மாட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு சக பணியாளரிடம், அவள் சொன்னவற்றை தவறாகப் புரிந்து கொண்ட பிறகு, என் கோபத்தை வெளிப்புறமாக மட்டும் அடக்கிக் கொண்டேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டியிருப்பதால், தேவையானதை மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்தேன் (பேசுவதை குறைப்பதின் மூலம் பதிலடி கொடுக்க எண்ணினேன்). அமைதியான போக்கு எப்படி தவறாகும்?

இதயத்திலிருந்தே பாவம் புறப்படுகிறது என இயேசு சொன்னார் (மத்தேயு 15:18−20). எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைக்கும்படி என் மௌனம் மக்களை முட்டாளாக்கியிருக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்கவில்லை. நான் கோபம் நிறைந்த இதயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். நான் தங்கள் உதடுகளால் தேவனை கனம்பண்ணிய பரிசேயர்களைப் போலிருந்தேன், ஆனால் அவர்களின் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன (வச. 8). என் வெளித்தோற்றம் உண்மையான உணர்வுகளைக் காட்டாவிட்டாலும், கசப்பு எனக்குள் கொப்பளித்தது. என் பரலோக தகப்பனுடன் நான் எப்போதும் உணர்ந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. பாவத்தை வளர்ப்பதும் மறைப்பதும் அவ்வாறு செய்கிறது.

தேவனின் கிருபையால், நான் எப்படி உணர்கிறேன் என்பதை என் சக ஊழியரிடம் கூறி மன்னிப்பு கேட்டேன். அவள் என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள், இறுதியில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்.. புறப்பட்டுவரும்” (வ.19) என்கிறார் இயேசு. நம் இதயத்தின் நிலைமை முக்கியமானது, ஏனெனில் அங்கே இருக்கும் தீமை நம் வாழ்வில் நிரம்பி வழியக்கூடும். நமது வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டும் முக்கியம்.

இயேசு நிறுத்துகையில்

என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் மாதம் வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

“நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே” என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை அவர் கேட்டார், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” என்று கிறிஸ்து கேட்டார். “ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்.” என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: “நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, “ஒரு நாள்” என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, “ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்” என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த “முள்” அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம்தான் பவுல் தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;” (வ.10). உண்மையிலேயே “வளர்வது” என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.

இயேசுவில் நிலைத்திருத்தல்

 
சில வருடங்களுக்கு முன்பாக, நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு சிற்றாலய ஆராதனை நடைபெறும். அப்போது ஒருமுறை எங்கள் ஆராதனையில் மூன்று ஆசிரியர்கள் “கர்த்தர் சிறந்தவர்” என்னும் ஆங்கிலப் பாடலை முழு ஆர்வத்துடன் பாடினது எனக்கு நினைவிருக்கிறது. தங்கள் தேவனிடத்தில் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை அவர்களின் முகங்கள் பிரகாசித்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், சரீரப் பிரகாரமாய் அவர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் இந்த விசுவாசமே அதை மேற்கொள்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாயிருந்தது. 
இன்று என்னுடைய ஆசிரியர்களின் விசுவாசத்தை பிரதிபலித்த அந்த பாடல் என்னுடைய கடினமான தருணங்களில் எனக்கும் உறுதுணையாய் நிற்கிறது என்று சொல்வேன். எனக்கு அது சில விசுவாச வீரர்களின் உந்தப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்களில் ஒன்று. எபிரெயர் 12:2-3இல் “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்த” (வச. 2) இயேசுவை நோக்கி பின்செல்ல இது நமக்கு நினைவுபடுத்துகிறது. 
போராட்டங்ளோ அல்லது உபத்திரவங்களோ, வாழ்க்கையின் எந்த சூழ்நிலையாயிருப்பினும், கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் கைக்கொண்ட அநேகரை நாம் உதாரணங்களாய் எடுத்துக்கொள்ளக்கூடும். இயேசுவும் நமக்கு முன்னிருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் எவ்விதம் விசுவாசத்தில் பயணம் செய்தனரோ அதேபோன்று நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக்கடவோம் (வச. 1). ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு... அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (வச. 3) என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். 
என்னுடைய ஆசிரியர்கள் தற்போது பரலோகத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்து, “விசுவாச வாழ்க்கை சவாலான ஒன்று, தொடர்ந்து ஓடு” என்று உற்சாகப்படுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். 

- கேரன் ஹவாங் 

என் தேவன் சமீபமாயிருக்கிறார்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, லூர்து என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பித்தார். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தச் சொன்னபோது, அவள் கவலைப்பட்டாள். “என்னுடைய கம்ப்யூட்டர் நன்றாக இல்லை," என்று அவள் சொன்னாள். “எனது மடிக்கணினி பழையது, மேலும் எனக்கு வீடியோ கான்பரன்சிங் இயங்குதளங்கள் பற்றித் தெரியாது” என்றும் சொன்னாள்.  
சிலருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், அது அவளுக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. “நான் தனியாக வாழ்கிறேன், அதனால் எனக்கு உதவ யாரும் இல்லை,” “எனது மாணவர்கள் இதினிமித்தம் வகுப்பிலிருந்து வெளியேறிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனக்கு வருமானம் தேவை" என்று அவள் தன்னுடைய நிலையை விவரித்தாள். 
ஒவ்வொரு வகுப்பிற்கு முன்பும், லூர்து தனது மடிக்கணினி சரியாக வேலை செய்யவேண்டும் என்று ஜெபம் செய்வாள். “பிலிப்பியர் 4:5-6, வசனங்கள் என் திரையில் வால்பேப்பராக இருந்தது,” என்று அவள் சொன்னாள். “அந்த வார்த்தைகளில் நான் எப்படி ஒட்டிக்கொண்டேன்.” 
நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்று என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய பிரசன்னம் பற்றிய தேவனுடைய வாக்குறுதியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் அவருடைய அருகாமையில் இளைப்பாறி, ஜெபத்தில் அவருக்கு எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும்போது, பெரியதோ அல்லது சிறியதோ, அவருடைய இளைப்பாறுதல் நம் “இருதயங்களையும்... சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7). 
“கணினி குறைபாடுகளை சரிசெய்வது பற்றிய வலைத்தளங்களுக்கு தேவன் என்னை வழிநடத்தினார்” என்று லூர்து கூறினாள். “எனது தொழில்நுட்ப வரம்புகளைப் புரிந்துகொண்ட மாணவர்களையும் தேவன் எனக்குக் கொடுத்தார்.” நாம் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால், தேவனின் பிரசன்னம், உதவி மற்றும் இளைப்பாறுதல் ஆகியவை நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நாம் அனுபவிக்கக்கூடும். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (வச. 4) என்று நாம் நம்பிக்கையோடே மற்றவர்களுக்கு சொல்லக்கூடும்.  

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

தேவனை நம்புதல்

எனக்கு அவசரமாக இரண்டு மருந்துகள் தேவைப்பட்டன. ஒன்று என் அம்மாவின் ஒவ்வாமைக்காகவும் மற்றொன்று என் மருமகளின் அரிக்கும் தோலழற்சிக்காகவும் இருந்தது. அவர்களின் அசௌகரியம் மோசமடைந்தது. ஆனால் அவர்களுக்கான மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அவநம்பிக்கையான மற்றும் ஆதரவற்ற நிலையில், ஆண்டவரே, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன். 
சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் நிலைமைகள் சமாளிக்கக்கூடியதாக மாறியது. தேவன் இப்படியாக சொல்வது போல் தோன்றியது: “நான் சில சமயங்களில் குணமடைய மருந்துகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் மருந்துகள் இறுதியாக தீர்வு அல்ல. நான் செய்வேன். அவைகள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள்.” 
சங்கீதம் 20 இல், தாவீது ராஜா தேவனின் நம்பகத்தன்மையில் ஆறுதல் பெற்றார். இஸ்ரவேலர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது மிகப்பெரிய பலம் “கர்த்தருடைய நாமத்தினால்” வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (வச. 7). அவர்கள் அவர் யார், அவருடைய மாறாத தன்மை மற்றும் தவறாத வாக்குறுதிகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகிய கர்த்தரின் நாமத்தில் நம்பிக்கை வைத்தார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சர்வ மகத்துவமும் வல்லமையும் கொண்டவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பார் (வச. 6) என்ற உண்மையை அவர்கள் நம்பினர். 
கடவுள் நமக்கு உதவ இந்த உலகத்தின் வளங்களைப் பயன்படுத்தினாலும், இறுதியில், நம்முடைய பிரச்சனைகளின் மீதான வெற்றி அவரிடமிருந்தே வருகிறது. அவர் நமக்கு ஒரு தீர்மானத்தை கொடுத்தாலும் சரி அல்லது சகித்துக்கொள்ளும் கிருபைளை கொடுத்தாலும் சரி, அவர் சொல்லும் அனைத்தும் அவர் நம்மோடு இருப்பார் என்று நம்பலாம். நம்முடைய பிரச்சனைகளில் நாம் மூழ்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவருடைய நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நாம் அவற்றை துணிந்து எதிர்கொள்ள முடியும். 

இயேசுவை பற்றிக்கொள்

அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. படிக்கட்டுகள் சுழல்வது போல் தெரிந்ததால், நான் விரக்தியடைந்து, படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தேன். என் இதயம் துடித்ததும், என் கால்கள் தளர்ந்ததும், நான் அந்த படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டேன். அதன் வலிமைக்காய் நன்றிசெலுத்தினேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. அதன் விளைவு ஆபாயகரமானது இல்லை என்றாலும், அதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்றாலும், அன்று நான் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தேன் என்பதை என்னால் மறக்கவே முடியாது. 
அதனால்தான் இயேசுவைத் தொட்ட பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவள் பலவீனமான நிலையில் கூட்டத்தினூடாக நகர்ந்தது மட்டுமல்லாமல், அவரை அணுகுவதற்கான முயற்சியில் நம்பிக்கையையும் காட்டினாள் (மத்தேயு 9:20-22). அவள் பயப்படுவதற்கு சரியான காரணம் இருந்தது. யூதச் சட்டம் அவளை தீட்டாகவும், அந்த தீட்டை அவள் வெளிப்படையாய் காண்பித்தால், அதின் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அவள் சந்திக்க நேரிடும் (லேவியராகமம் 15:25−27). ஆனால் நான் அவருடைய அங்கியைத் தொட்டால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு உறுதியாய் இருந்தது. மத்தேயு 9:21-ல் “தொடுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது வெறும் தொடுதல் அல்ல, மாறாக “ பற்றிப் பிடித்துக்கொள்வது” அல்லது “தன்னை இணைத்துக் கொள்வது” என்ற வலுவான பொருளைக் கொண்டுள்ளது. அந்தப் பெண் இயேசுவை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அவளை குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள். 
ஜனக்கூட்டத்தின் நடுவே, ஒரு பெண்ணின் மேலான விசுவாசத்தை இயேசு கண்டார். நாமும் விசுவாசத்தில் துணிந்து, நம்முடைய தேவையில் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை வரவேற்று, நமக்கு உதவிசெய்வார். நிராகரிப்பு அல்லது தண்டனைக்கு பயப்படாமல் நம் கதையை அவரிடம் சொல்லலாம். “என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசு இன்று நமக்குச் சொல்கிறார். 

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும்.

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம். 

சங்கீதம் 72 தலைவர்கள்

 

ஜூலை 2022 இல், பிரிட்டனின் பிரதம மந்திரி நேர்மை தவறிவிட்டதாக பலர் கருதியதால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது (புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் சில மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!). நாட்டின் சுகாதார அமைச்சர் வருடாந்திர பாராளுமன்ற காலை உணவு பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பொது வாழ்க்கையில் நேர்மையின் அவசியத்தை உணர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்த செயலே இந்த நிகழ்வுக்கு காரணமாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தபோது, பிரதமரும் தான் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். இது ஓர் அமைதியான பிரார்த்தனை கூட்டத்தில் இருந்து உருவான ஓர் குறிப்பிடத்தக்கத் தருணம்.

கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களுக்காக ஜெபிக்க உந்தப்படுகிறார்கள் (1 தீமோத்தேயு 2:1-2). அதிகாரிகளின் கடமையையும் அதனை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஜெபம் தேவை என்பதை சங்கீதம் 72 உணர்த்துகிறது. அவை நீதியும் நேர்மையும் கொண்ட (வச. 1-2), பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றக்கூடிய (வச. 4), தேவையிலுள்ளவர்களுக்கு உதவிசெய்கிற (வச. 12-13), அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிற (வச. 14) ஓர் இலட்சிய தலைவனைக் குறித்து விவரிக்கிறது. அவர் அலுவலக நேரத்தில் “வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல” (வச. 6) நிலத்திற்கு செழிப்பைக் கொண்டுவருகிறார்கள் (வச. 3, 7, 16). மேசியாவால் மட்டுமே அத்தகைய பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்றமுடியும் (வச. 11). வேறு யாரால் அந்த தரத்தைக் கொடுக்க முடியும்?

ஓர் நாட்டின் ஆரோக்கியம் அதன் அதிகாரிகளின் நேர்மையால் நிர்வகிக்கப்படுகிறது. நம் தேசங்களுக்காக சங்கீதம் 72 குறிப்பிடும் தலைவர்களை தேடுவோம். மேலும் அவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் இந்த சங்கீதத்தில் காணப்படும் குணங்களை உருவாக்க அவர்களுக்கு உதவுவோம்.