எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

தேவனிடத்தில் அழைப்பு பெறுதல்

“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர்.

அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது.

பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்... என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார். 

- ஜாண் பிளேஸ்

என்ன அருமையான சிநேகிதன்!

என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.  
இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.  

நமது புகலிடம்

வட அமெரிக்காவில் எருமைகள் நடமாடிய இடம் அது. உண்மையில் அப்படியாகத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. அப்பகுதியில் மக்கள் மந்தைகளுடனும், பயிர்களுடனும் குடியேறும் வரை, சமவெளி இந்தியர்கள் காட்டெருமைகளை அங்கே பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரசாயன உற்பத்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் பனிப்போர் ஆயுதங்களை, இராணுவ துருப்புக்களைத் திரும்பப் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாள் வழுக்கைக் கழுகுகளின் கூட்டம் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தது. விரைவில் அவ்விடத்தில் "ராக்கி மவுண்டன் ஆர்சனல் தேசிய வனவிலங்கு புகலிடம்” உருவானது. கொலராடோவின் டென்வர் பெருநகரத்தின் விளிம்புகளில் புல்வெளி, ஈரநிலம் மற்றும் வனப்பகுதி வாழ்விடமாகிய பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியானது இப்போது நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற சரணாலயங்களில் ஒன்றாகும். கருங்கால் ஃபெரெட்டுகள் முதல் வழுக்கை கழுகுகள், துளையிடும் ஆந்தைகள் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்குப் பாதுகாப்பான இல்லமாக இன்று உள்ளது. உங்களால் இதை யூகித்துப் பார்க்க முடிந்ததா? எருமைகள் நடமாடிய இடம். 
 
"தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (62:8) என சங்கீதக்காரன் கூறுகிறார். உலகில் உள்ள எந்தவொரு நம்பிக்கையான புகலிடத்தையும் விட, தேவனுடைய பிரசன்னம் நமக்கு உண்மையான அடைக்கலமாய், பாதுகாப்பாய் இருக்கிறது "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28), எனவே "எல்லா நேரங்களிலும்" நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய நமது அடைக்கலம் தேவனே (சங்கீதம் 62:8). அவர் நம்முடைய சரணாலயமாக இருக்கிறார். அவரிடம் நாம் தைரியமாக நம் எல்லா ஜெபங்களாலும் நம் இருதயத்தில் உள்ளவைகளை ஊற்றலாம். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்: அவர் நேற்றும், இன்றும், எப்போதும் அடைக்கலமானவராகவே இருக்கிறார்

தொடர்பில் இருப்போம்

மேடலின், வாரம் ஒருமுறை தன் அம்மாவை போனில் தொடர்புகொண்டு அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஆவிக்குரிய எழுத்தாளரான அவளது அம்மா தன்னுடைய முதிர்வயதில், “என்னோடு அடிக்கடி தொடர்பில் இரு” என்று சொல்லுவார்களாம். அதுபோலவே மேடலின் தனது குழந்தைகளையும் அழைத்து அந்த உறவை பராமரிக்க விரும்பினாள். சில நேரங்களில் அது குறிப்பிடத்தக்க கேள்விகள் மற்றும் பதில்கள் நிறைந்த நீண்ட உரையாடலாக இருந்தது. மற்ற நேரங்களில், அந்த தொலைபேசி எண் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் சாதாரண அழைப்பாய் கூட இருந்தது. அவரது புத்தகமான “வாக்கிங் ஆன் வாட்டர்” என்ற புத்தகத்தில், “குழந்தைகள் தொடர்பில் இருப்பது நல்லது. குழந்தைகளாகிய நாம் அனைவரும் அப்பாவுடன் தொடர்பில் இருப்பது நல்லது” என்று எழுதுகிறார்.  
மத்தேயு 6:9-13இல் இடம்பெற்றுள்ள பரமண்டல ஜெபம் நமக்கு தெரியும். அதின் துவக்கவரிகள் தொடர்ந்து இடம்பெறும் வரிகளுக்கு அடிப்படையாய் அமைகிறது என்பதினால் அது மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காய் நாம் ஜெபிக்கக்கூடாது (வச. 5). நம்முடைய ஜெபம் எவ்வளவு நீளமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை. “வீண்வார்த்தைகளை” பயன்படுத்தி ஜெபிக்க வேண்டியதில்லை (வச. 7). நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவனிடத்தில் (வச. 8) ஜெபிக்க தூண்டுவது என்பது அவருடனான நம்முடைய உறவை வளர்த்துக்கொள்வதற்காகவே. பிதாவோடு உறவில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். பின்பு “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” (வச. 9) என்று கற்றுக்கொடுக்கிறார்.  
நம்முடைய தேவனோடும், உலகத்தின் பிதாவுமாயிருக்கிற தேவனிடத்தில் தொடர்புகொள்ள வைக்கிறதினால், ஜெபம் என்பது இன்றியமையாதது.  

ஊக்கமளிக்கும் நீர்

பசுமை அதிசயம்” என்றே அதை நான் அழைப்பேன். இது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் நடக்கிறது. குளிர்கால மாதங்களில் வெளியே வரும்போது, எங்கள் முற்றத்தில் உள்ள புல்தரை தூசிபடிந்து பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதைக் கடந்துபோகிறவர்கள், அது காய்ந்துவிட்டதென நினைக்கலாம். அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோ மலையில் பனிபொழியும். ஆனால் அதின் சமவெளிகளின் காலநிலை வறண்டும், பெரும்பாலான மாதங்கள் வறட்சி மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் நிறைந்தவை. ஆனால் ஒவ்வொரு ஆண்டு மே மாத இறுதியில், நான் தண்ணீர் இறைக்கும் குழாய்களைத் திறப்பேன். அதிகமாக அல்ல ஆனால் சிறிய, சீரான நீர்ப்பாசனம். சுமார் இரண்டு வாரங்களில் உலர்ந்த மற்றும் பழுப்பு நிறமானது பசுமையாக உருவாகும்.

ஊக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அந்தப் பச்சைப்புல் எனக்கு நினைவூட்டியது. அது இல்லாமல், நம் வாழ்க்கையும் நம் விசுவாசமும் கிட்டத்தட்ட உயிரற்ற ஒன்றை ஒத்திருக்கும். ஆனால் நிலையான ஊக்கம் நம் இதயங்கள், எண்ணங்கள் மற்றும் ஆன்மாக்களுக்குச் செய்யக் கூடியது ஆச்சரியமானதாக இருக்கிறது. தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதம் இந்த உண்மையை வலியுறுத்துகிறது. மக்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் போராடினர். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று பவுல் நினைத்தார். ஒருவரையொருவர் ஊக்குவித்தல் மற்றும் ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல் (1 தெசலோனிக்கேயர் 5:11) போன்ற நற்கிரியையை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார். அத்தகைய புத்துணர்ச்சி இல்லாவிட்டால், அவர்களுடைய விசுவாசம் வாடிவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். பவுல் இதை நேரில் அனுபவித்தார், ஏனென்றால் அதே தெசலோனிய விசுவாசிகள் அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்தார்கள், அவரை கட்டியெழுப்பினார்கள். உங்களுக்கும் எனக்கும் ஊக்கமளிக்க அதே வாய்ப்பு உள்ளது

'கிட்டத்தட்ட உண்மை' எனப்படுவதும் பொய்யே

ஒளிப்பதிவு? சிறப்பாக இருந்தது. தோற்றம்? நம்பக்கூடியது. கருத்து? சுவாரஸ்யமானதும், தொடர்புள்ளதுமானது. பாலிவுட் நடிகரான அமீர் கான், வழக்கத்திற்கு மாறான அரசியல் ரீதியான அறிக்கைகளை வெளியிடும் காணொளியாக அது இருந்தது. இணையத்தில் பலர் இது உண்மை என்று நம்பினர், மேலும் இது நடிகரின் புதிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும்  எண்ணினர்.

ஆனால் இந்த பிரபலமான காணொளி போலியானது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி நடிகரின் போலியான ஆள்மாறாட்டம் ஆகும், மேலும் இது கலகத்தை உருவாக்கும் சுயநல நோக்கோடு புனையப்பட்டது. உண்மையில் அந்த அறிக்கைகளை நடிகர் வெளியிடவில்லை, மேலும் காணொளியானது அதிக பரபரப்பானது போலவே, அது பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

நமது தொழில்நுட்பங்களின் காரணமாக, பொய்கள் பெரிதாக்கப்பட்டு, அவை உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்குப் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறோம். தெய்வீக ஞானத்தின் தொகுப்பான நீதிமொழிகள் என்ற புத்தகம், உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. "சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்" (12:19). அடுத்த பழமொழியே நமக்குச் சொல்கிறது, "தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்" (வ.20).

தேவனின் கட்டளைகள் முதல் பாலிவுட் நடிகர்கள் பற்றிய காணொளிகள் வரை, அனைத்திற்கும் நேர்மை பொருந்தும். சத்தியம்  "என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்"

சோ்ந்திருந்து மலைகளை மேற்கொள்ளுதல்

இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: "நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?

ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும்  வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சமுதாய ஆதரவு" முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.

யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு  கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், "தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது" (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். "அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.

நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, ​​நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? காலப்போக்கில் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். 

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம். 

நான்கு வார்த்தைகளில் வாழ்க்கை

ஜேம்ஸ் இந்நெல் பேக்கர், ஜே. ஐ. பேக்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். 2020 இல் தனது தொண்ணூற்றுநான்காவது பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் மரித்தார். அறிஞரும் எழுத்தாளருமான அவருடைய சிறந்த புத்தகமான, நோயிங் காட், வெளியிடப்பட்டு 1.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் சீடர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற பேக்கர், எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்துவின் விசுவாசிகளை இயேசுவுக்காக வாழ்வதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவரது மரண தறுவாயில், சபைக்கான அவரது இறுதி வார்த்தைகளைக் கேட்டனர்; பேக்கருக்கு ஒரு வரி கூறினார், வெறும் நான்கு வார்த்தைகள்: “கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்".

அந்த வார்த்தைகள் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன, அவரது வியத்தகு மனமாற்றத்திற்குப் பிறகு, அவருக்கு நியமிக்கப்பட்ட பணியை உண்மையுடன் செய்யத் தொடங்கினார் மேலும் அதன் விளைவுகளைத் தேவனிடம் விட்டுவிட்டார். முழு புதிய ஏற்பாட்டிலும் ரோமர் புத்தகத்தில் காணப்படும் பவுலின் வார்த்தைகள் மிகவும் இறையியல் ரீதியாக நிரம்பியவையாகும். மேலும் பேக்கர், அப்போஸ்தலன் எழுதியதை போலவே, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு" (15:6 ) என்று கிட்டத்தட்ட இவரும் சுருக்கமாகக் கூறுகிறார்.

பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம். நாம் பல வழிகளில் தேவனை மகிமைப்படுத்தலாம் (கனப்படுத்தலாம்), அதில் ஒன்று நமக்கு முன் வைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலமும் அதன் முடிவுகளைத் தேவனின் மாறாத கரங்களில் விட்டுவிடுவதும் ஆகும். புத்தகங்களை எழுதுவதோ அல்லது மிஷனரிகளாக செல்வதோ அல்லது சிறுவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோ அல்லது வயதான பெற்றோரைப் பராமரிப்பதோ, எதுவாயினும் ஒரே நோக்கம்: கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்.  நாம் ஜெபித்து, வேதத்தை வாசிக்கும்போது அர்ப்பணிப்புள்ள கீழ்ப்படிதலுடன் வாழவும், நாம் சொல்கிற, செய்கிற எல்லாவற்றிலும் இயேசுவைக் கனம்பண்ணும் வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையைத் தொடர தேவன் நமக்கு உதவுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ