எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

ஒன்றாகப் பின்னப்பட்டது

தன்னுடைய வீட்டில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த செடியை, என் சிநேகிதி என்னிடம் கொடுத்தாள். அந்தச் செடி என்னுடைய உயரத்திற்கு இருந்தது. அதில் மூன்று நீண்ட, மெல்லிய கிளைகளிலிருந்து பெரிய இலைகள் வளர்ந்திருந்தன. அந்த இலைகளின் சுமையைத் தாங்க முடியாத அந்த கிளைகள் தரையை நோக்கி வளைந்து காணப்பட்டன. அந்த கிளைகளை நேராக்க, நான் அந்த தொட்டியின் அடிப்பக்கம் ஒரு கட்டையை தாங்கியாகக் கொடுத்து, அச்செடியின் மீது சூரிய வெளிச்சம் படும் படி ஜன்னலின் அருகில் வைத்தேன். சூரிய வெளிச்சம் பட்டு, இலைகளும், வளைந்த கிளையும் நேராக வளர்ந்து அதன் மோசமான நிலையை மாற்ற முயற்சித்தேன் .

இந்தச் செடியைப் பெற்ற சில நாட்களில், இதே போன்ற மற்றொரு செடியை அருகிலுள்ள ஒரு அலுவலகத்தின் முன் அறையில் பார்த்தேன். அதுவும் மூன்று மெல்லிய கிளைகளிலிருந்து வளர்ந்திருந்தது. ஆனால், அக்கிளைகள் மூன்றும் பின்னப்பட்டு, பெரிய ,உறுதியான கொப்பாக செயல்பட்டது. எந்த உதவியுமின்றி இச்செடி நேராக நின்றது.

ஒரே தொட்டியில் வைக்கப்பட்ட இரு செடிகள், அநேக ஆண்டுகளாக இருந்தும் அவை தனித்தனியே வளர்ந்து வந்தால், தேவன் அவர்கள் மகிழ்ந்திருக்கும் படி கொடுக்கும் நன்மைகளில் சிலவற்றை மட்டுமே அவர்களால் அநுபவிக்கமுடியும். ஆனால், அவர்களுடைய வாழ்வு தேவனோடு பின்னப்படும் போது, அதிக உறுதியையும், நெருங்கியிருத்தலையும் பெற்றுக்கொள்வர். அவர்களுடைய வாழ்வு உறுதியாக வளரும். முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர. 4:12).

வீட்டில் வளரும் செடியைப் போன்று, திருமணங்களையும், நட்புறவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த உறவுகள் பரிசுத்த ஆவியானவரைத் தங்களோடு இணைத்துக் கொண்டு வாழும்போது, தேவன் அவர்களின் பிணைப்பின் மையத்தில் இருப்பார். அன்பையும், கிருபையையும் முடிவில்லாமல் வழங்கும் அவர், நாம் ஒருவரோடொருவர் இணைந்து

 

தேவனுடைய பார்வையில் தகுதியைப் பெறுதல்

நான் கல்லூரி படிப்பை முடித்த போது, ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் என்னை அங்கு பணிபுரியும் படி தேர்ந்தெடுத்தது. அப்பொழுது எனக்கு கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதுவதற்கு எதுவும் தெரியாது. தொழில்துறை அனுபவமும் இல்லை. அங்கு முதல் நிலை வேலைக்கான நேர்முகத் தேர்வின் போதுதான், அந்தக் கம்பெனி எந்தவொரு முன் அனுபவத்தையும் எதிர்பார்க்கவில்லையெனத் தெரிந்து கொண்டேன். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்கும் தனித்திறன், சரியான தீர்மானம் எடுத்தல், குழுவினரோடு இணைந்து பணி புரிதல் போன்ற தனி நபர் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இத்தகைய பண்பு கொண்ட நபர்களுக்கு தேவையான திறமைகளைச் சொல்லிக் கொடுத்து விடலாமென அக்கம்பெனி நம்பியது.

நோவாவிற்கு ஒரு கப்பலைக் கட்டக் கூடிய எந்த ஒரு முன் அனுபவமும் இருந்ததில்லை.  அவன் ஒரு படகு செய்யும் தொழிலாளியுமல்ல, தச்சு வேலை செய்பவனுமல்ல. மாறாக, நோவா ஒரு விவசாயி. தன்னுடைய மேலாடையில் அழுக்குப் படும்படி வேலை செய்பவன். கலப்பையை தன் கைகளால் பிடிப்பவன். அந்நாட்களில் உலகில் நடந்து வந்த கொடுமைகளை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென தேவன் தீர்மானித்தார். நோவா இந்த தீங்குகளுக்கெல்லாம் தன்னை விலக்கிக் காத்துக் கொண்டான். ஏனெனில், “அவன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” (ஆதி. 6:9). நோவாவின் இருதயம் போதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை தேவன் கண்டார். தன்னைச் சுற்றிலும் நடக்கும் ஊழல்களை எதிர்த்து நிற்கும் பெலத்தோடு நீதியாய் நடந்ததை தேவன் கண்டார்.

தேவனுக்குப் பணி செய்ய வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப் படும் போது, நான் இந்தப் பணி செய்ய தகுதியானவனல்ல என நாம் நினைக்கத் தேவையில்லை. தேவன் நம்முடைய திறன்களின் அடிப்படையில் நம்மைத் தேர்வு செய்யவில்லை. அவர் நம்முடைய குண நலன்களையே கனப் படுத்துகின்றார். நாம் அவர் மீது வைத்துள்ள அன்பையும், அவரை நம்புவதற்குத் தயாராக இருக்கின்றோமா என்பதையுமே பார்க்கின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இத்தகைய குணங்களை உருவாக்கி விட்ட பின்பு நாம் அவருடைய சித்தத்தை இப்புவியில் நிறைவேற்றுவதற்கு சிறிதும், பெரிதுமான வகைகளில் நம்மை பயன் படுத்துவார்.

அழிக்கமுடியாத அன்பு

முதலில் எங்கள் வீட்டிற்குப் பின் அமைந்துள்ள ஆற்றினைக் காணும்பொழுது, கோடையின் வெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே அதன் பாறைகளில் வழிந்தோடியது. அதை நாங்கள் எளிதாகக் கடந்து செல்ல உறுதியான மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல மாதங்கள் கழித்து, மிகவும் அதிகமான மழை எங்கள் பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருந்தபடியால், எங்களது சிறிய ஆறானது அதிகமான வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அது 4 அடி ஆழமாகவும் 10 அடி அகலமாகவும் ஓடியது. அந்தத் தண்ணீரின் வேகமானது, மரப்பாலத்தை உடைத்து வேகமாக வீசி எறிந்தது.

வேகமாக ஓடும் தண்ணீர், தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் தாண்டி அவைகளின் மேல் செல்லக் கூடியதாகவுள்ளது. ஆனால், கடினமான வெள்ளத்தினாலோ, அல்லது அழிவினை உண்டாக்குகிற எந்த சக்தியாலும், அழிக்கமுடியாத ஒன்று உள்ளது. அதுதான் அன்பு. 'திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டது" (உன்னத. 8:7). அன்பின் விடாப்பிடியான பெலமும், உறுதியும், உலகப்பிரகாரமான அன்பினால் வெளிப்படுத்தப்படும். ஆனால், இந்த அன்பின் முழுப் பரிமாணமும், மனிதர்கள் மேல், தேவன் தன் குமாரனின் மூலம் வெளிப்படுத்தும் அன்பாக அமைகிறது.

நாம் எவைகளையெல்லாம் நமக்கு சார்ந்திருக்கப் பயன்படுத்துகிறோமோ அவைகளெல்லாம் ஒரு நாளில் அழிக்கப்பட்டுப் போய்விடும். நம்முடைய ஏமாற்றம் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள உதவும் கதவினை திறக்கக் கூடியதாக அமையும். அவருடைய பிரியமானது உயரமான, ஆழமான, பெலமான மற்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும்.

நாம் எவைகளையெல்லாம் சந்திக்கிறோமோ, அவைகளெல்லாம் அவரோடு கூட நமக்கு அருகிலும், நம்மைத் தாங்குகிறதாகவும், நமக்கு உதவி செய்கிறதாகவும், நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டக் கூடியதாகவும் அமைகிறது.

பணிசெய்யும் போதே பயிற்சி

பிரேசிலைச் சேர்ந்த மேலாளர் ஒருவர், தனக்குக் கீழ் வேலைசெய்த கண்காணிப்பாளர்களிடம், அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிச் சொன்னார். ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்வது யார், எந்தெந்த அறைகளெல்லாம் சுத்தம்செய்யாமல் இருக்கின்றன, ஒவ்வொரு அறையையும் சுத்தம்செய்ய பணியாட்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் போன்ற விபரங்களை தினமும் பதிவுசெய்து, மேலாளருக்கு அவர்கள் அனுப்பவேண்டும். முதல் “தின” அறிக்கையானது ஒரு வாரம் கழித்து மேலாளரின் கைக்கு வந்தது; ஆனால் அரைகுறை விபரங்களோடு அறிக்கை இருந்தது.

காரணம் என்னவென்று விசாரித்தபோது, சுத்தம்செய்கிற பணியாட்கள் பலருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்கிற உண்மை மேலாளருக்குத் தெரியவந்தது. அந்தப் பணியாட்களை அவர் பணிநீக்கம் செய்திருக்கலாம்; அதற்கு பதிலாக, அவர்கள் எழுதப்படிக்க கற்றுக்கொள்வதற்கான வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். ஐந்தே மாதங்களுக்குள் அந்தப் பணியாட்கள் அனைவருமே அடிப்படை அளவில் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அவர்கள் வேலைசெய்ய முடிந்தது.

தேவனும்கூட நாம் அவர் பணியை தொடர்ந்து செய்ய நம்மைப் பயிற்றுவிக்கும்படி நம்முடைய போராட்டங்களை வாய்ப்புகளாக மாற்றுகிறார். அனுபவமற்ற பேதுருவின் வாழ்க்கையிலும்தான் எத்தனை தவறுகள்! தண்ணீரின்மேல் நடந்தபோது விசுவாசத்தில் தடுமாறினார். தேவாலய வரிப்பணத்தை இயேசு செலுத்தவேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் குழம்பினார் (மத். 17:24-27). தம்முடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து இயேசு தீர்க்கதரிசனமாகச் சொன்னபோது, பேதுரு அதற்கு குறுக்கே நின்றார் (மத். 16:21-23). அந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும், தாம் வேறு யாருமல்ல, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை பேதுருவுக்குக் கற்றுக்கொடுத்தார் (வச. 16). பேதுருவும் தான் கற்கவேண்டிய விஷயங்களுக்குச் செவிகொடுத்து, அவற்றை அறிந்துகொண்டார். அதனால்தான் ஆதிகால சபையை அவர் நிறுவமுடிந்தது (வச. 18).

ஏதாவது தோல்வியால் இன்று நீங்கள் துவண்டுபோயிருந்தால், தேவ பணியை நீங்கள் தொடர்ந்துசெய்யும்படி அந்த அனுபவத்தின்மூலம் இயேசு உங்களுக்குப் போதித்து, வழிநடத்தமுடியும். பேதுருவிடம் குற்றங்குறைகள் இருந்தபோதிலும், அவரோடு தேவன் தொடர்ந்து செயல்பட்டார். தேவனுடைய ராஜ்யம் கட்டுப்படும்படி அவருடைய வருகைமட்டும் நம்மூலமாகவும் அவர் செயல்படமுடியும்.

சுறாக்களும்கூட கடிக்காமல் இருக்கலாம்

விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.

சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.

பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.

இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.

அது யார்?

ஒரு மனிதன் தன் வீட்டின் வெளியே ஒர் பாதுகாப்பு கேமராவைப் பொருத்திய பின்னர் அந்த அமைப்பு சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதிப்பதற்காக அதன் படங்களைப் பார்வையிட்டார். அதில். ஓர் அகன்ற மார்புடைய கரிய உடையணிந்த ஓர் உருவம் அவருடைய முற்றத்தில் உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இன்னும் சற்று கூர்ந்து அந்த மனிதன் என்ன செய்கிறாரென கவனித்தார். அப்பொழுது அங்கு நடமாடிய மனிதன் அறிமுகமானவர் போலத் தெரிந்தார். கடைசியாக. அவருடைய விட்டின் பின்புறத்தில் எல்லைக்குள் நடமாடிய அந்த நபர் வேறு யாருமல்ல, தன்னுடைய உருவம் தான் அதில் பதிந்துள்ளது எனக் கண்டுகொண்டார்!

சில சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய உடலைவிட்டு வெளியே வந்து நம்மைப் பார்க்கக் கூடுமானால், நம்மை எப்படிப்பட்டவராகப் பார்ப்போம்? தாவீதின் இருதயம் கடினப்பட்டது. வெளியேயிருந்து அவனைக் குறித்து அவனைப்பார்க்கும்படியாக அவனுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. தேவன் அவனைக் காணும் கண்ணோட்டத்தோடு, பத்சேபாளுடன் அவனுடையப் பங்கினை அவன் பார்த்தபோது, தேவன் அவனை விடுவிக்கும்படி நாத்தானை அனுப்புகின்றார் (2 சாமு. 12).

நாத்தான் தாவீதிடம் ஓர் ஐசுரியவான் தன் விருந்தாளியை உபசரிக்க, ஓர் ஏழை மனிதன் வளர்த்த ஒரேயொரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்ட கதையைக் கூறுகின்றான். ஐசுரியவானிடம் மந்தை, மந்தையாக ஆடுகளிருந்த போதிலும் அவன் அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்து அடித்து சமைத்து விட்டான். இந்தக் கதையிலுள்ள ஐசுரியவான் தாவீது தான் என நாத்தான் குறிப்பிட்டபோது தான் தாவீது தான் உரியாவிற்கு இழைத்த கொடுமையை உணர்கின்றான். அதன் விளைவுகளை நாத்தான் தெரிவிக்கின்றான். அதில் முக்கியமானதென்னவெனில், அவர் தாவீதிடம், “கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (வச. 13) என்பதே.

தேவன் நம் வாழ்விலுள்ள பாவச் செயல்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, நாம் காயப்படுத்தினவர்களோடு மனம் பொருந்தவே நமக்குதவுகின்றார். மனந்திரும்புதல் மூலம் தேவனோடுள்ள உறவை நாம் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. தேவனோடு புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் வழிவகுக்கின்றது. தேவன் தரும் மன்னிப்பு, கிருபையின் வழியே அவருடன் நெருங்கிச் சேர முடிகிறது.

தொடர்ந்து போய்க் கொண்டிரு

பல வகையான ஜனங்கள் நிறைந்த இவ்வுலகில் வெவ்வேறு திறமைகளும், வெவ்வேறு தலைமைத்துவ பண்பும் கொண்ட அநேகரோடு தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பட்டணத்திற்கு வெளியே ஒரு மேற்பார்வையாளரால் நடத்தப்படும் ஒரு செயல்திட்டம் சற்று மாறுபட்டது. எங்களுடைய வேலையைக் குறித்து கடுமையாக குற்றம்சாட்டியதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்னும் அதிக வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த குறுக்கீட்டால் நான் ஊக்கமிழந்தேன். பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில் இதனை விட்டுவிடலாமா என்று கூட சிந்திக்கலானேன்.

இதேபோன்றுதான் மோசேயும் துன்பங்கள் சூழ்ந்த இருண்ட வேளையில், பார்வோனைச் சந்திக்காமல் போய்விட எண்ணியிருப்பான். தேவன் மேலும் எட்டு பேரழிவுகளை எகிப்தியர் மீது அனுப்பிய பின், பார்வோன் மோசேயிடம் 'என்னை விட்டு அப்பாலே பேர் நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்" என வெடிக்கின்றான் (யாத். 10:28).

இந்த மாதிரி எச்சரிப்பு இருந்தபோதிலும் இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து மீட்பதற்கு தேவன் மோசேயை பயன்படுத்தினார். 'விசுவாசத்தினாலே மோசே... ராஜாவின் கோபத்துக்கு பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்" (எபி. 11:27). தேவன், தான் விடுவிப்பேன் என வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மோசே, பார்வோனை மேற்கொண்டான் (யாத். 3:17).

நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்து, பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை வழி நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். 'தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7) நம்முடைய வாழ்வில் தேவன் காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல தேவையான தைரியத்தை பரிசுத்த ஆவியானவர் தந்து நம்மை வழிநடத்துவார்.

பனி வெடிப்பிலிருந்து விடுதலை

ஒரு பனிப்பொழிவு நாளில் என்னுடைய குழந்தைகள் பனிச்சறுக்கி விளையாட அனுமதிக்கும்படி என்னை வற்புறுத்தினர். அந்நாளின் வெப்பநிலை பாரன்ஹீட் வெப்பநிலை மானியின் பூஜியத்தினருகிலேயே அசைந்து கொண்டிருந்தது. பனித்துகள்கள் எங்கள் ஜன்னல்களை மோதிக் கொண்டிருந்தன. நான் மீண்டும் சிந்தனை செய்து பார்த்து சரியெனக் கூறி, அவர்களை நன்கு கம்பளி உடைகளால் பொதிந்து கொண்டு, சேர்ந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அன்பின் மிகுதியால் நான் அந்த கட்டளையைக் கொடுத்தேன். எனவே என்னுடைய குழந்தைகள் பனிஉறைதலில் விறைத்துப்போகாமல் விளையாட முடியும். சங்கீதம் 119ஐ எழுதியவரும், தேவன் கொண்டுள்ள அத்தகைய நல்லெண்ணத்தை உணர்ந்தவராக இரு அடுத்தடுத்த வசனங்களை எதிரெதிர் அர்த்தமுடையவைகளாக எழுதியுள்ளார். “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்" (வச. 44-45). இதில் எப்படி சங்கீதக்காரன், சுதந்தரமான வாழ்வையும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கின்ற ஆவிக்குரிய வாழ்வையும் இணைத்துக் குறிப்பிடுகின்றார்?

தேவனுடைய ஞானமுள்ள கட்டளைகளை நாம் கடைபிடித்து நடக்கும்போது, நாம் இவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கலாமே என்ற குற்றஉணர்வோடு வாழ்கின்ற பின்விளைவைத் தவிர்க்க முடிகிறது. நாமும் தவறிழைத்த கனத்தோடும் வேதனையோடுமல்ல, நாம் சுதந்திரமாக நம்முடைய வாழ்வை அனுபவிக்க முடிகிறது. தேவன் நம்மை, இதைச் செய், செய்யாதேயெனக் கட்டுப்படுத்துபவரல்ல. ஆனால், அவருடைய வழிகாட்டல் அவர் நம்மை நேசிக்கிறாரெனக் காட்டுகின்றது.

என்னுடைய குழந்தைகள் பனியில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஒரு குன்றின் உச்சியிலிருந்து வருவதைக் கண்டேன். நான் அவர்களின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்தேன். அவர்களின் மலர்ந்த சிவந்த முகங்களைக் கண்டேன். நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லைக்குள் சுதந்திரமாக விளையாடினர். இந்த நிகழ்வு, நாம் தேவனோடு கொண்டுள்ள உறவிற்கும் பொருத்தமானது. அது நம்மையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன்" (வச. 35) எனச் சொல்லும்படி செய்கின்றது.