எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

எண்ணிமுடியாத அன்பு

“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்ச்சுகீஸிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கினின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்ச்சுகீஸிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம்.

மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார்.

இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மாய் எண்ணி முடியாது. 

- ஜேம்ஸ் பேங்க்ஸ்

கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். 
முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2). 
பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.  

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள். 
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது. 
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.  
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).  
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).  

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது.

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.  

“எல்லாம் எனக்கு எதிராய் இருக்கிறது”

“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.

கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினான். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினான். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறான் (42:36).

ஆனால் அவன் எண்ணியது தவறு. அவனுடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறான். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது.

அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.

ஊக்குவிக்கும் வரம்

“உங்கள் தேனீக்கள் மொய்க்கின்றன!” என் மனைவி கதவின் உள்ளே தலையை நுழைத்து எந்த தேனீ வளர்ப்பவரும் கேட்க விரும்பாத செய்தியை என்னிடத்தில் கூறினாள். ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டிலிருந்து உயரமான பைன் செடியின் உச்சிக்கு பறப்பதைப் பார்க்க நான் வெளியே ஓடினேன். அவைகள் ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

தேன் கூடு மொய்க்கப்போகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக வீசிய புயல்கள் எனது ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தன. புயல் வீசிமுடிந்த அன்று காலையில், தேனீக்கள் வெளியேறின. அந்த கூடு புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் தேனீக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. எனது ஏமாற்றத்தைக் கண்டு, “சோர்ந்துபோகாதே, இது யாருக்கும் நடக்கலாம்!” என்று அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினார்.

ஊக்கப்படுத்துதல் என்பது மிகப்பெரிய வரம். சவுல் தாவீதை கொல்ல வகைதேடினபோது, சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை உற்சாகப்படுத்தினான். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்” என்று யோனத்தான் அறிவுறுத்துகிறான் (1 சாமுவேல் 23:17).

அரியணைக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த ஒருவரிடமிருந்து வியக்கத்தக்க தன்னலமற்ற வார்த்தைகள் அவை. தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் அறிந்திருந்ததினால் தாழ்மையான இருதயத்தில் விசுவாசத்துடன் பதிலளித்தான்.

நம்மைச் சுற்றிலும் ஊக்கம் தேவைப்படுகிற மக்கள் நிறைய இருக்கின்றனர். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம் மூலம் அவர்களை நேசிக்கும்படி அவரிடம் கேட்கும்போது அவர்களுக்கு நம் மூலம் நன்மைகள் உண்டாக அவர் நமக்கு உதவிசெய்வார்.

விளைவுகளைத் தாண்டிய நம்பிக்கை

நீங்கள் எப்போதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய காலப்போக்கில் விசுவாசிகளைச் சந்தித்த பின்னர், அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். 

 விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள். 
 

எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: "அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தை கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்:"அப்பொழுது மோசே அவர்களை நோக்கி:கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி" (வ.10). பின்னர் வெளிப்படையாக தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின் விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13). 
 

மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இரங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையாக அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார். 
  
  

தேவனுடைய தோட்டம்

என் வீட்டின் கதவுக்கு வெளியில், அழகை நினைவுகூரும் விதத்திலும் வாழ்க்கையின் சொற்பத்தன்மையை நினைவுபடுத்தும் விதத்திலும் சில காரியங்கள் இருக்கிறது. கடந்த வசந்த காலத்தில், என் மனைவி நிலவு மலர்ச் செடிகளை அங்கே நட்டார். அதில் முழு நிலவை ஒத்த பெரிய வட்டமான வெள்ளை பூக்கள் பூப்பதால் அச்செடிக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் இரவில் பூத்து, காலையில் சூரிய ஒளி அதின் மீது பட்ட மாத்திரத்தில் வாடிவிடும். மீண்டும் பூக்காது. ஆனால் அந்த செடியானது தொடர்ந்து பூக்களை உற்பத்திசெய்துகொண்டேயிருக்கிறது. அதின் பூக்கள் ஒவ்வொரு நாள் மாலையையும் அலங்கரிக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்பூக்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதின் அழகை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.  
தற்காலிகமாய் உயிர்வாழும் இந்த பூக்கள் ஒரு வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஏசாயா தீர்;க்கதரிசியின் வார்த்தைகளை இங்ஙனம் பேதுரு நினைவுகூருகிறார்: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” (1 பேதுரு 1:23-25). ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்று அவர் உறுதிகூறுகிறார் (வச. 25).  
இந்த தோட்டத்தில் பூத்த பூவைப் போன்று மனுஷனுடைய ஆயுசுநாட்களும் சொற்பமானவைகள். ஆனாலும் மனுஷனுடைய அந்த சொற்ப ஜீவியத்திலும் ஓர் அழகை நாம் பார்;க்கமுடிகிறது. இயேசுவின் நற்செய்தியின் மூலம், நாம் கடவுளுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிறோம், அவருடைய அன்பான பிரசன்னத்தில், நித்திய வாழ்க்கையின் வாக்குறுதியை நம்புகிறோம். நம்முடைய ஜீவியம் சொற்பமாயிருந்தபோதிலும் அவருக்கு நாம் துதி ஏறெடுப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனுடைய வேலையாட்கள்

மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார். 
அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23). 
தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க யோசேப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார். 

- எமி பவுச்சர் பை 

தேவனுடைய வேலையாட்கள்

மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார். 
அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23). 
தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க யோசேப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார். 

- எமி பவுச்சர் பை 

எளிமையான அழைப்பு

“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள். 
இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு. 
யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெடுத்தாா் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) என்று சொல்லுகிறாா்.. 
நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது. 

- மேட் லூகாஸ்