எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள். 
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது. 
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.  
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).  
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).  

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது.

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.  

“எல்லாம் எனக்கு எதிராய் இருக்கிறது”

“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.

கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினான். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினான். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறான் (42:36).

ஆனால் அவன் எண்ணியது தவறு. அவனுடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறான். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது.

அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.

ஊக்குவிக்கும் வரம்

“உங்கள் தேனீக்கள் மொய்க்கின்றன!” என் மனைவி கதவின் உள்ளே தலையை நுழைத்து எந்த தேனீ வளர்ப்பவரும் கேட்க விரும்பாத செய்தியை என்னிடத்தில் கூறினாள். ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டிலிருந்து உயரமான பைன் செடியின் உச்சிக்கு பறப்பதைப் பார்க்க நான் வெளியே ஓடினேன். அவைகள் ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

தேன் கூடு மொய்க்கப்போகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக வீசிய புயல்கள் எனது ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தன. புயல் வீசிமுடிந்த அன்று காலையில், தேனீக்கள் வெளியேறின. அந்த கூடு புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் தேனீக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. எனது ஏமாற்றத்தைக் கண்டு, “சோர்ந்துபோகாதே, இது யாருக்கும் நடக்கலாம்!” என்று அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினார்.

ஊக்கப்படுத்துதல் என்பது மிகப்பெரிய வரம். சவுல் தாவீதை கொல்ல வகைதேடினபோது, சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை உற்சாகப்படுத்தினான். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்” என்று யோனத்தான் அறிவுறுத்துகிறான் (1 சாமுவேல் 23:17).

அரியணைக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த ஒருவரிடமிருந்து வியக்கத்தக்க தன்னலமற்ற வார்த்தைகள் அவை. தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் அறிந்திருந்ததினால் தாழ்மையான இருதயத்தில் விசுவாசத்துடன் பதிலளித்தான்.

நம்மைச் சுற்றிலும் ஊக்கம் தேவைப்படுகிற மக்கள் நிறைய இருக்கின்றனர். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம் மூலம் அவர்களை நேசிக்கும்படி அவரிடம் கேட்கும்போது அவர்களுக்கு நம் மூலம் நன்மைகள் உண்டாக அவர் நமக்கு உதவிசெய்வார்.

விளைவுகளைத் தாண்டிய நம்பிக்கை

நீங்கள் எப்போதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய காலப்போக்கில் விசுவாசிகளைச் சந்தித்த பின்னர், அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். 

 விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள். 
 

எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: "அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தை கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்:"அப்பொழுது மோசே அவர்களை நோக்கி:கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி" (வ.10). பின்னர் வெளிப்படையாக தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின் விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13). 
 

மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இரங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையாக அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார். 
  
  

தேவனுடைய தோட்டம்

என் வீட்டின் கதவுக்கு வெளியில், அழகை நினைவுகூரும் விதத்திலும் வாழ்க்கையின் சொற்பத்தன்மையை நினைவுபடுத்தும் விதத்திலும் சில காரியங்கள் இருக்கிறது. கடந்த வசந்த காலத்தில், என் மனைவி நிலவு மலர்ச் செடிகளை அங்கே நட்டார். அதில் முழு நிலவை ஒத்த பெரிய வட்டமான வெள்ளை பூக்கள் பூப்பதால் அச்செடிக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் இரவில் பூத்து, காலையில் சூரிய ஒளி அதின் மீது பட்ட மாத்திரத்தில் வாடிவிடும். மீண்டும் பூக்காது. ஆனால் அந்த செடியானது தொடர்ந்து பூக்களை உற்பத்திசெய்துகொண்டேயிருக்கிறது. அதின் பூக்கள் ஒவ்வொரு நாள் மாலையையும் அலங்கரிக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்பூக்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதின் அழகை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.  
தற்காலிகமாய் உயிர்வாழும் இந்த பூக்கள் ஒரு வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஏசாயா தீர்;க்கதரிசியின் வார்த்தைகளை இங்ஙனம் பேதுரு நினைவுகூருகிறார்: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” (1 பேதுரு 1:23-25). ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்று அவர் உறுதிகூறுகிறார் (வச. 25).  
இந்த தோட்டத்தில் பூத்த பூவைப் போன்று மனுஷனுடைய ஆயுசுநாட்களும் சொற்பமானவைகள். ஆனாலும் மனுஷனுடைய அந்த சொற்ப ஜீவியத்திலும் ஓர் அழகை நாம் பார்;க்கமுடிகிறது. இயேசுவின் நற்செய்தியின் மூலம், நாம் கடவுளுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிறோம், அவருடைய அன்பான பிரசன்னத்தில், நித்திய வாழ்க்கையின் வாக்குறுதியை நம்புகிறோம். நம்முடைய ஜீவியம் சொற்பமாயிருந்தபோதிலும் அவருக்கு நாம் துதி ஏறெடுப்போம்.

தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை

“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள்.  
உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார்.  
சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.  

வாலையும் நாக்கையும் அசைத்தல்

பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம்.  
பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர். 
இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம்.  
மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது.  
மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.  

துதிகளை பிரஸ்தாபம்பண்ணுதல்

 
எங்கள் சபை அதின் முதல் கட்டிடத்தை கட்டியபோது, கட்டிடத்தின் உட்புற அலங்காரம் முடிவடைவதற்கு முன்பு, சுவர்களிலும் (கட்டிடத்தின் சட்டத்தை ஆதரிக்கும் உலர்வாலுக்குப் பின்னால் உள்ள செங்குத்து விட்டங்கள்) மற்றும் கான்கிரீட் தளங்களிலும் மக்கள் நன்றி தெரிவிக்கும் வாக்கியங்களை எழுதினார்கள். அந்த சட்டங்களை விலக்கிப் பார்த்தால் அவைகள் நன்றாய் தெரியும். நிறைய வேத வசனங்கள், மற்றும் “நீர் மிகவும் நல்லவர்” என்பது போன்ற துதி வாக்கியங்களும் ஜெபங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. “சவால்களுக்கு மத்தியில் தேவன் எங்களுக்கு எவ்வளவு நல்லவராய் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சாட்சியத்தை விட்டுச்சென்றோம்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  
தேவன் நமக்கு செய்த நன்மைகளை நாம் நினைவுகூர்ந்து அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி, “கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும்... கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்” (ஏசாயா 63:7) என்று சொல்லுகிறார். மேலும் “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (வச. 9) என்று சரித்திரத்தில் தன் ஜனத்தின் மீதான தேவனுடைய அன்பை அவர் தெரியப்படுத்துகிறார். அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, இஸ்ரவேலர்கள் இன்னும் நெருக்கத்தில் இருப்பதையும், தேவன் அவர்களுக்காக இடைபடவேண்டும் என்ற தீர்க்கதரிசியின் எதிர்பார்ப்பையும் நாம் காணமுடியும்.  
இக்கட்டான தருணங்களில் தேவன் நமக்கு காண்பித்த இரக்கத்தை நினைவுகூரலாம். சவாலான வாழ்க்கைத் தருணங்களை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து நன்றியுள்ள இருதயத்தோடு அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் நம்முடைய துதிகளுக்குப் பாத்திரர் என்னும் உண்மையை நாம் அறிந்துகொள்ளக்கூடும்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.