எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

நம்மை விரும்பும் உணவுகள்

நான் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “பிடித்த விஷயங்கள்" என்ற கருப்பொருளை அடிப்படையாய் வைத்து, அலங்காரம், பரிசுகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பெண்ணிற்கு பன்னீர், பழங்கள், மற்றும் சிவப்பு வெல்வெட் கேக் ஆகியவைகள் பிடிக்கும் என்பதால், தொகுப்பாளினி பன்னீரை வறுத்து, பழங்களை வெட்டி, பிடித்த கேக்கை ஆர்டர் செய்தார். நமக்கு பிடித்த உணவுகள் நம்மைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறுகின்றன.

விருந்துகள் மற்றும் பண்டிகைகள் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரீரத்தின் செயலான உண்ணுதலையும் தேவனின் உண்மைத்தன்மையை கொண்டாடுவதையும் அது இணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை மற்றும் பௌர்ணமி விருந்துகளுடன் இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பலி வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக விருந்து இருந்தது (எண்ணாகமம் 28:11-31ஐப் பார்க்கவும்). மேலும் சங்கீதம் 23:5 இல், தேவன் ஏராளமான உணவுடன் ஒரு பந்தியை ஆயத்தம் செய்து, பாத்திரம் கருணையாலும் அன்பாலும் நிரம்பி வழிகின்றன. நம்முடைய இரட்சிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்த பரிசை விளக்கி, ஒரு அப்பத்தை உடைத்து ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்துக் கொண்டபோது, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணவு மற்றும் திராட்சை ரசத்தின் மிக ஆடம்பரமான தொடர்பாக அது இருக்கலாம். பின்னர் அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் (லூக்கா 22:19).

இன்று நீங்கள் சாப்பிடும் போது, நமக்கு வாயையும் வயிற்றையும் உண்டாக்கி, உணவளிக்கும் தேவனுடைய உண்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய அன்பின் மொழியாகக் கருதுவோம். நம்முடைய தேவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லி, நம்மோடு விருந்தை ஆசரிக்கிறார். 

மரத்தை விற்கும் பழங்கள்

ஒரு தோட்ட முதலாளி பேரி மரங்களை விற்க முற்பட்டார். அதற்கு பல முறைகளைக் கையாண்டார். அவற்றின் செடிகளை வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டுமா? பேரி மரங்ளின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை படங்களை காட்சிப்படுத்த வேண்டுமா? அவர் 'பேரி' மரங்களை விற்பனை செய்வதை கடைசியாகத்தான் உணர்ந்தார். இவை அதிருசியான, மணமுள்ள, ஆரஞ்சு நிற, மென்மையான தோல் கொண்ட பேரி பழங்களை தருபவை. இவைகளை விற்பதற்கு உகந்த ஒரு வழி: பழுத்த பழத்தை எடுத்து, அதை வெட்டி, அதின் சாறு ஒழுக-ஒழுக, ஒரு துண்டை அரிந்து வாடிக்கையாளருக்கு கொடுப்பதே. அந்த பழத்தை அவர்கள் ருசித்தவுடன், அந்த மரத்தை அவர்கள் வாங்குவார்கள். 

அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22-23). எனும் ஆவிக்குரிய கனியினால், தேவன் தன் விசுவாசிகளில் வெளிப்படுகிறார்:  கிறிஸ்துவை நம்புகிறவர்கள் இக்கனியைப் பிரதிபலிக்கையில், அக்கனியை மற்றவர்களும் விரும்புவார்கள். அதின் ஆதாரத்தையும் அறிய முற்படுவர். 

நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த தாக்கமே இக்கனியின் வெளிப்பாடு. பிறருக்கு நம் தேவனை பிரதிபலிக்க உதவுவதே இக்கனிதான். பச்சை இலைகளுக்கு மத்தியில் இந்த பேரிக் கனிகள் பிரகாசமாய் தெரிவதுபோல, “இங்கே உணவு இருக்கிறது! இங்கே ஜீவனிருக்கிறது! உங்களுடைய பெலவீனத்திலிருந்தும் சோர்விலிருந்தும் விடைபெறுவதற்கு இங்கு வாருங்கள், வந்து தேவனை சந்தியுங்கள்” என்று, ஆவியின் கனி பசியோடிருக்கும் உலகை அழைக்கிறது.

ஜெபத்தில் கட்டப்பட்ட நாவு

என் சிறிய தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், நான் கவலையுற்றேன். அவன் பிறவியிலே நாக்கு கட்டப்பட்ட (ankyloglossia) நிலையில் இருந்ததால், அவன் சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் கடினமாயிருக்கும் என, என் தாயார் விளக்கினார். இன்று, வார்த்தைகள் இல்லாமல் திணரும் நிலையையும், பேசுவதற்கு கூச்சப்படும் நிலையையுமே நாக்கு கட்டப்பட்ட நிலை என கூறுகிறோம்.

சிலநேரம், நம் ஜெபங்களில் என்ன பேசுவது என அறியாமல் நாக்கு கட்டப்படுகிறோம். நம்முடைய நாக்கு அர்த்தமில்லா ஆவிக்குரியச் சொற்களையும், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தையும் உச்சரிக்கும். நம் உணர்வுகளை பரலோகத்தை நோக்கி அம்பாக எய்கிறோம். அது கர்த்தருடைய செவியைச் சென்றடையுமா என தெரியவில்லை. நம்முடைய சிந்தனைகள் இங்கும் அங்குமாய் அலைபாய்கிறது. 

ஜெபிக்கத் திணரும் வேளைகளில், என்ன செய்வதென்று தெரியாத முதலாம் நூற்றாண்டு ரோம விசுவாசிகளிடம், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடும்படி பவுல் அப்போஸ்தலன் அழைக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). இங்கே, “உதவி” என்பது அதிக எடையை சுமந்து செல்வதாகும். “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள்” என்பது நம் சார்பில், நம் தேவைகளை ஆவியானவர், தேவனிடத்தில் எடுத்துசெல்கிறார் என்பதைக் குறிக்கிறது.

நாம் ஜெபத்தில் வாய்கட்டப்படுகையில், கர்த்தருடைய ஆவியானவர் நம் குழப்பங்கள், வேதனைகள், கவனச்சிதறல்கள் ஆகியவற்றை நேர்த்தியான விண்ணப்பமாய் மாற்றி, நம் இருதயத்திலிருந்து அவைகளை தேவனுடைய செவிக்கு எட்டும்படி செய்கிறார். அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுக்கிறார். அவரை வேண்டிக் கொள்ளும்படிக்கு நாம் அவரை அனுமதிக்கும்வரை, நமக்கு தேவையான சரியான ஆறுதலை நாம் அறிந்திருக்கமாட்டோம். 

தயக்கமில்லா கண்ணீர்

“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.

நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.

அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.

நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப்  போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

தேவனுடைய வலதுகரம்

நான் எனது முதிர்ந்த நாய் வில்சனை புல்வெளியில் நடக்க அழைத்துச்சென்றேன். அந்த வேளையில் என்னுடைய கோச் எனப்பட்ட என்னுடைய சிறிய நாயைப் பிடித்திருந்த கயிற்றை ஒருநிமிடம் தவறவிட்டேன். கீழே குனிந்து அதை எடுக்க முயற்சித்த இடைவெளியில், கோச் ஒரு முயலைப் பார்த்துவிட்டது. அதை விரட்டிக்கொண்ட வெறித்தனமாய் ஓட முயற்சித்தவேளையில், அதின் கயிறு என் மோதிரவிரலில் சிக்கி காயம் ஏற்படுத்தியது. நான் அந்த புல்தரையில் விழுந்து வலியில் கத்தினேன். 

முதலுதவியை பெற்று திரும்பும்போது, என் விரலில் அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று தெரியவந்தது. நான் தேவனிடத்தில் மன்றாடினேன். நான் ஒரு எழுத்தாளன், எப்படி டைப் செய்வது? என்னுடைய அன்றாட பணிகளை எப்படி செய்வது? தேவன் அன்றைய வேத தியானத்தில் என்னோடு பேசினார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசாயா 41:13). தேவனுடைய உறவில் இருந்த யூதேயாவிலுள்ள தேவ ஜனத்திற்கே ஏசாயா இதை எழுதுகிறார் என்று அதன் பின்னணியத்தைக் கண்டுபிடித்தேன். தன்னுடைய வலது கரத்தை உருவகப்படுத்தி, அவர்களுக்கு தன்னுடைய பிரசன்னத்தையும், பெலத்தையும், உதவியையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 10). வேதாகமமெங்கிலும் தேவனுடைய வலதுகரமானது, தேவ ஜனத்திற்கு அவர் கொடுக்கும் வெற்றியை உருவகப்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது (சங்கீதம் 17:7; 98:1). 

என் விரல் குணமாகும்வரையிலும், என் கம்யூட்டரில் நான் பேசுவதை அதுவே டைப் செய்யும் யுக்தியை பயன்படுத்தியும், என் வீட்டு அலுவல்களை என்னுடைய இடது கையின் துணைகொண்டும் செய்துகொண்டேன். தேவனுடைய நீதியின் வலதுகரத்திலிருந்து நம்முடைய உடைந்த வலக்கரம் வரையிலும் அனைத்திலும் தேவன் நம்மோடிருந்து நமக்கு உதவிசெய்வேன் என்று வாக்களித்துள்ளார். 

துக்கத்தின் சொற்களஞ்சியம்

மோகனும் ரேகாவும் தங்களுடைய ஒரே குழந்தையை இழந்த பின்பு, தங்களை என்னவென்று அழைத்துக்கொள்வதென்று தெரியாமல் கஷ்டப்பட்டனர். குழந்தையை இழந்த பெற்றோர்களை அழைப்பதற்கென்று ஆங்கில வார்த்தை கிடையாது. கணவனை இழந்த மனைவியை விதவை என்று கூறலாம். மனைவியை இழந்த கணவரை அழைப்பதற்கும் ஆங்கிலத்தில் வார்த்தை உண்டு. பெற்றோரை இழந்த குழந்தையையும் அநாதை என்று அழைப்பர். பிள்ளையை இழந்த இந்த பெற்றோர்கள் ஆழ்ந்த மன வேதனையில் இருந்தனர். 

கருச்சிதைவு,. குழந்தையின் திடீர் மரணம், தற்கொலை. வியாதி. விபத்து. மரணம் இந்த உலகத்திலிருந்து குழந்தைகளை இப்படி பல்வேறு விதத்தில் எடுத்துக்கொண்டு, பெற்றோர்களின் அங்கீகாரத்தைப் பறிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஒரேபேறான குமாரன் சிலுவையில் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று சொல்லும்போது இந்த ஆழ்ந்த வேதனையை புரிந்துகொண்டார். இயேசுவின் மாம்ச பிறப்பிற்கு முன்பாகவே தேவன் பிதாவாயிருந்தார்; இயேசு தன் கடைசி மூச்சை விடும் வரைக்கும் பிதாவாகவே இருந்தார். இயேசுவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படும்போதும் தேவன் பிதாவாகவே இருந்தார். உயிர்த்தெழுந்த குமாரனுக்கு பிதாவாக தேவன் இன்னும் நிலைத்திருக்கிறார். இது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு மீண்டும் தங்களுடைய பிள்ளைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

இந்த உலகத்திற்காகத் தன்னுடைய குமாரனைக் கொடுத்த பரலோகப் பிதாவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? அவர் உனக்கும் எனக்கும் தகப்பனே. இன்னும் தகப்பனாகவே இருக்கிறார். நம்முடைய வியாகுலத்தை வெளிப்படுத்தும் துயர சொற்களஞ்சியத்தில் வார்த்தைகள் இல்லாத போதும், தேவன் நம் தகப்பனாயிருக்கிறார் ; நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (1 யோவான் 3:1). 

தேவன் கேட்கிறாரா?

எங்களுடைய திருச்சபை ஆராதனைக் குழுவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய வேலை என்னவெனில், ஆராதனை நேரத்தில் அட்டைகளில் எழுதிக் கொடுத்த ஜெபக்குறிப்புகளுக்காய் நாங்கள் ஜெபிக்கவேண்டும். அத்தையின் சுகத்திற்காக, தம்பதியினரின் பணத்தேவைக்காய், தன் பேரப்பிள்ளை தேவனை அறிந்துகொள்வதற்காய் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த ஜெபத்திற்கான பதில்களைக் குறித்த சாட்சிகளை நான் அரிதாகவே கேட்க நேர்ந்தது. அதிலும் பெரும்பாலும் யார் என்றும் என்ன விண்ணப்பம் என்றும் எனக்கு தெரிவதில்லை. தேவன் அவர்களுக்கு எப்படி பதில்கொடுக்கிறார் என்பதைக் குறித்து எனக்கு தெரியவில்லை. சில வேளைகளில், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? என் ஜெபத்தின் விளைவாய் ஏதாகிலும் பலன் இருக்கிறதா? என்று நானே கேட்டுக்கொள்வேன்.

நம்மில் அநேகர், “கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?”என்ற கேள்வியை வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்னாளைப்போல பிள்ளைக்காய் தேவ சமூகத்தில் விண்ணப்பித்து, ஆண்டுகளாய் என் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. ஆயினும் என்னுடைய விண்ணப்பத்தில் என் தந்தை தேவனை விசுவாசிக்க துவங்கினார். எனினும் அதை வெளிப்படையாய் பிரதிபலிக்காமல் இறந்துவிட்டார். 

நூற்றாண்டுகளாய் நடந்தேறிய வேதத்தின் சம்பவங்களில் தேவன் பல விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்துள்ளார்: இஸ்ரவேல் அடிமைத்தனத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது (யாத். 2:24) ;சீனாய் மலையில் மோசேக்கு (உபாகமம் 9:19) ; கில்காலில் யோசுவாவுக்கு (யோசுவா 10:14) ; பிள்ளைக்கான அன்னாளின் வேண்டுதலின் போது (1 சாமுவேல் 1:10-17) ; சவுலிடத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு தாவீது விண்ணப்பித்தபோது (2 சாமுவேல் 22:7) என்று பல விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளித்துள்ளார். 

1 யோவான் 5:14ன்படி, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். செவிகொடுக்கிறார் என்றால், கூர்ந்து கவனித்து கேட்டதற்கேற்றபடி பதில் கொடுக்கிறார் என்று அர்த்தம். 

கர்த்தர் செவிகொடுக்கிறவர் என்று சரித்திரத்தில் தேவ ஜனத்திற்கு இருந்த நம்பிக்கையை இன்று நாம் தேவ சமுகத்திற்கு போகும்போது தரித்துக்கொள்வோம். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர். 

நன்றாக ஓய்வெடுங்கள்

கடிகாரம் அதிகாலை 1.55 மணிக்கு ஒலித்தது. பின்னிரவு உரையாடலின் சுமையினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. சிக்கலாயிருந்த என்னுடைய படுக்கை விரிப்பை பிரித்துக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டேன். தூங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கூகிளில் தேடினேன். ஆனால் மாறாக சிறுதூக்கம் தூங்காதீர்கள், காப்பி குடிக்க வேண்டாம், பகல் வேளைகளில் நாள் தாமதமாக வேலை செய்ய வேண்டாம் என்று என்ன செய்யக் கூடாது என்பதையே பார்த்தேன். இன்னும் வாசிக்கும்போது, என்னுடைய டேப்லட் கணிணியில் படிக்க தாமதமாக திரை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. அச்சச்சோ! உரை அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கவில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டுமானால், செய்யக்கூடாதவைகளின் பட்டியல்களே இருக்கின்றன. 

பழைய ஏற்பாட்டில், ஓய்வைத் தழுவிக்கொள்ள, ஓய்வுநாளில் என்னென்ன செய்யக்கூடாது என்ற கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் இயேசு ஒரு புதிய வழியைக் காண்பித்தார். விதிமுறைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, சீஷர்களை உறவுக்குள்ளாக அழைத்தார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்தேயு 11:28. இதற்கு முந்தைய வசனத்தில், நமக்கு அவர் வெளிப்படுத்தின, தேவனோடு, அவர் வைத்திருந்த உறவை சுட்டிக்காட்டினார். பிதாவிடமிருந்து இயேசு அனுபவித்த உதவிகளை நம்மாலும் அனுபவிக்க முடியும்.

நம்முடைய தூக்கத்துக்கு இடையூறு உண்டாக்கும் சில பொழுதுபோக்குகளை நாம் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் ஓய்வெடுப்பது கட்டளையை விட அதிகமாக உறவோடு தொடர்புடையது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய கனத்த இருதயத்தை, இயேசுவின் அழைப்பிதழான “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…” என்ற தலையணையின் மேல் வைத்துவிட்டேன்.

நமக்குத் தேவையான ஞானம்

மேகா தன் சிநேகிதியிடமிருந்து வந்த கொரியரைப் பிரித்துப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பாக அந்த சிநேகிதியுடன் உறவு ரீதியாக பிரச்சனை அவளுக்கு ஏற்படடிருந்தது. மிகுந்த ஆவலுடன் அந்த பரிசை திறந்துப் பார்த்தாள். அதில் பலவர்ண மணிகள் கோர்க்கப்பட்ட அழகான கழுத்து அணிகலன் இருந்தது. அத்துடன், “தேவனுடைய வழியை நாடு”  என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு காகிதமும் அதில் இருந்தது. மகிழ்ச்சியோடு மேகா அந்த சரப்பணியை தன் கழுத்தில் அணிந்துகொண்டாள். 

நீதிமொழிகள் புத்தகம் ஞானிகளின் வார்த்தைகளினால் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் தன் காலத்தில் ஞானியாய் வாழ்ந்த சாலமோனின் கைகளால் எழுதப்பட்டவைகள் அதிகம் (1 இராஜ. 10:23). நீதிமொழிகள் 1:7இல் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற அஸ்திபார வாக்கியத்தில் துவங்கும் நீதிமொழிகளின் 31 அதிகாரங்களும், மதியீனத்தைத் தவிர்த்து ஞானத்தைத் தேடும்படிக்கு அழைப்புக் கொடுக்கிறது. எப்போது எதைச் செய்யவேண்டும் என்னும் ஞானமானது, கர்த்தருடைய வழியை நாடுவதின் மூலமாகவும், அவரை கனப்படுத்துவதினாலும் நமக்குக் கிடைக்கிறது. அறிமுக வார்த்தைகளில், “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” (வச. 8-9) என்று வாசிக்கிறோம். 

மேகாவின் சிநேகிதி “தேவனுடைய வழிகளை நாடு” என்று ஞானத்தின் அஸ்திபாரத்திற்கு நேராய் அவளை வழிநடத்தினாள். மேகாவிற்கு தேவையான உதவி எங்கு கிடைக்கும் என்பதை அவளுடைய பரிசு அவளுக்கு காட்டியது. 

தேவனைக் கனப்படுத்தி, அவருடைய வழிகளை நாடும்போது, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஞானத்தையும் நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.