Elisa Morgan | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.

இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம்.

தேவனில் பலப்படுதல்

கிரேஞ்சர் மெக்காய் ஒரு சிற்பக்கலைஞர். அவர் பறவைகளைக் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சிற்பமாய் வடிக்கிறவர். அவரது படைப்புகளில் ஒன்று “மீட்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது செங்குத்து நிலையில் உயரமாக நீட்டப்பட்ட வாத்து ஒன்றின் ஒற்றை வலது இறக்கையைக் காட்டுகிறது. அந்த சிற்பத்தின் கீழே பதிக்கப்பட்டிருந்த ஒரு தகட்டில், “பறப்பதில் பறவையின் மிகப்பெரிய பலவீனத்தின் தருணம், ஆனால் அதின் முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு வலிமையை சேகரிக்கும் தருணம்” என்று எழுதப்பட்டிருந்தது. கிரேஞ்சர் இந்த வசனத்தையும் சேர்த்து எழுதுகிறார்;: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9).

அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு எழுதினார். தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கும்வேளையில், “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று அதை அகற்றும்படிக்கும் தேவனிடத்தில் பவுல் கெஞ்சுகிறார். அவரது துன்பம் ஒரு உடல் நோயாகவோ அல்லது ஆன்மீக எதிர்ப்பாகவோ இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் தோட்டத்தில் இருந்ததைப் போல (லூக்கா 22:39-44), பவுல் தனது துன்பத்தை நீக்கும்படி கடவுளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தேவையான பலத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார். “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று பவுல் கற்றுக்கொண்டார். 

ஓ, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முட்கள்! முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒரு பறவை தன் பலத்தை சேகரிக்கிறது போல, நாம் எதிர்நோக்கும் காரியத்திற்காக தேவனின் பலத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அவருடைய பலத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம். 

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்புஎன இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

இளஞ்சிவப்பு கோட்

பிரெண்டா பெரிய விற்பனை மையத்தின் வெளியே செல்லும் பாதை வழியாய் வந்தபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவளுடைய பார்வையைக் கவர்ந்தது. அந்த பஞ்சுமிட்டாய் நிற கோர்ட் அவளை வெகுவாய் கவர்ந்தது. ஓ! ஹோலி இதை எப்படி விரும்புவாள்? ஒற்றைத் தாயாக அவளுடன் பணிபுரியும் அவளின் சிநேகிதிக்கு இப்படி ஒரு கோர்ட் அவசியப்படும் என்று யோசித்தாள். ஆனால் அவள் தனக்கென்று செலவுசெய்து இந்த கோர்ட்டை ஒருபோதும் வாங்கமாட்டாள் என்பதையும் ப்ரெண்டா நன்கு அறிந்திருந்தாள். கடும் யோசனைக்கு பின்னர், அந்த கோர்ட்டை விலைகொடுத்து வாங்கி, அதை ஹோலியின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். அத்துடன் “நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள்” என்று பெயர் குறிப்பிடாத அட்டையை வைத்து அனுப்பி, அதைக் குறித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். 

மகிழ்ச்சி என்பது தேவன் ஏவும் கொடுத்தலுக்கு கிடைக்கும் துணை சலுகையாகும். கொரிந்திய திருச்சபை விசுவாசிகளுக்கு, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று கொடுத்தலின் மேன்மையை வலியுறுத்துகிறார். அத்துடன், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (வச. 6) என்றும் குறிப்பிடுகிறார்.

சிலவேளைகளில் நாம் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுகிறோம். சிலவேளைகளில் தகுதியான ஊழியங்களுக்கு அனுப்புகிறோம். சிலவேளைகளில் தேவையிலிருக்கும் நம்முடைய சிநேகிதர்களுக்கு கொடுத்து நம்முடைய அன்பை வெளிப்படுத்த ஏவப்படுகிறோம். பலசரக்கு பைகள், உணவுப்பொருட்கள்... சிலவேளைகளில் இளஞ்சிவப்பு கோர்ட் போன்ற காரியங்கள் அதற்கு வழிவகுக்கலாம். 

துரித உணவு உற்சாகம்

அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை  சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?

அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், "போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் "(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).

மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.

மகிழ்ச்சியாய் நன்றி செலுத்துதல்

உளவியல் நிபுணர் ராபர்ட் எம்மன்ஸ், வார நிகழ்வுகளை குறிப்பெடுக்கும்படி மூன்று குழுவினர்களை பிரித்தார். அதில் ஒரு குழுவினர், அவர்கள் நன்றி செலுத்தக்கூடிய ஐந்து காரியங்களை எழுதினர். ஒரு குழுவினர் அவர்கள் சந்தித்த ஐந்து பிரச்சனைகளை எழுதினர். ஒரு குழுவினர், தங்களுடைய வாழ்க்கையில் எளிமையான விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து காரியங்களை எழுதியிருந்தனர். அந்த ஆய்வின் முடிவில், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்களே தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்றும், குறைவான சரீர வியாதிகள் உடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.
நன்றியுள்ளவர்களாயிருத்தல் என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. நன்றி சொல்லுதல் நம்மை மகிழ்ச்சியடையவும் செய்கிறது. தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதால் ஏற்படும் நன்மைகளை வேதம் நமக்கு அறிவிப்பதின் மூலம் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. சங்கீதங்கள், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்... உள்ளது (சங்கீதம் 100:5) என்றும் அவருடைய மாறாத கிருபைக்காகவும் ஆச்சரியமான கிரியைகளுக்காகவும் நன்றி செலுத்தும்படி தேவ ஜனத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது (107:8,15,21,31).
பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவுசெய்யும்போது, அவருக்கு ஊழியத்தில் உறுதுணையாயிருந்தவர்களுக்கு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலேயே அதை எழுதுகிறார். அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான” தேவசமாதானத்தோடு (4:7) தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நினைவுகூரும்போது, கவலைகள் இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் நம் நன்றியை வெளிப்படுத்தமுடியும். நன்றி செலுத்துதல் என்பது நமக்கு தேவசமாதானத்தை அருளி, நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் பாதுகாத்து, வாழ்க்கையின் பார்வையையே மாற்றிவிடும். நன்றியுள்ள இருதயம் மகிழ்ச்சியின் ஆவிக்கு ஊட்டமளிக்கும்.

சுவரில் ஒரு ஓட்டை

எனது பூக்களை ஏதோவொன்று அரித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் கம்பீரமாகத் தலைதூக்கிப் பூத்தன, இன்றோ தலையில்லாமல் தண்டுப்பகுதி மட்டுமே நின்றது. எனது தோட்டத்தை முழுதும் அலசி ஆராய்ந்த போதுதான், வேலியில் உள்ள ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தேன். அதற்குக் காரணமான முயல்கள், பார்க்க அழகானவைதான், ஆனால் தோட்டத்தின் மொத்த மலர்களையும் நிமிடத்தில் அழிக்கும் ஆபத்துவாய்ந்தவை.

எனது வாழ்வில் 'தேவனுடைய சுபாவங்கள்' எனும் மொட்டுகளைக் கத்தரிக்கும் ஊடுருவல்கள் உண்டோவென்று சிந்திக்கிறேன். "தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்." என்று நீதிமொழிகள் 25:28 கூறுகிறது. பண்டைய காலத்தில், பட்டணங்களின் மதில்களே மக்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காத்தன. மதிலில் உண்டாகும் சிறிய பிளவுகூட மொத்த பட்டணத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடும். 

வேதத்திலுள்ள நீதிமொழிகளில் அநேக நீதிமொழிகள் இச்சயைடக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. "தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு" (நீதிமொழிகள் 25:16) என்று ஞானி எழுதினார். பொறுமையின்மை, கசப்பு, பேராசை ஆகிய இக்காரியங்கள், ஒரு பூச்சியைப்போல தேவனுக்குள் வெற்றியுள்ள ஜீவியத்தை நாம் செய்ய முடியாமல் தடுக்கிறது (கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்). நமது வாழ்வெனும் மதிலில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து, அவைகளைச் சீரமைக்கும் ஆரோக்கியமான மனநிலையே இச்சையடக்கமாகும். 

எனது வாழ்வைப் பரிசோதிக்கையில், என்னைப் பாதிக்கக்கூடிய ஓட்டைகளை ஆங்காங்கே காண்கிறேன். ஒரே சோதனையில் மீண்டும் மீண்டுமாய் விழுகிறேன், பொறுமை இழக்கிறேன். இச்சையடக்கமெனும் தேவனுக்குள்ளான ஆரோக்கியமான மனநிலை, என்னை இதுபோன்ற தடைகளிலிருந்து காக்க எவ்வளவு அவசியம்!

“மான்ஸ்ட்ரோ” என்றப் பொன் மீன்

லாசி ஸ்காட், தனது ஊரில் இருந்த செல்லப்பிராணிகள் கடையிலிருந்தபோது, தொட்டியின் அடியில் ஒரு மீன் சோர்ந்திருப்பதைக் கண்டாள். அதின் செதில்கள் கருப்பாக மாறி, அதின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பத்து வயதான அந்த மீனை விலைக்கு வாங்கிய லாசி, அதற்கு “மான்ஸ்ட்ரோ” என்று பெயரிட்டு, அதை பிரத்யேகமான மீன் தொட்டியில் வைத்து தினமும் தண்ணீர் மாற்றி அதைப் பராமரித்தாள்.

மான்ஸ்ட்ரோவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அது மெல்லமாக நீந்த துவங்கி, உருவத்திலும் வளர்ச்சியடைந்தது. அதின் கருப்பு செதில்கள் தங்க நிறத்திற்கு மாறியது. லாசியின் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பினால், மான்ஸ்ட்ரோ புதுப்பிக்கப்பட்டது.

லூக்கா 10ஆம் அதிகாரத்தில், கள்ளர்களால் காயப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனைக் குறித்த கதையை இயேசு சொல்லுகிறார். காயப்பட்ட அந்த மனிதனின் வேதனையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியனும் லேவியனும் அவனை கடந்து சென்றனர். ஆனால் ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அங்கத்தினரான ஒரு சமாரியன், அவனைப் பராமரித்து, அவனுடைய தேவைக்கு பண உதவியும் செய்தான் (லூக்கா 10:33-35). அந்தக் கதையில் சமாரியனே உண்மையான நண்பன் என்று நமக்கு சொன்ன இயேசு, அதையே செய்யும்படி மக்களை வலியுறுத்தினார்.

மரிக்கும் தருவாயில் இருந்த அந்த மீனுக்கு லாசி செய்ததுபோல, தேவையிலுள்ளவர்களுக்கு நாமும் நன்மை செய்வோம். ஆதரவற்ற, வேலையில்லாத, செயலிழந்த, தனிமையிலிருக்கும் நண்பர்கள் அநேகர் நம்முடைய பாதையில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தை கண்டறிந்து, அவர்களை அக்கறையோடு பராமரிப்போம். அன்பான வாழ்த்துக்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட உணவு, சிறு பண உதவிகள் ஆகியவற்றின் மூலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய தேவ அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கலாம்.

நம்மை விரும்பும் உணவுகள்

நான் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “பிடித்த விஷயங்கள்" என்ற கருப்பொருளை அடிப்படையாய் வைத்து, அலங்காரம், பரிசுகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பெண்ணிற்கு பன்னீர், பழங்கள், மற்றும் சிவப்பு வெல்வெட் கேக் ஆகியவைகள் பிடிக்கும் என்பதால், தொகுப்பாளினி பன்னீரை வறுத்து, பழங்களை வெட்டி, பிடித்த கேக்கை ஆர்டர் செய்தார். நமக்கு பிடித்த உணவுகள் நம்மைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறுகின்றன.

விருந்துகள் மற்றும் பண்டிகைகள் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரீரத்தின் செயலான உண்ணுதலையும் தேவனின் உண்மைத்தன்மையை கொண்டாடுவதையும் அது இணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை மற்றும் பௌர்ணமி விருந்துகளுடன் இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பலி வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக விருந்து இருந்தது (எண்ணாகமம் 28:11-31ஐப் பார்க்கவும்). மேலும் சங்கீதம் 23:5 இல், தேவன் ஏராளமான உணவுடன் ஒரு பந்தியை ஆயத்தம் செய்து, பாத்திரம் கருணையாலும் அன்பாலும் நிரம்பி வழிகின்றன. நம்முடைய இரட்சிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்த பரிசை விளக்கி, ஒரு அப்பத்தை உடைத்து ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்துக் கொண்டபோது, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணவு மற்றும் திராட்சை ரசத்தின் மிக ஆடம்பரமான தொடர்பாக அது இருக்கலாம். பின்னர் அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் (லூக்கா 22:19).

இன்று நீங்கள் சாப்பிடும் போது, நமக்கு வாயையும் வயிற்றையும் உண்டாக்கி, உணவளிக்கும் தேவனுடைய உண்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய அன்பின் மொழியாகக் கருதுவோம். நம்முடைய தேவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லி, நம்மோடு விருந்தை ஆசரிக்கிறார்.